வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

பதடிவைகலார்




தொடரால் பெயர் பெற்ற புலவர்களுள் “ பதடி வைகலார் “ குறிப்பிடத்தக்கவராவார். பதடி என்ற சொல்லுக்குப் பயனில்லாமை என்பது பொருளாகும்.

பொருள் தேடச் சென்ற தலைவன், தான் பொருளீட்டிய நிலையில் தலைவியைக் காண எண்ணுகிறான். அப்போது தாம் எத்தனை நாட்கள் வாழ்ந்தாலும் அவற்றுள் தலைவியுடன் சேர்ந்து வாழ்ந்த காலங்களே பயனுள்ளவை. எஞ்சியவை பயனற்றவை என்ற எண்ணம் தோன்றுகிறது. இதுவே பாடலின் உட்பொருளாகும்.

323. முல்லை - தலைவன் கூற்று (குறுந்தொகை)

எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசுமுகைத் தாது நாறும் நறுநுதல்
அரிவை தோளிணைத் துஞ்சிக்
கழிந்த நாளிவண் வாழு நாளே.
-பதடி வைகலார்.



பாணர்களின் யாழிசை மிகவும் இனிமையுடையதாக மழையின் ஓசைபோல உள்ளது. மழை பெய்த நிலத்தில் முல்லை மலரின் மணம் போன்ற மணம் வீசுகின்ற நறிய நுதலைக் கொண்ட என் தலைவியின் இரு தோள்களிலும் துயின்று கழிந்த நாட்களே இவ்வுலகில் நான் வாழும் நாட்கள் ஆகும். எஞ்சியவை. பிற நாட்களெல்லாம் என்ன பயனுடையவை..?
அந்நாட்கள் பதர் போல எவ்விதமான பயனும் அற்றவை என்கிறான் தலைவன்.

தலைவியின் தோளில் துஞ்சிக் கழிந்த நாட்களை நினைக்கும் போதெல்லாம் அந்நாட்கள் இன்பம் தருவனவாக அமைவாதால், அந்நாட்களை வாழ்ந்த நாட்கள் என்று கூறாது வாழும் நாட்கள் என்று இயம்பினான்

தலைவியன் தோளில் துயிலாத அந்நாட்களெல்லாம் இன்பம் என்னும் உள்ளீடு இல்லாத பதர் போன்றன என்பதைப் “ பதடி வைகல் என்று பாடியதால் இப்புலவர் பதடி வைகலார் என்றே அழைக்கப்பட்டார்.
இப்பாடல் வழியாகத் தலைவன் தலைவி மீது கொண்ட மிகுந்த அன்பையும், பதடி வைகலார் என்னும் புலவரின் பெயர்க்காரணமும் அறியமுடிகிறது.

4 கருத்துகள்: