வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

குறுந்தொகை ச(ஜ)ப்பானியக் கவிதை ஒப்பீடு




சப்பானியக் கவிதைகள் பலவும் சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றுடன் ஒப்புநோக்கத்தக்கனவாகவுள்ளன.

சான்றாக....

“எத்தனை காலம்
ஏங்கிக் காத்திருந்த பின்
இன்றிரவு எங்கள் சந்திப்பு!
இவ்வொசாகாவின் சேவல்
இன்றொரு நாளாவது
கூவாமல் போகட்டும்
பொழுதிங்கு விடியாமல் நிற்கட்டும்
.”

“யாரோ” எழுதிய இப்பாடலைச் சப்பானியக் கவிதைகளின் தொகுப்பில் கண்டேன்.

தலைமக்கள் இருவரும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் சந்திக்கின்றனர். தலைவி பாடுவது போல உள்ள இக்கவிதையில்,

தலைவனுடன் சேர்ந்திருக்கும் இந்த நிமிடங்கள் நீளாதா..?
பொழுது விடியாமல் இருக்காதா...?
பொழுது விடியாமல் இருந்தால் தலைவன் தன்னுடனே இருப்பானே என்று பலவாறு எண்ணிக்கொள்கிறாள்.
விடியலை அறிவிப்பது சேவல் தானே...
இன்று ஒரு நாளாவது இந்த சேவல் கூவாமல் இருக்கட்டும்..!
பொழுதிங்கு விடியாமல் இருக்கட்டும்.!

என எண்ணுகிறாள் தலைவி..

இந்தப்பாடலில் தலைவி,

சேவல் கூவாமல் இருக்கட்டும்.
பொழுது விடியாமல் இருக்கட்டும்...

என்று மட்டுமே எண்ணுகிறாள் ..

இந்தப் பாடலின் தொடர்ச்சி போலவும்...
இதே பாடலின் சூழலோடும் உள்ள குறுந்தொகைப் பாடலைக் காண்போம்....


“குவி இணர்த் தோன்றி ஒண்பூ அன்ன
தொகு செந்நெற்றிக் கணம்கொள் சேவல்!
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி
கடுநவைப் படீஇயரோ நீயே- நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன்துயில் எடுப்பியோயே.!

(குறுந்தொகை-107)

(துறை- பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது.)

துறை விளக்கம்...


பொருள் தேடிச் சென்ற தலைவன் மீண்டு தலைவியுடன் தங்கியிருக்கிறான். தலைவி இந்த இரவு நீள வேண்டும் என்று காதல் மிகுதியால் உரைத்தது.


மதுரைக்கண்ணனார் பாடிய இப்பாடல் முன் சொன்ன சப்பானியப் கவிதையின் தொடர்சி போல உள்ளது..
சப்பானியக் கவிதையில் வரும் தலைவி சேவலைக் கூவாதே என்றாள்..

குறுந்தொகைத் தலைவி தன் சொல்லை மீறிக் கூவிய சேவலுக்குச் சாபமிடுகிறாள்..

குறுந்தொகைப் பாடலின் விளக்கம்....

பொருள் தேடச் சென்ற தலைவன் நீண்ட நாட்களுக்குப் பின்னர் திரும்பியுள்ளான். அவனோடு இனிது தூங்கும் தலைவி, இந்த இரவு இப்படியே நீள வேண்டும் என்று நினைக்கிறாள்.

மாறாக சேவல் கூவுகிறது.
தலைவிக்குச் சேவல் மீது மிகுந்த சினம் (கோபம்) வருகிறது..

அந்த சேவலுக்குச் சாபமிடுகிறாள்....

செங்காந்தள் மலரைப் போன்ற சிவந்த கொண்டையைக் கொண்ட சேவலே..
நெடுங்காலப் பிரிவுக்குப் பின்னர் புதுவருவாய் போன்று வந்த தலைவனுடன் நான் இனிது உறங்கும் போது,

கூவி என்னை எழுப்பிவிட்டாயே..!

வீட்டில் உள்ள எலிகளைப் பிடித்து உண்ணும் காட்டுப் பூனையின் குட்டிக்கு பல நாள் வைத்து உண்ணும் உணவாக நீ பெருந்துன்பம் அடைவாய்...

என்பதே தலைவி தன் துயிலை எழுப்பி விடியலைத் தெரியப்படுத்திய சேவலக்கு இட்ட சாபம்.



ஒப்புமை.

இரு கவிதைகளிலும் தலைவியர், தலைவனுடன் சேர்ந்திருக்கும் இரவு நீள வேண்டும் என்றே எண்ணுகின்றனர்.

பொழுது விடியக் கூடாது,
பொழுது விடிவதைச் சேவல் அறிவிக்கக் கூடாது என்றே எண்ணுகின்றனர்.


“சேவல் கூவுவதற்கும் பொழுது விடிவதற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. சேவல் கூவாவிட்டாலும் பொழுது விடியும்.”

(சேவல்/கள் பொதுவாக 40 தொடங்கி 70 டெசிபல் அளவு சத்தத்தை உருவாக்கவல்லது/ன.

மனிதர்கள் 0 தொடக்கம் 100 டெசிபல்கள்அளவுள்ள சத்தத்தை அவற்றின் அளவிற்கு ஏற்ப குறிப்பிட்ட நேர காலங்களுக்கு தொடர்ந்து கேட்க அனுமதிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.)



பொழுது புலர்ந்ததும் அதிகாலையில் புழுக்கள் நிலத்தின் மேற்பகுதிக்கு வரும். அதனைத் தம் கோழிகளுக்கு அறிவிக்கவே சேவல் கூவும். இதுவே இயற்கை.

சப்பானியக் கவிதையில் வரும் தலைவி பொழுது விடியக் கூடாது..
சேவல் கூவக் கூடாது என்று தன் ஆசையை மட்டுமே தெரியப்படுத்துகிறாள்...

ஆனால் குறுந்தொகைத் தலைவியோ,
இயல்பாகக் கூவிய சேவலுக்கு சாபம் இடும் அளவுக்கு சினம் கொள்பவளாக உள்ளாள்...

உளவியல் அடிப்படையில் யாருக்குமே தோன்றும் மனநிலை தான் இது. இதனைப் புலவர் அழகாகப் புலப்படுத்தியுள்ளார்.

இரு கவிதைகளையும் படிக்கும் போது....
ஒன்றுக்கொன்று தொடர்புடையன போலவே தோன்றுகின்றன.

இரு பாடல்களும் கால நிலை, சூழல், மொழி, பண்பாடு என்னும் பல நிலைகளில் வேறுபட்டனவாக இருந்தாலும் காதல் என்னும் பண்பால் ஒன்றுபட்டிருக்கக் காண்கிறோம்

உளவியல் அடிப்படையிலான மனநிலை இப்பாடலின் சுவையை மேலும் மிகுவிப்பதாக உள்ளது.

13 கருத்துகள்:

  1. சப்பானியக் கவிதையில் வரும் தலைவி பொழுது விடியக் கூடாது..
    சேவல் கூவக் கூடாது என்று தன் ஆசையை மட்டுமே தெரியப்படுத்துகிறாள்...

    ஆனால் குறுந்தொகைத் தலைவியோ,
    இயல்பாகக் கூவிய சேவலுக்கு சாபம் இடும் அளவுக்கு சினம் கொள்பவளாக உள்ளாள்...///

    நல்ல ஒப்பீடு!!! எப்படி இப்படி ஒரு அருமையான எண்ணம்!!

    பதிலளிநீக்கு
  2. சப்பானியக் கவிதையில் வரும் தலைவி பொழுது விடியக் கூடாது..
    சேவல் கூவக் கூடாது என்று தன் ஆசையை மட்டுமே தெரியப்படுத்துகிறாள்...

    ஆனால் குறுந்தொகைத் தலைவியோ,
    இயல்பாகக் கூவிய சேவலுக்கு சாபம் இடும் அளவுக்கு சினம் கொள்பவளாக உள்ளாள்...///

    நல்ல ஒப்பீடு!!! எப்படி இப்படி ஒரு அருமையான எண்ணம்!!/

    கருத்துரையளித்தமைக்கும் ஓட்டளித்தமைக்கும் நன்றி மருத்துவரே....

    இரு கவிதைகளிலும் உள்ள ஒத்த பண்பு இப்பாடல்களை ஒப்பு நோக்கத் தூண்டியது நண்பரே..

    பதிலளிநீக்கு
  3. //நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
    பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி
    கடுநவைப் படீஇயரோ நீயே//

    தலைவிக்கு இவ்வளவு கடுஞ்சினமா?

    பாவம், அந்தச் சேவல்!

    பதிலளிநீக்கு
  4. ஆஹா.... அருமை....! ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி. நண்பரே இது ;போன்ற ஒப்புமைகளத் தொடர்ந்து எழுதுங்கள்.....

    பதிலளிநீக்கு
  5. முனைவர் கல்பனாசேக்கிழார் said...
    கட்டுரை நன்று.ஒப்பீடு அருமை முனைவரே/

    கருத்துரைக்கு நன்றி முனைவரே...

    பதிலளிநீக்கு
  6. அ. நம்பி said...
    //நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
    பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி
    கடுநவைப் படீஇயரோ நீயே//

    தலைவிக்கு இவ்வளவு கடுஞ்சினமா?

    பாவம், அந்தச் சேவல்


    கருத்துரைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  7. பூனைக்கு/ பூனைக்குட்டிக்குப் பல நாள் வைத்துண்ணும் உணவாக சேவல் ஆக வேண்டும் என்று கூறுவது தலைவியின் சாவத்தை மட்டுமின்றி அவள் உள்ளக்கிடக்கையையும் காட்டுவது போல் தோன்றுகிறது; அவளும் தலைவன் பல நாள் வைத்து உண்ணும் உணவாக ஆக வேண்டும் என்று எண்ணுகிறாள் போலும்.

    சேவல் கூவுவதன் இயற்கை விளக்கத்தை இன்றே அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அருமை ஒப்பீட்டை
    அழகாக வடித்துள்ளீர்கள்.

    இலக்கியச் சுவையுடன்
    இன்றைய சப்பானியச் சுவையும்
    இரண்டறக் கலந்து
    இன்பம் சேர்க்கிறது.

    பதிலளிநீக்கு
  9. குமரன் (Kumaran) said...
    பூனைக்கு/ பூனைக்குட்டிக்குப் பல நாள் வைத்துண்ணும் உணவாக சேவல் ஆக வேண்டும் என்று கூறுவது தலைவியின் சாவத்தை மட்டுமின்றி அவள் உள்ளக்கிடக்கையையும் காட்டுவது போல் தோன்றுகிறது; அவளும் தலைவன் பல நாள் வைத்து உண்ணும் உணவாக ஆக வேண்டும் என்று எண்ணுகிறாள் போலும்.

    சேவல் கூவுவதன் இயற்கை விளக்கத்தை இன்றே அறிந்தேன். நன்றி
    /


    தங்கள் சிந்தனை ஏற்கத்தக்கதாகவுள்ளது நண்பரே..
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  10. சுப.நற்குணன் said...
    அருமை ஒப்பீட்டை
    அழகாக வடித்துள்ளீர்கள்.

    இலக்கியச் சுவையுடன்
    இன்றைய சப்பானியச் சுவையும்
    இரண்டறக் கலந்து
    இன்பம் சேர்க்கிறது

    கருத்துரைக்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  11. ரசனையும், அறிவும் தன்னாலே ஒப்பீடு செய்யும் தன்மையுடைத்து.
    ரசித்தேன். நன்றி.
    இனிய நத்தார் புதுவருட வாழ்த்து.
    ஏன் என் வலைப்பக்கம் வருவதில்லை?
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு