வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 5 நவம்பர், 2009

உளறிக்கொட்டிய உண்மை…




குற்றவாளிகள் பொய்பேசுகிறார்களா என்று கண்டறிய “ உண்மை கண்டறியும் கருவிகளைப்“ பயன்படுத்துகிறார்கள்….

குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க இப்னாடிசம் என்னும் மனவியல் உத்திகளைக் கையாள்கிறார்கள்.

இணைய அரட்டைகளில் பொய்யான நாடு, ஊர், பெயர் என ஏமாற்றும் நிலை அதிகரிப்பதால் அரட்டையடிப்பவர் பேசுவது உண்மையா? பொய்யா? என்று கண்டறியவதற்கெல்லாம் மென்பொருள்கள் வந்துவிட்டன.

எதிர்காலத்தில் நாம் பார்க்கும் சராசரி மனிதர்கள் பேசுவது உண்மையா பொய்யா என்பதைக் கண்டறிவதற்குக் கூட கருவிகள் வந்தாலும் வியப்பதற்கு ஒன்றுமில்லை.

குழந்தைகள் பொய் பேசுவதை எளிதில் கண்டறிந்துவிடலாம். அவர்வளின் கண்களே அவர்கள் பொய் பேசுகிறார்கள் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும்…

உலகமே நாடக மேடை என்பதால் எல்லோரும் நடிகர்களாகிவிட்டார். எல்லோரும் நடிகர்களாகிவிட்டதல் எல்லோரும் பொய் பேசுவது தவிர்க்க இயலாததாகிவிட்டது.

இவர்களெல்லாம் எப்போது தான் உண்மை பேசுவார்கள்..?

தூக்கத்தில் உளறும் போது உண்மைதான் பேசுவார்கள் என்று நினைக்கிறேன்…

ஏனென்றால் வாய் பொய் பேசும்.ஆழ்மனமும், கண்ணும் உண்மை தான் பேசும்


இங்கு ஒரு தலைவியின் ஆழ்மனத்திலிருந்த உண்மையை அவள் விழித்திருக்கும் போதே உளறிக்கொட்டிய அழகிய காட்சியை கொள்ளம்பக்கனார் என்னும் சங்கப்புலவர் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்…

பாடல் இதோ



யாங்கு ஆகுவமோ-'அணி நுதற் குறுமகள்!
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்
செவ் வாய்ப் பைங் கிளி கவர, நீ மற்று
எவ் வாய்ச் சென்றனை, அவண்?' எனக் கூறி,
5 அன்னை ஆனாள் கழற, முன் நின்று,
'அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன்; காண்டலும் இலனே;
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து,
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன்' என நினைவிலை
10 பொய்யல், அந்தோ! வாய்த்தனை? அது கேட்டு,
தலை இறைஞ்சினளே அன்னை;
செலவு ஒழிந்தனையால், அளியை நீ, புனத்தே?

நற்றிணை - 147. குறிஞ்சி
- கொள்ளம்பக்கனார்


பாடலின் பொருள்….

(தலைவன் தலைவியை மணம் செய்துகொள்ளும் எண்ணமின்றி களவுக் (காதல்) காலத்தையே நீட்டிக்க வேண்டும் என்று எண்ணுகிறான். தோழியோ தலைவன் தலைவியைக் காண அருகே வந்து மறைந்திருக்கும் போது அவன் கேட்குமாறு, தலைவியின் அறியாமையும் அதனால் அவள் காதல் பெற்றோர் அறிந்து கொண்டதையும் உணர்த்தினாள்..

இதனைக் கேட்கும் தலைவன்….
தலைவியின் காதல் அவள்தம் பெற்றோர் அறிந்தால் தலைவி இற்செறிக்கப்படுவாள் (வீட்டுக்காவல்) என்பதை அறிந்து விரைவில் மணம் செய்து கொள்ள முற்படுவான்…)

தலைவி உளறிக் கொட்டிய உண்மை…


தோழி : தோழி….. அன்னை உன்னிடம்,“ அழகிய நெற்றியையுடைய இளமகளே!
இடமகன்ற மலைச்சாரலில் அமைந்தது நம் தினைப்புனம். அதில் வந்தமரும் கிளிகளை விரட்டாது எங்கு சென்றாய்….?
என்று தானே கேட்டாள்.

தலைவி : ஆமாம்..

தோழி : அதற்கு நீ என்ன சொன்னாய்…?

தலைவி : அத ஏன்டி கேட்கிற…

அருவி முழங்கும் மலைநாடனை நான் காதாலும் கேட்டறியேன்.
கண்ணாலும் பார்க்கவில்லை.
மலர்ந்த பூக்களைப் பறித்து அவனோடு சுனையில் நீராடவும் இல்லை
என்று நடந்த உண்மையை உளறிகொட்டிவிட்டேன்…

தோழி : இவ்வளவு அறியாமை உடையவளாகவா இருப்பாய்..?
நீ இப்படியிருந்தால் நீ எவ்வாறு குடும்பம் நடத்துவாய் என்று ஊரார் பேசமாட்டார்களா..?
சரி! அதற்கு உன் தாய் என்ன சொன்னாள்…?

தலைவி : சினத்துடன்…
தலைகுனிந்தவாறே சென்றுவிட்டாள்..!

தோழி : ஆம்! அவள் என்ன செய்வாள்…
ஊரார் அலருக்கு அஞ்சி தலைகுனிந்து சென்றிருப்பாள்..
இனி நீ “ இற்செறிக்கப்படுவாய்”

இவையெல்லாம் தலைவன் அறிந்து உன்னை விரைவில் மணம் செய்து கொள்ளவேண்டும்.

இப்பாடலில்….
தலைவனைத் தலைவி எப்போதும் மறந்திலள் என்பதனைக் குறிக்க, பொய் சொல்ல வேண்டிய சூழலிலும் உண்மை சொன்னாள் என்பது சுட்டப்பட்டது..
இதில் தலைவியின் காதலின் ஆழம் உணர்த்தப்பட்டது….

பொய் கூற வேண்டிய இடத்தும் உண்மை கூறியதால் அவளின் அறியாமை புலப்படுத்தப்பட்டது.

6 கருத்துகள்:

  1. நன்றாக உளது தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல விளக்கங்கள் பகிர்வுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  3. கவிக்கிழவன், 05 November 2009 02:44

    நன்றாக உளது தொடர்ந்து எழுதுங்கள்//

    நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. Blogger சந்ரு said...

    நல்ல விளக்கங்கள் பகிர்வுக்கு நன்றிகள்//

    நன்றி சந்ரு..

    பதிலளிநீக்கு