வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 17 நவம்பர், 2009

செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்




எமன் என்னும் கற்பனை மக்களிடம் நீண்ட நெடிய காலமாகவே இருந்து வருகிறது. எமன் என்பவன் மக்களின் உயிரை வாங்கும் தெய்வம். எருமை வாகனத்தில் வருவான். இவனுக்கு காலன், கூற்றுவன் என வேறு பெயர்களும் உண்டு. சங்க இலக்கியத்தில் எமனைப் பற்றி பல பாடல்கள் பலவிதமாகப் பாடப்பட்டுள்ளன. புறநானூற்றில் எமனின் இரங்கத்தக்க நிலையை நப்பசைலையார் சுவைபடக் கூறியுள்ளார்.

பாடல் இதோ,

செற்றன்று அயினும் செயிர்த்தன்று ஆயினும்
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
இரந்தன்றாகல் வேண்டும் - பொலந்தார்
மண்டு அமர் கடக்கும் தானைத்
திண்தேர் வளவற் கொண்ட கூற்றே“.

புறநானூறு.226
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கி்ள்ளி வளவனை மாறோகத்து நப்பசலையார் பாடியது


கூற்று என்னும் கால இறுதி பயக்கும் தெய்வம், எல்லா உயிர்களின் உயிரையும் எளிதில் எடுத்துவிடலாம்.
ஆனால் கிள்ளிவளவனின் உயிரைமட்டும் எளிதில் எடுத்துவிடமுடியாது.
கிள்ளி வளவன் மீது பகை கொண்டாலும்
சினம் கொண்டாலும்
அவனிடமிருந்து பிழைத்தல் அரிது.
பாடுநர் போல வந்து தொழுது அவனிடம் கொடைப் பொருளாக வேண்டுமானல் அவன் உயிரைப் பெறலாம். அதனால் பொன்னால் செய்த மாலையையும், போரில் எதிர் நின்று வெல்லும் படையினையும், நல்ல தேரையும் கொண்ட சோழனின் உயிரை வவ்வ வேறு வழியே இல்லை.


இப்பாடலில் கூற்றுவன் என்னும் எமன் சோழனின் உயிரை செற்றோ ( பகை கொண்டோ) செயிற்றோ ( சினம் - கோபம் - வெகுளி கொண்டோ) பெற முடியாது மாறாக., பாடுநர் போல வணங்கி உன் உயிரைத் தா என்று கேட்டால், கொடை என்று மனமகிழ்ச்சியோடு ஈந்துவிடுவான் என்கிறார் புலவர்.

இப்பாடலில் கிள்ளிவளவனின் வீரமும், கொடைத்திறமும் சிறப்பித்துப் பேசப்படுகிறது.

எமனே நெருங்க அஞ்சும் வீரமுடையவன் சோழன் என்றும்,
பாடுநர் போல வணங்கிக் கேட்டால் தன் உயிரைக் கூடத் தந்து விடுவான் என்பதால் அவன் கொடைத்திறமும் உணர்த்தப்பட்டது.

எமன் என்னும் கடவுள் குறித்த நம்பிக்கை சங்ககாலத்திலிருந்து இன்று வரை இருக்கிறது.

நம்பிக்கை மட்டுமே இருக்கிறது


இப்பாடலில் வளவனின் வீரத்தையும், கொடையையும் உயர்த்திச் சொல்ல வேண்டும் என்பதே புலவரின் நோக்கம். அதற்கு மக்கள் அஞ்சும் உயர் குறியீடாகவுள்ள கூற்றுவனை எடுத்துக்கொணடார்.

8 கருத்துகள்:

  1. நன்று..மக்கள் அந்த உண்மை வீரத்தை உணர்ந்து மறந்து விடுவர். ஆனால் கற்பனை எமனை மறக்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமை..! இப்படி சுருக்கமா அழகா ஒரு விஷயத்த சொல்றது ரொம்பப் பெரிய விஷயமுங்க..! ரொம்ப நன்றி..!

    பதிலளிநீக்கு
  3. நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதவும்

    பதிலளிநீக்கு
  4. நன்றாக உள்ளது.. தொடரட்டும் பயணம் !!!!!!!

    பதிலளிநீக்கு
  5. கவிக்கிழவன் said...

    நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதவும்


    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு