வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 24 நவம்பர், 2009

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன..



காதலித்துப் பார்
நிமிசங்கள் வருசமென்பாய்
வருசங்கள் நிமிசமென்பாய்!


என்பார் வைரமுத்து.

நிமிசங்கள் ஒவ்வொன்றும் வருசங்களாகும்
நீயென்னை நீங்கிச்சென்றாலே..!

வருசங்கள் ஒவ்வொன்றும் நிமிசங்களாகும்
நீயென்தன் பக்கம் நின்றாலே…!

என்று காதல் தேசம் என்னும் படத்தில் அன்பே அன்பே என்றபாடலில் வரிகள் இடம்பெறும்.

இந்த சிந்தனையை இன்றைய பல திரைப்படப்பாடல்களிலும் பலவாறு கேட்கமுடிகிறது.இந்த சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்த குறுந்தொகைப்பாடல் இதோ...

“பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு
உடன் உயிர் போகுதில்ல - கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே“

குறுந்தொகை-57 சிறைக்குடி ஆந்தையார்

“காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது“

(தலைவியின் காதலை அவள்தம் பெற்றோர் அறிந்ததால் இற்செறித்தனர். அந்த காவல் மிகுதியில் தலைவனைச் சந்திக்க இயலாத ஆற்றாமையில் வருந்திய தலைவி தன் துன்பத்தைத் தோழியிடம் இவ்வாறு தெரிவிக்கிறாள்.)

நீர்வாழ்ப்பறவை அன்றில். ஆணும் பெண்ணுமாக ஒன்றையொன்று பிரியாமல் வாழ்வன. 
தமக்கிடையே பூ ஒன்று இடைப்பட்டு தடையை ஏற்படுத்தினாலும் அந்தப் பிரிவை ஓர் ஆண்டு காலஅளவிலான பிரிவாக எண்ணி வருந்தும் தன்மையன. அந்தப் பறவைகள் போல ஓருயிர் இரு உடல்களாக நானும் தலைவனும் வாழ்கிறோம். 
தலைவன் பிரிந்த போது ஓருயிர் ஓருடலில் வாழும் இழிவு ஏற்படும். 
அதற்குத் தலைவன் பிரிந்தவுடன் என்னுயிரும் போய்விடுவது மேலானது என்கிறாள் தலைவி.




இப்பாடல் வழி அன்றில் என்னும் பறவைகள் தம்முள் அன்பு நிறைந்த வாழ்க்கை வாழ்வன என்றும் அவை தம்முள் பூஇடைப்படினும் அந்தப் பிரிவை ஓர் ஆண்டு காலப் பிரிவாகக் கருதி வருந்தும் என்னும் செய்தி குறிப்பிடப்படுகிறது.

அன்றில்ப் பறவைகள் போல தலைவனின் பிரிவைத் தன்னால் தாங்க முடியாது. அதற்கு அவன் பிரிந்தவுடனேயெ என் உயிர் போய்விடுவது மேலானது என எண்ணுகிறாள் தலைவி..

இந்த குறுந்தொகைப் பாடலே பல திரைப்படப்பாடல்களின் பிறப்பிடமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

சொற்பொருள் விளக்கம்

இருவேம் - இருவரும் சேர்ந்தே தோன்றுவோம்
காமம் - மெய்யுறு புணர்ச்சி, அன்பின் மிகுதி
தண்டாக்காமம் - அடங்காத காமம்

14 கருத்துகள்:

  1. நல்ல விளக்கங்கள் நண்பரே..அன்றில் பறவை என்றால் அன்னம் தானே?

    பதிலளிநீக்கு
  2. விளக்கத்திற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. மிக அருமை !!!பல கவிதைகள்/திரைப்பட பாடல்கள் உருவானது நம் சங்க இலக்கிய நூல்களில் இருந்துதானே !!!

    பதிலளிநீக்கு
  4. பூங்குன்றன்.வே said...

    மிக அருமை !!!பல கவிதைகள்/திரைப்பட பாடல்கள் உருவானது நம் சங்க இலக்கிய நூல்களில் இருந்துதானே !!//

    ஆம் நண்பரே...
    பல திரைப்படப்பாடல்களின் பிறப்பிடம் சங்க இலக்கியம் தான்..

    பதிலளிநீக்கு
  5. வானம்பாடிகள் said...

    விளக்கத்திற்கு நன்றி ஐயா//

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.._/\_

    பதிலளிநீக்கு
  6. Blogger கலகலப்ரியா said...

    ஆமாம் மிகையாகாது...! அருமை!//

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரியா..

    பதிலளிநீக்கு
  7. மிக அழகாக இருக்குறது இது அப்பவே இப்படியா ?? இதுக்குப் போய் சில நாட்கள் பல வாத பிரதி வாதங்கள் கேட்டிருக்கேன் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. என்னது! ஒரு மென்மையான பூ இடையில்
    வந்தாலே...அந்த அன்றில் பறவைகள்
    ஒரு வருடப் பிரிவாக நினைக்குமா?
    என்ன ஒரு சுகமான கற்பனை ??

    பதிலளிநீக்கு
  9. ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

    என்னது! ஒரு மென்மையான பூ இடையில்
    வந்தாலே...அந்த அன்றில் பறவைகள்
    ஒரு வருடப் பிரிவாக நினைக்குமா?
    என்ன ஒரு சுகமான கற்பனை ??



    கருத்துரைக்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  10. ramesh-றமேஸ் said...

    மிக அழகாக இருக்குறது இது அப்பவே இப்படியா ?? இதுக்குப் போய் சில நாட்கள் பல வாத பிரதி வாதங்கள் கேட்டிருக்கேன் நன்றி நண்பரே வாழ்த்துக்கள்.

    கருத்துரைக்கு நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு