வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 17 பிப்ரவரி, 2010

நீர் வழிப்படூஉம் புணைபோல் - UPSC EXAM TAMIL - புறநானூறு - 192



ஒரு நாள் வான்வழியே சிவனும், பார்வதியும் சென்றுகொண்டிருந்தார்களாம். அவர்கள் கண்ணுக்கு கிழிந்த சட்டையைத் தைத்துக்கொண்டிருக்கும் வயது முதிர்ந்த ஒருவர் தெரிந்தாராம். அவரைப் பார்த்த பார்வதி மிகவும் ஏழைபோலத் தோற்றமளிக்கிறாரே…
இவருக்கு ஏதாவது வரம் தந்து செல்லாம் என்று சிவனிடம் சொன்னாராம்.
அதற்கு சிவன் இவரா..
இவர் நீ நினைப்பது போல சராசரி மனிதர் அல்ல!
அவருக்குக் கடவுள் நம்பிக்கையுண்டு. ஆயினும் அவர் முதலில் நம்புவது நம்மையல்ல அவரைத் தான் என்றாராம். ஆயினும் பார்வதியின் வற்புறுத்தலுக்காக அந்த முதியவரைப் பார்க்க இருவரும் அவர் வீட்டுக்குச் சென்றார்களாம்.

இருவரையும் பார்த்த அந்த முதியவர்..
முகம் மலர்ந்து வரவேற்றார்,
பின் குடிக்கத் தண்ணீர் கொடுத்தார், நல்லாருக்கீங்களா?
என்னை மதித்துப் பார்க்க வந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி!
என்றவர் தொடர்ந்து தன் கிழிந்த சட்டையைத் தைக்க ஆரம்பித்துவிட்டாராம்.

பார்வதிக்கு இது மிகவும் புதுமையாக இருந்தது. என்ன இவர் கடவுளர் நாம் வந்திருக்கிறோம் நம்மை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் இவர்பாட்டுக்க கிழிந்த சட்டையைத் தைத்துக்கொண்டிருக்கிறாரே என்று. சரி நாமே கேட்கலாம் என்று பார்வதி அந்த முதியவரிடம் கேட்டாராம்..

பார்வதி - முதியவரே தாங்கள் எங்களிடம் ஏதாவது வரம் கேளுங்கள் தருகிறோம்.

முதியவர் - இடியெனச் சிரித்தார்…

(இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை)

பார்வதி - நாங்கள் ஏதாவது வரம் தருகிறோம் என்றுதானே கேட்டோம் அதற்கு ஏன் சிரிக்கிறீர்கள்?

முதியவர் - என் வாழ்வில் தேவைகள் குறைவு.
அதனால் வாழ்வெல்லாம் நிறைவு!
என் தேவைகளை நானே நிறைவுசெய்து கொள்கிறேன்.
எனக்கு எதற்கு வரம்?

பார்வதி - தாங்கள் ஏதாவது வரம் கேட்டுத்தான் ஆகவேண்டும். நாங்கள் யாரைப் பார்த்தாலும் வரம் தந்து செல்வது தான் வழக்கம் அதனால் ஏதாவது கேளுங்கள்.

முதியவர் - சரி மிகவும் வற்புறுத்திக் கேட்கிறீர்கள். அதனால் கேட்கிறேன்.
நான் தைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊசியின் பின்னே இந்த நூல் செல்லும் வரம் தாருங்கள்.

பார்வதி - என்ன சொல்கிறீர்கள் முதியவரே..
இயற்கையாகவே ஊசியின் பின்தானே நூல் செல்லும்.
இதற்கு எதற்கு வரம்?

முதியவர் - ஆம் உண்மை தான் அதுபோலதானே எனது வாழ்க்கையும். நான் செய்யும் நன்மை தீமையை அடிப்படையாகக் கொண்டு தானே இன்ப துன்பம் அமையும்.

நான் ஒரு நன்மை செய்தால் அதன் பின்னே இன்பம் வரும்!
நான் ஒரு தீமை செய்தால் அதன் பின்னே துன்பம் வரும்!

இதில் எனக்கு எதற்கு வரம்.

பார்வதி - உண்மைதான் உங்களைப் போலவே எல்லோரும் இருந்துவிட்டால் எங்களுக்கு வேலை மிச்சம்.


இந்தக் கதை காலகாலமான நம் நம்பி்க்கையின் பிரதிபலிப்பாகவுள்ளது.
இதே சிந்தனையை உள்ளடக்கிய சங்கப் பாடல் ஒன்று.


யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

192. பெரியோர் சிறியோர்!
பாடியவர்: கணியன் பூங்குன்றன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி.

இந்தப் பாடல் உணர்த்தும் கருத்துக்கள்….



யாதும் ஊரே யாவரும் சுற்றத்தாரே என்று வாழ்ந்துவிட்டால் நமக்குள் வேறுபாடு அகன்றுவிடும்!

தீமையும் நன்மையும் பிறர் தரா வாராது!
துன்பமும் இன்பமும் தம்மாலேயே விளைவதாகும்!

என்பது புரிந்துவிட்டால் கோயில்களின் எண்ணிக்கையும் குறையும், உழைப்பு அதிகரிக்கும்! நாடு செழிக்கும்!

இறத்தலும் புதியதன்று!
கருவில் தோன்றிய நாள் முதல் இறப்பு என்பது தீர்மானிக்கப்பட்டது!

என்ற சிந்தனை அறிவியலின் துணைகொண்டு இன்னும் ஆய்வு செய்யவேண்டியது.

மரபணுக்களையும், வேர்செல்களையும் ஆய்வுசெய்யும் அறிவியல் அறிஞர்கள் ஒரு உயிரின் இறப்பு குறித்த நாளை வரையறை செய்யமுடியுமா? என்று சிந்திக்கலம்.

வாழ்தலை இனிதென மகிழ்தலும் இல்லை!
ஒரு வெறுப்பு வந்தபோது வாழ்க்கை துன்பமானது என்று ஒதுங்குதலும் இல்லை!

இன்பம் வந்த போது மகிழ்ந்து துன்பம் வந்தபோது வருந்தும் நாம் இரண்டையும் சமநிலையில் எடுத்துக்கொள்ள முற்பட்டால் ஏமாற்றம் குறையும்.

மின்னலுடன் மழை குளிர்ந்த துளியைப் பெய்தலால் கல்லை உருட்டி ஒலிக்கும் ஆறு. அவ்வாற்று நீரின் வழியே செல்லும் தெப்பம் போல அரிய உயிர் நம் வாழ்வின் முறைவழியே செல்லும் என்பதை நன்மைக் கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலேயே அறிந்தோம். அதனால்,

பெரியோரைக் கண்டு பெருவியப்படைவதும் இல்லை!
சிறியோரைக் கண்டு அவமதிப்பு செய்வதும் இல்லை!

என்பதே பாடலின் பொருள்.


இப்பாடலில்,

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்

என்பதற்கு உரையாளர்களும், ஆய்வாளர்களும் விதிவழியே என்ற பொருளையே சொல்லிச் சென்றுள்ளனர். முறையென்ற சொல்லுக்கு ஊழ் எனப் பொருள் கொள்வது எந்தவிதத்தில் பொருந்தும்?

கடவுள் நம்பிக்கையாளர்களின் மன நிறைவுக்காக வேண்டுமானால் சொல்லிக்கொள்ளாம்.
கணியன் பூங்குன்றனாரோ மிகவும் தெளிவாகச் சொல்லியுள்ளார் முறைவழிப்படும் என்று!

என்ன முறைவழி?
நன்மை - தீமை என்ற முறை வழி,
இன்பம் - துன்பம் என்பன வந்து சேரும்.

கால காலமாகவே கடவுள் நம்பிக்கையில் மூழ்கிப்போன மனது முறைவழி என்பதை விதி வழி என்று ஆக்கிவிட்டது.

கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே..
விதியை யாராலும் வெல்ல முடியாது என்று பேசும் இவர்கள்…

விதியை மதியால் வெல்லாம் என்றும் பேசுவார்கள்…

காலத்திற்கு ஏற்றது போல.

உயர்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய இப்பாடலை உலகமக்களிடையே கொண்டு செல்லும் போது நம்முடைய விதிபற்றிய நம்பிக்கையையும் ஏன் கொண்டு செல்லவேண்டும்?

பாடல் பாடிய புலவர் விதி என்றா கூறியிருக்கிறார்?
இல்லையே முறை என்று தானே சொல்லியிருக்கிறார்?
முறை எப்படி விதியாகும்?

தினை விதைத்தால் தினை விளையும்
வினை விதைத்தால் வினை விளையும் என்பதே முறை!

என்பதைச் சிந்தித்து பழந்தமிழரின் உயரிய கொள்கையைப் போற்றுவோம்!!

36 கருத்துகள்:

  1. பெரியவர் கதை அருமை, விளக்கங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு முனைவர் குணா.

    கனியன் பூங்குன்றனின் இந்த சர்வ தேசியவாதம், தான் எல்லோராலும் முன்னிறுத்தப் பட்டதே தவிர அவரின் மற்றைய வரிகள் அல்ல. பகிர்ந்தமைக்கு நன்றி....

    இந்தப் பாடல் குறித்து பெரும் விமர்சனங்கள் உண்டு என்பதை அறிவீர்கள் என்று நினைக்கின்றேன்.

    அன்புடன்
    ஆரூரன்.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் நன்று. உள்ளத்திற்கு ஊக்கமூட்டும் உயரிய கருத்துக்கள் அடங்கிய பாடல். இந்த செய்யுளுக்கு இராம.கி ஐயாவும் உங்களைப் போன்றே விளக்கம் தந்துள்ளார்.

    பதிலளிநீக்கு
  4. //கால காலமாகவே கடவுள் நம்பிக்கையில் மூழ்கிப்போன மனது முறைவழி என்பதை விதி வழி என்று ஆக்கிவிட்டது.
    //

    அப்பட்டமான உண்மை...மூட நம்பிக்கைகள் இப்படித்தான் பிறப்பெடுத்திருக்கும்...

    பதிலளிநீக்கு
  5. அருமையான கதை குணா...வாழ்க்கையை எதிர்க்கொள்ளாமல் சோர்வுறுவோர்கு இந்த கதை ஒரு நம்பிக்கையை தருமென்பதில் ஐயமில்லை...

    பதிலளிநீக்கு
  6. விதிக்கும்,முறைக்கும் வித்தியாசம் மிக நேர்த்தி.

    பதிலளிநீக்கு
  7. பெரியவர் கதை மிகவும் அருமையாக இருந்தது.

    ///தினை விதைத்தால் தினை விளையும்
    வினை விதைத்தால் வினை விளையும் என்பதே முறை!
    என்பதைச் சிந்தித்து பழந்தமிழரின் உயரிய கொள்கையைப் போற்றுவோம்!!///

    ............ உயர்ந்த உள்ளங்கள். நன்று.

    பதிலளிநீக்கு
  8. அருமையான விளக்கம்.. அழகான பதிவு

    பதிலளிநீக்கு
  9. சைவகொத்துப்பரோட்டா said...

    பெரியவர் கதை அருமை, விளக்கங்களுக்கு நன்றி.


    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  10. Blogger ஆரூரன் விசுவநாதன் said...

    நல்ல பதிவு முனைவர் குணா.

    கனியன் பூங்குன்றனின் இந்த சர்வ தேசியவாதம், தான் எல்லோராலும் முன்னிறுத்தப் பட்டதே தவிர அவரின் மற்றைய வரிகள் அல்ல. பகிர்ந்தமைக்கு நன்றி....

    இந்தப் பாடல் குறித்து பெரும் விமர்சனங்கள் உண்டு என்பதை அறிவீர்கள் என்று நினைக்கின்றேன்.

    அன்புடன்
    ஆரூரன்.


    ஆம் நண்பரே..
    கருத்துரைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. Blogger குலவுசனப்பிரியன் said...

    மிகவும் நன்று. உள்ளத்திற்கு ஊக்கமூட்டும் உயரிய கருத்துக்கள் அடங்கிய பாடல். இந்த செய்யுளுக்கு இராம.கி ஐயாவும் உங்களைப் போன்றே விளக்கம் தந்துள்ளார்.


    ஒ அப்படியா பார்க்கிறேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
  12. Blogger குலவுசனப்பிரியன் said...

    மிகவும் நன்று. உள்ளத்திற்கு ஊக்கமூட்டும் உயரிய கருத்துக்கள் அடங்கிய பாடல். இந்த செய்யுளுக்கு இராம.கி ஐயாவும் உங்களைப் போன்றே விளக்கம் தந்துள்ளார்.


    ஒ அப்படியா பார்க்கிறேன் நண்பரே.

    பதிலளிநீக்கு
  13. புலவன் புலிகேசி said...

    //கால காலமாகவே கடவுள் நம்பிக்கையில் மூழ்கிப்போன மனது முறைவழி என்பதை விதி வழி என்று ஆக்கிவிட்டது.
    //

    அப்பட்டமான உண்மை...மூட நம்பிக்கைகள் இப்படித்தான் பிறப்பெடுத்திருக்கும்..


    ஆம் நண்பா.

    பதிலளிநீக்கு
  14. Blogger தமிழரசி said...

    அருமையான கதை குணா...வாழ்க்கையை எதிர்க்கொள்ளாமல் சோர்வுறுவோர்கு இந்த கதை ஒரு நம்பிக்கையை தருமென்பதில் ஐயமில்லை...


    நன்றி தமிழ்.

    பதிலளிநீக்கு
  15. Blogger ஜெரி ஈசானந்தா. said...

    விதிக்கும்,முறைக்கும் வித்தியாசம் மிக நேர்த்தி.


    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  16. Blogger Chitra said...

    பெரியவர் கதை மிகவும் அருமையாக இருந்தது.

    ///தினை விதைத்தால் தினை விளையும்
    வினை விதைத்தால் வினை விளையும் என்பதே முறை!
    என்பதைச் சிந்தித்து பழந்தமிழரின் உயரிய கொள்கையைப் போற்றுவோம்!!///

    ............ உயர்ந்த உள்ளங்கள். நன்று.


    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  17. Blogger அகல்விளக்கு said...

    அருமை....

    நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  18. நல்ல பகிர்வு குணசீலன் கல்லூரிகாலத்தில் படித்தது
    என் அம்மா எம் ஏ சுசீலா சொல்வது போலவே இருக்கிறது

    பதிலளிநீக்கு
  19. கண்மணி/kanmani said...

    நல்ல படிப்பினைக் கதை.


    நன்றி கண்மணி.

    பதிலளிநீக்கு
  20. செ.சரவணக்குமார் said...

    அருமை


    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  21. Blogger thenammailakshmanan said...

    நல்ல பகிர்வு குணசீலன் கல்லூரிகாலத்தில் படித்தது
    என் அம்மா எம் ஏ சுசீலா சொல்வது போலவே இருக்கிறது.

    நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  22. Blogger மாதேவி said...

    அருமையான விளக்கம்.

    கருத்துரைக்கு நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு
  23. எனக்குத் தெரிந்து கணியன் பூங்குன்றனார் தான் முதல் கம்யூனிஸ்ட்!!!

    பதிலளிநீக்கு
  24. மிக நன்று ..
    பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ' யாதும் ஊரே யாவரும் கேளிர்' வாசிக்கையிலே,
    நம் கவிகள் வாழ்வை கற்று தேர்ந்து உணர்ந்து, பின்னரே கவிதையாய் பாடி இருக்கிறார்கள் என்பது தெள்ளெனத் தெரிகிறது!
    'முறை வழி' - தாங்கள் கூறிய கருத்தே ஏற்புடையதாக அறிவு சொல்கிறது.
    பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  25. @பொன்னியின் செல்வன் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் நண்பா.

    பதிலளிநீக்கு
  26. நல்ல பாடல்... நல்ல பகிர்வு... பலவற்றை உணர்த்துகிறது... நன்றி முனைவரே...

    பதிலளிநீக்கு