வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 10 மார்ச், 2010

அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை.




மனதில் அன்பின்றி வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற கொடிய பாலை நிலைத்தில் பட்ட மரம் மீண்டும் தளிர்த்தது போன்றது என்பதை,


அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.


குறள் -78

என உரைப்பார் வள்ளுவர். அந்த மரத்தின் தளிர் யாருக்கும் பயன்படுவதில்லை அது போலவே இன்று மனிதர்களும் மாறி வருகிறார்கள்.


இயந்திரங்களுக்கு மனிதப் பண்பை உருவாக்க எண்ணும் மனிதன் இயந்திரமாக மாறிவருகிறான் என்பதும் உண்மைதான்.

மனிதன் புதைக்கப்படும பெட்டிகள் இரண்டு,

ஒன்று சவப்பெட்டி
இன்னொன்று தொலைக்காட்சிப்பெட்டி


என்பர் கவிஞர் காசியானந்தன். அறிவியல் தந்த கருவிகளில் சிக்கிக்கொண்ட மனிதர்களுக்கு அன்பு என்ற உணர்வு குறைந்து வருகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குக் கொடுக்கப்படும் முதன்மை குழந்தைகளுக்குத் தரப்படுவதில்லை.

குழந்தைகள் காப்பகம்
முதியோர் இல்லம்
தனிக்குடும்பம்

ஆகியனவே இதற்கு நிகழ்கால சான்றுகளாகும்.

அஃறிணை உயிர்கள் கற்றுத் தரும் பாடம்


பாலை வழியே பொருள் தேடச் சென்ற தலைவன் அங்கு காணும் காட்சிகளால் என் நினைவு வந்து மீண்டு வருவான் என்ற தலைவிக்குத் தோழி சொல்வதாக இப்பாடல் அமைகிறது.

தோழி - தலைவன் உன்மீது மிகுந்த அன்புடையவனாக இருந்தாலும் பொருள் மீது கொண்ட பற்றினால் உன்னை நீங்கி கொடிய வெம்மைத் தன்மை வாய்ந்த பாலை வழியே சென்றுவிட்டான்.

தலைவி - ஆமாம். அவர் பிரிவை ஆற்றாது தவிக்கும் வேளையில் எனக்கொரு நம்பிக்கை பிறக்கிறது.

தோழி - என்ன?

தலைவி - தலைவன் சென்ற வழி அன்புறு காட்சிகள் நிறைந்த வழியாகும். அக்காட்சிகளைக் காணும் தலைவன் என் நினைவு வந்து விரைந்து திரும்புவான் என்பது தான்.

தோழி - உண்மைதான்.
பாலை நிலம் கொடிய வெம்மையுடையதாயினும் நீ சொல்லுவது போல அன்புறு காட்சிகளும் நிறையவுண்டு.

“ தன் கன்றின் மீது மிகுந்த அன்பு கொண்ட ஆண்மான் கவைத்த தன் கூர்மையான கொம்பால் மரத்தின் அடிப்பகுதியைக் குத்தித் தன் கன்றின் பசிநோயைத் தீர்க்கும்.

துள்ளி நடக்கும் இயல்புடைய தன் கன்று வெயிலில் வாடக்கூடாது என்று கருத்திய ஆண்மான் தன் உடலையே நிழலாகத் தரும்.


தலைவி - ஆம் இந்த அன்பான காட்சியைப் பார்க்கும் தலைவன் என் நினைவு வந்து விரைந்து திரும்புவான்.

தோழி - கன்றின் மீது ஆண்மான் கொண்ட அன்பைக் காணும் தலைவருக்குத் தன் கடமை தானே நினைவுக்கு வரும்.

தலைவருக்கு உன்மீது கொண்ட அன்பை விட பொருளின் மீது கொண்ட அன்பு அதிகமானது. அதனால் தன் சென்ற வினை(செயல்) முடியாது திரும்பமாட்டார்.

பாடல் இதோ,


நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉம்பெருந் ததரல்
ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற்
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
இன்றுயில் முனிநர் சென்ற வாறே.

குறுந்தொகை 213. பாலை - தோழி கூற்று

-கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்.

இப்பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.


◊ அன்பு வாழ்க்கையை இனிமையாக்கும்.
◊ மனிதர்களை மனிதர்களாக வைத்திருப்பது அன்பு.
◊ அஃறிணை உயிர்களின் அன்பு சில காலங்கள் மட்டுமே. மனிதர்கள் கொண்ட அன்பு பல்லாண்டுகாலம்.
◊ அன்பின்றி வாழும் வாழ்க்கை யாருக்கும் பயன்தருவதில்லை.
◊ பொருள் வாழ்க்கைக்குத் தேவை. பொருள் தேடுதல் கடமைகளுள் ஒன்று. பொருள் மட்டுமே வாழ்க்கையல்ல.


என பல அறிய வாழ்வியல் கருத்துக்களை எடுத்தியம்புவதாக இப்பாடல் அமைகிறது.

16 கருத்துகள்:

  1. "குழந்தைகள் காப்பகம்
    முதியோர் இல்லம்
    தனிக்குடும்பம்"

    இதுதானே மாறிவரும் காலத்தின் நிதர்சன உண்மை

    பதிலளிநீக்கு
  2. அந்த இரண்டாவது பெட்டியில் நிரம்ப செலவழிக்கிறோம் நம் நேரத்தை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான தமிழ் பதிவு வாழ்க வளமுடன் வளர்க தமிழ் மொழி

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. 4 Comments
    Close this window Jump to comment form

    Blogger ஹாய் அரும்பாவூர் said...

    "குழந்தைகள் காப்பகம்
    முதியோர் இல்லம்
    தனிக்குடும்பம்"

    இதுதானே மாறிவரும் காலத்தின் நிதர்சன உண்மை.

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  6. Blogger சைவகொத்துப்பரோட்டா said...

    அந்த இரண்டாவது பெட்டியில் நிரம்ப செலவழிக்கிறோம் நம் நேரத்தை.


    உண்மைதான் நண்பரே..

    பதிலளிநீக்கு
  7. Blogger யாதவன் said...

    அருமையான தமிழ் பதிவு வாழ்க வளமுடன் வளர்க தமிழ் மொழி.


    நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  8. Blogger சசிகுமார் said...

    நல்ல பதிவு நண்பரே தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    மகிழ்ச்சி நண்பரே.

    பதிலளிநீக்கு
  9. //இயந்திரங்களுக்கு மனிதப் பண்பை உருவாக்க எண்ணும் மனிதன் இயந்திரமாக மாறிவருகிறான் என்பதும் உண்மைதான்//

    நிதர்சனம் குணா....

    பதிலளிநீக்கு
  10. //அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று.//

    வேலைப்பளு காரணமாக உங்கள் இடுடைகள் சில படிக்கவில்லை. இது மிகவும் நல்ல இடுகை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. Blogger தமிழரசி said...

    //இயந்திரங்களுக்கு மனிதப் பண்பை உருவாக்க எண்ணும் மனிதன் இயந்திரமாக மாறிவருகிறான் என்பதும் உண்மைதான்//

    நிதர்சனம் குணா....


    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்.

    பதிலளிநீக்கு
  12. Blogger சே.குமார் said...

    //அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று.//

    வேலைப்பளு காரணமாக உங்கள் இடுடைகள் சில படிக்கவில்லை. இது மிகவும் நல்ல இடுகை. வாழ்த்துக்கள்.


    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  13. முனைவர் தரமான கட்டுரைத் தருவதில் வல்லவர்

    பதிலளிநீக்கு
  14. அன்பின் குணா - நல்லதொரு சிந்தனை - அன்பு என்பது மனிதனிடம் இருக்கும் வரை தான் அவன் மனிதன் எனக் கூறலாம். ஐந்தறிவுள்ள விலங்குகள் காட்டும் அன்பினைக் கூட நாம் காட்ட மறுக்கிறோம். என்ன செய்வது .... குறுந்தொகைப் பாடலுக்கும் விளக்கத்திற்கும் நன்றி குணா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு