வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

சங்க இலக்கியத்தில் நகைச்சுவை.




“எள்ளல், இளமை, பேதைமை, மடன்“ என்னும் நான்கு கூறுகள் நகை என்னும் சிரிப்பு தோன்ற அடிப்படையாகும் என்பர் தொல்காப்பியர்.

பேதமை காரணமாகத் தோன்றிய நகையை சங்கப்பாடல்கள் வழி காண்பது இவ்விடுகையின் நோக்கமாகும்.

கெண்டை மீன் ஒன்று நீரில் துள்ளிக்குதித்து நீந்திவந்தபோது அதற்காகவே காத்திருந்த கொக்கு (நாரை) கெண்டைமீனைக் கவ்வியது. எதிர்பாராதவிதமாக கொக்கின் கவ்வுதலிலிருந்து தப்பியது மீன். உயிர்பிழைத்த மீன் அச்சவுணர்வுடனேயே நீருள் நீந்திவந்தது. நீருக்கு மேல் எட்டிப்பார்த்த மீன் தாமரைமலரைக் கண்டு அதுவும் கொக்குதானோ என்று அஞ்சிவருந்தியது.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்“ என்பது போல இங்கு கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனுக்கு தாமரை மலர்கூட கொக்காகவே தெரிகிறது! இது பேதமை காரணமாகத் தோன்றிய நகையாகும். மீனின் மனவுணர்வைப் பிரதிபலிக்கும் இவ்வகப்பாடல் உணர்த்துவதும் ஒரு அழகான அகவாழ்வியல்,

பரத்தையரிடமிருந்து மீண்ட தலைவன் ஊடல் கொண்டிருந்த தலைவியிடம் பாணனைத் தூதாக விடுத்துத் தான் பின்நின்றான். பாணனைக் கண்ட தோழி அவனைநோக்கி, “நின் பாணன் பொய்யனாக இருப்பதால் பாணர் யாவரும் பொய்யராகவே எமக்குத் தோன்றுகிறார்கள் என்று கூறி வாயில் மறுத்தாள்.

(வாயில் மறுத்தல் – என்பது அகத்துறைகளுள் ஒன்று தலைவன் பரத்தையரிடம் சென்றதால் மனம் வாடி அவன் தவறை அவனுக்கு உணர்த்துவதாக அவனை தம் வீட்டுக்கு வர அனுமதி மறுப்பர். இதற்கு வாயில் மறுத்தல் என்று பெயர்)


குருகுகொளக் குளித்த கெண்டை யயல
துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னாக
5 உள்ள பாண ரெல்லாம்
கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே.

(குறுந்தொகை -127.ஓரம்போகியார். மருதம்)
தோழி கூற்று (மருதம் - ஊடல்)


குருகிற்கு அஞ்சிய கெண்டை அக்குருகைப் போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை யில்லாததுமாகிய தாமரை முகையையும் கண்டு அஞ்சினாற்போல, நீ விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த மகளிர் பொய்யரல்லாத பிற பாணரையும் வெறுத்தனரென்பது குறிப்பு. இப்பாடலைப் போலவே நாரையிடம் தப்பிய இறாமீன் தாழையின் மலரைக் கண்டு நாரையோ என்று அஞ்சுவதாக நற்றிணை (211) பாடலும் சுட்டிச் செல்கிறது.

பாடல்வழி அறியலாகும் கருத்து,

• கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனின் செயல் பேதமை நிமித்தம் சிரிப்பைத் (நகை) தோற்றுவிப்பதாகவுள்ளது.

• கொக்கிடம் மீண்ட மீன் தாமரையைக் கண்டு கொக்கோ என்று அஞ்சுவது – தலைவனுக்காகப் பொய்சொல்லும் பாணரைக் கண்ட மகளிர் எல்லாப் பாணர்களும் பொய்யர்கள் என்று எண்ணுதல் ஆகியன ஒப்பு நோக்கி இன்புறத்தக்கன.

• மனித உணர்வுகளைப் போல வாய் பேச இயலாத உயிரினங்களின் (மீன்) மனவுணர்வையும் நகைச்சுவையுணர்வோடு சிந்தித்த சங்கப்புலவர்களின் உளவியல் அறிவு வியக்கத்தக்கதாகவுள்ளது.

22 கருத்துகள்:

  1. @நர்சிம் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. வழமையான கலக்கல் அருமை. வாழ்த்துக்கள் தெடரவேண்டும்..

    பதிலளிநீக்கு
  3. அருமையாக தொகுத்து எழுதிமிருக்கீங்க.
    தமிழ் மண நட்சத்திர பதிவரே, வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. @Chitra தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  5. @A.சிவசங்கர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சிவசங்கர்.

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அற்புதம்
    இதைக் கண்டதும் விவேக சிந்தாமணியின் பாடல் ஒன்று நினைவுக்கு
    வருகின்றது.
    "தானதை சம்புவின் கனியென்றெண்ணி.........
    ...................................பறந்ததோ வண்டு என்று"


    என்றும்


    "கெண்டையை காண்கிலள் நின்று தவித்தன்ள்"

    என்ற‌
    மற்றொரு பாடலும் நினைவுக்கு வருகின்றன.

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. @இனியன் பாலாஜி வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  8. உளவியல் கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. அருமை.

    பதிலளிநீக்கு
  9. வலைச்சரம் மூலமாகத் தங்களைப் பற்றி அறிந்தேன். சங்க இலக்கியத்தின் பெருமையை அறிந்து மகிழ்ந்தேன்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    பதிலளிநீக்கு
  10. கண்டேன் தங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு