வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 10 மே, 2010

அழுகையை மறந்த குழந்தைகள்.



சோழன் கிள்ளிவளவனோடு எதிர்த்துப் போரிடமுடியாத மலையமான் தோற்றோடினான். சினம் அடங்காத கிள்ளிவளவனோ தன்னிடம் சிக்கிய மலையமானின் குழந்தைகளை யானைக் காலில் இட்டு இடறி வீழ்த்த எண்ணினான். அப்போது, மலையமானின் சிறப்பையும், காலத்தின் கோலத்தையும், குழந்தைகளின் அறியாமையையும் கூறி கிள்ளி வளவனைச் சிந்திக்கச் செய்தார் புலவர் கோவூர்கிழார்.

பாடல் இதோ,

நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை;
இவரே, புலனுழுது உண்மார் புன்கண் அஞ்சித்,
தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்!
களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி,
விருந்திற் புன்கண்நோ வுடையர்;
கெட்டனை யாயின், நீ வேட்டது செய்ம்மே!

புறநானூறு.
46. அருளும் பகையும்!
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை: வஞ்சி. துறை; துணை வஞ்சி.
குறிப்பு: மலையமான் மக்களை யானைக் காலில் இட்ட காலத்துப் பாடி உய்யக் கொண்டது.

கோவூர் கிழார் வளவனிடம் கூறியது,

நீ புறாவின் துன்பத்தை மட்டுமின்றிப் பிற உயிர்களின் துன்பத்தையும் நீக்கிய சோழனின் வழித்தோன்றல். மெல்லிய தலையையுடைய இச்சிறுவரோ, அறிவால் உழுதுண்ணும் புலவர்களின் வறுமைக்கு அஞ்சித் தம் பொருளைப் பகுத்துண்ணும் குளிர்ந்த நிழலையுடையர் மரபில் வந்தவர்கள்.

சிறிய தலையையுடைய இச்சிறுவர்கள், தம்மைக் கொல்லவரும் யானையைக் கண்ட அளவிலேயே அழுகையை மறந்தனர். பலரும் கூடிய பொது மன்றத்தில் அச்சத்துடன் நோக்கிப் புதியதொரு வருத்தமும் அடைந்தனர். நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். இனி நீ விரும்பியதைச் செய்க.


² சங்ககாலத்தில் வென்ற மன்னன் நாட்டை எரியூட்டுதல், காவல் மரத்தை வெட்டுதல், தோற்ற மன்னனை சிறையில் அடைத்தல் போன்ற அக்கால வழக்கங்களுடன் எதிரிகளை யானைக் காலால் இடறச் செய்யும் அக்கால தண்டனை மரபு இப்பாடலால் புலப்படுதத்தப்படுகிறது.

² தன் எதிரி கிடைக்காத சூழலில் தன் சினத்தை வெளிப்படுத்த வழியற்ற கிள்ளி வளவன் மலையமானின் மக்களை யானைக்காலால் இடறி வீழ்த்த எண்ணிய போது மன்னனேயானாலும் அஞ்சாது அதனைத் தடுத்து மன்னனுக்கு நல்லுரை கூறிய புலவரின் பண்பு சங்ககாலப் புலவர்களின் செம்மாந்த வாழ்வை எடுத்தியம்புவதாகவுள்ளது.

12 கருத்துகள்:

  1. நல் விளக்கங்கள் நண்பரே. வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. ² தன் எதிரி கிடைக்காத சூழலில் தன் சினத்தை வெளிப்படுத்த வழியற்ற கிள்ளி வளவன் மலையமானின் மக்களை யானைக்காலால் இடறி வீழ்த்த எண்ணிய போது மன்னனேயானாலும் அஞ்சாது அதனைத் தடுத்து மன்னனுக்கு நல்லுரை கூறிய புலவரின் பண்பு சங்ககாலப் புலவர்களின் செம்மாந்த வாழ்வை எடுத்தியம்புவதாகவுள்ளது


    .....என்னவெல்லாம் நடந்து இருக்கிறது! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. எனது சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா. மன்னன் கிடைக்க வில்லை என்றால் அவனது மகனை கொல்வதா? நம் முன்னோர்கள் சற்று முரடர்களாகத்தான் இருந்துள்ளார்கள் போலும்!........

    பதிலளிநீக்கு
  4. அருமையான கருத்துக்கள் நிறைந்த பாடல், நல்ல விளக்கம்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு நண்பரே. google buzz பட்டன் இணைப்பது பற்றி பதிவில் போட்டு உள்ளேன். வந்து பார்த்து கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  6. @Chitra வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சி்த்ரா.

    பதிலளிநீக்கு
  7. @மணிகண்டபிரபு கருத்துரைக்கு நன்றி மணிகண்டபிரபு. வீரம் காதல் சங்ககாலத்தமிழரின் இருகண்களாக இருந்தன..

    சில நேரங்களில் யாரிடம் வீரத்தைக் காட்டுவது என்று மன்னர்கள் தவறியபோது இவர் போன்ற புலவர்களெ மன்னர்களை வழிநடத்தினர்.

    பதிலளிநீக்கு
  8. @சசிகுமார்
    வந்தேன்
    பார்த்தேன்
    இணைத்தேன்

    நன்றி நண்பா

    பதிலளிநீக்கு