வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 9 ஜூன், 2010

சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்



இலக்கு.

யானையை எய்யச் சென்றவன் யானையைப் பிடித்து வெற்றியோடு திரும்புவதும் உண்டு.

சிறுபறவையை வேட்டையாட எண்ணியவன், வெறுங்கையுடன் திரும்புவதும் உண்டு.

அதனால் நமது இலக்குகள் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும்.

இலக்கில்லாத வாழ்க்கை முள்ளில்லாத கடிகாரத்தைப் போல அது யாருக்கும் பயன் தருவதில்லை இவ்வரிய கருத்தை உணர்த்தும் சங்க இலக்கியப் பொன்மொழி,



யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே


-----------------------------------------------------
கடன்

நாம் ஒவ்வொருவருமே கடன்காரர்கள் தான். நம் கடனைக்கூறும் சங்க இலக்கியப் பொன்மொழி,

² ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.


--------------------- --------------------------- -----------------------

தன்னம்பிக்கை.

நம் திறமைக்கு மதிப்பில்லாத இடத்தில் இருக்கக் கூடாது.
யாரை நம்பியும் யாரும் இல்லை.
கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு என்னும் வாழ்வியல் அறத்தை உணர்த்தும் பொன்மொழி,


² எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“


-------------------------------- ----------------------------------

நீர்வழிப்படும் புணைபோல


தினை விதைத்தால் தினை விளையும்
வினை விதைத்தால் வினை விளையும் என்பதே முறை என்னும் கருத்தை உணர்த்தும் பொன்மொழி,

² யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


------------------------------------- --------------------------------------
இனிய காண்போர்.

இன்பங்கள் தோன்றுவது நேர்மறை எண்ணங்களால்…
துன்பங்கள் தோன்றுவது எதிர்மறை எண்ணங்களால்…

என்னும் கருத்தைச்சுட்டும் பொன்மொழி.


இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.



-----------------------------------------------------------------------------

18 கருத்துகள்:

  1. அருமையான தொகுப்பு. நீங்கள் தந்து இருக்கும் குறிப்புகளும் நல்லா இருக்குதுங்க. :-)

    பதிலளிநீக்கு
  2. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்... நல்ல பதிவு.. இதைபோலவே சங்க இலக்கியங்களில் வியாபார நுணுக்கங்கள் இருந்தால் அதைப் பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. @கே.ஆர்.பி.செந்தில் நன்றி நண்பரே..

    வணிகம் குறித்த பதிவு..

    http://gunathamizh.blogspot.com/2010/04/blog-post.html

    பதிலளிநீக்கு
  4. ////////இன்பங்கள் தோன்றுவது நேர்மறை எண்ணங்களால்…
    துன்பங்கள் தோன்றுவது எதிர்மறை எண்ணங்களால்…
    /////////


    மிகவும் சரியாக சொல்லி இருக்கிறார்கள் . உங்களின் ஒவ்வொரு படைப்பும் ஒரு புதுமைதான் நண்பரே . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. நம் திறமைக்கு மதிப்பில்லாத இடத்தில் இருக்கக் கூடாது.


    நீங்கள் தரும் பல புரிதல்கள் நிகழ் கால வாழ்வியலோடு ஒத்துப் போகிறது,

    பதிலளிநீக்கு
  6. // எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே //
    சோறோ, சப்பாத்தியோ, பர்கரோ - கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு மட்டுமல்ல பருப்பும்-சோறும் கூடக் கிடைத்துவிடுகிறது. நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு