வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 27 அக்டோபர், 2010

பந்திக்கு முந்து.....


பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்று நாம் வழக்கில் சொல்வதுண்டு.
பந்தி என்றதும் நமக்குச் சாப்பாட்டுப் பந்தி தான் முதலில் நினைவுக்கு வரும்..


சாப்பாட்டுப்பந்தியில் இடம்பிடிக்க ஒவ்வொருவரும் செய்த அதிபுத்திசாலித்தனமான செயல்கள் தான் காட்சிகளாக வந்துவந்து செல்லும்.

சாப்பிடுபவரையே எப்போதுடா எழுந்திருப்பார் என்று குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருத்தல்..

அவரின் அருகிலேயே சென்று நிற்றல்.

என இடம்பிடிப்போரின் தொல்லை தாங்காமல் சரியாகச் சாப்பிடாமல் எழுந்து செல்வோர் பலருண்டு. சிலர் தன்னைப் யார்பார்த்தாலும் கவலையேபடாமல் மிகவும் பொறுமையாக இருந்து சாப்பிட்டுக் காத்திருப்பவரை வெறுப்பேற்றுவர். இப்படி பல நகைச்சுவைக் காட்சிகள் சாப்பாட்டுப்பந்தியில் நடைபெறும்.

சரி…
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து என்று இதைத் தான் நம்முன்னோர் சொல்லிச்சென்றார்களா? என்றால் இல்லை.

பந்தி என்றால் வரிசை. இங்கு போரில் உள்ள வரிசையையே இந்த பந்தி என்ற சொல் சுட்டுகிறது.

“போர் என்று அழைத்தால் முதல் ஆளாகச் செல்.
படை என்று வந்தால் போர் முடிந்து எதிரிகளை அழித்து நிலைத்து நின்று கடைசி ஆளாகத் திரும்பி வா“


என்பதே சரியான பொருள். இதற்குச் சான்று பகரும் புறப்பாடல் ஒன்று..

எமக்கு கலங்கல் தருமே தானே
தேறல் உண்ணுமன்னே நன்றும்
இன்னான் மன்ற வேந்தே இனியே
நேரார் ஆர் எயில் முற்றி
வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே“

திணை – கரந்தை
துறை – நெடுமொழி
பாடியவர் – ஆலியார்


கலங்கிய கள் மிகவும் களிப்பளிப்பது (மயக்கமளிப்பது) அதனால் அதனை எமக்குத் தந்துவிட்டு, தெளிந்த தேறலை (கள்ளை) தான் உண்பான்.

பகைவரின் அடைவதற்கு அரிய மதிலைச் சூழ்ந்து உதட்டினைக் கவ்வி முழக்கிக் கொண்டு நீ முந்திச் செல்க என்று ஏவாது தான் முந்திச் சென்றான். அதனால் வேந்தன் இப்போது மிகவும் இன்னாதவன் ஆயினன்.

தன்னை ஏவாது தான் முந்திச் சென்று எமக்கு முன்மாதிரியா க இருந்தாலும் தமக்கு இந்த வாய்ப்பை அளிக்கவில்லையே என்று வருந்துகிறான் இந்த வீரன்.

கரந்தை – பகைவர் கைப்பற்றிய பசுக்கூட்டங்களை மீட்டல் கரந்தையாகும்.
நெடுமொழி – சிறப்புமிக்க அரசனுக்கு வீரன் ஒருவன் தன்னுடைய மேம்பாட்டை உயர்த்திச் சொல்லுவதாகும்


பாடலின் வழி..


கரந்தை என்னும் புறத்திணையும், நெடுமொழி என்னும் புறத்துறையும் விளக்கம் பெறுகிறது.

பந்திக்கு முந்து என்றால் போரில் வரிசைக்கு முந்து என்னும் பொருள் விளக்கம் பெறுகிறது

தலைமைக்கான அடிப்படை இலக்கணம் வேலை ஏவுவது அல்ல முன்னின்று தான் செயலாற்றுவது என் தத்துவம் விளக்கம் பெறுகிறது

10 கருத்துகள்:

  1. குணா படம் மாமியார் வீட்டு விருந்தா?

    பதிவும் சமீபத்திய அனுபவமா?

    இனிய திருமண வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!

    http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html

    பதிலளிநீக்கு
  3. பந்திக்கு முந்துவதில் இவ்வளவு நுட்பம் இருக்கிறதா...
    ஆச்சரியமாக இருக்கிறது.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வாழை இலை போட்டு பரிமாறிவிட்டு யார் பார்த்தா நமக்கென்ன

    நன்றி

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் ....

    ......பதிவும் விளக்கமும் அருமை

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு. இப்படி ஒரு பொருள் இருப்பது இன்றுதான் தெரியும். இரண்டாவது செய்யுளில் மனம் ஒட்ட சில நேரம் பிடித்தது, தமிழின் ஆழத்தை தொலைத்து நெடுநாள் ஆகிவிட்டதால். பகிர்ந்தமைக்கு நன்றி :)

    பதிலளிநீக்கு
  7. விளக்கம் அருமை. தங்கள் பதிவுகள் சிலவற்றை என் இணையத்தளம் www.tamillook.com இல் பதிவு செய்திருக்கிறேன்.

    நன்றி.

    மூர்த்தி

    http://www.tamillook.com/view.aspx?id=4057bab4-b48b-4c34-8110-8970f76d3be8

    பதிலளிநீக்கு
  8. மிக நன்றி விளக்கம் தந்தமைக்கு. அறிந்ததும் மகிழ்ச்சியே.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு