வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 7 மே, 2011

காமம் என்பதென்ன நோயா..?




கமம் என்றால் நிறைவு அன்பின் நிறைவே காமம் ஆகும். இன்றோ காமம் என்றால் இழிவாக நோக்கும் அளவுக்கு மக்களின் பண்பாட்டுக் கூறுகள் மாற்றமடைந்துள்ளன.


love love,
they say.
love
is no disease,
no evil goddess.

Come to think of it,
dear man
with those great shoulders,
love is very much like an old bull,

enjoys a good lick
of the young grass
on the slope
of an old backyard:

a fantasy feast,
that’s what love is.

இந்தப் பாடலை எங்கோ பார்த்தது போல கேட்டதுபோல இருக்கிறதா..?
ஆம் நம் குறுந்தொகைப் பாடல் தான் இது..

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச் சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந்தாங்கு
விருந்தெ காமம் – பெருந்தோளோயே!

மிளைப்பெருங்கந்தன்
குறுந்தொகை – 204
தலைமகற்குப் பாங்கன் உரைத்தது.
தலைவியால் உள்ளம் அழிந்து, உடல் மெலிந்து,தளர்ந்த தலைவனைக் கண்டு, பாங்கன் காமத்தின் இயல்பினைக் கூறி,இடித்துரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

அணங்கு தாக்கிய வழி உள்ளம் தளர்வதுபோலத் தலைவன் உள்ளம் மெலிந்தான். நோயுற்றவழி உடல்மெலிவதுபோல ஆற்றலும் அழகும் இழந்தனன் அவன் பாங்கனால் தன்குறை முடித்தல் எண்ணி பாங்கனிடம் கூறினான்.

விருந்துணவை உண்டபின் உடல் வலிமை பெறும். உள்ளம் மகிழ்ச்சியுறும். ஆனால் காமமாயின் துய்த்தபின் உடல் மெலியும். உள்ளம் துன்புறும். காமம் விருந்து போன்றது என்ற தலைவனுக்குப் பாங்கன் அது விருந்து அன்று என்பதை உணர்த்தினான்.

தான் கறிக்க இயலாத இளம் புல்லை விரும்பிய முதிய பசு, அதனை நாவால் தடவி இன்புற்றமை போல, தன்னால் பெற இயலாத ஒருத்திக்காக வருந்தும் நிலை தக்கதன்று எனப் பாங்கன் எடுத்துரைத்தான்.
இளம்புல் – தலைவிக்கும்
முதைச்சுவலாகிய மேட்டுநிலம் – தலைவியின் இல்லத்திற்கும்
தலைவன் – முதிய ஆவாகிய பசுவுக்கும்
நாவல் தடவுதல் – தலைவியைப் பெறுதல் பொருட்டுத் தலைவன் உடலும் உள்ளமும் மெலிந்தமைக்கும் உவமையாய் இருத்தலைச் சுட்டிக்காட்டிய பாங்கன் காமத்தின் நிலையை விளக்கினான். காமம் நினைப்பளவில் தான் இன்பமளிக்கும் என்பதை உணர்த்தினான்.

காமம் அறிவுடையார்பால் தோன்றாது என்றும்,மனத்தின் வழிச் செல்வார்க்கு அது விருந்தாய் இன்பம் தருவது என்பதையும் சுட்டினான். இதே போல சொற்சுவையும் , பொருட்சுவையும் கொண்ட இன்னொருபாடல்.............


பாடல் இதோ..

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக்
கடுதலும் தணிதலும் இன்றே யானை
குளகு மென்று ஆள்பதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப பெறினே.

மிளைப்பெருங்கந்தன்
குறுந்தொகை 136
தலைமகன் பாங்கற்கு உரைத்தது.

(காமத்தின் இழிவினைக் கூறி இடித்துரைத்த நண்பனிடம் காமத்தின் உயர்வைத் தலைவன் எடுத்துரைப்பதாக இப்பாடல் அமைகிறது)

காமத்தை, உலகினர் காமம் காமம் என இழிவாகக் கூறுகின்றனர்.
காமம் என்பது புறத்தே நின்று தாக்கும் தெய்வமும் அன்று.
உடலை மெலிவிக்கும் நோயும் அன்று.
காமமானது பேயும் நோயும் போல காணப்படாததாய் சிறுகிப் பெருத்தலும், பெருகிச் சிறுத்தலும் உடையதன்று.
யானையானது, அதிமதுரத் தழையை மென்று தின்று அதனால் உண்டாகிய மதத்தைப் போலத் தாம் காணுநரைத் தமக்கு உரியராகப் பெற்றால், காமம் பெருகி நீண்ட காலம் நிற்கும் இயல்புடையது.


காமம் கிழப்பசுவுக்கு விருந்தாற்றும் இளம்புல் போலன்றி,
களிற்று யானைக்கு மதம் பெருக்கும் அதிமதுரத்தழை போன்றது எனத் தலைவன் பாங்கனுக்குக் காமத்தின் வலிமையை உணர்த்தினான்.

காமம் என்பது....

பசி,
உறக்கம்,
போல இனிய உணர்வு!
உயிரின் தேடல்!
உடலின் தேவை!

ஆனால் சரியான துணையைப் பார்த்ததும், சரியான நேரத்தில் வெளிப்பட்டால்தான் அதற்கு உணர்வும், சிறப்பும் உண்டு என்பதை இவ்வகப்பாடல் அழகாக எடுத்தியம்புகிறது.


11 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே நீண்ட நாட்களுக்குப்பின் இன்றுதான் தங்களின் தளத்திற்கு வரமுடிந்தது . உலகத்தில் பலரின் எண்ணங்களின் காமம் பற்றிய சிந்தனை குறுக்கிக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கப்படுகிறது . அதுதான் என்னவோம் காமம் என்றாலே கைகளில் ஆயுதம் தூக்கிய ஒரு அரக்கனை பார்ப்பதுபோல் பலருக்கும் ஒரு பதற்றம் . ஆனால் தங்களின் பதிவை வாசிக்கும் பலருக்கு காமம் பற்றிய தெளிவு பிறக்கும் என்பது மட்டும் திண்ணம் . பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. தமிழமுதத்தை ரசித்தேன். ஆனால் பாங்கன் என்றால் யார் என்பதே நிறையப் பேருக்குத் தெரிந்திராது. அதைப் பற்றியும் விளக்கியிருக்கலாம் நீங்கள்.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய காதல் உண்மையில் புரிதல் இல்லமால் போய்கொண்டு இருக்கிறது சிறப்பான குறுந்தொகை பாடல்வரிகளை சொல்லி அதற்க்கு நேரான விளக்கமளித்துள்ளமை மிகவும் சிறப்பு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு