வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 10 மே, 2011

ஊதைக் காற்று.



தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

முகை – தோன்றுதல்
அரும்பு – அரும்புதல்(வளர்தல்)
மொட்டு – மலரத் தயாராகுதல்
மலர் - மலர்தல்
பூ – பூப்பதால்
வீ – வீழ்தல்
அலர்- வாடுதல்


நம் முன்னோர் இவ்வாறு ஒவ்வொரு சொற்களையும் அறிந்து உணர்ந்து காரணத்துடன் பெயரிட்டுள்ளமை எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கதாக உள்ளது.

இதோ முதல், கரு, உரிப் பொருளின் இயைபுடன் சொல்நயமும், பொருள் நயமும் கொண்ட ஓர் அகப்பாடலைக் காண்போம்..

மாக் கழி மணிப்பூக் கூம்ப, தூத்திரைப்
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ,
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்
சில்நாட்டு அம்ம – இச்சிறுநல் ஊரே

குறுந்தொகை -55 நெய்தல்
நெய்தல் கார்க்கியார்.



(வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும் எனத் தோழி தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.)


தலைவன் சிறைப்புறத்தானாகக் கேட்கும் அணிமையில் நிற்க, அவன் விரைவில் தலைவியைத் மணந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்த எண்ணிய தோழி சொல்லியதாக இப்பாடல் அமைகிறது. தலைவன் வாராவிட்டால் தலைவி உயிர்வாழாள் என்பதை தோழி எடுத்தியம்புகிறாள்.


பெரிய உப்பங்கழிகளில் உள்ள நீலமணி போன்ற நிறத்தையுடைய நெய்தல் மலர்கள் கூம்பவும், தூய அலைகள் உடைந்து சிதறும் நீர்த்திவலைகளோடு மேகங்கள் வீசவும், தலைவனைப் பிரிந்தார்க்குச் செயலறவினைத் தோற்றுவிக்கும் அவர்கள் உடல் முழுவதும் தடவும் வாடைக் காற்றோடு உள்ளத்திற்கும் இன்னாமையைத் தருகின்ற இச்சிறிய நல்ல ஊரில் உயிரோடு கூடிவாழும் வாழ்க்கை சில நாட்களே ஆகும்.


மலர் கூம்புவதால் மாலைக்காலம் குறிப்பிடப்பட்டது.

 தலைவனின்றி சிலகாலமே தலைவி உயிர்வாழ்வாள் அதுவும் தலைவன் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையிலே வாழ்வாள் என்பதை உணர்த்துகிறாள் தோழி.

 இன்னாமையும், சிலநாள் வாழ்க்கையும் ஊரின் குறையாகாது என்பதை “நல் ஊர்“ என்ற சொல் விளக்குகிறது.

 களவுக் காலத்தில் தலைவனுடன் சில காலம் இன்பம் துய்க்க உதவியதால் இந்த ஊரானது “சிறு நல் ஊர் “ எனப்பட்டது.

 வாடைக்காற்று அலைநீர்த்திவலைகளுடன், மழைத்திவலைகளையும் வீசிப் பிரிந்தோர்க்கு துன்பம் செய்வதால் இன்னாத உறையுளை உடைய ஊரானது. என்ற கருத்தின் வழி தலைவியின் நிலை மிக அழகாக உணர்த்தப்பட்டுள்ளது. உயிரைக் கொல்ல வில்லும, வேலும் கூடத் தேவையில்லை மெல்லிய காற்றே போதும் என்ற கருத்தை மிக அழகாகப் புலவர் வெளிப்படுத்துகிறார்.

 முதல் (நிலமும், பொழுதும்) கரு , உரிப் (இரங்கல் நிமித்தம்) பொருள்களை புலவர் மிக அழகாக இயைபுபடுத்தியுள்ளமை பாடலுக்கு மேலும் சிறப்பளிப்பதாக அமைகிறது.

 நெய்தல் நிலத்தை இவ்வளவு அழகாகப் பாடியதால் தான் இப்புலவர் நெய்தல் கார்ககியார் எனப் பெயர்பெற்றார் என்பதை இவரின் பெயரின் வழி உணரமுடிகிறது.

தமிழ்ச்சொல் அறிவோம்.

மாக்கழி – கரிய உப்பங்கழி
மணிப்பூ – நீலமணி போன்ற நிறமுடைய பூ
மங்குல் – மேகம்
உறையுட்டு – இருப்பிடம்
தூத்திரை – தூய அலை
துவலை – நீர்த்திவலை
தைவரல் – தடவும்
ஊதை – வாடைக் காற்று. (ஊதுவதால் ஊதையானது)

11 கருத்துகள்:

  1. பயனுள்ள கட்டுரை. பல சொற்களை அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவுகளில், மிகவும் சிறப்பு வாய்ந்தவைகளில் இந்த பதிவும் ஒன்று. அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  3. வளம் மிக்க மொழியின் தரமான பகிர்வுக்குப் பாரட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தமிழ்ச்சொற்கள் அறியத்தமைக்குச் சந்தோஷம் !

    பதிலளிநீக்கு
  5. @Dr.எம்.கே.முருகானந்தன் தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி மருத்துவரே.

    பதிலளிநீக்கு
  6. @Chitra தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா.

    பதிலளிநீக்கு
  7. @ஹேமா தங்கள் வருகைக்கு பெருமகிழ்ச்சி கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான பகிர்வு...நான் குறிப்புகளும் எடுக்கிறேன். மிக்க நன்றி முனைவரே!

    பதிலளிநீக்கு
  9. @vettha.தங்கள் முதல் வருகையையும் ஆர்வத்தையும் கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. which came first?? the nouns or verbs?

    // பூ – பூப்பதால்???

    நம் முன்னோர் இவ்வாறு ஒவ்வொரு சொற்களையும் அறிந்து உணர்ந்து காரணத்துடன் பெயரிட்டுள்ளமை எண்ணி எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கதாக உள்ளது.// ???

    iduguri peyargal...and then...verbs related to the nouns were 'named after' them. right? because with out 'pu' (noun), 'puthal' does NOT exist.

    hope thats what you too said...but 'pupadhaal' kind of misleading. may be 'puththal' would have been perfect here.

    because 'puPAdhaal" adhu 'pu' alla, 'pu'-vinudaya seigaiye "puththal"

    correct me if i'm wrong.

    பதிலளிநீக்கு