வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 6 ஜூன், 2011

வெட்கப்பட்ட அன்னம்!!



பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன்,தோழியை வாயில் வேண்ட, அவள் வாயில் நேர்வாள் நெருங்கிக் கூறியது.

நகைச்சுவை.

பலவகை வண்ணங்களைக் கொண்ட மலர்கள் உள்ள பொய்கையில் பெண் அன்னம் மகிழ்ந்து உலவுகிறது. அப்போது தன் துணையாகிய ஆண் அன்னத்தைக் காணாமல் கலங்கித் தேடியது. நிலவின் நிழலைத் தன் துணையென நினைத்து அதனிடம் ஓடுகிறது. அப்போது இன்னொரு பக்கத்திலிருந்து ஆன் அன்னம் வருகிறது.
அதைக்கண்டு வெட்கப்பட்டு மலர்களினிடையே மறைந்துகொள்கிறது பெண் அன்னம்.
இத்தகைய காட்சிகளைக் கொண்ட ஊர்த்தலைவனே கேட்பாயாக..

துன்புறுத்தும் ஓசைகள்.

நீ எமது அழகு குறையும்படி பிரிந்து அருள்செய்யாமல் இருந்ததனால் பல நாள்களாக உறங்காத கண்கள் ஒருநாள் சற்றே அயர்ந்து கண்கள் மூடின. அப்போது பரத்தையர் சேரியில் பெண்கள் வாழ்த்திப்பாட, நீ சேர்ந்த பரத்தை வீட்டிலிருந்து வரும் முரசின் ஒலி எம்மை எழுப்பும்.

துணங்கை

நீ பிரிந்ததால் அழுதுகொண்டே இருந்த எம் கண்கள் எம் புதல்வனை மெல்லத் தழுவியதால் இமை பொருந்தின. ஆனால் நீ அமைத்த பெரிய வீட்டில் உன் விருப்பத்துக்குத் தக பெண்ணை உனக்கு வேண்டியவர் தந்து அங்கு வாழ்த்துப்பாடல் பாட, அவர்களோடு நீ ஆடிய துணங்கைக் கூத்தின் ஒலியும் காட்டில் வந்து எம்மை எழுப்பும்.
நீ வாராமல் அழுத கண்ணீர் ஈரம் புலராத எம் கண்கள் இமை பொருந்தின. ஆனால் பரத்தையர் வீட்டுக்கு ஏற்றி வந்த உன் தேரின் மணியோசை வந்து எம்மை எழுப்பும்.

நயம் நிறைந்த உவமை

இவ்வாறு பரத்தையர் சேரியிலிருந்து வந்த பல்வேறு ஓசைகள், வலிமை குறைந்த மன்னனுடைய கோட்டையை வலிமையுடைய அரசன் முற்றுகையிட்டு காலை நேரத்தில் தன் போர் முரசை ஒலிக்க அந்த ஒலி அவனுடைய காதில் விழுவதைப் போல எமது உறக்கத்தை பறித்தன. அதனால் நாங்கள் பெரிதும் வருந்தமாட்டோம். ஆனால் பரத்தையர் வீட்டில் யாழ் வாசித்த பாணன் அதை எடுத்துக்கொண்டு இங்கு தூதுவனாக வரக்கூடாது. அவன் வந்தால் அதுவே எங்களுக்குப் பெரும் துன்பத்தைத் தருவதாக இருக்கும்.
பாடல் இதோ..

மணி நிற மலர்ப் பொய்கை, மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தெனக்
கதுமெனக், காணாது, கலங்கி, அம் மடப் பெடை
மதி நிழல் நீர் உள் கண்டு, அது என உவந்து ஓடித்,
துன்னத் தன் எதிர் வரூஉம் துணை கண்டு, மிக நாணிப்,
பல் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர! கேள்;

நலம் நீப்பத் துறந்து, எம்மை நல்காய் நீ விடுதலின்,
பல நாளும் படாத கண், பாயல் கொண்டு, இயைபவால்;
துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட,
மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே!

அகல நீ துறத்தலின், அழுது ஓவா உண் கண், எம்
புதல்வனை மெய் தீண்டப், பொருந்துதல் இயைபவால்;
நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே!

வாராய் நீ துறத்தலின், வருந்திய எமக்கு, ஆங்கே
நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால்;
நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து, நின்
தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே!

என ஆங்கு,
மெல்லியான் செவி முதல், மேல்வந்தான் காலை போல்,
எல்லாம் துயிலோ எடுப்புக; நின் பெண்டிர்,
இல்லின் எழீஇய யாழ் தழீஇ கல்லா வாய்ப்
பாணன் புகுதராக் கால்

கலித்தொகை-70
பாடலின் வழியே.

1. அன்னத்தின் அறியாமையால் தோன்றி நகைச்சுவை இலக்கியச் சுவை கூட்டுவதாக உள்ளது.
2. மகளிர் ஆடும் துணங்கைக் கூத்தைப் பற்றிக் குறிப்பினைக் காணமுடிகிறது.
3. வலிமையான அரசன் – தலைவன்
வலிமையில்லாத அரசன் – தலைவி என்ற ஒப்பீடு நயமுள்ளதாக உள்ளது.

14 கருத்துகள்:

  1. நல்ல அருமையான பதிவும் விளக்கங்களும்
    அந்த
    அன்னப்பறவைகள்
    போலவே வெகு அழகாக.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தமிழ களித்தொகையினை உங்களின் ஆசிரியருக்கே உரித்தான தன்மையுடன் அழகாக படம் பிடித்துள்ளமை தனி அழகு இலக்கிய காதலை கண்முன் நிறுத்தியுள்ளீர்கள் உளம் கனிந்த பாராட்டுகள் தொடருங்கள்.....

    பதிலளிநீக்கு
  3. 100 க்கு 100.

    மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு சகோ நன்றி!

    பதிலளிநீக்கு
  5. @போளூர் தயாநிதி தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தயா..

    பதிலளிநீக்கு
  6. @மகாதேவன்-V.Kதங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மகாதேவன்.

    பதிலளிநீக்கு
  7. எப்பவும்போல பாராட்டுக்கள் குணா !

    பதிலளிநீக்கு
  8. படமும் இலக்கியச்சுவையும் அருமை.

    பதிலளிநீக்கு