வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 8 ஜூலை, 2011

வாடிக்கையாளர் தொல்லை மையம்.


சங்ககாலத்தில் பாலை நிலத்தில் கொடிய மனம் கொண்டவர்களாக வழிச்செல்வோரிடம் வழிப்பறி செய்து வாழ்க்கை நடத்தியவர்களை ஆறலைக்கள்வர்கள் என்றழைத்தனர்.

இத்தனை ஆண்டு காலம் சென்றபின்னும் இன்றும் ஆறலைக் கள்வர்களைப் பார்க்க முடிகிறது.
வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ்கள் என எதைத் திறந்தாலும் இவர்களைப் பற்றிய செய்திகளே முதலில் கண்ணில் படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் வழிப்பறிக்கொள்ளை!!

பட்டப்பகலில் நட்டநடுத் தெருவில் மக்கள் கூட்டம்
கொட்ட கொட்ட விழித்திருக்க பெண்கள் கழுத்தில் இருந்து நகைகளைப் பறித்துச்செல்வோர் எண்ணிக்கை அதிகரி்த்துவருகிறது.

யாரைக் குறை சொல்வது?

வழிப்பறி செய்வோரையா?
தங்கத்தின் மீது பெருமோகம் கொண்டிருக்கும் பெண்களையா?
சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் காவல்த் துறையையா?

இது ஒருபக்கம் இருக்கட்டும்.


சங்ககாலத்து ஆறலைக்கள்வர்கள் தம் அம்புகளைப் பாறையில் கூர் தீட்டிக்கொண்டிருப்பார்கள். அப்போது தம் அம்புகள் கூர்மையாக இருக்கிறதா என்பதைப் பார்க்க அவ்வழிச்செல்லும் வம்பலரின் (வழிசெல்வோர்) மேல் எய்வார்களாம் அவர்கள் இறந்துவிட்டால் அம்பு கூர்மையாகிவிட்டது என்றும். அவர்கள் உயிருக்குப் போராடினால் இன்னும் கூர்தீட்டப்பட வேண்டும் என்றும் கருதுவார்களாம். இக்கள்வர்கள் தாம் வேட்டையாடும்போதும், வழிப்பறி செய்யும்போதும் துடி என்னும் தோற்கருவியை முழக்குவது வழக்கமாம்.


இன்றைய சூழலில் மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒவ்வொருவருமே ஆறலைக்கள்வர்களாகத்தான் எனக்குத் தோன்றுகிறார்கள்.

இக்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டவன் என்றமுறையில் என் அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

வாடிக்கையாளர் சேவை என வழங்கும் ஒவ்வொரு நிறுவனங்களும் எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்றுகின்றன என்பதை ஒரு வாடிக்கையாளர் தானே சொல்லவேண்டும். அந்த அடிப்படையில்..

அலைபேசி பயன்படுத்தும் வாடிக்கையாளன் என்ற முறையில் அலைபேசி சேவைமையத்தாரின் தொல்லைகளை (சேவை)சொல்கிறேன். உங்கள் அனுபவத்துடன் ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்.

ஏர்செல், ஏர்டெல், வோடாபோன் என தனியார் சேவை நிறுவனங்கள் படுத்தும் பாடு கொஞ்சமல்ல.

டயல் டோன்
காமெடி
ஜோக்ஸ்
அழகுக்குறிப்பு
கதை சொல்றோம்
கிரிக்கெட்
செய்திகள்
பங்குவணிகம்

என்று பல்வேறு ஆயுதங்களைச் சுமந்துகொண்டுவரும் இந்த சேவை மையத்தார் தொடர் அழைப்புகளால் வாடிக்கையாளர்களைப் பெரிதும் துன்புறுத்திவருகின்றனர் என்பதைப் பலரும் அனுபவித்திருப்பீர்கள்.


“நாம் கேட்காமலேயே இவர்களாக நம் கணக்கில் இந்த சேவைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துவிடுவார்கள். பணத்தையும் உரிமையுடன் பிடித்துக்கொள்கிறார்கள். ஓரளவுக்கு தொழில்நுட்ப அறிவுடையவர்கள் அந்த சேவையைப் போராடி நிறுத்திவிடுகிறார்கள்.

ஏன் பணம் பிடிக்கிறார்கள் என்று தெரியாமலேயே திருதிருவென விழிக்கும் அப்பாவி மக்களைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருக்கிறது.“

இந்த சேவை மையத்தார், பலமுறை என் உடன்பாடு இல்லாமலேயே பல்வேறு சேவைகளை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து பணத்தையும் பிடித்திருக்கிறார்கள். சேவை மையத்துக்குத் தொடர்புகொள்ளலாம் என்றால் அவர்களிடம் பேசுவதற்கும் இப்போதெல்லாம் பணம் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நொந்துபோய் சிலநேரங்களில் சிம்கார்டை மாற்றிவிடுவேன்.

இவ்வாறு கொதிப்படைந்த நாளில் ஒருநாள் ஒரு தனியார் அலைபேசி வாடிக்கையாளர் மையத்திடமிருந்து அழைப்பு வந்தது. அவர்களே வழிய வந்து மாட்டினார்கள்.

உங்களுக்கு மட்டுமான புதிய வாய்பளிக்க இருக்கிறோம் என்று ஆரம்பித்தார்கள். அவர்களைப் பேசவே விடாமல்...

என் மனதில் இருந்த கோபங்களையெல்லாம் கொட்டித்தீர்த்துவிட்டேன்..

இப்போதான் மனசு இலேசாக இருக்கிறது.

(வாடிக்கையாளர்களின் வாயிலாகக் கொள்ளையடிக்கும் சேவைமையத்தார் இதுபோல அவர்களின் மனதின் வலிகளைக் கொட்டித்தீர்க்க அதை வாங்கிக்கட்டிக்கொள்ள ஒரு சேவையையும் அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும்)

மனம் உவந்து இரவலருக்கு 100 ரூபாய் போட்டால் நிறைவடையும் மனம்
தெரியாமல் ஏமாந்து 10 ரூபாய் விட்டாலும் விழுந்து விழுந்து அழுகிறதே!!!

இந்த ஆறலைக் கள்வர்களிடம் இருந்து இனிவரும் காலங்களில் எப்படித்தான் தப்பிக்கப் போகிறோமோ..?

15 கருத்துகள்:

  1. இதே ஆதங்கம் பலருக்கும் உண்டு. மக்களுக்கு இருக்கும் சினிமா மோகத்தை பயன்படுத்திக் கொண்டு அந்த நடிகருடன் டின்னர் சாப்பிடலாம், இந்த நடிகையின் அப்டேட் தருகிறோம் என்றுகூட தொல்லை தருகிறார்கள்.எனக்கு வரும் அழைப்புகளை நான் உடனே தவிர்த்துவிடுவேன். இந்த பூனைக்கு எப்படி மணி கட்டுவது என்று தெரியாமல்தான் பலரும் முழிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஆம் குணசீலன்.எனக்கும் இந்த சேவைகளினால் தொல்லையாக இருந்தது,நானும் அவர்களது அலுவலகத்திற்க்கு தொடர்பு கொண்டு கடுமையான முறையில் பேசின பிறகு தற்போது நிறுத்தியிருக்கிறார்கள்.திரும்பி எப்பொழுது தொல்லையை ஆரம்பிப்பார்கள் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. வாடிக்கையாளர் தொல்லை மையம்.
    அனைவர் மனதிலும் எரிச்சலூட்டும் மையம் ..

    பதிலளிநீக்கு
  4. கைபேசி பயன்படுத்தும் பலருக்கு அழைப்பை ஏற்படுத்தவும், ஏற்கவும் மட்டுமே தெரியும். பயன்படுத்த தெரியாத தேவையில்லாத பல சேவைகள் இவர்கள் மீது சுமத்தப்படுகிறது. . .

    பதிலளிநீக்கு
  5. அருமையான சமுக பதிவு
    தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் இதே பிரச்சனைதான்

    பதிலளிநீக்கு
  6. ஆறலைக் கள்வர்கள் கூட வழிச் செல்வோரிடம் மட்டுமே வழிப்பறி செய்வர்.ஆனால் இருக்குமிடம் தேடி வந்து நம் கைப்பொருளைக் கவர்ந்து கொள்ளும் இவர்களுக்கு என்ன பெயர் வைப்பது?

    பதிலளிநீக்கு
  7. அற்புதமான பதிவு...
    நீங்கள் பி.எஸ்.என்.எல்(B.S.N.L),வேடாபோன் (VODAFONE IN) இந்த இரு நிறுவனங்களுக்கும் கால் செய்து திட்டினால் உங்கள் அழைப்பைத் துண்டித்து விடுவார்கள்...ஆனால் மற்ற நிறுவன உதவி மையத்தினைத் தொடர்பு கொண்டு திட்டினால் வாங்கிக் கட்டிக் கொள்ளுவார்கள்....

    இந்தச் சிக்கலைத் தீர்க்க தொலைத் தொடர்பு அமைப்பான ட்ராய் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது..

    தொலைத்ட தொடர்புத் துறையிலயே கையூட்டு... அவங்க எங்க சார் இதெல்லாம் கவனிப்பாங்க....

    பதிலளிநீக்கு
  8. மக்களின் கோபத்தைக் கண்ணாடியாகக் காட்டியிருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  9. என் அப்பாவின் அலைபேசியில் நமீதாவை பற்றிய தினசரி அப்டேட்டுகள்(??) வரும் வண்ணம் 'சேவை' வழங்கப்பட்டு விட்டது. ''நான் ஏதும் செய்யவில்லை இது எப்படி வந்தது? எப்படி நிறுத்துவது'' என்று என் அப்பா அப்பாவியாகக் கேட்டபோது வார்த்தையால் விவரிக்க முடியாத மெல்லிய நெருடல்... உறவுகளின் மென்னுணர்வுகளைப் பாதிக்கும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு என்ன தண்டனை?

    பதிலளிநீக்கு
  10. அனைவருமே பாதிக்கப் பட்டுத்தான் இருக்கிறோம்
    அதை தெளிவாக பதிவிட்டமைக்கு நன்றி
    இனி வரும் காலங்களில் ஏதேனும் ஒரு சேவையைச் சொல்லி
    இந்த சேவையைப் பெற செல்லை ஆப் செய்தால் போதும்
    எனச் சொல்லப் போகிறார்களோ என்னவோ !

    பதிலளிநீக்கு
  11. நீண்ட நாளாக மனதில் இருந்த சுமையை இறக்கி வைத்தேன்.

    கருத்துரையளித்த அன்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. // மனம் உவந்து இரவலருக்கு 100 ரூபாய் போட்டால் நிறைவடையும் மனம்
    தெரியாமல் ஏமாந்து 10 ரூபாய் விட்டாலும் விழுந்து விழுந்து அழுகிறதே!!! //

    யதார்த்தமான உண்மை!

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பாலாஜி

    பதிலளிநீக்கு
  14. பழங்கால முறை பயங்கரமாக உள்ளதே ...

    பதிலளிநீக்கு