வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

பிச்சைக்காரக் கடவுளர்கள்.


தமிழ்மொழியைப் பக்தியின் மொழி என்பர். தமிழில் இறைவனைத் தேடிய அளவுக்கு வேறு எந்த மொழிகளிலும் தேடியதில்லை.

நம்பிக்கை அதிகம் தோன்றியதும் நம்நாட்டில்தான்! – அதைவிட
மூடநம்பிக்கைகள் அதிகம் தோன்றியதும் நம்நாட்டில்தான்!!

உணவு, உடை, தகவல் தொடர்பு என எவ்வளவோ வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில் நம் கடவுளர் மட்டும் இன்னும்...

அதே பிச்சைப் பாத்திரம், புலித்தோல், காளை ஊர்தி, கருடஊர்தி...

கடவுளை நாம் நம்புவது உண்மையென்றால் இன்றைய சூழலில் நாமெல்லாம் ஞானிகளாக, துறவிகளாக மாறியிருப்போம்.

கடவுளை அடைய, உணர்ந்துகொள்ள முயற்சிப்பதால்தான் இந்த அளவுக்காவது நாம் மனிதர்களாக வாழ்கிறோம். இந்த நம்பிக்கையும் இல்லாதிருந்தால் இன்றைய சூழலில் காட்டு விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பெரிய வேறுபாடு இருந்திருக்காது.


இலக்கியத்தில் நகைச்சுவை.

முக்கூடற்பள்ளு சிற்றிலக்கியங்களுள் குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கியப் பரப்பில் இவ்விலக்கியத்துக்குத் தனித்துவமான இடம் உண்டு. மருதநிலம் சார்ந்த வாழ்வியலை படம்பிடித்துக்காட்டும் இவ்விலக்கியத்தின் நகைச்சுவைக் காட்சிகளை பதிவு செய்வதே இவ்விடுகையின் நோக்கமாகும்.

பள்ளன் ஒருவன். அவனுக்கு இரண்டு மனைவியர்கள். ஒருத்தி மூத்தபள்ளி, இன்னொருத்தி இளையபள்ளி. இவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் சண்டையில் கடவுளர் பட்ட பாடு நகைச்சுவை நயம் தோய சொல்லப்பட்டிருக்கும். சிரிக்க சிரிக்கப் பேசினாலும் கடவுளர் குறித்த புராணச் செய்திகளை அழகாக மனதில் பதியவைப்பதாக இப்பகுதி விளங்குகிறது.

ஆடையில்லாத கடவுளர்கள்..?

இடுப்பிலே சுற்றிக் கட்டிக் கொள்ள நாலுமுழத் துண்டு கூடக் கிடைக்காமல் புலித்தோலை எடுத்து உடுத்தவன் உங்கள் சோதிவடிவான சிவன் அல்லவா?

கற்றையாக சடையும் கட்டி, மரவுரியையும் இடுப்பிலே முன்காலத்திலேயே கட்டிக் கொண்டானே அவன் உங்கள் சங்குக் கையனான திருமால்அல்லவோடி..?

“சுற்றிக் கட்ட நாலு முழத் துண்டும் இல்லாமல் – புலித்
தோலை உடுத்தான் உங்கள் சோதி அல்லோடி!

கற்றைச் சடை கட்டி மரவுரியும் சேலைதான் – பண்டு
கட்டிக் கொண்டான் உங்கள் சங்ககுக் கையன் அல்லோடி“

(முக்கூடற்பள்ளு – 169)

(சிவன் தாருகாவனத்து முனிவர் ஏவிய புலியைக் கொன்று அதன் உரியை உடுத்ததையும், இராமன் மரவுரி தரித்துக் கானகம் சென்றதையும் இப்பாடலடிகள் சுட்டுகிறது)

உணவில்லாத கடவுளர்கள்..?

ஊருக்குள்ளே பிச்சையெடுத்துத் திரிந்தும் பசியாற்றமாட்டாதவனாகக் கடல் நஞ்சையெல்லாம் எடுத்து உண்டானே, அவன் உங்கள் நாதன் அல்லோடி..?

மாட்டு மந்தைக்குப் பின்னாகவே திரிந்தும்கூடச் சோற்றுக்கு வழியில்லாமல் வெறும் மண்ணைத் தின்றானே அவன் உங்கள் மேகவண்ணன் திருமால் அல்லவோடி?

“நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு ஆற்றமாட்டாமல் – வாரி
நஞ்சையெல்லாம் உண்டானுங்கள் நாதனல்லாடி?

மாட்டுப் பிறகே திரிந்தும் சோற்றுக்கில்லாமல் – வெறும்
மண்ணை உண்டான் உங்கள் முகில் வண்ணனல்லோடி?

(முக்கூடற்பள்ளு – 170)
(சிவன் இரந்துண்டது பிரமனின் தலையோடு தன் கையினின்றும் போவதற்காகக் கொண்ட பிட்சாடனக் கோலம், மற்றும் பார்கடலைக் கடைந்தபோது வந்த நஞ்சை உண்டமை.
கண்ணன் மண்ணை உண்ட கதை)

வாகனம் இல்லாத கடவுளர்கள்..?

ஏறிச் செல்ல ஒரு வாகனமும் இல்லாமல் மாட்டின் மீதே ஏறித்திரிந்தவன் தானே உங்கள் ஈசன்..?

அந்த மாடுகூட இல்லாமல்தானே பறவை மீதிலேறிக் கொண்டன் உங்கள் கீதன் திருமால்..? இது உண்மையல்லவோடி?

“ஏற ஒரு வாகனமுமம் இல்லாமையினால்-மாட்டில்
ஏறியே திரிந்தானுங்கள் ஈசன் அல்லோடி?

வீறு சொன்னதென்ன மாடு தானுமில்லாமல் – பட்சி
மீதிலேறிக் கொண்டானுங்கள் கீதன் அல்லோடி?

(முக்கூடற்பள்ளு – 171)

(காளை வாகனத்தைக் கொண்டவன் சிவன்
கருடனை வாகனமாகக் கொண்டவன் திருமால் என்ற புராணச் செய்தி)

இவ்விலக்கியத்தில் சிவனையும், திருமாலையும் திட்டுவது போல இருந்தாலும் இக்கடவுளர் குறித்த தொன்மச் செய்திகளை அழகாகப் பதிவு செய்வதாக இப்பாடல் அமைகிறது.


இக்காட்சியை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டாலும்..

உள்மனது ஏனோ..

திரும்பத் திரும்பக் கேட்கிறது..

“எத்திசை திரும்பினும் இரவலர் கூட்டம்
இத்தனை கடவுளர் இருந்த என்ன பயன்..???“
என்று...

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்

(உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.)

என்ற வள்ளுவரின் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.

44 கருத்துகள்:

  1. முக்கூடற்பள்ளு - புதிய விஷயம்.... நம் இலக்கியங்களுக்குள் எத்தனை எத்தனை அற்புதமான விஷயங்கள் முனைவரே.... இவற்றையெல்லாம் படிக்காமல் விட்டு விட்டோமே என்று அவ்வப்போது நான் வருந்துவது உண்டு.....

    தொடர்ந்து பகிர்ந்து வரும் உங்களுக்கு எனது நன்றி....

    பதிலளிநீக்கு
  2. வேர்களை தேடியின் தோற்றம் நல்லா இருக்கு ....

    நன்றி .......

    பதிலளிநீக்கு
  3. “எத்திசை திரும்பினும் இரவலர் கூட்டம்
    இத்தனை கடவுளர் இருந்த என்ன பயன்..???“
    உண்மைதான்!கொடுக்கும் தன்மையும் குறைந்து இரத்தலும் அதிகமானது...
    எத்துணை இலவசம் தந்தாலும் இது நீங்காது...வேலை வாய்ப்பு அதிகரிக்கனும்...வேலை செய்ய மனமிருக்கனும்...

    பதிலளிநீக்கு
  4. ப்ளாக்கின் புதிய வடிவம் அருமை சார்

    பதிலளிநீக்கு
  5. நல்ல நகைச்சுவையானதொரு அலசல்.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள
    [voted 5 to 6 in INDLI &
    4 to 5 in Tamilmanam] vgk

    பதிலளிநீக்கு
  6. “எத்திசை திரும்பினும் இரவலர் கூட்டம்
    இத்தனை கடவுளர் இருந்த என்ன பயன்..???என்று////


    கேள்வி நெஞ்சில் சுளீரென்று விழுகிறது.

    பதிலளிநீக்கு
  7. உயரத்திருந்து யாசித்தல்
    எனக் கேட்டிருக்கிறேன்
    ஆனால்
    பிச்சைக்காரக் கடவுளர்கள்
    இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
    பதிவு விளக்கம் சொல்லி
    நகைச்சுவையுடன் தொடர்ந்து
    சிந்திக்க வைக்கும் முடிவுடன்.....

    அருமை அருமை
    நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  8. கடவுளை அடைய, உணர்ந்துகொள்ள முயற்சிப்பதால்தான் இந்த அளவுக்காவது நாம் மனிதர்களாக வாழ்கிறோம். இந்த நம்பிக்கையும் இல்லாதிருந்தால் இன்றைய சூழலில் காட்டு விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பெரிய வேறுபாடு இருந்திருக்காது./

    நிதர்சனமான வரிகள்.

    பதிலளிநீக்கு
  9. எத்திசை திரும்பினும் இரவலர் கூட்டம்
    இத்தனை கடவுளர் இருந்த என்ன பயன்..???“ என்று...
    கனக்கும் கேள்வி???

    பதிலளிநீக்கு
  10. இரந்துக்கெடுவானாக!வள்ளுவர் சரியா சொல்லி இருக்கார்.பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. உணவில்லாத கடவுளர்களைப்பற்றி உண்ணத கவிதையுடன் கூடிய விளக்கம் உருகவைக்கிறது

    பதிலளிநீக்கு
  12. மாப்ள பதிவு அருமைங்க நன்றி!

    பதிலளிநீக்கு
  13. நகைச்சுவை..+ கவிதை...+ சிந்திக்க வைக்கும் பதிவு
    ....முனைவரே

    பதிலளிநீக்கு
  14. //தமிழ்மொழியைப் பக்தியின் மொழி என்பர். தமிழில் இறைவனைத் தேடிய அளவுக்கு வேறு எந்த மொழிகளிலும் தேடியதில்லை.//

    ஆம் எத்தனை 1000 பாடல்கள் பாடப்பட்டுள்ளன!
    சிரிக்கவைத்தாலும் சிந்திக்க வைக்கும் பாடல்கள்.
    அருமையான பதிவு ஐயா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. முனைவரே, உங்கள் உள்ளமே கடவுள்.. நீங்களும் நானும் கடவுள் என்ற எண்ணம் வராமல் பார்த்து கொள்வது தான் ஆன்மிகம்... கடவுளை தேடும் முயற்சியில் மனிதனை மிருகமாகவே வைத்திருக்கிறது ஆன்மிகம்.. அத்வைதம் சொல்லும் தத்துவத்தை, நாங்கள் இல்லாமல் அத்வைதம் இல்லை என்று திரித்து பழைய நிலைக்கே கொண்டு சொல்கிறது ஆன்மிகம்.. என்று அத்வைதம் மட்டுமே ஆன்மிகம் என்று எடுத்துக் கொள்ளும் பொழுது கடவுள் என்ற பிம்பம் காணமல் போய், மிருக குணம் கொண்ட மனிதன் அந்த மிருக குணத்தை அடக்கி ஆள கற்றுக் கொள்வான்...

    பதிலளிநீக்கு
  16. கடவுளை அடைய, உணர்ந்துகொள்ள முயற்சிப்பதால்தான் இந்த அளவுக்காவது நாம் மனிதர்களாக வாழ்கிறோம். இந்த நம்பிக்கையும் இல்லாதிருந்தால் இன்றைய சூழலில் காட்டு விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பெரிய வேறுபாடு இருந்திருக்காது.

    நூற்றுக்கு நூறுவீதம் மறுக்க முடியாத உண்மை .இன்றைய உங்கள் ஆக்கம் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........

    பதிலளிநீக்கு
  17. இரண்டு வரிகளானாலும் அதற்குள்
    புராண் நிகழ்வுகளை மிக அழகாகச்
    சொல்லிச் செல்லும்விதம் மெய் சிலிர்க்கவைக்கிறது
    நிலா காட்டுகிற சாக்கில் சோறு ஊட்டிச் செல்லும்
    தாய் போல இலக்கிய நயங்களை எங்களுக்கு
    மிக அருமையாக அறிமுக செய்து போகும் தங்கள்
    பதிவுகள் அனைத்தும் அருமையிலும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  18. நன்றி நண்டு
    நன்றி மனோ
    உண்மைதான் வெங்கட்
    மகிழ்சி ஸ்டாலின்

    பதிலளிநீக்கு
  19. நன்றி சார்வாகன்
    உண்மைதான் தென்றல்
    மகிழ்ச்சி பிரேம்
    புரிந்தால் மகிழ்ச்சி தமிழ் உதயம்

    பதிலளிநீக்கு
  20. கருத்துரைக்கு நன்றி இராஜேஷ்வரி.
    நன்றி கோகுல்
    நன்றி சரவணன்
    மகிழ்ச்சி மாயஉலகம்
    நன்றி விக்கி
    நன்றி ரெவரி
    நன்றி ராம்வி

    பதிலளிநீக்கு
  21. மிக அழகானதொரு ஆன்மீக விளக்கத்தைக் கொடுத்திருக்கிறீர்கள் மகிழ்ச்சி சூரியஜீவா.

    பதிலளிநீக்கு
  22. மகிழ்ச்சி அம்பாளடியாள்
    நன்றி இரமணி ஐயா ஏதோ என்னால் முடிந்தவரை என் அறிவுக்கு எட்டியவரை பதிவு செய்துவருகிறேன் தங்களைப் போன்ற நட்புக்கள் தரும் ஊக்கத்தால்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  23. புலவர் பட்டம் பெற நான்காண்டு காலம்
    படித்து இரசித்த இவையெல்லாம் ஆண்டு
    பல ஓடிவிட்டதால் வயதின் காரணமாக
    மறந்து விட்ட நிலையில் இன்று தங்கள்
    பதிவு ஒவ்வொன்றும் மீண்டும் நினைவுக்குக்
    கொண்டுவர உதவுகிறது என்றால அது
    மிகையன்று
    ஆகவே முன்வரே நான் உங்களுக்கு
    பெரிதும் கடமைப் பட்டிருக்கிறேன்
    திருக்குறளை பரப்ப பாடுபடுவோம்
    புலவரே என்ற தங்களின் விருப்பமே
    இன்றைய குறள் பற்றிய என் இரண்டாவது
    கவிதை ஆகும்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  24. டாக்டர் குணசீலன் !

    மன்னிக்கவும். எனக்கு இப்பாடல்களின் இறைச்சி வேறாகப் படுகிறது.

    பள்ளு வகை இலக்கியம் இழிசினர் என்ற இலக்கியத்தால் அழைக்கப்படும் தாழ்ந்த இனமக்களால் படைக்கப்பட்ட இலக்கிய வகை என்றொரு கருத்துண்டு. பள்ளர்கள் நெல்லை மாவட்ட அப்படிப்பட்ட தாழ்னிலை மக்களாவர் அக்காலத்தில் நின்று பார்க்கும்போது. அவர்கள் இப்படிப்பட்ட பள்ளுப்பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். முக்கூடற்பள்ளு எனவே அம்மக்கள் பாடுவதாக அமைகிறது. பாரதியாரும் ஆனந்தப்பள்ளு பாடுகிறார்: 'பறையருக்கும் இங்கு புலையருக்கும் விடுதலை'

    அது கிடக்க. இப்பாடல்களுக்கு வருவோம். கீழ்த்தட்டு மக்கள் உழைக்கும் வர்க்கம். சுரண்டப்பட்டவர்கள். வறுமையில் வாடியவர்கள். ஆனால் அவர்கள் அக்காலத்தில் அனைவரும் இந்துமக்களே. அவர்கள் தம் மதத்தையும் கடவுளர்களையும் அணுகும் முறையே இப்பாடல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் கடவுளர்கள் மேல்தட்டுமக்களால் பலபடிகளில் ஜோடிக்கப்பட்டு - பணத்தால், நிறத்தால், குணத்தால், செழிப்பால் - மேல்தட்டு வர்க்கத்தின் விருப்பத்திற்கேற்பவே ஆக்கப்பட்டுவிடுவதால், கீழ்த்தட்டு மக்கள், அவ்வடிவங்களில் கடவுளர்களை நோக்க வணங்க மனவொருமை ஏற்புடைப்பு நிகழாது. எனவே மதம் கடவுளர்கர்களை, பராரிகளா, இரந்துண்பவர்களாக, ஏழைகளாக, ஏழைப்பங்காளர்களாகக் காட்டித்தான் தீரவேண்டும். ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பது தொன்மொழி. இவ்வடிவங்களைக்கண்டு இவர்கள் மகிழ்கிறார்கள். தம்முடன் உறவாட வந்த கடவுள், அல்லது தம் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவந்த கடவுள் என்பதாக இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதாக பாவலர் நமக்குக் காட்டுகிறார்.

    திருமங்கை ஆழ்வார் பாசுரங்களில் இருபெண்கள் பேசுவதாக வரும். ஒரு பெண் திருமாலைப் பழிப்பதாகவும் - உன் கடவுள் திருடன் என்றே ஒருத்தி சொல்வாள் ஆங்கே -; இப்படி பலபழிகளைச்சொல்வாள் அவள் - மற்றொருத்தி அப்பழிகளை மறுப்பதாகவும் காட்டப்படும். இவ்வுரையாடலின் மூலம் ஆழ்வார் சொல்லும் செய்தி என்னவென்றால், திருமால் ஏன் அப்படி என்பதிலும் உட்பொருள் உண்டு; அது நற்பொருள் என்பதே. இஃதொரு இலக்கியப்பாங்கு.

    வியப்புக்களை வாரிவழங்கும் தமிழ் இலக்கியம்.

    பதிலளிநீக்கு
  25. பாடலின் மூலம் பக்தியை சொல்லும் பள்ளு மிகவும் ரசிக்கவைத்தது. இரண்டே அடியில் புராணக் கதையைப் பொதிந்துப் பாடப்பட்ட பாடல்களை விளக்கத்தோடு வழங்கியமைக்கு மிகவும் நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு
  26. கடவுளை அடைய, உணர்ந்துகொள்ள முயற்சிப்பதால்தான் இந்த அளவுக்காவது நாம் மனிதர்களாக வாழ்கிறோம்.

    உண்மையான வரிகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  27. எத்திசை திரும்பினும் இரவலர் கூட்டம்
    இத்தனை கடவுளர் இருந்த என்ன பயன்..???

    இதேபோல் ஏய்ப்பவன் வாழ்கிறான் ,ஏய்க்கப்பட்டவன் சாகிறான் .

    இப்பிடி சொல்லிகொண்டே போகலாம் நண்பரே

    பதிலளிநீக்கு
  28. .நல்லது . பகிர்வுக்கு நன்றி . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  29. ஏற்கனவே படித்திருந்தாலும் நினைவு கூர்வது போல் உள்ளது.சங்க இலக்கியம் பற்றி நிறைய எழுதுங்கள்.அவை பொக்கிஷங்கள்.ஹிட்ஸ் பற்றி கவலை வேண்டாம்.எதிர்காலத்தில் புத்தகமாக பதிப்பிக்கும் நோக்கில் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  30. பெயரில்லாமல் கருத்துரையிட்ட அன்பரே..
    தாங்கள் எந்த சூழலில் இப்படிப் பெயரில்லாமல் கருத்துரையிட்டீர்கள் என்று எனக்குத் தெரியாது..

    அரிய பல ஆய்வுக்களங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.

    தங்கள் பெயரி அறிந்தால் மேலும் மகிழ்வேன்

    நன்றி.

    பதிலளிநீக்கு
  31. நன்றி கீதா
    நன்றி எம்ஆர்
    நன்றி தாமஸ்
    மகிழ்ச்சி சண்முகவேல் அவ்வெண்ணத்தில் தான் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. சைவமும் வைணவமும் சண்டையிட்டதை அந்நாள் பாடல் காட்சிகள் புலப்படுத்துகின்றன.

    இந்நாள் இவர்கள் உட்பிரிவுட்குள்ளேயே சண்டையிட்டு கொள்கின்றனர். வடமா, தென்மா, வடகலை, தென்கலை இப்படி

    இன்னும் ஒரு நூறாண்டு கழிந்தால், பென்ஸ் வாகனம் கடவுளின் வாகனமாக காட்சி தரலாம். உம், பிள்ளையார் ஊர்வலத்தில் அவரின் தோற்றம் மாறி கொண்டே வருகிறது அன்னா அசாரே வரை

    காத்திருங்கள் காட்சிகள் மாறும் ஆனால் இந்த சண்டைகள் தீராது.

    பதிலளிநீக்கு
  33. கடவுளர் குறித்த தொன்மச் செய்திகளை அழகாகப் பதிவு செய்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு