வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 26 ஜனவரி, 2012

இன்னொரு கால் எங்கே??




நண்பர் ஒருவர் என்னிடம்....

ஐயா நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று ஒரு பழமொழி சொல்லி வருகிறோமே அது ஏன்?
அதன் உண்மையான பொருள் என்ன? என்று கேட்டார்.

நான் சொன்னேன்..

நண்பரே.. அது ஒரு பழங்கதை..

ஒரு குருவும் சீடனும் இருந்தார்களாம்.
ஒருநாள் குரு தன் சீடனிடம் ஒரு முயலைக் கொண்டுவந்து தந்து அதை நன்றாக சமைத்து வை என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாராம்.
அவர் திரும்புவதற்கு முன்பே மிகவும் சுவையாக சமைத்த சீடனுக்கு உணவின் சுவையும், மணமும் நாக்கில் எச்சிலை ஊறச் செய்ததாம்.

ஆசையில் முயலின் ஒருகாலை அவன் எடுத்துச் சாப்பிட்டுவிட்டானாம்..
திரும்பி வந்த குரு கேட்டாராம்..
என்னப்பா மூன்று கால்தான் இருக்கிறது இன்னொரு கால் எங்கே என்று..
அதற்கு உண்மையை மறைத்து நீங்கள் கொண்டுவந்த முயலுக்கு மூன்றுகால்கள் தான் இருந்தன குருவே என்றானாம்..

என்னப்பா உலகில் மூன்றுகால்களோடு எந்த முயலுமே கிடையாதே என்று கேட்டாராம்.

எப்படிக் கேட்டும் சீடன் உண்மையை மட்டும் சொல்லாமல் தான் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தானாம்.

கால் போனதைப் பற்றிக்கூடக் கவலைப்படாத குரு.
சீடனிடம் உண்மையை எப்படியாவது வரவழைத்துவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம்.

அவன் தூங்கும் போது நடுஇரவில் எழுப்பிக் கேட்பாராம்..
அவன் ஏதாவது வேலை செய்யும் போது கேட்பாராம்..

தம்பி முயலுக்கு எத்தனை கால் என்று..

அவனும் மறக்காமல் தெளிவாகச்சொல்வானாம்..
குருவே நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான் என்று..

நொந்து போன குரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தவேளையில்..

இந்த சீடன் ஒரு திருட்டுவேலைசெய்து வந்ததை இவர் அறிந்தாராம்..

நெற்றியில் திருநீறு அணிந்து கொண்டு மந்திரத்தைச் சொல்லிய சீடன் யார் கண்களுக்கும் தெரியாமல் அரண்மனைக்குச் சென்று அரச உணவுகளை ஒரு கை பார்த்துவந்தானாம்..

அரண்மனையில் உணவுகள் மாயமாவதை கண்டறியமுடியாமல் தவித்த அரசன்  யாராவது இந்தத் திருடனைக் கண்டுபிடித்தால் தக்க பரிசில் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டானாம்.

குருவுக்குத் தெளிவாக விளங்கியதாம் இது நம் சீடனின் வேலைதான் என்று..

அரசனிடம் சென்று ஒரு வழிமுறை சொன்னாராம்..

இன்று சுடச்சுட உணவுதயாரித்து அதை மூடிவையுங்கள் இன்று அவன் மாட்டுவான். என்று...

சொன்னதுபோலவே மாயமாக வந்த சீடன் ஆவலாக பாத்திரங்களின் மூடியைத் திறந்தானாம். அப்போது நீராவி வந்து அவன் நெற்றியில் இட்ட திருநீரைக் அழித்துவிட்டதாம். அவனும் எல்லோர் கண்ணிலும் தெரிந்தானாம்.

குற்றம் சுமத்தப்பட்டு தூக்குதண்டனைக் கைதியாக சீடன் நின்றவேளையில்..

அவனருகே சென்ற குரு..

“தம்பி இறுதியாகக் கேட்கிறேன்..
உண்மையைச் சொன்னால் உன்னை இந்த மரண தண்டனையிலிருந்து என்னால் காப்பாற்றமுடியும்..
முயலுக்கு எத்தனை கால்?“ என்று கேட்டாராம்..

அப்போது கூட மனம் மாறாத சீடன் சொன்னானாம்..

குருவே சத்தியமாக நீங்கள் தந்த முயலுக்கு மூன்றே கால்கள் தான் என்று...

அப்போது அந்த குரு ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டாராம்.

இவனிடமிருந்து மட்டும் உண்மையை வரவழைக்கவே முடியாது என்று..

அதனால் தான் இந்த சீடனைப் போல..

தான் சொன்னது பொய் என்றாலும் அதை மறைக்க எத்தனை பொய்வேண்டுமானலும் சொல்லத் தயங்காதவர்களை இந்தப் பழமொழியோடு ஒப்பிட்டு உரைத்துவருகிறோம் என்று விளக்கம் சொன்னேன்..

மகிழ்ந்த என் நண்பர் இதே போல வேறு ஒரு கதை உண்டு என்றார்..

என்ன என்று ஆவலாகக் கேட்டேன்..

அதை கதைபோல குரு தன் சீடனிடம் கொக்கு பிடித்துத் தந்து சமைத்துவைக்க சொன்னார்..

அவனும் சமைத்து அந்தச் சீடனைப் போலவே ஒருகாலை சாப்பிட்டுவிட்டு நீங்கள் தந்த கொக்குக்கு ஒரே கால் தான் என்று சாதித்தான்.

அந்த குருவும் அவனை அழைத்துச் சென்று குளத்தில் நின்ற கொக்கைக் காண்பித்தார்.

அந்தக் கொக்கு ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருந்தது.
சீடனோ..

பார்த்தீர்களா குருவே ஒத்தைக் காலில்தானே நிற்கிறது என்றான்..

நொந்துபோன குரு ஒரு கல்லை எடுத்து அதன் மீது எறிந்தார்.

அது பறந்தது. அப்போது குரு இப்போது பார்த்தாயா?
இரண்டுகால்கள் தெரிகின்றன என்றார்.

அப்போதும் சீடன்.


“குருவே இப்போதுதான் புரிகிறது.. நீங்க பறக்கும் கொக்கை அடித்திருந்தால் அதற்கு இரண்டுகால்கள் இருந்திருக்கும்..

நீங்கள் என்னிடம் தந்த கொக்கு நிலத்தில் நின்றுகொண்டிருந்த கொக்காகத் தான் இருக்கும் அதனால் தான் அதற்கு ஒரே ஒரு கால் இருந்தது“ என்றானாம் என்று கதையை முடித்தார் என் நண்பர்.


முயலின் இன்னொரு காலும், கொக்கின் இன்னொரு காலும் சீடர்களின் வயிற்றுக்குள் போனதை கதைபடித்த உங்களால் உணர்ந்துகொள்ளமுடியும்..

ஆனால்..

அந்த கால்களின் சுவைமட்டும் இன்னும் நம் நாக்கிலும் இருக்கிறதோ என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

அதனால் தானே நாமும் சில நேரங்களில் நாம் சொல்வதுதான் சரி என்று சாதித்துவருகிறோம்...

39 கருத்துகள்:

  1. சூப்பர் முனைவரே....

    மூணு கால் முயலுக்கான கதை ஏற்கனவே தெரியும். ஆனா கொக்கு கதை இப்போ தான் அறிந்து கொண்டேன்...

    பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. //அதனால் தானே நாமும் சில நேரங்களில் நாம் சொல்வதுதான் சரி என்று சாதித்துவருகிறோம்...//

    ஆம், ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் சொல்லுவார்கள். நல்ல கதைகள்.

    பதிலளிநீக்கு
  3. தூங்குறவனை எழுப்பி விடலாம்
    தூங்குற மாதிரி நடிக்கிறவனை எழுப்பவே முடியாது...

    பொய் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால்
    அவ்வளவுதான்..
    பொய்யை உண்மையாக்க என்ன வேண்டுமானாலும்
    செய்வார்கள்.
    அழகான கதை மூலம் தெளிவாக விளக்கியமை நன்று முனைவரே.

    பதிலளிநீக்கு
  4. ந‌ல்லாயிருக்கு க‌தை! மூர்க்க‌னும் 'முத‌லையும் கொண்ட‌து விடா' என்ப‌த‌ற்கும் ஒரு க‌தை சொல்லுங்க‌ளேன்...

    பதிலளிநீக்கு
  5. கொக்கு கதை புதிது நண்பரே...நல்ல விளக்கங்கள்..

    பதிலளிநீக்கு
  6. கொக்கு கதை தெரியும்.முயல் கதைதான் புதிது.குணா சிலசமயம் மூன்று காலில நின்று சாதனைகளும் சாதிச்சிடலாமெல்லோ !

    பதிலளிநீக்கு
  7. Ayyaa munaivare!
    kathaikal puthiyathuthaan-
    naan ippa thaan therinthu kondathaal!
    puthiya anupavam!

    பதிலளிநீக்கு
  8. நகைச்சுவையான விளக்கம். ஒத்தக்கால் கொக்கு விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  9. ஆஹா ! இரண்டுமே நல்ல கதைகள் ! நன்றி சார் !

    பதிலளிநீக்கு
  10. அட்டகாசம் அண்ணா... பசங்க கிட்ட சீன் போட்றக்கும் தங்கச்சிகளுக்கு கதை சொல்லவும் பயன்படும்...

    பதிலளிநீக்கு
  11. கொக்கு கதை தெரியும்,முயல் கதை இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.

    கதைகள் சிரிக்க,சிந்திக்க வைக்கின்றது.

    பதிலளிநீக்கு
  12. நல்ல விளக்கத்துடன் அருமையான கதைகளை வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல முனைவரே

    பதிலளிநீக்கு
  13. முயல் கதை படித்தது எனினும் கொக்கு கதை இப்போது தான் படிக்கிறேன்... நல்ல பகிர்வு முனைவரே...

    பதிலளிநீக்கு
  14. பிடிவாதம் பிடிப்பவர்களையும்,தான் சொல்வதே சரியென்று சாதிக்கிறவர்களையும் இந்த பழமொழி கொண்டு திட்டுவதை கேட்டிருக்கிறேன்.இந்த கதைகள் எனக்கு புதிது.

    பதிலளிநீக்கு
  15. நல்ல நகைச்சுவை . ஆனால் அதற்குள் பொதிந்திருக்கும் உண்மை விளக்கம் அருமை. நகைச்சுவையாக இருந்தாலும் தேவையான பதிவே . மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  16. ஹாஹாஹா.. ரெண்டு கதையும் படிச்சு நல்லா சிரிச்சேன். நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  17. அருமை தலைவா ...தலைவர் தென்கச்சி சுவாமி நாதன் கதை சொல்வது போல் இருந்தது !

    பதிலளிநீக்கு
  18. எனக்கும் இந்த பழமொழிக்கான சந்தேகம் இருந்தது அய்யா விளக்கம் சொல்லி கதை சொன்னதுக்கு நன்றி அய்யா ..

    பதிலளிநீக்கு
  19. முயலுக்கு மூன்று கால், கொக்குக்கு ஒற்றை கால் ......
    இரண்டு கதையுமே எனக்கு இன்றுதான் தெரிந்தது.
    கதை சொன்னதுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. இரண்டு கதைகளும் இன்று தான் தெரிந்து கொண்டேன் பா. முயல் கதையில் பொய்யை மறைக்க பொய் என்றீர்கள். கொக்கு கதையில் பிடிவாதம் என்றீர்கள்.

    உண்மை தான் ஆனால் சில நேரங்களில் முயலாகவும் கொக்காகவும் இருந்தால் தானே வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.

    குரு சீடனுக்கு உள்ள உறவில் பிடிவாதம் கூட அன்பின் வெளிப்பாடு தான் பா..இதில் முயலுக்கு இரண்டு கால்கள் தான் என்று சொன்னாலும் தவறில்லை. இது கூட அன்பின் பிடிவாதம் தான் பா.

    பதிலளிநீக்கு
  21. இதை பார்த்து தான் வக்கீல்கள் பொய்யை கூட உண்மை என்று வாதாடுகிறார்கள்

    பதிலளிநீக்கு