வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 25 மே, 2012

ஓட்டைக் குடத்தில் நிரப்பிய நீர்!



பணக்காரனுக்கு ஒரு நீதி!
ஏழைக்கு ஒரு நீதி!
அரசியல்வாதிக்கு ஒரு நீதி!
ஆன்மீகவாதிக்கு ஒரு நீதி!
குற்றங்களைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட சட்டங்களைவிட
குற்றங்களிலிருந்து தப்பிக்க அதிகமான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன!
இத்தனை காவல்நிலையங்களும், நீதிமன்றங்களும் இருந்தும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன.

ஓட்டையான குடத்தில் தண்ணீர் நிரப்புவதுபோல நம் கட்டுப்பாடுகளெல்லாம் எங்கோ சிதைந்துபோகின்றன?
சரி மனித ஆற்றலுக்கு மேல் நம்பப்படும் கடவுளாவது மக்களைப் பண்படுத்துவார் என்றால், கடவுளின் பெயரால் போலிகளால் நடத்தப்படும் நாடகங்கள் மனித இனத்தையே ஆட்டுமந்தைகளாக மாற்றிவிடுகின்றன.

இன்றைய சூழலில் நீதியின் நிலை குறித்து இவ்வாறு நாம் சிந்திக்கும்போது, என் நினைவுக்கு வந்த கலீல் சிப்ரான் அவர்களின் கதை ஒன்று உங்கள் பார்வைக்காக..

ஓர் இரவு, அரண்மனையில் விருந்தொன்று நடந்தது. அங்கே ஒரு மனிதன் அரசர் முன் முகம் கவிழ்ந்து குப்புற வீழ்ந்து பணிந்தான். விருந்தினர் அனைவரும் உற்றுநோக்கினர் அவனை. அவனது கண்களின் ஒன்று காணாமல் போயிருந்ததையும், கண்குழியில் குருதி வழிவதையும் அவர்கள் பார்த்தனர்.

அரசர் அவனை விசாரித்தார்- என்ன நிகழ்ந்தது உனக்கு?
அந்த மனிதன் பதிலளித்தான்- ஓ அரசே!
தொழில்முறையில் நான் ஒரு திருடன். இந்த இரவில் நிலவில்லாததால் பணம் மாற்றுவோர் அங்காடிக்குக் கொள்ளையிடச் சென்றேன். சன்னல் வழியே மேலேறும் போது தவறுதலாக ஒரு நெசவாளியின் அங்காடிக்குள் நுழைந்துவிட்டேன். இருட்டில் தடுமாறித் தறிக்குள் விழுந்தேன். என் கண் பறிபோனது. நான் இப்போது ஓ அரசே! நெசவாளியின் தவறுக்காக நீதி கேட்கிறேன்.

பிறகு அரசர் நெசவாளியை அழைத்துவரச் சொல்லஅவனும் வந்தான். நெசவாளியின் ஒரு கண் பிடுங்கப்படவேண்டுமெனத் தீர்ப்பானது.

நெசவாளி சொன்னான் – ஓ அரசே! உங்கள் நீதி நியாயமானது. என் கண்களுள் ஒன்று கவரப்படவேண்டுமென்பது சரியானதே. ஆனால், அந்தோ...! நான் நெய்யும் துணியின் இரு ஓரங்களைப் பார்ப்பதற்காக இரு கண்களும் எனக்குத் தேவையன்றோ! ஆனால் என் அண்டைவீட்டுக்காரன், செருப்புத் தைப்பவன். இரு கண்களும் உள்ளவன், அவனது தொழிலில்  அவனுக்கு இரு கண்கள் தேவையில்லை.

நெசவாளியின் கூற்றைக் கேட்ட அரசன் செருப்புத் தைப்பவனை வரவழைத்தான். செருப்பு தைப்பவனின் இருகண்களில் ஒன்றை அவர்கள் கவர்ந்தனர்.
பாரபட்சமின்றி நியாயம் வழங்கப்பட்டதில் நீதி திருப்தியுற்றது!

தொடர்புடைய இடுகை

22 கருத்துகள்:

  1. கட்டுப்பாடற்ற சுதந்திரம் தவறாகத்தான் பயன்படுத்தப்படும் என்பதற்கு இந்திய நாட்டு சட்டதிட்டங்களே முன்னுதாரணம் உலகிற்கு ..!

    பதிலளிநீக்கு
  2. ஆஹா இதுவல்லவோ நீதி
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் முனைவரே,
    நலமா?

    திருத்தப்படாத சட்டங்களும் அவற்றில் உள்ள ஓட்டைகளும்
    அதிகாரிகளின் வன்ம போக்குகளும் இன்றைய
    குற்றங்களை பெருக்கிக் கொண்டே போகின்றன..

    அழகிய நீதிக்கதை மூலம் விளக்கம் கொடுத்தமை
    நெஞ்சில் நின்றது முனைவரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் நலமறிய ஆவல் நண்பரே.
      அழகான புரிதல் அருமை.

      நன்றி நண்பரே.

      நீக்கு
  4. அருமையான கருத்துக்கள்!

    சட்டம்பற்றிய தெளிவும் அடிப்படைக்கல்வியறிவும் மக்களுக்கு வழங்கப்படுமென்றால் சட்டத்துக்கு மரியாதை ஏற்படும்! அப்படியொன்று நடவாதவரை,
    சட்டம் ஓர் இருட்டறைதான்! மேலாதீக்கவாதிகளுக்கு சட்டம் ஓர் இருட்டறையாக இருப்பதுதான் அனுகூலமானது!

    பதிலளிநீக்கு
  5. நிதி கொடுத்தால் நீதி கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம நாட்டை நல்லாப் புரிந்துவைத்திருக்கிறீர்கள் விச்சு.

      நீக்கு
  6. நிதி இருந்தால் மதி கிடைக்கும் மதி சென்றால் நீதி வாயிதா வாங்கிக் கொண்டே இருக்கும்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  7. சட்டம் ஒரு இருட்டறை...
    அருமையான கதை.
    இன்றைய நிலை இதுபோல்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு