வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 21 ஜூன், 2012

நாளைய குடிநீர்











    என் சிறுவயதில் எங்க ஊரில், பல இடங்களிலும் குடிநீர் குளங்கள்” என்று பல இருந்தன. இன்று அந்த இடங்களெல்லாம் கட்டிடங்கள் வந்துவிட்டன.சில குளங்களில், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று குடிநீரை விலைகொடுத்துத்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

    எதிர்காலத்தை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இதன் அடுத்தநிலை என்ன?
    எதிர்காலத்தில் குடிநீருக்கு என்னசெய்யப்போகிறோம்..? என்று.


    சங்ககாலப் பாடல் ஒன்று நாளைய குடிநீர் இப்படிக்கூட இருக்கலாமோ என்ற அச்சத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

    தலைவனுடன் உடன்போக்கு சென்று மீண்ட தலைவியிடம்,
    நீ சென்ற தலைவனின் நாட்டுக் குடிநீர் நன்றாக இருக்காது என்று சொல்கிறாள் தோழி.
    இல்லைஇல்லை அது இனிமையான நீர் என்று
    பதில் சொல்கிறாள் தலைவி.
    இது தலைவி, தலைவன் மீது கொண்ட அன்பை
    வெளிக் கொணரத் தோழி கையாளும் உத்திகளுள் ஒன்றாகக் காணமுடிகிறது.

    பாடல் இதோ..

    அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை
    தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
    உவலைக் கூவல் கீழ
    மான்உண்டு எஞ்சிய கலுழி நீரே
    ஐங்குறுநூறு -203


    என் தலைவன் நாட்டில் கிடைக்கும் நீர் “மான் உண்டு எஞ்சிய அழுகிய சிறிதளவு நீர்தான்” என்றாலும் அதன் சுவை, நம்முடைய வீட்டில் தோட்டத்தில் கிடைக்கும் இனிய தேனோடு கலந்த பசுவின் பாலைவிட இனிமையானது,  என்கிறாள் தலைவி.


     பாடல் வழியே..

  1. பிறந்தவீட்டுப் பெருமையைப் போலவே புகுந்தவீட்டுப் பெருமையையும் காக்கவேண்டியது பெண்களின் கடமை என்ற பண்பாட்டை நினைவுபடுத்துவதாக இப்பாடல் அமைகிறது. என்னதான் தலைவனின் நாட்டில் கிடைக்கும் நீர் சுத்தமற்றதாக, சுவையற்றதாக இருந்தாலும் அதைவிட்டுக்கொடுக்காமல் பேசும் தலைவியின் பண்பு அவள் தலைவன் மீது கொண்ட காதலை அறிவுறுத்துவதாக உள்ளது.

  2. என்னதான் தலைவி கலங்கிய நீரை தேனோடும் பாலோடும் கலந்த நீர் என்று சொன்னாலும், மான்உண்டு எஞ்சிக் கலங்கிய நீர் என்ற சிந்தனை நாளை நாம் குடிக்கும் நீருக்கும் இந்த நிலை வருமோ? என்ற கருத்தை முன்வைப்பதாக அமைகிறது.

தொடர்புடைய இடுகை

19 கருத்துகள்:

  1. நல்ல உவமை, பாராட்டப்படவேண்டிய கருத்துக்கள்,

    பதிலளிநீக்கு
  2. உண்மை
    நல்ல பதிவு நண்பாரே
    சங்கப் பாடலும் விளக்கமும் அருமை

    பதிலளிநீக்கு
  3. நல்ல பாடல்., நல்ல விளக்கம், அருமையான கருத்தை முன் வைத்தீர்கள் முனைவர் ஐயா.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா.

      நீக்கு
  4. குளங்கள் எல்லா இடத்திலையும் காணாமல்போய்விட்டன. மக்களுக்கும் போதுமான விழிப்புணர்ச்சி இல்லை. அரசும் கண்டுகொள்ளவில்லை. டாஸ்மாக்கில் இருக்கும் கவனம் குடிக்கும் நீரில் இல்லை.

    பதிலளிநீக்கு
  5. தண்ணீருக்காய் சண்டை வரும் என்கிறார்கள் எதிர்காலத்தில்.வாஸ்தவம்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே..
      எரிபொருள்போல தங்கம் போல குடிநீருக்கும் விலை அதிகரி்த்துக்கொண்டே செல்கிறது..

      நீக்கு
  6. தண்ணீர் குறித்த தலைவியின் பாடலும் அதற்கான விளக்கமும் அருமை.
    பாடல் பகிர்வில் நாளைய குடிநீர்ப் பிரச்சினையையும் சொல்லியிருப்பது நன்று.

    பதிலளிநீக்கு
  7. தண்ணீரின் முக்கியத்துவத்துக்கு சங்ககாலப் பாடலை எடுத்துக் காட்டியது அருமை.

    பலஇடங்களில் குடிநீரின்றி மக்கள் அவதிப்படுவது தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  8. தாங்கள் கூறியவை அனைத்தும் நம் கண் முன்னே தினம் தினம் அரங்கேறி வருகின்றன...

    நம் நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரும் கர்நாடகா,கேரளா போன்ற அக்கிரமக்கார அரசுகளால் தட்டிப் பறிக்கப்படுகின்றன...

    அன்றில் இருந்து இன்று வரை அரசியல்வாதிகள் கடிதம் எழுதுவதும்,மக்கள் தொடர்பு சாதனங்களுக்கு பேட்டி அளிப்பதுமாகவே இருந்து வருகிறது...

    அப்பாவி பொது மக்கள் மனதில் வஞ்சனை இன்றி போராடி வருவது வழக்கமாக உள்ளது...

    நாடு எப்போதும் மனிதன் பூவியில் உள்ள வரை திருந்தாது (மாறாது)...

    இடுகையைப் பகிர்ந்து கொண்ட அய்யா அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் இலக்கியவாசிப்புக்கும், தற்கால மதிப்பீட்டுக்கும் நன்றி தங்கம்.

      நீக்கு