வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 19 செப்டம்பர், 2012

கிசு கிசு (Gossip)

Gossip





















நம்மைவிட நாம் மற்றவர்களைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறோம்..
நடிகர்கள், விளையாட்டுவீரர்கள், அரசியல்வாதிகள், முக்கியபுள்ளிகள்.. என இவர்களின் வரிசையில் நம் உடன் பணியாற்றுபவர், எதிர்வீட்டுக்காரர், பக்கத்துவீட்டுகாரர் என யாரையும் விட்டுவைப்பதில்லை.

ஒருவர் நம்மிடம் சொல்லும் செய்தி உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றியோ.. 
நாம் பிறரிடம் சொல்லும் செய்தி உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றியோ நாம் அதிகம் கவலைப்படுவதில்லை..

ஒரு நகைச்சுவை..

ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் சண்டையிட்டுகொண்டிருந்தார்கள். தீடீரென மனைவி..
இருங்க... பக்கத்துவீட்டில் ஏதோ சண்டைபோல ஒரே சத்தமாக இருக்கிறது.. அதை என்ன என்று கேட்டுவிட்டு நாம அப்புறம் சண்டைபோடலாம் என்றாள் மனைவி..
கணவனும் சரி என்றான். இடைவெளிக்குப் பின்னர் சண்டை தொடர்ந்தது.

இப்படி நம்மிடம் இருக்கும் பலவீனத்தை ஊடகங்கள்நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன 

நாளிதழ், வார, மாத இதழ்கள், தொலைக்காட்சி, இணையம்.. என இதன் வளர்ச்சியில் இப்போது முன்னணியில் இருப்பவை சமூகத் தளங்கள்தான்..

அதனால் தமிழ் உறவுகளே, 

நமக்கு உண்மையென்று சரியாகத் தெரியாத ஒரு செய்தியை நாம் சமூகத்தளங்களில் பகிரும்முன்பு கொஞ்சம் சிந்திப்போம் என்னும் கருத்தை இவ்விடுகை வழியாகத் தங்கள் முன்வைக்கிறேன்.

தத்துவமேதை சாக்கரடீசிடம் ஒருவன் வந்து….


நான் தங்களிடம் ஒருவனைப் பற்றி ஒரு செய்தி சொல்ல நினைக்கிறேன் என்றானாம். அவனிடம் சாக்கரடீஸ் பின்வரும் கேள்விகளைக் கேட்டாராம்.
சாக்கரடீஸ் - நீ சொல்லும் செய்தி உண்மையானதா?
ஒருவன் - எனக்குத் தெரியாது. என்னிடம் இன்னொருவர் சொல்லியது.
சாக்கரடீஸ் - சரி, நீ சொல்லும் செய்தியால் எனக்கோ, உனக்கோ ஏதாவது பயனுண்டா?
ஒருவன் - நிச்சயமாக இருக்காது.

சாக்கரடீஸ் - உண்மையெனத் தெரியாத, உனக்கும் எனக்கும் 

பயன்படாதவொரு செய்தியை நாம் ஏன் பேசி நேரத்தைச் 
செலவழிக்கவேண்டும்?



என்று கேட்டாராம் சாக்கரடீஸ்.


நாலு பேரு ஏதாவது சொல்லுவாங்க?


அப்படின்னு ஏதாவதொரு சூழலில் நாம் நினைத்திருப்போம், யாரிடமாவது 

சொல்லியிருப்போம். இல்லையென்றால் யாராவது நம்மிடம் 

சொல்லியிருப்பார்கள்!

யாருங்க அந்த நாலு பேரு? எதுக்காக அவங்களுக்குப் பயப்படனும்?

○ அடுத்தவங்களைப் பற்றிப் பேசுவதையே வேலையாகவோ, 

பொழுதுபோக்காகவோ கொண்டிருப்பவர்களைத் தான் நாலுபேர் என்று 

சொல்லுகிறார்கள்.

○ அந்த நாலு பேர் இன்னொரு நாலு பேருக்கிட்ட நம்மைப் பற்றி உள்ளதையும் 

இல்லாததையும் பேசி நம் மதிப்பைக் குறைத்துவிடுவார்களோ என்று தான் 

எல்லோரும் அந்த நாலு பேருக்குப் பயப்படுகிறார்கள். அந்த நாலு பேரில் 

நாமும் அடக்கம் தான்..

ஆம் நாம் பிறரைப் பற்றிப் பேசாமலோ இருந்திருப்போம்?

ஏதோவொரு சூழலில் ஏதாவது பேசியே இருப்போம்..

சங்கப்பாடல் ஒன்று..


சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி 
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி 
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச் 
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப 
5 அலந்தனென் வாழி தோழி கானல் 
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல் 
கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ 
நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு 
செலவயர்ந் திசினால் யானே 
10 அலர்சுமந்து ஒழிகவிவ் அழுங்கல் ஊரே

நற்றிணை -149. உலோச்சனார் நற்றிணை


இப்பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு

Greetings to you my friend!

Peering through the side of their eyes,
women in small and big groups look at me
put their fingers on their noses
Gossipand spread gossip about me on our streets.
Hearing that, mother hit me with a swirling small stick.
When my seashore lord comes at midnight
with his fast trotting colorful-maned strong horses
tied to his chariot
riding through the groves treading on fragant flowers,
I desire to leave with him.

Let this slanderous town get lost.
 Translated by Vaidehi

.
தோழி தலைவியிடம் என்ன பேசுகிறாள் என்று கேளுங்கள்…
தோழீ! வாழி! 

நம்மூர்த் தெருவிலுள்ள பெண்களுள் ஓரிடத்தில் சிற்சிலரும் ஓரிடத்தில் பற்பலரும் இப்படியாக ஆங்காங்குத் தெருக்களிலே கூடிநின்று கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி,


தம்தம் மூக்கினுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறித் தூற்றவும்,
அப் பழிமொழியை நம் அன்னை கேட்டறிந்து உண்மையென எண்ணிக் கொண்டு சிறிய கோல் ஒன்றினை ஏந்தி அது சுழலும்படி வீசி அடிப்பவும்; இதனால் நான் மிக்க துன்பமுடையவளாகிவிட்டேன்.



ஆதலின் இத் துன்ப மெல்லாம் தீரும்படி சோலையிலுள்ள புதிய மலர் தீண்டிய பூமணம் வீசுகின்ற நல்ல நிறம் பொருந்திய பிடரிமயிரையுடைய விரைந்து செல்லும் குதிரைபூண்ட நெடிய தேரைச் செலுத்தி, நள்ளிருளில் வருகின்ற தேரையுடைய தலைவனுடன் நீ செல்லவேண்டும் என நான் நினைக்கிறேன். அங்ஙனம் சென்றொழிந்தால் பேரொலியையுடைய இவ்வூர் என்ன செய்யும்? வேண்டுமானால் அலர் தூற்றிக்கொள்ளட்டும்!



தொடர்புடைய இடுகைகள்.






                                                             1.தெரியுமா செய்தி..










27 கருத்துகள்:

  1. நற்றிணைப் பாடலுடன் இணைத்துத் தந்திருக்கும் விஷயங்கள் மிக அருமை! இதே கிசுகிசுவின் ஒரு சுவாரஸ்யமான பகுதியை இன்றைய 'எங்களி'ல் காணலாம்!!

    பதிலளிநீக்கு
  2. சங்கப் பாடலுடன் தொகுத்து அழகாக கூறிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பதிவு பேராசிரியரே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு.
    நன்று.
    இன்று என் தளத்தில் ”பைத்தியம் தெளிவதில்லை”

    பதிலளிநீக்கு

  5. நலமா முனைவரே!நற்றிணைப் பாடல் விளக்கம் சிற்ப்பு

    பதிலளிநீக்கு
  6. அருமையான அலசல் குணசீலன்.. இந்த தலைப்பே கத்தி மேல் நடப்பது போல தான். ஏனெனில் நமக்கே தெரியாமல் நம்முடனே ஒட்டிக்கொண்ட ஒரு வியாதி போல இந்த கிசுகிசு அதில் இருக்கும் ருசியும் ஈடுபாடும் ஏதாவது ஒரு நல்லச்செயலில் இறங்கி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும்... முன்பெல்லாம் சினிமாவில் தான் கிசுகிசு ரொம்ப பிரபல்யமாக இருக்கும். ஆனால் இப்ப அப்படி இல்லை, தொலைக்காட்சி தொடரில் தொடங்கி அன்றாட நிகழ்ச்சி எதிர்வீட்டு நிகழ்வு, பக்கத்துவிட்டு சத்தமான சம்பாஷணை... இதெல்லாம் இவர்களுக்கு ஒரு க்யூரியாசிட்டி தோணிடும். என்ன நடக்குதோ என்று.. பின் கேட்ட அரைகுறை விஷயத்தோடு கொஞ்சம் மசாலா சேர்த்து அடுத்தவரிடம் சொல்லும் பாங்கு.... இப்படியாக தொடரும் கிசுகிசு ஒரு வட்டத்தை அதுக்குள் கண், காது, மூக்கு வைத்து பரப்பிவிடுவது.... இதனால் ஏதாவது பயன் உண்டா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று எல்லோருக்குமே தெரியும், தெரிந்தே இப்படி ஒரு செயலை செய்யவேண்டிய அவசியம்??? பொழுதுபோக்குக்காகவா??

    ஒருவீட்டில் அக்கா தம்பி இருவருக்குமே ஏதோ பிரச்சனை... அதை இருவருக்குமே தெரிந்த தோழி ஒருவர் மிக அருமையாக பயன்படுத்திக்கொண்டு தம்பியிடம் கேட்ட விஷயங்களை அக்காவிடம் ஒன்றுக்கு பத்தாக ஒப்பித்து அதையே அக்காவிடம் சில விஷயங்கள் கேட்டு தம்பி தம்பி மனைவியிடம் ஒன்றுக்கு பத்தாக ஒப்பித்து...

    கடைசியில் என்னானது தெரியுமா??? அந்த அக்கா தம்பியின் உறவுக்குள் விரிசல் விழுந்து இன்று மொத்தமாக முறிந்து இருவருமே மனதுக்குள் அன்பை தேக்கி வைத்திருந்தாலும் இந்த புரிதலின்மையால் பிரிவு தொடர்கிறது.. இத்தனைக்கும் அந்த தோழியின் உபயம் தான்...

    எதையும் முதலில் உண்மையா என்று தீர விசாரிப்பதில்லை.. என்னக்கா இப்படி சொன்னியா என்று கேட்பதும் இல்லை.. கேட்டதுமே அப்படி சொல்லிட்டாங்களா இப்படி சொல்லிட்டாங்களா என்று நம்பி சண்டை வளர்த்து தேவை இல்லாத பிரச்சனைகள் வளர்ந்து உறவையே வெட்டும்படி ஆகிவிடுகிறது எத்தனை வேதனை....

    சாக்ரடீஸின் தத்துவ வார்த்தை மிக அருமை... உண்மையா இல்லையான்னு தெரியாம உனக்கும் எனக்கும் பயன்படாத விஷய்த்தில் நாம் ஏன் நேரத்தை செலவு செய்யனும்/? சரி தானே??

    பயனுள்ள பகிர்வுடன் நற்றிணை பாடலும் அதற்கான அழகிய் ஆங்கில மொழி பெயர்ப்பும் மனம் கவர்ந்தது குணசீலன்... தொடர்க... தொடர்கிறோம்...

    அன்புவாழ்த்துகள் பகிர்வுக்கு....


    த.ம. 15

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் ஆழமான வாசித்தலுக்கும்.. அனுபவப்பகிர்வுக்கும்.. இலக்கியநயம் பாராட்டலுக்கும் நன்றி மஞ்சுபாஷிணி.

      நீக்கு
  7. நம்மைவிட நாம் மற்றவர்களைப் பற்றியே அதிகம் சிந்திக்கிறோம்..
    verytrue

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாசித்தலுக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பா.

      நீக்கு
  8. தத்துவமேதை சாக்கரடீஸ் & விளக்கங்கள் மிகவும் அருமை...

    சிறப்பான பகிர்வு... நன்றி...

    பதிலளிநீக்கு
  9. //நமக்கு உண்மையென்று சரியாகத் தெரியாத ஒரு செய்தியை நாம் சமூகத்தளங்களில் பகிரும்முன்பு கொஞ்சம் சிந்திப்போம் என்னும் கருத்தை இவ்விடுகை வழியாகத் தங்கள் முன்வைக்கிறேன். // மிகவும் தேவையான ஒன்று.

    அனைவரும் சாக்ரடீஸ் போல இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! மற்றவர் பற்றி பேசுவதற்குப் பதிலாக உபயோகமான வழிகளில் நேரத்தை பயன்படுத்தலாம்.

    பதிலளிநீக்கு
  10. அருமை நண்பா, அனைத்தும் உண்மை அழகா சில விளக்கங்கள் கொடுத்து சொல்லிருக்கீங்க.

    பதிலளிநீக்கு