வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

எழுச்சியுற்ற பெண்கள்







இன்று பெண்கள் இல்லாத துறைகளே இல்லை என்னும் அளவுக்கு எல்லாத் துறைகளிலும் பெண்கள் காலடி எடுத்து வைத்திருக்கிறார்கள். 

எனக்கான சுதந்திரத்தைக் கொடுக்க நீயார்?
என ஆண்களைப் பார்த்துக்கேட்கும் பெண்கள், 

எனக்கான சுதந்திரத்தை நானே எடுத்துக் கொள்வேன் என்று சொல்லும் துனிச்சல் பெற்றிருக்கிறார்கள்.


இன்றைய தலைமுறைப் பெண்களில் பலருக்கு 

எது பெண்சுதந்திரம்?
பெண்கள் இந்த அளவுக்கு உயர எத்தனை ஆண்கள் போராடியிருக்கிறார்கள்?

என்பதெல்லாம் தெரியவில்லை.

சான்றாக சில நிழற்படங்கள்..




இதுவா பெண்சுதந்திரம்..?

தமிழ் உறவுகளே இன்றைய தலைமுறைக்கு...
  • பாரதி, பாரதிதாசன், இராசாராம் மோகன்ராய், பெரியார், திரு.வி.க, கவிமணிதேசிகவிநாயகம்பிள்ளை போன்ற சான்றோர்களின் பெரும்பணியை எடுத்துரைப்போம்.
  • பெண்ணியம் பேசும் பெண்கள் பலர் ஆண்களுக்கெதிரானது பெண்ணியம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 
  • தந்தையாக, தம்பியாக, அண்ணனாக, கணவனாக, மாமனாக.. இப்படி எல்லா உறவுகளாகவும் இருந்து பெண்களுக்குப் பாதுகாப்பாக இருப்பவர்களும் ஆண்கள்தான். அதனால் ஆண்களை எதிர்பதல்ல பெண்ணியம் ஆண்களுக்கு இணையாக வாழ்வது என்பதை புரியவைப்போம்.

டந்த சிலநாட்களுக்கு முன்னர்..
தொலைக்காட்சியில் செய்தி ஒன்று..

பத்துப்பெண்கள் கூட்டமாக இருந்தபோது மூன்று ஆண்கள் சென்று அவர்களிடம் கேலி (ஈவ்டீசிங்) செய்தார்களாம். அப்போது அந்தப் பெண்கள் எல்லோரும் சேர்ந்து அந்த மூன்று ஆண்களையும் ஓடஓட அடித்துவிரட்டினார்கள். அந்தக் காட்சியைப் பார்த்தபோது கவிஞர் பாரதிதாசன் இயற்றிய எழுச்சியுற்ற பெண்கள் என்னும் கவிதைதான் நினைவுக்குவந்தது..

கவிதை இதோ...


மேற்றிசையில் வானத்தில் பொன்னுருக்கு
வெள்ளத்தில் செம்பருதி மிதக்குநேரம்!
வேற்கண்ணி யாளொருத்தி சோலைதன்னில்
விளையாட நின்றிருந்தாள் மயிலைப்போலே!
காற்றடித்த சோலையிலே நேரம் பார்த்துக்
கனிய டித்துக் கொண்டு செலும் செல்வப்பிள்ளை
ஆற்றுவெள்ளம் போலாசை வெள்ளம் தூண்ட
அவளிடத்தே சில சொன்னான் பின்னுஞ் சொல்வான்;

விரிந்தஒரு வானத்தில் ஒளிவெள்ளத்தை
விரைந்துவந்து கருமேகம் விழுங்கக்கூடும்!
இருந்தவெயில் இருளாகும் ஒரு கணத்தில்
இது அதுவாய் மாறிவிடும் ஒரு கணத்தில்
தெரிந்ததுதான்; ஆனாலும் ஒன்றேயொன்று!
தெளிந்தஓர் உள்ளத்தில் எழுந்தகாதல்
பருந்துவந்து கொத்துமென்றும் தணிவதில்லை!
படைதிரண்டு வந்தாலும் சலிப்பதில்லை!

கன்னத்தில் ஒரு முத்தம் வைப்பாய் பெண்ணே,
கருதுவதிற் பயனில்லை தனியாய் நின்று.
மின்னிவிட்டாய் என்மனதில்! பொன்னாய்ப் பூவாய்.
விளைந்துவிட்டாய் கண்ணெதிரில்! என்று சொன்னாள்.
கன்னியொரு வார்த்தையென்றாள் என்னவென்றான்.
கல்வியற்ற மனிதனை நான் மதியேன் என்றாள்
பன்னூற் பண்டிதனென்று தன்னைச் சொன்னான்.
பழச்சுளையின் வாய்திறந்து சிரித்துச் சொல்வாள்.

பெருங்கல்விப் பண்டிதனே! உனக்கோர்கேள்வி;
பெண்களுக்குச் சுதந்தரந்தான் உண்டோ? என்றாள்.
தரும்போது கொள்வதுதான் தருமம் என்றான்.
தராவிடில்நான் மேற்கொண்டால் என்னவென்றாள்.
திருமணமா காதவள்தன் பெற்றோரின்றிச்
செயல்ஒன்று தான்செய்தல் அதர்மம் என்றான்.
மருவ அழைக் கின்றாயே, நானும் என்றன்
மாதா பிதாவின்றி விடைசொல்வேனோ?

என்றுரைத்தாள், இதுகேட்டுச் செல்வப்பிள்ளை
என்னேடி, இதுஉனக்குத் தெரியவில்லை.
மன்றல்செயும் விஷயத்தில் ஒன்றில்மட்டும்
மனம்போல நடக்கலாம் பெண்கள் என்றான்.
என்மனது வேறொருவன் இடத்திலென்றே
இவனிட்ட பீடிகையைப் பறக்கச் செய்தாள்.
உன்நலத்தை இழக்கின்றாய் வலியநானே
உனக்களிப்பேன் இன்பமென நெருங்கலானான்!

அருகவளும் நெருங்கி வந்தாள்; தன் மேல்வைத்த
ஆர்வந்தான் எனநினைத்தான்! இமைக்குமுன்னே
ஒருகையில் உடைவாளும் இடதுகையில்
ஓடிப்போ! என்னுமோரு குறிப்புமாகப்
புருவத்தை மேலேற்றி விழித்துச் சொல்வாள்;
புனிதத்தால் என்காதல் பிறன்மேலென்று
பரிந்துரைத்தேன்! மேற்சென்றாய்! தெளிந்த காதல்
படைதிரண்டு வந்தாலும் சலியாதென்றாள்.

ஓடினான் ஓடினான் செல்வப்பிள்ளை
ஓடிவந்து மூச்சுவிட்டான் என்னிடத்தில்
கூடிஇரு நூறுபுலி எதிர்த்ததுண்டோ?
கொலையாளி யிடமிருந்து மீண்டதுண்டோ?
ஓடிவந்த காரணத்தைக்கேட்டேன், அன்னோன்
உரைத்துவிட்டான்! நானவற்றைக் கேட்டுவிட்டேன்.
கோடிஉள்ளம் வேண்டுமிந்த மகிழ்ச்சிதாங்கக்
குலுங்கநகைத் தேயுரைத்தேன் அவனிடத்தில்;

செல்வப்பிள்ளாய் இன்றுபுவியின் பெண்கள்
சிறுநிலையில் இருக்கவில்லை; விழித்துக் கொண்டார்!
கொல்லவந்த வாளைநீ குறைசொல்லாதே!
கொடுவாள் போல் மற்றொருவாள் உன்மனைவி
மெல்லிடையில் நீகாணாக் காரணத்தால்,
விளையாட நினைத்துவிட்டாய் ஊர்ப் பெண்கள்மேல்!
பொல்லாத மானிடனே, மனச்சான்றுக்குள்
புகுந்துகொள்வாய்! நிற்காதே! என்றேன்; சென்றான்.


தொடர்புடைய இடுகைகள்

13 கருத்துகள்:

  1. /// எனக்கான சுதந்திரத்தை நானே எடுத்துக் கொள்வேன் என்று சொல்லும் '" துணிச்சல் '" பெற்றிருக்கிறார்கள். ///

    கும்மாளமிடும் பெண்கள் சுதந்திரம் எடுத்துக்கொள்ளவில்லை... விடுதலையை எடுத்துக்கொண்டு விட்டார்கள்... (பலவற்றிலிருந்து)

    நல்லதொரு கவிதை பகிர்வுக்கு நன்றி சார்...
    tm2

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான கருத்துக்கள்! பெண்கள் சுதந்திரம் என்பதை தவறாக புரிந்து கொண்டதன் விளைவே அந்த நான்கு படங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. எல்லா நாட்டையும் இணைத்தீர்கள்.நம் ஈழத்து பெண் புலிகளின் வீரத்தையும் தீரத்தையும் மறந்தது ஏனோ? அவர்களும் ந்மது உறவுகள் அல்லவோ. அவர்களின் வீரத்தின் முன் இவர்களின் வீரம் நிற்கவே முடியாதே. நாமே அவற்றை மறந்தால்.............
    நாமே தமிழை மறந்தால்,பேச மறந்தால்.................

    பதிலளிநீக்கு
  4. செறிவான கருத்துகள்! அருமையான கவிதை! பல பெண்களுக்குத் தேவையானதுதான்!

    பதிலளிநீக்கு
  5. நல்ல மேற்கோள் கவிதை...நல்ல பதிவு......பெண்களோ ஆண்களோ எல்லை மீறாமலிருந்தால் சரி

    பதிலளிநீக்கு
  6. கருத்து செறிந்த கவிதை!

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள் முனைவரே!

    பதிலளிநீக்கு