வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 7 டிசம்பர், 2012

அவனா? இவன்?


ஏதாவது ஒரு சூழலில் நாம் ஒருவரைப் பார்த்து அவரா? இவர்? என்று வியந்துபோயிருப்போம்.

நானும் அப்படித்தான் சங்கஇலக்கியங்களைப் படிக்கும்போது அந்தத்தமிழரா இன்று நாம் காணும் தமிழர் என்று வியந்துபோயிருக்கிறேன்.



அஞ்சுவது உயிர்களின் இயற்கை தான் என்றாலும் எதற்கு அஞ்சுவது என்ற வரையறையே இல்லாமல் எல்லாவற்றுக்கும் அஞ்சும் மனிதப்பிறவிகளைக் காணும்போது..
நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)
மந்திர வாதி என்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்,
யந்திர சூனி யங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம
அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு)
சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான் - அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு)
நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடிஎன் றால் அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு)
சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார,
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)
நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே,
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே - இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)
எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்,
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு)

என்ற மகாகவி பாரதியின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

சங்ககாலப் புறநானூற்றுப் பாடல் ஒன்று, ஒரு தாய் தன் மகனைப் பற்றிச் சொல்கிறாள்

அன்று,
என் மகன் குழந்தையாக இருக்கும்போது, அவன் குடிப்பதற்காகக் கிண்ணத்தில் பால் ஊற்றிக்கொடுப்பேன். அவனோ அதைக் குடிக்காமல் விளையாடுவான். அவனை அச்சுறுத்தியாவது பாலைக் குடிக்கச் செய்யவேண்டும் என்று சிறுகுச்சியைக் காட்டி மிரட்டுவேன். அந்த சிறு குச்சிக்கு அஞ்சியவனாக அவனும் பாலைக் குடிப்பான்.

இன்று,
பெரிய போர்க்களத்துக்குச் சென்று பெரிய பெரிய யானைகளையும் வீழ்த்தித் தன் கோபம் குறையாதவனாக உள்ளான். அவன் மார்பின் மீது அம்பு தைத்திருந்தது. நானோ பதறிக்கொண்டு “ஐயோ! உன் மார்பின் அம்பு தைத்துள்ளதே என்று கேட்டால்.. அவனோ பதறாமல் அம்பா தைத்திருக்கிறது?“ என்று கேட்கிறான்.

அன்று சிறு குச்சிக்குப் பயந்து பாலை உண்ட அவனா?
இன்று இவ்வளவு கூரிய அம்பு தன் மார்பின் மீது தைத்தும் அஞ்சாமல் இருக்கிறான்? என்று ஒரு தாய் வியப்பதாக இப்பாடல் அமைகிறது.இவனது வீரத்துக்குக் காரணம் அவன் பிறந்த மறக்குடி மரபுதான் என்று தெளிவடைகிறாள் இந்தத் தாய்.

இப்பாடலில் தமிழரின் வீரம், தாயின் அன்புள்ளம் ஆகியன சிறப்பித்து உரைக்கப்படுகின்றன.

பாடல் இதோ, 

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சி,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண்ஒன்று அம்பு_
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.
புறநானூறு 310 – பாடியவர்: பொன்முடியார் 


இன்று...
கவிஞர் காசியானந்தன்

எங்கே போனது தமிழர் வீரம்?
நாம் நம்மை எங்கே தொலைத்தோம்?


  
                                                                                                                                      தொடர்புடைய இடுகை

                                                                   குழவி இறப்பினும்

18 கருத்துகள்:

  1. அருமையான ஒப்பீடு! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. பொன்முடியார் பாடலை மிகவும் ரசித்தேன். நன்றி.
    மரம்/வீரன் பொருந்தா உவமையெனினும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி அப்பாதுரை.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கு நன்றி.

      நீக்கு
  3. உங்கள் பாடல்களும் அதற்கேற்ற விளக்கங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கு நன்றி தொழிற்களம்குழு.

      நீக்கு
  4. அருமையான சங்கப் பாடலை
    அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  5. அன்றும் இன்றும் சங்கப் பாடல்களை வைத்து ஒப்பிட்டு விளக்கியது சிறப்பாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பாடல் மற்றும் ஒபபீடு.... வாழ்த்துக்கள் முனைவரே.

    பதிலளிநீக்கு
  7. எப்படியோ நாங்களெல்லாம் மறந்தும் படிக்காமலும் போயிருக்கும் பாரதி பாடல்களையும் ,சங்க காலப் பாடலையும் விளக்கத்துடன் எளிதாகப் புரியும் வகையில் படிக்கத் தந்திருக்கிறீர்கள். இந்தக் காலக் குழந்தைகளுக்கு இப்படி எளிதாக(அவர்களுக்குத் தொடர்புடைய இன்றைய நடைமுறையோடு ஒப்பிட்டு) தமிழைக் கொடுத்தால் அனைவரும் ஆர்வமுடன் கற்பார்களே. (இப்போதெல்லாம் ஆறு அல்லது பதினோராம் வகுப்பில் வேறு மொழிப்பாடம் படிக்க மாறுவோர் குறைவார்களே) மேலும் இப்போதெல்லாம் வீரம் இல்லாமலே போய்விட்டது உண்மை .வாளெடுத்து போரிட வேண்டாம் தன் வாயெடுத்தாவது போராடலாமே. சிறப்பான பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கு நன்றி எழில். தங்கள் ஆழ்ந்த வாசித்தலும், புரிதலும், அறிவுறுத்தலும் மகிழ்வளிக்கிறது. நன்றி.

      நீக்கு