வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

இன்று வாரியார் பிறந்தநாள்

சிறந்த ஆன்மீகவாதி, நல்ல சொற்பொழிவாளர், நயமாக நகைச்சுவை சொல்பவர், தேர்ந்த கதைசொல்லி எனப் பல சிறப்புகளைக்கொண்ட
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று.(ஆகஸ்ட் 251906 - நவம்பர் 71993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம்இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

வரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர். செங்குந்த வீர சைவ மரபினர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார்.

இயல், இசைக் கல்வி

வரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப்பயிற்சி பெற்றார்.

சொற்பொழிவு ஆற்றல்

தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ்தேவாரம்திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார்.

தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர்.
அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.

திருப்புகழ் அமிர்தம்

சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி' என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது.

சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின.

எழுதிய நூல்கள்

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன.
குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

விருதுகளும் சிறப்புகளும்

இசைப்பேரறிஞர் விருது, 1967 ; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம்

வாரியாரின் நகைச்சுவை

வாரியார் சுவாமிகள், ஒரு கோயிலில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு வழங்கிக் கொண்டு இருந்தார்.

வாரியார் சுவாமியின் சொற்பொழிவு கேட்பவர்கள் மிகக் கவனமாக கேட்பார்கள். ஏனெனில், அரங்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் திடீரென்று கேள்விகள் கேட்பார். எனவே, முன்வரிசையில் அமர்பவர்கள் மிக்க கவனத்துடன் இருப்பார்கள்.

சிவபெருமானின் பெருமைகளைச் சொன்னபடி இருந்த கிருபானந்தவாரியார் திடீரென்று ஒரு சிறுவனை எழுப்பி "தம்பி! தருமிக்கு பாட்டு எழுதிக் கொடுத்தது யாரு?" என்று கேட்டார்.

அப்போது திருவிளையாடல் படம் வெளிவந்திருந்த சமயம்.

அந்த பையன் சட்டென்று எழுந்து "சிவாஜி" என்றான்.

அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

வாரியார் அனைவரையும் நோக்கி "ஏன் சிரிக்கிறீங்க? அந்தப் பையன் சரியாத்தான் சொல்லியிருக்கான்"

"நீங்க நேருவை நேருஜி -ன்னு சொல்றீங்க, காந்தியை காந்திஜி -ன்னு சொல்றீங்க, அதைப் போல்தான் இந்தப் பையன் சிவாவை சிவாஜி-ன்னு சொன்னான், வடக்கே ஒருத்தரை உயர்வா மரியாதையாய் அழைக்க 'ஜி' சேர்ப்பது வழக்கம் , அந்த அர்த்தத்தில் சிவாஜின்னு சொல்லி இருக்கான் " என்றாரே பார்க்கலாம்.

கூட்டம் வாரியாரின் நகைச்சுவைத் திறமை கண்டு வழக்கம் போல் அதிசயித்து நின்றது.

திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களின் ஒலிக்கோப்புகளை http://murugan.org/tamil/variar.tamil.htm  இந்த இணையத்தில்  பெறலாம்.

(தரவுகளுக்கு நன்றி தமிழ் விக்கிப்பீடியா)

10 கருத்துகள்:

  1. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
    பற்றிய அருமையான பகிர்வுக்கு நன்றிகள் பல
    முனைவரே...
    முருகுப் புகழ் போற்றிய இலக்கியச் செம்மலின்
    பிறந்தநாள்... ஓங்கட்டும் அவர் புகழ்..

    பதிலளிநீக்கு
  2. நானும் எனது சின்ன வயதில் திரு வாரியார் அவர்களின் சொற்பொழிவுகளை கேட்டு ரசித்திருக்கிறேன். நிறைய கேள்விகளுக்கு பதிலும் சொல்லியிருக்கிறேன். அவரைப் போலவே 'கைத்தல நிறைகனி' என்று பாடி கதை சொல்லி பள்ளியில் பாராட்டும் பெற்றிருக்கிறேன். அந்த ஆனந்த அனுபவங்களை மறுபடி நினைத்துப் பார்க்க வைத்தது உங்களின் இந்தப் பதிவு.

    எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் அவரது சொற்பொழிவுகள் அமைந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் நன்றி அம்மா.

      நீக்கு
  3. வாரியார் சுவாமி குறித்த பகிர்வுக்கு நன்றி முனைவரே....

    பதிலளிநீக்கு
  4. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களைப் பற்றிய நல்ல பகிர்வு.

    இவரின் புத்தகங்கள் பலவும் எனது தந்தையாரிடம் இருந்தது. அவருடைய சொற்பொழிவுகளும் பதிவு செய்து கேட்பார். இந்திய யாத்திரையில் எனது தாயாரும் தந்தையாரும் இவரை தர்சித்துவந்தார்கள். இப்பொழுது அவர்களும் இல்லை.

    பதிலளிநீக்கு
  5. ஆத்திகர், நாத்திகர் என அனைவரும் விரும்பிய வித்தகர் வாரியார்! தங்களின் குறிப்பு மிகவும்
    அருமை! முனைவரே!

    பதிலளிநீக்கு