வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 29 மார்ச், 2014

தமிழில் குறுஞ்செயலிகள்

தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை, அதன் தொடர்ச்சியிலும் உள்ளது என்ற கருத்துக்குத் தக்க சான்று இன்றைய இணையத்தமிழ் வளர்ச்சியாகும். இன்றைய இணையதளப் பயன்பாடுகளில், கையடக்கக் கணினிகளுக்கும், திறன்பேசிகளுக்கும் சிறப்பான இடம் உண்டு. இவற்றில் பயன்படுத்தப்படும் ஆப்சு எனப்படும் குறுஞ்செயலிகள் இணையத்தில் நாம் செய்யவிரும்பும் செயல்பாடுகளை எளிமைப்படுத்தித் தருகின்றன. ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோசு வகை இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் தமிழ்க்குறுஞ்செயலிகளின் வகைப்பாடுகளையும், அவற்றின் நிறைகுறைகளையும் எடுத்துரைத்து ஆக்கபூர்வமான தமிழ்க்குறுஞ்செயலிகளை உருவாக்கும் வழிமுறைகளை இக்கட்டுரை வழியே காண்போம்.
குறுஞ்செயலிகள் அறிமுகம்
கையடக்கக் கணினிகளிலும், திறன்பேசிகளிலும் பயன்படுத்தப்படும் சிறு மென்பொருளே குறுஞ்செயலியாகும். நாம் செய்யவிரும்பும் செயலை கட்டளைகளைப் பிறப்பித்து உருவாக்கப்படும் நிரல்தொகுப்பே குறுஞ்செயலியாகும்.
குறுஞ்செயலிகள் கிடைக்குமிடம்.
https://play.google.com/store/ , http://mobogenie.com/, http://www.androidpit.com/ ஆகிய தளங்களில் இக்குறுஞ்செயலிகளைக் கட்டணத்துடனோ, இலவசமாகேவோ பெறமுடியும்.
குறுஞ்செயலிகளை உருவாக்க உதவும் தளங்கள்
         யுடியுப் தளத்தில் காணொளி வழியாக குறுஞ்செயலிகளை உருவாக்குவதற்கான பல்வேறு வழிமுறைகள் எடுத்துரைக்கப்படுகின்றன.
http://www.apps-builder.com/, http://www.appsgeyser.com/ ,http://www.appyet.com/, http://ibuildapp.com/login.php  போன்ற பல தளங்களும் இலவசமாகக் குறுஞ்செயலிகளை உருவாக்குவதற்குத் துணைநிற்கின்றன.

குறுஞ்செயலிகளின் வகைப்பாடு.
தமிழ்த் தட்டச்சு, தமிழ் கற்றல் பயிற்சி, விடுகதைகள்,சித்த மருத்துவ நூல்கள், கவிதைகள், தமிழ் அகராதிகள், தமிழ்ப் பொது அறிவுக் கையேடுகள், ஆன்மீக நூல்கள், சோதிடம், சமையல்குறிப்புகள், தமிழ்ச் செய்தித்தாள்கள், தமிழ் மாதங்கள்தமிழ்ப் பொன்மொழிகள், திரைப்படங்கள், பழமொழிகள் (ஆங்கில விளக்கத்துடன்), சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள், விடுகதைகள், ஊரின் சிறப்புகள், நீதி நூல்கள், காப்பியங்கள், தண்டியலங்காரம், சிலம்பு, மணிமேகலை, கம்பராமாயணம், வளையாபதி, குண்டலகேசி, தமிழ்விடு தூது, நாக குமார காவியம், உதயணகுமார காவியம், யசோதரகுமார காவியம், நீலகேசி என தமிழில் பல்வேறு துறைசார்ந்த குறுஞ்செயலிகளைக் காணமுடிகிறது.

குறுஞ்செயலிகளின் இயல்பு.
ஒவ்வொரு குறுஞ்செயலிகளும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும் தனித்துவமுடையனவாகத் திகழ்கின்றன. எழுத்து, ஒலி, ஒளி, அசைவூட்டம் என பல்வேறு வசதிகளுடன் உள்ளன. குறுஞ்செயலிகளில் திருக்குறள் தொடர்பாக நிறைய குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக திருக்குறளின்1330 குறள்களையும் அதற்கான சிறப்பான மூன்று உரைகளுடன் ஆங்கில மொழிபெயர்ப்பு வசதியுடன் திருக்குறள்என்ற செயலி வழங்குகிறது.
குறுஞ்செயலிகளின் தாக்கம்
ஆங்கில மொழி மோகத்தாலும், தமிழ் மொழிக் கல்வியில் ஏற்பட்ட பின்னடைவாலும் இன்று தமிழ் வாசித்தல், பேசுதல் ஆகிய மரபுகள் குறைந்து வருகின்றன. இளம் தலைமுறையினரிடம் இந்தக் குறுஞ்செயலிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனால் தமிழ் மொழியின் சிறப்புகளையும் தமிழர் மரபையும், பண்பாட்டையும் இக்குறுஞ்செயலிகளின் வழியாக எளிதாக எடுத்தியம்ப முடியும்.
தேவையான தமிழ்க்குறுஞ்செயலிகள்
கலைச்சொல்லாக்கம், மெய்பாடு, முதல்-கரு-உரி, குறிஞ்சிப்பாட்டில் வரும் 99 மலர்கள், கடையேழு வள்ளல்கள், பழந்தமிழர் இசைக்கருவிகள், சங்கஇலக்கியம் சுட்டும் விலங்குகள், பறவைகள், செடிகொடிகள், பழந்தமிழர் அறிவியல், விளையாட்டுகள், சங்கஇலக்கியப் பொன்மொழிகள், இலக்கியங்கள் சுட்டும் உவமைகள், கட்டிடக்கலைச்சிறப்பு, நாயன்மார்கள், ஆழ்வார்கள், சிற்றிலக்கியங்கள், தமிழாய்வுத் தலைப்புகள், தமிழ்ச்சான்றோர் நிழற்படங்கள், தமிழறிஞர்கள் பிறந்த தினங்கள் என தமிழின் பல்வேறு சிறப்புகளையும் குறுஞ்செயலிகள் வழியாக எடுத்தியம்பத் தேவையான விரிவான களங்கள் தமிழில் உள்ளன.
தமிழ்க்குறுஞ்செயலிகளும் சிக்கல்களும்
திறன்பேசிகளில் தமிழ் எழுத்துருச்சிக்கல் இன்னும் முழுமையாக தீரவில்லை.
தட்டச்சுக்குப் பயன்படும் குறுஞ்செயலிகள் பல விசைமரபுகளைக் கொண்டிருப்பதால், எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என சராசரி மனிதர்களுக்கு இன்னும் தெரியவில்லை.
குறுஞ்செயலிகளை உருவாக்கும் வழிமுறைகள் ஆங்கிலத்திலும் கடினமான கணினி மரபுகளிலும் இருப்பதால் தமிழ்த்துறை சார்ந்தவர்கள் அதை உருவாக்கமுடியாத நிலை உள்ளது.
இன்றைய சூழலில் நிறையவே தமிழ்க் குறுஞ்செயலிகள் பயன்பாட்டிலிருந்தாலும். கணினி அறிவும், தமிழறிவும் ஒன்றாகப் பெற்றவர்களால் இவை உருவாக்கப்படவில்லை என்பது அதன் குறைபாட்டுக்குக் காரணமாக அமைகிறது.
உருவாக்கிய குறுஞ்செயலிகளைப் பயன்பாட்டுக்குக்  கொண்டுவருவதற்கு 25டாலர் பணம் பதிவுக்கட்டணமாகச் செலுத்தவேண்டும் என்பது சோதனை முறையில் உருவாக்குவோருக்குத் தடையாகவுள்ளது. இலவசமாக வழங்கும் குறுஞ்செயலிகளையாவது இலவசமாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரலாம் என்ற நிலை வந்தால் இதன் பயன்பாடு இன்னும் அதிகமாகும்.
சிறந்த குறுஞ்செயலிகளுக்கான தகுதிகள்
குறைவான கொள்ளளவு கொண்டதாகவும், விரைவான செயல்திறனுடையதாகவும், பயன்படுத்த எளிமையானதாகவும், இணைய இணைப்பின்றியும் பயன்படுத்தவல்லதாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்தவர் மட்டுமின்றி படிப்பறிவில்லாதவர்களும் பயன்படுத்த எளிமையானதாக இருப்பதே சிறந்த குறுஞ்செயலியாகும். இந்த அளவீடுகளைத் தமிழ்க்குறுஞ்செயலிகளை உருவாக்குவோர் நினைவில் கொள்ளவேண்டும்.
                                விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
                                சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648) என்ற வள்ளுவரின் வாக்குப்படி
நாம் சொல்ல விரும்பும் கருத்துக்களை ஒழுங்காக சேர்த்து கணினி நிரல்களாக இனிதாகச் சொன்னால் அதை ஏற்று குறுஞ்செயலிகள் நம் ஏவலைக் கேட்டு நடக்கும் அதை இந்த உலகமும் ஏற்கும் என்பதை நாம் உணரவேண்டும்.
நிறைவாக,
கணினிகளிலும், கையடக்கக் கணினிகளிலும்,திறன்பேசிகளிலும் நாம் செய்யவிரும்பும் செயல்பாடுகளை முழுக்க முழுக்க தமிழிலேயே செய்யத்தேவையான வசதிகள் இன்று இலவசமாகவே கிடைக்கின்றன.
இதுவரை வந்த எல்லாத் தொழில்நுட்பங்களையும் தம்முள் அடக்கியவையாகத் திகழும் திறன்பேசிகளில் தமிழ் இன்று காலடியெடுத்து வைத்திருப்பது நாமெல்லாம் பெருமிதம் கொள்ளத்தக்கதாகவுள்ளது.
திறன்பேசிகளிலும், கையடக்கக் கருவிகளிலும் தமிழில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு குறுஞ்செயலிகள் தமிழின் பல்வேறு துறைகளிலும் பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.
தமிழ்மொழியின், தமிழரின் பல்வேறு மரபுகளை தமிழ்க்குறுஞ்செயலிகளின் வழியாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல சிறந்த வாய்ப்பாக இந்த வசதி விளங்குகிறது.
கணினி பற்றிய அடிப்படை அறிவுடையவர் கூட தமிழில் குறுஞ்செயலிகளை உருவாக்கமுடியும் என்ற தன்னிறைவான நிலையை இன்று நாம் அடைந்திருக்கிறோம்.
இணையதளம், மின்னூல், விளையாட்டு, படம், ஒலி, காணொளி, அசைபடம் என பல்வேறு வடிவங்களையும் குறுஞ்செயலிகளாக மாற்றமுடியும் என்ற கட்டற்ற சுதந்திரம் இதன் உருவாக்கப் பின்னணியில் இருப்பதால் நாள்தோறும் புதிய புதிய தமிழ்க்குறுஞ்செயலிகள் பயன்பாட்டுக்கு வருகின்றன.
ஆங்கில மோகத்தால் கல்விச்சாலைகளில் பின்தங்கியுள்ள தமிழ்மொழியை இவ்வாறு இன்றைய தொழில்நுட்பத்துடன் குறுஞ்செயலிகளாக வழங்குவது  நமது கடமையாகவுள்ளது.

புதன், 26 மார்ச், 2014

தமிழில் திருமண அழைப்பிதழ் மாதிரி

தமிழில் வடிவமைக்கப்பட்ட அழகான திருமண அழைப்பதழை  இணையத்தில் உலவும் போது பார்த்தேன். அதனை இங்கு வெளியிட்டிருக்கிறேன். மணமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு இணையத்தில் வெளியிட்டமைக்கு நன்றியையும் உரித்தாக்கிக்கொள்கிறேன்.

மூளைச் சலவை இயந்திரம்


ஞாயிறு, 16 மார்ச், 2014

தமிழர் பரம்பரை


அம்மா மம்மியாகவும், அப்பா டாடியாகவும் மாறிவிட்டதால் இன்று பல குழந்தைகளுக்கான பெயர்களும் தமிழ் அடையாளங்களை இழந்துவிட்டன. பல குழந்தைகளுக்குத் தன் பெயர் என்னமொழியில் உள்ளது? அதற்கான பொருள் என்ன? என்பது கூட தெரிவதில்லை.

தந்தையின் பெயரை மகனுக்கும், தாயின் பெயரை மகளுக்கும் இடுவது தொன்மையான தமிழ் மரபாகும். இதனாலேயே பெயரன், பெயர்த்தி என்னும் உறவுச் சொற்கள் வழக்கமாயின. இதனை எடுத்தியம்பும் ஐங்குறுநூற்றுப் பாடலைக் காண்போம்.
(தலைவனின் வீடுசென்று திரும்பிய செவிலித்தாயின் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.)

புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே
அகன் பெரும் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலின் இன்நகை பயிற்றி
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே
                      -ஐங்குறுநூறு -403
பலராலும் அறியப்பட்ட பெருஞ்சிறப்பினை உடைய தன் தந்தையின் பெயர் தாங்கிய தன் மகன், இனிய புன்முறுவலுடன் சிறுதேர் உருட்டித் தளர்நடை பயிலுதலைக் கண்டு, தலைமகனுக்குத் தன் காதலியின்பால் இருந்த அன்பைப் போல் மகன் மீது கொண்ட அன்பும் பெரியது என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.

இந்தப் பாடலின் வழியாக,

தந்தையின் பெயரை மகனுக்கு இடும் தமிழர் மரபு உணர்த்தப்படுகிறது.        

ஆண்குழந்தைகள் சிறுதேர் உருட்டி விளையாடும் வழக்கம் சுட்டப்பட்டது.

தன் தலைவி மீது தலைவன் கொண்ட அன்பைப் போல தன் மகன் மீதும் கொண்ட அன்பும் பெரியது என்பது உணர்த்தப்படுகிறது.

குழந்தைகளின் அழகிய சிரிப்பும், தத்தி தத்தி நடக்கும் அழகும் தளர்நடையாகக் கண்முன் நிறுத்தப்படுகிறது.

இதுதான் தமிழர் பரம்பரை


வெள்ளி, 7 மார்ச், 2014

பேராசிரியரின் உலக சாதனை

உத்ரகண்ட் மாநிலத்தில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர் அரவிந்த் அவர்கள் இடைவிடாமல்  130 மணிநேரம் இயந்திரப் பொறியியல் பாடம் நடத்தி உலக சாதனை படைத்தார் என்ற செய்தி என்னைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.




உயர்ந்த சபைகளில் அமரும் தகுதி நூறு பேரில் ஒருவருக்குத்தான்  கிடைக்கும்!
ஆயிரம் பேரில் ஒருவரே கவிஞராய்த் திகழ்வர்!
ஆனால் பேச்சாளராய் இருப்பவர் பதினாயிரம் பேரில் ஒருவரே என்பார் ஔவையார். இதனை,


“ஆர்த்தசபை நூற்றொருவர் 
ஆயிரத்து ஒன்றாம் புலவர்
வார்த்தை பதினாயிரத்து ஒருவர்

                                                                                                                                          - ஔவையார்.




இந்தப் பாடல் வழியாக சபையில் இருக்கும் தகுதி, கவிதை எழுதும் ஆற்றல், பேச்சாற்றல் ஆகியன சிறப்பித்து உரைக்கப்படுகின்றன.