வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

100 = 1000


அன்பான தமிழ் உறவுகளே வணக்கம்.

1000 இடுகைகள் எழுதியவுடன் எனக்குள் ஒரு இலக்குவைத்துக்கொண்டேன். சமூகத்தளங்களில் ஆங்கிலத்தில் எழுதும் பலரையும் தமிழில் எழுதவைக்கவேண்டும் என்பதுதான் அது. அதனால் பல கல்லூரிகளுக்கும் சென்று தமிழ்த்தட்டச்சு பற்றியும், தமிழில் வலைப்பதிவு எழுதுதல், விக்கிப்பீடியாவில் எழுதுதல் குறித்தும் உரையாற்றி வருகிறேன். தமிழ் இணையப்பல்கலைகழகத்தின் அறிவுறுத்தலுக்கிணங்கி எங்கள் கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவை ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதில் எங்கள் மாணவிகளுக்கு,

தமிழ்தட்டச்சுப் பயிற்சி, வலைப்பதிவில் தமிழ் எழுதுதல், விக்கிப்பீடியாவில் எழுதுதல், குறுஞ்செயலி உருவாக்கம், உள்ளிட்ட பயிற்சிகளை அளித்துவருகிறேன். கணித்தமிழ்ப் பேரவையின் உறுப்பினர்களாக விண்ணப்பித்திருந்த 100 மாணவிகளுள் முதல்கட்டமாக 50 மாணவிகளுக்கு மட்டும் இந்தப் பயிற்சி வழங்கிவருகிறேன். இந்த 50 மாணவிகளும் எங்கள் கல்லூரியின் வலைப்பதிவில் எழுதிவருகிறார்கள். இவா்கள் கடந்த 3 மாதங்களில் 100 இடுகைகள் எழுதியிருக்கிறார்கள். நான் எழுதிய 1000 இடுகைகளைவிட மதிப்புடையனவாக இந்த 100 இடுகைகளைக் கருதுகிறேன். ஏனென்றால் இந்த மாணவிகள் வெவ்வேறு துறை சார்ந்தவா்கள், சமூகத்தளங்களில் பெண் படைப்பாளிகள் ஆண்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லாத இந்த நிலையில் இப்படி பெண் படைப்பாளிகளாக இம்மாணவிகள் தமிழ் எழுதுவது பெரிதென்று கருதுகிறேன். வலைப்பதிவில் நன்கு எழுதும் பயிற்சி பெற்ற இவா்கள் புதிய மாணவிகளுக்குப் பயிற்சி அளிப்பதுடன் தற்போது விக்கிப்பீடியாவில் எழுதும் பயிற்சி பெற்று வருகிறார்கள். கல்லூரியின் வலைப்பதிவில் சிறப்பாக எழுதிய மாணவிகளை கல்லூரி வலைப்பதிவின் ஆசிரியராக்குவதுடன் எனது வலையில் சிறப்பு விருந்தினராக தமது வலையை அறிமுகம் செய்யும் வாய்ப்பையும் வழங்கவுள்ளேன்.

எங்கள் வலையில் எழுதும் மாணவிகளின் படைப்புகளை பலரும் மறுமொழிகளால் ஊக்குவித்து வருகின்றனா். குறிப்பாக எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவுக்கு சிறப்பு சொற்பொழிவாளராக வந்த கவிஞர் முத்துநிலவன் ஐயா அவா்கள் எங்கள் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவரும் செ.வைசாலி என்ற வணிகவியல் முதலாமாண்டு மாணவியைப் பாராட்டி நூல் வழங்கி சிறப்பித்தார். எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவில் கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த செயல்பாட்டுக்காகப் பாராட்டி இம்மாணவிக்கு கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த மாணவி என்ற விருதும் வழங்கி எங்கள் முதல்வர் ஊக்குவித்தார்.


தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிக் கெல்லாம் இனிது. (68)

எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர். நான் பெற்ற  வெற்றிகளைவிட நான் அடைந்த உயரங்களைவிட என் மாணவிகள் அடையும் உயரங்களால் என்மனம் எவ்வளவு மகிழ்வடைகிறது.

இந்த 100 இடுகைகள் என் மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கிறன. இந்த மாணவிகளுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நீங்கள் கற்றுக்கொண்டதை 10 பேருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கற்றுக்கொடுங்கள் என்பதுதான்.


இணையத்தில் தமிழ் எழுதுவோம். தமிழின் பெருமையை உலகத்துக்கு எடுத்துச் சொல்வோம்.

எங்கள் கல்லூரியின் வலைப்பதிவு

http://ksrcasw.blogspot.com/

16 கருத்துகள்:

  1. ஐயா வார்த்தைகளே தடுமாறாமல் பேசும் நான் இந்த கணம் தடுமாறுகிறேன்.ஆனால் ஒன்றே ஒன்று நான் வார்த்தை தடுமாறாமல் சொல்லுவேன் என்றால் அது என் குருநாதரான தங்களின் தூண்டுகோல் தான் என் வாழ்வில் நான் அடைந்த வெற்றி அடைய போகும் வெற்றி அனைத்திற்கும் தொடக்கப்புள்ளி வைத்த என் குரு என்றும் தங்களை என் தந்தை சொன்னாலும் மிகையாகுமா என்று தெரியவில்லை.நீங்கள் என்னுள் விதைத்த விதையை நீங்கள் எதிர்பார்த்தை விடவும் அழகாக பாராமரித்து அதன் பயனைக் கண்டு அனைவரும் வியப்பு அடையும் வகையில் வளர்ப்பேன் ஐயா.இது உங்கள் மாணவியாக நான் உங்களுக்கு செய்யும் ஒரு முயற்சி.

    இன்று ஒன்றை மட்டும் ஆணித்தனமாக கூறுகிறேன் கட்டாயம் நான் என் குருநாதரிடம் கற்றுக் கொண்ட வித்தையை கட்டாயம் அனைவருக்கும் எந்த ஒரு பயனையும் எதிர்பாராமல் செய்து முடிப்பேன் ஐயா.என்னால் முடிந்த வரை அல்ல முடியும் வரை முயற்சிப்பேன் ஐயா.

    தாங்கள் எனக்கு குருவாக அமைந்தது குறித்து எவ்வளவு பேரின்பம் என்றால் வார்த்தைகளால் சொல்ல முடியாமல் போனாலும் செயல்களால் கூறுவேன் கணித்தமிழ்ப் பேரவையின் வெற்றியின் மூலம் ஐயா.என் கலாம் ஐயா விதைக்கப்பட்டார் என்பது குறித்து கவலையில் இருந்த என் மனம் இன்று உங்களை என் குருவாகவும் என் கலாமின் சிந்தனைகளை தங்களிடம் காண்பதால் பேரின்பம் அடைகிறேன்.இது தாங்கள் என் மீது வைத்த நம்பிக்கை நான் உங்கள் மீதுக் கொண்ட மதிப்பும் அன்பும் காரணமுமாக தான் இத்தனை வார்த்தைகள் ஐயா.

    ஒன்றே ஒன்று சொல்லிக்கொண்டு என் கருத்தை முடிக்கிறேன்.யாருக்கு எனக்கு ஒரு நாளைக்குக் கற்பிக்கிறாரோ அவர் எனக்கு வாழ்நாள் முழுவதும் தந்தை ஆகிறார் என்பது சீனப் பழமொழியாக இருக்கலாம் ஆனால் நீங்கள் என் ஆயுள் முழுவதுமே தந்தை என்ற ஒரு அதிகாரம் உண்டு ஐயா.

    அனைத்துக்கும் நன்றிகள் பல ஐயா.தொடர்ந்து பயணிப்போம் தமிழின் வெற்றியை நோக்கி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குணசீலன் உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய விருது இந்த மாணவி இங்கு பதிந்த கருத்துதான். இதைவிட பெரிய பரிசு ஏதும் கிடையாது

      நீக்கு
  2. உங்களின் முயற்சிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்....

    பதிலளிநீக்கு
  3. அருமை அருமை. வாழ்த்துக்கள் தங்க்களுக்கும் தங்கள் மாணவ செல்வங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
  4. பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களது கணினித் தமிழ்ப்பணிக்கு வாழ்த்துக்கள். உங்கள் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையின் வலைப்பதிவினையும், உங்களது வலைப்பதிவினையும் தொடர்ந்து படிக்கும் வாசகர்களுள் நானும் ஒருவன். எனது கருத்துரைகளை மட்டும் அவ்வப்போது எழுதுவேன்.

    உங்கள் கல்லூரி வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவரும் உங்கள் கல்லூரி மாணவி செ.வைசாலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு