வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 12 நவம்பர், 2016

திருக்குறள் ஆய்வுக்கோவையில் உங்கள் கருத்துரை


 எமது கல்லூரியில் நடைபெறும் திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் உரைநயங்களும் என்ற பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவையில் கருத்தரங்கத் தலைப்பு தொடர்பான தங்கள் கருத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள் அளிக்கும் கருத்துக்களுள் சிறந்த கருத்துக்களை ஆய்வுக்கோவையின் அணிந்துரைப் பகுதியில் வெளியிடவுள்ளோம். 
ஆய்வுக்கோவையில் தங்கள் கருத்தும் இடம்பெறவேண்டுமானால்,

உங்கள் உண்மையான பெயர், பதவி, துறை, நாடு 
ஆகிய விவரங்களுடன்திருக்குறள் மொழிபெயர்ப்புகள் பற்றியும், உரைநயங்கள்பற்றியும் தங்கள் கருத்தை முன்வைக்கலாம்.

உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் செம்மைத் தன்மைக்கு சான்று பகரும் நூல்களுள் ஒன்று திருக்குறள். மதம் சார்ந்து பரப்பப்பட்ட விவிலியத்துக்கு அடுத்து 90க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமைக்குரியது இந்நூல். திருக்குறள் கடல் என்றால் அதன் உரைகள் கடலின் நிழற்படங்களைப் போன்றன. மொழிபெயர்ப்புகள் கடலின் காணொளிகளைப் போன்றன. நிழற்படங்களோ, காணொளிகளோ கடலின் முழுமையான தோற்றத்தைக் காட்டிவிடமுடியாது என்றாலும், கடலைத் தம் வாழ்நாளில் ஒரு முறை கூடக் காணாதவர் கடலின் நிழற்படத்தையோ, காணொளியையோ காணும்போது கடலை நேரில் காணவேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். அதுபோலத்தான் இந்த உரைகளும், மொழிபெயர்ப்புகளும். உரைகள் குறளை தமிழர்களிடம் பரவச் செய்தன என்றால் மொழிபெயர்ப்புகள் குறளை உலகமக்களிடம் கொண்டு சேர்த்தன. உலகமே கொண்டாடும் திருக்குறள் இன்று இவ்வளவு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தாலும் இணையத்தில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளும், உரைகளும் வாசிக்கும் நிலையில் மின் வடிவில் 
எவ்வளவு கிடைக்கின்றன என்று தேடினால் பெரிதும் ஏமாற்றமே கிடைக்கிறது. விக்கிப்பீடியாவில் திருக்குறளை இன்னும் பல மொழிகளில் ஆரம்பிக்கவே இல்லை. திருக்குறளை இணையத்தில் முழுமையாகக் கொண்டு சேர்த்தால் மட்டுமே உலகஅளவில் திருக்குறள் இன்னும் போய்ச்சேரும். திருக்குறள் இன்று இணையத்தில் மின்னூலாக, ஒருங்குறி எழுத்துருவில், குறுஞ்செயலியாக, ஒலிவடிவில், காணொளி வடிவில் கிடைக்கிறது என்றாலும் திருக்குறளை இன்னும் பல தொழில்நுட்ப மாற்றங்களுக்கு இயைபுடையதாக்கவேண்டியதும், திருக்குறளில் இதுவரை வந்த அனைத்து பதிப்புகளையும், உரைகளையும், மொழிபெயர்ப்புகளையும் ஒரு களஞ்சியமாக உருவாக்கவேண்டும் என்பது நமது கடமையாகவுள்ளது. திருக்குறள் குறித்த எமது பார்வையை முன்வைத்து நடத்தப்படும்,

திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் உரைநயங்களும் என்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 07.12.2016 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கத்துக்காக தமிழ் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்துள்ளன. மலேசியா. பிரான்சு உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் கட்டுரைகள் வந்துள்ளன. மலேயா பல்கலைக்கழகத்திலிருந்து திரு குமரன் ஐயா அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கத்தை சிறப்பிக்கவுள்ளார். இக்கருத்தரங்க ஆய்வுக்கோவை பதிப்பில் உள்ளது. உங்களது மேலான கருத்துரை எமது ஆய்வுக்கோவையை இன்னும் மதிப்புள்ளதாக்கும் என நம்புகிறேன். வழக்கமான வாழ்த்துக்களைத் தவிர்த்து திருக்குறள் மொழிபெயர்ப்புகள் பற்றியும் உரைகள் பற்றியும் தங்கள் கருத்துக்களை நூலில் பதிவு செய்கிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு உண்மையான சுயவிவரத்தையும்
(கருத்து, பெயர், பதவி, துறை, நாடு

தங்கள் கருத்துரைக்குக் கீழே தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

நன்றி.


6 கருத்துகள்:

  1. நல்ல முயற்சி... முடிந்தால் எழுதுகிறேன்... எழுத இருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான முயற்சி
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு

  3. திருக்குறள் மொழிபெயர்ப்புகளும் உரைநயங்களும் நாளைய வழித்தோன்றல்களுக்கு மட்டுமல்ல உலகத்தார் தமிழறிய, தமிழில் உள்ள பல்துறை நூலாம் திருக்குறளை அறிய ஊக்குவிக்கும் அருமையான முயற்சி என்பேன்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான முயற்சி ...
    வாழ்த்துகள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மனிதன் இப்படி தான் வாழப் போகிறான் என்ற உண்மை நிகழ்வை அன்றே வகுத்துவிட்டுச் சென்று விட்டார் வள்ளுவர்.திருக்குறள் நூலைப் படித்து அதன் அர்த்தங்களை அறிந்தவர்கள் யாரும் இன்று நீதீ மன்றங்களுக்கு சென்று நீதிக்காக போராட வேண்டியதில்லை.ஏனெனில் ஒரு மனிதன் எவ்வாறு வாழலாம் வாழாக்கூடாது என்று முப்பெரும் பிரிவுகளில் வகுத்துள்ளார்.இதனை உலக அறியும் வகையில் தமிழர்களாகிய நாம் தான் உலகிற்கு கொண்டுச் சேர்க்க வேண்டும். அனைத்து மொழிகளிலும்,அனைத்து தேசங்களிலும் தமிழின்,தமிழரின் பெருமை திருக்குறளால் என்றும் நிலைத்திருக்கும்.

    மதச் சார்பற்ற நூல்,எல்லாக் காலத்திற்கும்,எல்லா வகை இனத்திற்கும் பொருந்தும் நூல் என்றால் அது திருக்குறள் என்றே உரைப்பேன்.

    நன்றி.தங்களின் முயற்சி வெற்றியடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் எனது குருநாதரே.

    பதிலளிநீக்கு