வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 12 மார்ச், 2017

எது மதிப்புமிக்கது?



மிளகுப் பொதிகளை ஏற்றுமதி செய்து! அதற்குப் பதிலாக தங்கத்தை இறக்குமதி செய்தனர்!
மிகுந்த பொருள்களைப் பணிந்து வந்து கொடுத்து மணம் வேண்டிப் பெண் கேட்டாலும் தன் தகுதிக்கு ஒத்தவராக இல்லாவிட்டால் அப்பெண் அவரை மணந்துகொள்ளமாட்டாள்!
தன் மகளுக்குப் பிடிக்கவில்லை என்றால் பெண்கேட்டு வந்தவர் அரசனாகவே இருந்தாலும் எதிர்த்துப் போரிடத் தயங்கமாட்டார் அவளின் தந்தை!
ஆம் இந்த மரபுகள் எல்லாம் சங்ககாலத்தில் இருந்தன.
மீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை அம்பின் மனை மறுக்குந்து
மனை குவைஇய கறி மூடையால்
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து
கலம் தந்த பொற் பரிசம்
கழித் தோணியான் கரை சேர்க்குந்து
மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து வருநர்க்கு ஈயும்
புனல் அம் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்குகடல் முழவின் முசிறி அன்ன
நலம்சால் விழுப்பொருள் பணிந்து வந்து கொடுப்பினும்
புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்
தந்தையும் கொடாஅன் ஆயின் – வந்தோர்
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை
வருந்தின்று கொல்லோ தானே – பருந்து உயிர்த்து
இடைமதில் சேர்க்கும் புரிசை
படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே
- புறநானூறு 343
மகட்பாற் காஞ்சி, பரணர் பாடியது
     மீனை விற்று, அதனால் பெற்ற நெல்லைக் குவித்து ஏற்றிக்கொண்டு, நீரின்மேல் தோணிகள் ஏற்றிவந்த பொருள்கள் வீடுகள்தோறும் நிறைந்து காணப்படும்.
     வீடுகளில் குவித்து வைக்கப்பட்ட மிளகுப் பொதிகளால், மிக்க முழக்கத்தையுடைய கடற்கரைப் பகுதிகள் ஆரவாரமுடையனவாகத் திகழும்
     பெரிய மரக்கலங்களில் ஏற்றிக்கொண்டு வரப்பட்ட பொன்னாலான பரிசுப் பொருள்கள், உப்பங்கழிகளில் உள்ள தோணிகளின் உதவியால் கரையில் கொண்டு சேர்க்கப்படும்.
     மலையில் கிடைக்கும் பொருள்களும், கடலில் கிடைக்கும் பொருள்களும் கலந்து தன்னை நாடி வந்த இரவலர்க்கு வழங்குவோன் குட்டுவன்.
     அவன் பொன்னாலான மாலையை அணிந்தவன். அவனுடைய முழங்குகின்ற கடலைப்போல முரசு ஒலிக்கின்ற ஊர் முசிறி. இவ்வூர் கடல்நீர்போலக் கள்ளின் மிகுதியை உடையது. அம்முசிறியைப் போன்ற நன்மை நிறைந்த மிகுந்த பொருள்களைப் பணிந்து வந்து மணம் வேண்டி பெண் கேட்டாலும் தன் தகுதிக்கு ஒத்தவராக இல்லாவிட்டால் இவள் மணம் செய்துகொள்ளமாட்டாள்.

     தன் மகளின் மனநிலை அறிந்து தந்தையும் மணம் முடிக்க உடன்படாததால், பருந்துகள் இடைமதில் தங்கி இளைப்பாறுகின்றன. மதிலகத்தே தம்மை எதிர்த்து வந்தோர் அகப்படும்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏணிகளையுடைய படைகள் தம்முள் கலந்து போர்புரியும் அவ்வீரனுடைய நெடிய நல்ல ஊர், வருந்துவது கொல்லோ.

மிளகு மதிப்பானதா?
தங்கம் மதிப்பானதா?

அன்றும் இன்றும் நாம் தங்கமே மதிப்பானது என்று எண்ணிவருகிறோம். அதனால்தான் நாம் ஆங்கிலமருந்துகளுக்கு இன்னும் அடிமையாகவே இருக்கிறோம்..

அன்று மணமகன்கள் பெண்களைத் திருமணம் செய்துகொள்ள வரதட்சணை வழங்கினர். இன்று பெண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துகொள்கின்றனர்.

அன்று பெண் கேட்டு வந்தது அரசனாகவே இருந்தாலும் தன் மகளுக்கு அவரைப் பிடித்திருக்கிறதா என்று அவளிடம் கருத்துக்கேட்டனர். அவளுக்குப் பிடிக்காவிட்டால் வந்தவரை எதிர்த்துப் போரிடவும் அவர்கள் தயங்கியதில்லை.

சங்கப்பாடல்களை வாசிக்கும்போது நம் முன்னோர் வாழ்ந்த வாழ்வை எண்ணி பலநிலைகளில் பெருமிதம் கொள்ளவும் சிலநேரங்களில் அவர்களின் அறியாமையை எண்ணி வருத்தமும் தோன்றுகிறது.

பெருமிதம் அவர்களின் வளமான வாழ்வை எண்ணி!
வருத்தம் அவர்களின் தங்கமோகத்தை எண்ணி!

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

பழந்தமிழர் நிலவளம்!











ஒருபிடி படியுஞ் சீறிடம்
எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே.
புறநானூறு – 40

ஒரு பெண் யானை 
தங்கும் சிறிய இடத்தில்
ஏழு யானைகளைக் காக்கின்ற 
உணவு வளம் நிறைந்த நாட்டுக்கு உரியோனே!


வெள்ளி, 8 ஜனவரி, 2016

தமிழா் பண்பாட்டில் மலா்கள் (1000 வது பதிவு)


1000 வது இடுகை எழுதும் இந்த நாளில் என்னை நெறிப்படுத்திய, ஊக்கப்படுத்திய அன்பான வலையுலகத் தமிழ் உறவுகளை நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன்.

இந்த வலைப்பதிவில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து உயிருள்ள பெயா்கள், சங்க ஓவியங்கள் என இரண்டு நூல்கள் வெளியிட்டிருக்கிறேன்.

தற்போது தொடராக எழுதிவரும் இன்றைய சிந்தனைகளையும் நூலாக வெளியிடும் எண்ணம் உள்ளது.

இந்த வலையில் எழுதும் ஒவ்வொரு கட்டுரைகளும் ஏதோ ஒரு புதிய சிந்தனையை அல்லது நமது மரபுகளை எடுத்துரைப்பதாக இருக்கவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறேன்.

தொடர்ந்து இந்தவலைப்பதிவை வாசித்து, மறுமொழி தந்து என்னுடன் உலாவரும் தமிழ் உறவுகளுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மகிழ்வான நாளில் தமிழா் பண்பாட்டில் மலா்கள் என்ற கட்டுரையை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்வடைகிறேன்.


        தமிழர் பண்பாட்டின் அடையாளமாக மலர்கள் விளங்குகின்றன. பிறப்பு முதல் இறப்பு வரை மலர்கள் சிறப்பிடம் பெறுகின்றன. தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவும், காலத்தை அறிந்துகொள்ளவும், இன்பத்தையும், துன்பத்தையும் வெளிப்படுத்தவும், பக்தியைப் புலப்படுத்தவும், தன்னை அழகுபடுத்திக்கொள்ளவும் காலந்தோறும் மலர்கள் பெரிதும் பயன்பட்டுவருகின்றன. தமிழர் பயன்பாட்டில், பண்பாட்டில் மலர்கள் சிறப்பிடம்பெறுவதை, சங்கஇலக்கியங்கள் வழி எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மலர்களுக்கு தமிழர்கள் இட்ட நுட்பமான பெயர்கள்
அரும்பு - அரும்பும் தோன்றுநிலை,
 நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை, 
முகை - நனை முத்தாகும் நிலை,
 மொக்குள் - நாற்றத்தின் உள்ளடக்க நிலை,                   
முகிழ் - மணத்துடன் முகிழ்த்தல், 
மொட்டு - கண்ணுக்குத் தெரியும் மொட்டு, 
போது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை, 
மலர்- மலரும் பூ,
 பூ - பூத்த மலர், 
வீ - உதிரும் பூ, 
பொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை, 
பொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள், 
செம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை என மலர்களின் ஒவ்வொரு நிலைக்கும் நுட்பமாகப் பல பெயரிட்டு மகிழ்ந்தனர் தமிழர்கள்.

அகவாழ்வில் மலர்கள்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நிலத்தைக் குறிப்பதற்கு மலர்களே பயன்பட்டன. பத்துப்பாட்டில் இடம்பெறும் பத்து பாடல்களுள், முல்லைப்பாட்டும், குறிஞ்சிப்பாட்டும் மலர்களைக் குறியீடாகக் கொண்டு பெயர்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நெடுநல்வாடையில் இடம்பெறும் ‘வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகம்’ என்ற அடிகள் இந்நூல் அகமா? புறமா? என்னும் கருத்துவேறுபாட்டுக்கு அடித்தளமாக இருந்தமையும் இங்கு எண்ணத்தக்கதாக உள்ளது.

பூ விற்கும் மகளிர்

‘மணமிக்க, வண்டுகள் மொய்க்கும் மலர்களைச் சுமந்து தெறுதோறும் விலை கூறிச்செல்லும் மகளிர்’1 பற்றிய குறிப்பு  நற்றிணையிலும், மதுரைக் காஞ்சியிலும் காணக்கிடைக்கிறது.

வழிபாட்டில் மலர்கள்

விரிச்சி கேட்டல் என அழைக்கப்பட்ட தமிழரின் நற்சொல் கேட்கும் வழக்கத்தில் மலர்கள் சிறப்பிடம் பெற்றன. இதனை,
           அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இனவண்டார்ப்ப நெல்லொடு
அரும்பு அவிழ் அலரிதூஉய் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப – முல்லைப்பாட்டு - 6-10 என்ற 

பாடலடிகள் சுட்டுகின்றன. மேலும் முருகனை ஆற்றுப்படுத்தும் வெறியாட்டில் மலர்கள் 2 சிறப்பிடம் பெறுவதை திருமுருகாற்றுப்படை  குறிப்பிட்டுச்செல்கிறது. ‘நெல்லும் மலரும் தூவி’ 3 மகளிர் மாலைக்காலத்தை வரவேற்றமை நெடுநல்வாடை வழியாக சுட்டப்படுகிறது. இன்று ஒவ்வொரு கடவுளருக்கும் விருப்பமான மலர்கள் என நாம் வழங்கிவருவதும் சிந்திக்கத்தக்கது.

கூந்தலில் சூடப்பட்ட மலர்கள்

தலைவியும், தோழியும் அருவியிலும், சுனையிலும் நீராடியபின் மரம், செடி, கொடி ஆகியவற்றில் மலர்ந்த மலர்களையும், மலர்களைப் போல விளங்கும் இலைகளின் தளிர்களையும் பறித்து அகன்ற பாறையில் குவித்தனர். இவ்வாறு இவர்கள் தொகுத்த மலர்களின் எண்ணிக்கை 99. சுட்டப்படும் பாடல் குறிஞ்சிப்பாட்டு. இச்செய்தி பழந்தமிழரின் தாவரவியல் அறிவைக் காட்டுவதுடன், மலர் மீது அவர்களுக்கு இருந்த வேட்கையின் அடையாளமாகவும் திகழ்கிறது. ‘காட்டு மல்லிகை மலர்களுடன் பாதிரி மலரையும் சேர்த்துக் கூந்தலில் சூடியமையும் வாசமிக்க பல்வேறு மலர்களை மகளிர்தம் கூந்தலில் சூடியமையும்’4 சங்கப்பாடல்கள் வழியாக அறியமுடிகிறது.

தழையாடையும் மலரும்

தலைவன் தலைவிக்குத் தந்த கையுறையைத் தோழி மறுக்கிறாள். அதற்குக் காரணம் தழையாடையில் உள்ள காந்தள் மலர் முருகனுக்கு உரியது. மேலும் இந்த ஆடையை தலைவி அணிந்தால் ஊரார் அலர் தூற்றுவார்கள் என்றும் தோழி கூறும் கூற்றின் வழியாக மலர் அணிவது குறித்த சங்ககால வழக்கத்தை அறியமுடிகிறது. 5 ஒரு தலைவி, ‘குவளைக் கண்ணியை என் பின்னிய கூந்தலில் சும்மா சூட்டினான்; அதற்கு இந்த ஊர் அலர் தூற்றுகிறது என்கிறாள், (அகம். 180) 

மலரணியும் உரிமை

மலர் சூடுதல் என்பது சங்ககால அகவாழ்வில் திருமணமான பெண்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது. களவுக்காலத்தில் ஒரு பெண் மலர் அணிந்தால் ஊரார் அலர் தூற்றுவதும் வழக்கமாக இருந்தது. திருமணத்துக்கு முன் களவுக் காலத்தில் சிலம்பு அணிதலும், திருமணத்துக்குப் பிறகு மலர் அணிதலும் பழந்தமிழரின் மரபாக இருந்தது. களவுக்காலத்தில் தனக்கு தலைவன் சூட்டிய மலர் குறித்து பெற்றோர் அறிந்தால் தலைவி உடன்போக்கில் செல்லதும் பெண்களின் இயல்பாக இருந்தது. மேலும் சங்ககாலப் பெண்கள் மலரணியும் மரபு குறித்து,
தலைவன் களவுக் காலத்தில் தலைவியைப் பார்த்து அவள் கூந்தலில் மலர் சூடிச் செல்கிறான். கூந்தலில் மலரைக் கண்ட ஊரார் அலர் தூற்றுகின்றனர்.6  ஒரு நாள் தாய் தன் மகளிடம் உன் கூந்தலில் மலரின் மணம் வருகிறதே..? என்று வினவுகிறாள். தன் களவு வெளிப்பட்டது என்ற அஞ்சிய தலைவி, தலைவனுடன் உடன்போக்கு செல்கிறாள் 7. தலைவி கூந்தலில் மறைத்த மலர் அன்னை அக்கூந்தலை அவிழ்க்கும் போது வீழ்கிறது, அன்னை நெருப்பைத் தொட்டவள் போல அவ்விடம் விட்டு நீங்குகிறாள் 8. இரவில் தலைவனைக் காணும் போது மலர் சூடிச் சென்ற தலைவி, தன்வீட்டார் முன்னர் மலர் நீக்கியவளாகக் காட்சியளிக்கிறாள 9. ஏறுதழுவல் நடைபெற்ற போது வலிமையான காளையை இடையன் ஒருவன் அடக்குகிறான். அப்போது அக்காளை அவன் தலையில் சூடிய முல்லைச் சரத்தைத் தன் கொம்பால் சுழற்றி வீசுகிறது. அம்மலர்ச்சரம் ஓர் ஆயமகளின் கூந்தலில் வீழ்கிறது. அதனை விரும்பிய தன் கூந்தலுள் மறைத்த அப்பெண் ஊராருக்கும், அவர் தூற்றும் அலருக்கும், தம் பெற்றோருக்கும் அஞ்சுகிறாள் 10. திருமணத்தின் போது தலைவனை,      “திருமணத்தைக் கொண்டாடும் படி பின்னிய கரிய கூந்தலில் மலர் சூட்டினாய்” என்று தோழியர் வாழ்த்துகின்றனர் 11. மேற்கண்ட சங்கப்பாடல்கள் வழி அறியலாம். திருமண நாள்முதல் ஒரு பெண் மலரணியும் உரிமை பெறுகிறாள் என்பதை,

எரிமருள் வேங்கை யிருந்த தோகை
இழையணி மடந்தையில் தோன்றும் நாட
இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்
நன்மனை வதுவை அயரவிவள்
                 பின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே (ஐங்.296)                                    இப்பாடல்வழியாக அறியலாம்.

புறவாழ்வில் மலர்கள்

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, தும்பை, வாகை, பாடான் என வீரர்கள் போரின்போது தம் அடையாளமாக மலர்களைச் சூடிச் சென்றனர். வெற்றிபெற்ற மன்னர்கள் தோற்றநாட்டின் காவல் மரங்களை வெட்டுவதையும், நிலத்தை எரியூட்டுவதiயும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதன்வழியாக மலர்கள் புறவாழ்வில் பெற்ற இடத்தை உணரலாம். 

மலர் சூடிய முரசு

சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையினது, முரசுகட்டிலில் உறங்கிய மோசிகீரனாரின் தமிழுக்காக தலைவணங்கிய மன்னவன் அவருக்கு கவரி வீசினான் என்ற புறநானூற்றுப் பாடலில், ‘மலரின் நீண்ட தோகையுடன் உழிஞையின் பொன்போன்ற தளிர்களும் அழகுபெறச் சூடப்பெற்றது’12 என்ற செய்தி வழியாக அரச முரசுக்கு மலர் சூடிய மரபினை அறியமுடிகிறது.

படைக்கருவிகளுக்கு மாலை சூடுதல்

அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவையார், ‘உனது படைக்கருவிகள் மயில்தோகையுடன் மாலை சூட்டப்பட்டு,  அழகுசெய்யப்பட்டு, நெய்பூசப்பட்டும், காவலையுடைய அகன்ற மாளிகையில் உள்ளன. ஆனால் அதியனுடைய படைக்கருவிகளோ கொல்லனது பட்டறையில் கிடக்கின்றன’13 என்று அதியனின் போர்த்திறன் குறித்து பேசுகிறார் ஒளவையார். இப்பாடல்வழியாக படைக்கருவிகளுக்கு மாலை சூடிய பாங்கு உணர்த்தப்படுகிறது.

நடுகல்லுக்கு மலர் சூடிய மரபு
‘போரில் வீரமரணம் அடைந்தவருக்கு எழுப்பப்படும் நடுகல்லில் மயில்த்தோகையுடன் சிவந்த மலர்களைக் கொண்ட கண்ணிகளை சூடினர்’ 14  என்ற குறிப்பு புறநானூற்றில் இடம்பெறுகிறது. 


ஆடைகளில் பூவேலைப்பாடு

சங்ககாலத் தமிழர்கள் தழையாடைகள் முதல் பல்வேறு ஆடைகளை அணிந்தனர் மறவர்தம் ஆடைகளில் ‘பூவேலைப்பாடு’15 இருந்தமை அவர்களுக்கு மலர்கள் மீது இருந்த பற்றைக் காட்டுவதாக உள்ளது.

சமையலில் பூ

பழந்தமிழர்கள் விரும்பி உண்ட உணவுகளுள் ‘கவைத்த வரகுக் கதிரைக் குற்றிச் சமைத்த சோற்றை வேளைப் பூவுடன் தயிரும் சேர்த்து  உண்ட உணவு’16 குறிப்பிடத்தக்கதாக இருந்தது. சமையலிலும் மலர்கள் சிறப்பிடம் பெற்றமை இதனால் உணரலாம்.

காதல் நன்மரம்

வளையணிந்த இளமகளிரும், வீரம் செறிந்த மறவர்களும் விரும்பி அணிவதால் பூப்பூக்கும் பல்வகை மரங்களுள்ளும் சிறந்த ‘காதல்நன்மரம்’17 என்று நொச்சிமரம் போற்றப்பட்டமை புறப்பாடல்வழி காணக்கிடைக்கிறது.

கோபுர வாயிலின் பூ வேலைப்பாடு

வலிமைபொருந்திய அரண்மனைக் கோபுரவாயிலின் கதவுகளில். ‘குவளையின் புதிய மலர்களை உயர்த்தித் தங்கள் துதிக்கைகளில் ஏந்திய யானைகளின் உருவங்கள், அவற்றின் நடுவே திருமகளின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தமை’ 18 பழந்தமிழர்களின் சிற்பக்கலை மரபில் பூக்களுக்கும் சிறப்பிடமிருந்தமை அறியமுடிகிறது.

முடிவுரை

தமிழர் பண்பாட்டின் குறிப்பிடத்தக்க அடையாளமாக மலர்கள் விளங்குகின்றன. சங்கஇலக்கியங்களின் வழியாக பழந்தமிழர்தம் அகவாழ்விலும், புறவாழ்விலும் மலர்கள் சிறப்பிடம் பெற்றமை அறியமுடிகிறது. இன்று மலர்களை திருமணமான பெண்களும், திருமணமாகாத பெண்களும் அணிகின்றனர் சங்ககாலத்தில் மலரணியும் உரிமை திருமணமான பெண்களுக்கு மட்டுமே இருந்தமை அறியமுடிகிறது. குறிஞ்சிப்பாட்டில் சுட்டப்படும் 99 மலர்கள் பற்றிய குறிப்பு மலர்கள் மீது தமிழர்கள் கொண்டிருந்த விருப்பத்துக்குச்; சான்றாகத் திகழ்கின்றது.

அடிக்குறிப்புகள்

1. நற்றிணை 118 மதுரைக்காஞ்சி 397, 2. திருமுருகாற்றுப்படை 241, 3.நெடுநல்வாடை– 43 - 44

4. நற்றிணை 52,337,42,145 5. குறுந்தொகை -1 6. (அகம் 180), 7. நற் – 143, 8. கலி -115
9. குறுந் – 312, 10. கலி- 107, 11. ஐங் – 296, 12. புறநானூறு – 50 – 4, 2.                  

13. புறநானூறு – 95 – 1, 14 .புறநானூறு – 264 – 2-3, 15. புறநானூறு – 274 -1 5. 

16. புறநானூறு215 – 1-2 6. 17. புறநானூறு 272 -1-3, 18. நெடுநல்வாடை – 83, 8.

சனி, 25 ஆகஸ்ட், 2012

'அசுணமா'



இலக்கியங்கள் அவ்வக்கால செய்திகளைப் பிரதிபலிப்பன .இலக்கியங்கள் சுட்டும் செய்திகளில் சில காலப் பழமையால் மயக்கம் தருபவையாக அமைகின்றன .இத்தகைய இலக்கிய மயக்கங்களைத் தெளிவுபடுத்திக்கொள்வது தமிழ் உலகின் கடமையாகும்.

அசுணமா என்னும் உயிரினம் 'விலங்கு'என்றும் 'பறவை'என்றும் இரு வேறுபட்டகருத்துக்கள் உரையாசிரியர்களிடமும் ,ஆய்வாளர்களிடமும் உள்ளன .அசுணமா விலங்கு என்றோ பறவை என்றோ இதுவரை யாரும் வரையறை செய்து சொல்லவில்லை .அதனால் அசுணமா எந்த வகை உயிரினம் என்பதைத் தக்க சான்றுகளுடன் காண்பது சிறப்பாகும் .


அசுணமா தொடர்பான கருத்துக்கள்

அ.சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் 'அசுணமா' ஒரு விலங்கு என்று சுட்டுகிறது நச்சினார்க்கினியரும்,பின்னத்தூராரும் விலங்கு என்றே உரைப்பர்

ஆ .அவ்வை துரைசாமிப்பிள்ளை ,மு.வ, சுகிசிவம் ஆகியோர் அசுணமா ஒரு பறவை என்று இயம்புவர் .

இ .உ.வே.சா, விலங்கு என்றும் பறவை என்றும் (கேகேயப்புள் ,பண்ணரிமா) இரு கருத்துக்களிக் கூறுவார்.அகராதிகளும் விலங்கு, பறவை என்று மயக்கமான கருத்துக்களையே கூறுகின்றன .


அசுணமா.

அசுணமா ஒரு மலைவாழ் உயிரியாகும் .இது யாழிசை கேட்பதாக சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .இதனை

'மணநாறு சிலம்பின் அசுனம் ஓர்க்கும்'(நற்-௨௪௪)
'தொழுதி ஆர்ப்ப யாழ் செத்

திருங்கல்விடரளை அசுணம் ஓர்க்கும் '(அகம் -88-11)
என வரும் அடிகள் விளக்குகின்றன .
அசுணாமாவைக் கொல்வதை அசுணம் கொல்பவர் (நற்௩0௪.௮)
என்ற அடி சுட்டுகிறது .

'யாழ் கேட்ட மானை'என்ற கலித்தொகை( 143.10.)சொல்லாட்சி அசுணமாவைக் குறிப்பதாக உரையாசிரியர்கள் கருதுவர்.யாழோசையை யானை,குதிரை ஆகிய விலங்களும் கேட்பதால் இச்சொல் ஆய்வுகுறியதாகும்.
பிற்கால இலக்கியங்கள் அசுணமா குழலுக்கு மயங்கியதைச் சுட்டுகின்றன.இதனை,'இன்னிளிக்குரல் கேட்ட அசுணமா'(சீவக- 1402.2)
'கோவலர் கொன்றத் தீங்குழல்
உளவு நீள் அசுணமா உறங்கும் என்பவே '(சூளாமணி-௩௪.௩௪)
'கழைகளின் துளைதொறும்
கால் பரந்திசைக்கின்ற்ர்
ஏழிசைக்கு உளமுருகி மெய் புளகெழ
இசைகொளும் அசுணங்கள் (பெருங்-௧.௪௭.௨௪)
இன்னோசை கேட்ட
அசுணமா வல்லோசை கேட்டு
இன்னிசை கொள் சீரியாழ்
இன்னிசை கேட்டஅசுண நன்மா
கேட்டுத் தன் மடிந்ததுபோலெ(பெருங்௧.47.24.))
எனப் பெருங்கதை குறிப்பிடுகிறது .
கூர்மபுராணம் ,அசுணத்தை
'முரசொலி கேட்ட அசுணமென்
புள் மூச்சவிந்து (இராமன் வனம் புகு படலம்)
என்று பறவையாக உரைக்கிறது .
புராணத்தில் சுட்டப்பட்டிருப்பதால் அதில் கற்பனை கலந்திருக்க வாய்ப்புள்ளது.
எனவே பிற இலக்கிய சொல்லாட்சிகளை அடிப்படையாகக் கொண்டே அசுணமா எந்த வகை உயிரினம் என்பதை மீட்டுருவாக்கம் செய்வதே முறையாகும்.

அ.சங்க இலக்கியங்கள் 'அசுணமா யாழோசை கேட்கும் ஒரு மலை வாழ் உயிரி ' என்று சுட்டுகின்றன.

ஆ.பிற்கால இலக்கியங்கள் அசுணமா குழழோசை கேட்டதை புலப்படுத்துகின்றன.

இ.இலக்கியச் சொலாட்சிகளில் சூளாமணியில் மட்டுமே அசுணமாவின் உருவம் சுட்டப்படுகிறது.

'உலவு நீள் அசுணமா'(சூளா)என்ற சொல்லில் (உல்-வளைதற் பொருள்,நீள்-நீண்ட,மா-பெரிய)அசுணமா என்பது வளைந்து செல்லும் நீளமான அழகிய தேமலை உடைய பெரிய உயிரினம் என்ற கருத்துப் புலனாகிறது.

அசுண (மா)சுணம்

சங்க இல்க்கியத்தில் மலைப்பாம்பை 'மாசுணம்'என்று சங்கப்புலவர்கள் இயம்புகின்றனர்.இதனை"களிறகப்படுத்த பெருஞ்சின மாசுணம்(நற்- 261.6)துஞ்சு மரங்கடுக்கும் மாசுணம் (மலைபடு- 261.)எனவரும் அடிகள் சுட்டுகின்றன.அசுணமா தொடர்பான வடிவங்களூம்,செய்திகளும் 'மாசுணம்' என்னும் மலைப்பாம்பைக் குறிப்பதாகவெ உள்ளன.மலைப்பாம்பின் இயல்பு நீளமாக இருத்தல் ,வளைந்து செல்லுதல்,உடலில் அழகிய வடிவமிருத்தல் ,பெரிய வடிவில் இருத்தல் ஆகியனவாகும்.அசுணமாவை வளைந்து செல்லும் ,நீளமான அழகிய தேமலை உடைய பெரிய உயிரினமாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன .
அசுணமா ,மாசுணம் எனவரும் இரு சொற்களும் சொல்,பொருள் என இரு நிலைகளிலும் ஒன்றென்பது இக்கருத்துக்களால் புலனாகிறது

அசுணமாவின் ஒலிவுணர்வு

அசுணமா ,மாசுணம் என வழங்கப்பட்ட மலைப்பாம்பு யாழ் ,குழல் ஆகிய இன்னோசைகளை கேட்பதாகவும் பறை ,முரசு ஆகிய வல்லோசைகளை கேட்டு வருந்துவதாகவும் இலக்கியங்கள் இயம்புகின்றன.
புற செவிகளோ ,செவித் துளைகளோ இல்லாத மலைப்பாம்பு ,காற்றினால் ஒலி யைக் கேட்கும் திறன் இல்லாதது. தரையில் ஏற்படும் அதிர்வுகளாலேயே ஒலியை உணர்கிறது.பல ஊடகங்களால் எழும் ஒலி காற்றினால் தரையை அடைகிறது ஒலியை ஏற்கும் மரங்கள்கூட அவ்வொலியைத் தரையில் கடத்தும் இயல்புடையனவாக விளங்குகின்றன்.இடியால் பாம்பு அழிந்ததை (குறு- 391 .190)இலக்கியங்கள் சுட்டுகின்றன.இடியின் கடுமையான ஒலி காரணமாக பாம்பின் தலை நடுங்கியதை'அரவு தலை பனிப்ப'(நற்- 129.7.8-புற- 17.38)என்று சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.இதனால் பாம்பின் ஒலி உணர்வு புலனாகிறது.புன்னாகவராளி ராகம் கேட்டு பாம்பு வருமென்பதும்,'நுணலும் தன்வாயால் கெடும்'என வரும் நாட்டுப்புற வழக்குகளும் பாம்பின் ஒலி உணர்வோடு ஒப்புநோக்கிக் கருதத்தக்கனவாகும்.

யாழ் ,குழல் ஆகிய இனிய ஒலிகளை தரை வழி அறியும் மலைப்பாம்பு அவ்வொலிகளை இறை எனக்கருதி அவ்விடம் வருகிறது.அந்நேரத்தில் பறை ,முரசு ஆகிய வல்லோசைகளை முழக்கி அதனைச் திகைக்கச் செய்வர்.பின் கூரிய ஆயுதத்தால் அதனைக் கொல்வர்.மலைப்பாம்பின் தோல் அதிகமான விலை மதிப்புடையது.அதனால் மலைப்பாம்பை அக்காலத்தில் கொன்றுள்ளனர்.இன்றும் இவ்வழக்கம் வழக்கில் உள்ளமை சுட்டத்தக்கது.

அசுணமா ஊர்வன இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்பே ஆகும்.இதனை மாசுணம் என்ற பெயரிலும் அழைத்தனர்.இலக்கியச்சொல்லாட்சிகள் அசுணமாவே மாசுணம் என்பதைப் புலப்படுத்துகின்றன.'அசுணமா யாழ் குழல் ஆகிய இனிய இசையை கவனிப்பதாக இலக்கியங்கள் இயம்புகின்றான.இன்றும் மகுடி ஓசைக்கு பாம்புகள் மயங்கும் என்ற நம்பிக்கை உள்ளது .

புறச்செவிகளே இல்லாத அசுணமா,இனிய ஒலியால் எழும் ஒழுங்கான அதிர்வை இரை எனக்கருதி அவ்விடம் வருகிறது.அவ்வேளையில் ஒழுங்கற்ற வல்லொலிகளை எழுப்பி அதனைத் திகைக்கச்செய்து கொன்றுள்ளனர்.அசுணாமாவினுருவம் ,அதன் செயல்பாடுகள் குறித்த இலக்கியக் கருத்துக்கள் யாவும் 'மாசுணாம் என்றா மலைப் பாம்பை க் குறிப்பதாகவே வுள்ளான.எனவே அசுணமா என்பது மாசுணம் என்ற மலைப் பாம்பே என்ற கருத்து இதனால்ப் புலப்படுத்தப்படுகிறது.

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

நிழல் தந்த மான்.

பள்ளிக் காலத்தில் தன் துணையான பெண்மானுக்குத் தன் நிழல்தந்தது ஆண்மான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு இலக்கியநயம் வியந்திருக்கிறேன்..

அந்தச் செய்தியை சங்க இலக்கியத்தில் கலித்தொகைப் பாடலில் கண்டு மகிழ்ந்தேன்.

இன்று குறுந்தொகையில் தன் கன்றுக்கு நிழல் தந்த ஆண்மான் பற்றிய செய்தியைக் கண்டு மகிழ்ந்தேன்.

இதோ அந்தப் பாடல்..

தலைவியை நீங்கிப் பொருள் தேடச் சென்றான் தலைவன். அவன் வழியில் காணும் காட்சிகள் அவனுக்குத் தன்னை நினைவுபடுத்தும் என எண்ணியிருந்த தலைவியிடம் தோழி பேசுவதாக இந்தப் பாடல் அமைகிறது.


நசை நன்கு உடையர் - தோழி - ஞெரேரென
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெருந்த ததரல்
ஒழியின் உண்டு அழிவு இல் நெஞ்சின்
தெறித்து நடை மரபின் தன்மறிக்கு நிழல் ஆகி
நின்று வெயில் கழிக்கும் என்ப - தம் 
இன்துயில் முனிநர் சென்ற ஆறே.

குறுந்தொகை -213


 உன் தலைவர் உன் மீது மிகுந்த அன்புடையவர்தான் இருந்தாலும் பொருள் வாழ்க்கைக்குத் தேவை என்பதை உணர்ந்து உன்னை நீ்ங்கிப் பொருள் தேடச் சென்றுவிட்டார். அவர் சென்ற பாலை நிலம் பல்வேறு இன்பதுன்பங்களைக் கொண்டது.

நிழல் தரும் மான்.

தலைவர் சென்ற வழியில் அறிவுடைய ஆண்மான் தன் கன்றின் பசியைக் காணஇயலாமல் தன் கவைத்த கொம்புகளால் மரத்தின் அடிப்பகுதியைக் குத்தி, தன்னுடைய கன்றின் பசியைப் போக்கும்.
தன் கன்று உண்டு எஞ்சியதைத் தானும் உண்டு, தன் கன்று வெயிலின் வெம்மையைத் தாங்காது என்பதை உணர்ந்து, கன்றுக்கு நிழல் தருவதற்காக அசையாது அதன் அருகில் நின்று கன்றின் மேல் வெயில் படாமல் பகல் பொழுதைக் கழிக்கும்.

தலைவர் சென்ற வழி இத்தகையது என்கிறாள் தோழி.

ஆண்மான் தான் இருக்கும் இடத்தில் கிடைத்த உணவினைக் கன்றுக்குத் தந்து தானும் எஞ்சியதை உண்ணும் காட்சியைத் தலைவர் காண்பாராயின் பொருள் தேட எண்ணிய எண்ணத்தைக் கைவிட்டு இடையிலேயே திரும்புவாரோ என நினைத்தாள் தலைவி.

அவள் எண்ணத்தை இவ்வாறு மாற்றுகிறாள் தோழி.

உன் மீது தலைவனுக்கு இருக்கும் விருப்பத்தைவிட பொருளின் மீது அவன் கொண்ட விருப்பம் பெரிது என்று கூறித் தலைவியைத் தோழி ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைகிறது. இயற்கையோடு தம் வாழ்வியலை இயைபுபடுத்திப்பார்த்த சங்கத்தமிழரின் மாண்பு எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கதாக உள்ளது.



தொடர்புடைய இடுகைகள்

புதன், 16 பிப்ரவரி, 2011

சங்ககால இருமல் மருந்து


சங்கப்பாடல்களின் வழி அகப்புற கருத்துக்களுடன் அக்காலப் பழக்க வழக்கங்களையும் அறிந்துகொள்ளமுடிகிறது. இதோ ஒரு அகப்பாலில் ஓர் மருத்துவக்குறிப்பு.

தலைவன் தலைவியைப் பிரிந்திருக்கும் சூழலில் தலைவி தோழிக்குச் சொல்லுவதாகவோ, தலைவிக்குத் தோழி சொல்லுவதாகவோ இப்பாடலைக் கொள்ளலாம்.

“அம்ம வாழி, தோழி! 'இம்மை

நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்

தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?

தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த

சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்

வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்

தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,

நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து

அடி புதை தொடுதோல் பறைய ஏகி,

கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,

இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு,

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,

பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று

உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,

புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,

தண் கார் ஆலியின், தாவன உதிரும்

பனி படு பல் மலை இறந்தோர்க்கு

முனிதகு பண்பு யாம் செய்தன்றோஇலமே!”

அகநானூறு 101. பாலை -மாமூலனார்

(பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது; தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம்.)

தொன்றுபடு பழமொழி

தலைவன் தலைவியைப் பிரிந்து காலத்தை நீட்டிக்கிறான். அதனால் வருந்திய தலைவி நன்மை செய்தவர்கள் நன்மைதானே பெறுவர். இதுதானே பழமொழி. இந்த அனுபவமொழி இன்று பொய்யானதோ..? என்று புலம்புகிறாள். இதனை..,

'இம்மை

நன்று செய் மருங்கில் தீது இல்' என்னும்

தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?

என்னும் பாடலடிகள் சுட்டும்.

நான் தலைவருக்கு நன்மைதானே செய்தேன்...? (இயற்கைப் புணர்ச்சியின் போது தலைவனைச் சந்தித்த தலைவி அவனுக்கு இன்பமளித்தது)

அவரோ காலத்தை நீட்டித்து என்னைத் துன்புறுத்துகிறாறே! என்று வருந்துகிறாள் தலைவி.

சங்ககால இருமல் மருத்துவம்.

* செம்மறியாட்டுக் கிடாயின் கொம்பினைப் போன்று சுருண்ட, பிடரியை மறைக்கும் தலைமயிரினையும் சிவந்த கண்ணினையுமுடைய மழவர்கள்,

(வாய்ப் பகை கடியும் மண்ணொடு) வாயிலிருந்து எழும் இருமலான பகையினை எழமாற் தீர்க்கும் மருந்தான புற்றுமண்ணை வாயில் அடக்கிக் கொண்டனர்,
கடிய திறல்வாய்ந்த தீயுண்டாம் சிறிய அம்பினை வில்லொடு கையிற்பற்றி, வெண்ணெய்யை வெளிப்படுத்தும் கடையும் மத்தினைக் கவர்ந்துகொண்டு, ஆனிரைகள் உள்ளவிடத்துத் தம் அடியை மறைத்துள்ள செருப்புக்கள் தேயச் சென்று, பகைவர் காவல் இடத்திலே கவர்ந்த கன்றுகளுடன் கூடிய ஆவினத்தையுடையராய், அவ்வினத்தினை அவ்விடத்தினின்று கொண்டு போகும் அகன்ற இடத்தையுடைய பெரிய காட்டிலே.

* அகன்ற பெரிய வானாகிய கடற்கண் ஒடம்போல, பகலில் வானிடையே நின்ற பல கதிர்களையுடைய ஞாயிற்றின், வெப்பம் விளங்கிப் பரக்கச் சுழன்று வரு மேல் காற்றினால், புல்லிய அடிமரத்தினையுடைய முருங்கையின் முதிர்ந்து கழியும் பல பூக்கள், குளிர்ந்த கார் காலத்து ஆலங்கட்டி போலப் பரந்தனவாய் உதிரும்,நடுக்கமுண்டாகும் பல மலைகளையும் தாண்டிச் சென்ற நம் தலைவர்க்கு, வெறுக்கத்தக்க செயல் யாதும் நாம் செய்திலமே.

பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்..

1. பழமொழிகள் சங்க காலத்திற்கு முன்னரே வழக்கில் இருந்தமை இப்பாடல வழி அறியமுடிகிறது.“தொன்றுபடு பழமொழி” என்னும் சொல் இதற்குச் சான்றாகிறது.
2.இருமலுக்கு எறும்புப் புற்றிலுள்ள “புற்றுமண்ணை” மருந்தாக எண்ணி வாயில் அடைக்கிக்கொண்டனர் என்பதைப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

நாழிகைக் கணக்கர்.



பழமழையால் பதம் கெட்ட எள்ளின்காய், சின்மழையால் இனிதாக விளங்கினார்போல, களவுக்காலத்துத் தலைவன் இரவினும் பகலினும் பலரறிய வருதலால் ஊரில் அலர் எழ வருந்திய தலைவி, சில நாள் வருதலால் இனிமை பெற்றனள்.

சேற்றிலே நிற்றலை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை இருள் செறிந்த நடுஇரவில் “ஐ“ என்ற ஒலியுடன் சேற்றைவிட்டு வெளியே வரவோ, தம் துணையை எண்ணியோ கரையும். அவ்வொலி தலைவியின் தனிமைத் துயரை மிகுவி்ப்பதாக அமையும்.

(எருமை சேற்றைவிட்டு வெளியே வர எண்ணுவதுபோலத் தலைவியும் இற்செறிப்பிலிருந்து விடுதலை பெற்று தலைவனுடன் உடன்போக்கில் செல்ல எண்ணினாள்.)

இத்தகைய அச்சத்தைத் தரும் கூதிர்ப்பருவத்தும் என்னுடைய நெஞ்சு வருந்திப் புண்பட்ட துன்பம் காரணமாக, ஊர்க்காப்பாளர் இரவில் துயிலாது நாழிகையை எண்ணிக் கொண்டிருப்பதுபோல என் கண்கள் துயிலாவாயின என்று தோழியிடம் சொல்கிறாள் தலைவி.

பாடல் இதோ…



குறிஞ்சி - தலைவி கூற்று

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய
சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
நள்ளென் யாமத் தையெனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானு மென்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.

குறுந்தொகை -261
-கழார்க் கீரனெயிற்றியார்.

(இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லவாளாய் சொல்லியது.)


நுண்பொருள் விளக்கம்.


பழமழை
- கார் காலத்தில் தோன்றும் முதல் மழை, புதுப்பெயல் எனவும்,இளமழை எனவும் அழைக்கப்படும். அக்காலத்தில் தொடர்ந்து பெய்யும் மழை “பழமழை“ எனப்படும்.

சிதட்டுக்காய்
- எள்ளிற்கு அதிக மழை பெய்தால் காய்கள் பதனிழந்து உள்ளீடற்றுப்போகும். உள்ளீடற்ற காய்களைச் சிதட்டுக்காய் என்பர்.

அலர்
- தலைமக்களின் காதலையறிந்த ஊரார் பேசும் மொழி.

இற்செறி்த்தல் - தலைவியின் காதலையறிந்த பெற்றோர் அவளை வீட்டுக்காவலில் வைத்திருத்தல்.


உடன்போக்கு
- பெற்றோருக்குத் தெரியாமல் தலைவி தலைவனுடன் வீட்டை நீங்கிச் செல்லுதல்.

பாடல் வழி…


² இப்பாடலில்,
அக வாழ்வியில் அழகாக இயம்பப்படுவதுடன்,
நாழிகைக் கணக்கர் பற்றிய குறிப்பும் வருகிறது.

² காவலர்
கணக்காய் வகையின் வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.

என்னும் அடிகளில் உறங்காது நேரத்தைக் கணக்கிடும் நாழிகைக் கணக்கர்களைப் போலத் தம் கண்ணும் கண் மூடி உறங்க மறுக்கிறது என்கிறாள் தலைவி.

இக்கூற்று அக்காலத்தில் நாழிகைக் கணக்கிடுதற்கு என்று கணக்காளர்கள் இருந்த மரபை அறிவுறுத்துவதாகவுள்ளது.

புதன், 30 ஜூன், 2010

குறுந்தொகை-சீனக் கவிதை ஒப்பீடு.


தொன்மையான நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் திராவிடர்கள். திராவிட மொழியின் கூறுகளை உலகமொழிகள் பலவற்றிலும் காணமுடிகிறது.திராவிட மொழிக்குடும்பத்தின் தாய்மைத் தன்மையுள்ள மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது.

மெசபடோமிய நாகரீகம், சீன நாகரீகம், எகிப்திய நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்னும் தொன்மையான நாகரீகங்களுள் நமது நாகரீகமும் உள்ளடக்கம் என்பது பெருமிதம் கொள்ளத்தக்கது.

அரப்பா,மொகஞ்சதாரோ நாகரீகங்களை ஏற்படுத்தி சிந்து-பஞ்சாப் பள்ளத்தாக்குகளில் நாகரீகத்துடன் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் ஆவர். ஆரியர்களின் வருகையால் திராவிடர்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்பதை வரலாறு சுட்டிச்செல்கின்றது.

கால்டுவெல் வந்து சொல்லும் வரை இந்தியாவின் தனிப்பெரும் தொன்மையான மொழியாக வடமொழியே கருதப்பட்டது.

வழக்கொழிந்த தொன்மையான மொழிகளைப் புறந்தள்ளி இன்னும் தன்னிலை மாறாது நிற்கும் தமிழின் கூறுகளைப் பிற மொழிகளில் காணும் போது மகிழ்ச்சியாகவுள்ளது. சான்றாக,

சீனக்கவிதையொன்று,


“கியாட்டோ பட்டு வியாபாரிக்கு இருமகள்கள்
முத்தவள் இருபது, இளையவள் பதினெட்டு
வீரன் கத்தியால் கொல்லுவான்
ஆனால் இப்பெண்கள் கண்களால்“


முதல் வரி அறிமுக வரியாகவும்,
இரண்டாம் வரி அதன் தொடர்ச்சியாகவும்,
மூன்றாம் வரி முதலிரு வரிகளுக்கும் தொடர்பில்லாத வரியாகவும்,
நான்காம் வரி முதலிரு வரிகளையும் இயைபுபடுத்திச் சொல்லும் தன்மையிலும் அமையும்.இது சீனக் கவிதையின் இலக்கண அமைதியாகும்.

சங்க இலக்கியத்தில்,


காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.

குறுந்தொகை -44. பாலை
வெள்ளிவீதியார்.

செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனபின்பு அவர்களைப் பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலி அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது.)

என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன;
இணைந்து எதிர் வருவாரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன;
நிச்சயமாக, இந்த உலகத்தில்,
நம்மகளும் அவள் தலைவனும் அல்லாத பிறர்,
அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலராவர்.

என்பது பாடலின் பொருளாகும்.

குறுந்தொகை மற்றும் சீனக் கவிதை ஆகியன ஒப்புநோக்கி ஒற்றுமை கண்டு இன்புறத்தக்கனவாகவே உள்ளன..

ஒற்றுமைக் கூறுகள்.

○ இரு பாடல்களும் நான்கு அடிகளைக் கொண்டுள்ளன.
○ இரு பாடல்களிலும் முதல் அடி அறிமுக அடியாகவும்,
○ இரண்டாவது அடி முதலடியின் தொடர்ச்சியாகவும்,
○ மூன்றாவது அடி முதலிரு அடிகளுடன் தொடர்பற்ற அடியாகவும்,
○ நான்காவது அடி முதலிரு அடிகளை இயைபுபடுத்துவதாகவும் உள்ளது.


தொன்மையான இருவேறு நாகரீகங்களில் இருவேறு மொழிக்குடும்பங்களில் தோன்றிய இருமொழிகளின் பாடல் வடிவம், இந்த அளவுக்கு ஒப்புமைத் தன்மையுடனிருப்பது வியப்புக்குரியதாகவுள்ளது.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

நீரின்றி அமையா யாக்கை.



மனிதன் அனுப்பிய இயந்திரங்கள் இன்று அண்டவெளியில் சுற்றித் திரிகின்றன. புதிய புதிய கோள்களைக் கண்டறிந்து அங்கெல்லாம் வாழமுடியுமா? என்று இங்கு இருந்துகொண்டே சிந்தி்த்து வருகிறான் மனிதன். புதிய கோள்களில் முதலில் தேடுவது மனிதன் வாழ அடிப்படைத் தகுதியான நீர் உள்ளதா? என்பதைத் தான்.

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். என்பதை,

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை. என்றும்.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

என்பதை,

நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
என்றும் உரைப்பார் வள்ளுவர்.

இக்குறள்களின் வழியே நீரின்றி உலகில்லை என்ற தெளிவான அறிவியல்க் கொள்கை வள்ளுவர் காலத்தே நிலைகொண்டிருந்தது என்பது விளங்கும்.

இதே சிந்தனையைப் புறநானூற்றுப் பாடலும் முன்வைக்கிறது.


நீரின்றி அமையாத உடல்,

உடல் உணவால் அமைவது!

உணவைவே முதன்மையாகவும் உடையது!

உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்!

எனவே உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்!

நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டிப்படைத்தவராவர்
.


என்ற கருத்தை இப்பாடலில் காண முடிகிறது. இந்த சிந்தனை பழங்காலத் தமிழரின்,

நிலவியல்,
உடல்கூறியல்,
வானியல், குறித்த அறிவியல் அறிவை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

நீரின்றி - நிலமில்லை!
நிலமின்றி - உடலில்லை!

நிலம் - உடல் இரண்டுக்குமே அடிப்படைத் தேவை நீர்!

இந்த நீரை நிலத்துடன் சேர்க்கும் போது உணவு கிடைக்கிறது!

உணவே மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் தலையானதாகவுள்ளது.


மன்னனுக்கு நல்லறம் சொல்லும் புலவர் சொல்கிறார்..

மன்னனே..
பல புகழையும் கொண்டவன் நீ..
உனது புகழ் நீங்காததாக இருக்க வேண்டுமானால் நிறைய நீர் நிலைகளை உருவாக்கு.
நீ உருவாக்கும் நீர் நிலைகள் வெறும் நீர்நிலைகள் அல்ல!
நிலத்தோடு நீரைச் சேர்ப்பது என்பது உடலோடு உயிரை சேர்ப்பதாகும்.. என்றுரைக்கிறார். இதனையே,


முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்து பட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து, தம்புகழ் நிறீஇ:
ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்றுபத்து அடுக்கிய கோடிகடை இரீஇய
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே!
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி;
வான் உட்கும் வடிநீண் மதில்;
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி,
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்
தகுதி கேள், இனி, மிகுதியாள!
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.

புறநானூறு - 18. நீரும் நிலனும்!
பாடியவர்; குடபுலவியனார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் நெடுஞ்செழியன். திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி : பொருண்மொழிக் காஞ்சி எனவும் பாடம்.
என்ற பாடல் விளக்குகிறது.

இதன் பொருள்...

முழங்கும் கடல் முழுவதும் வளைந்த பரந்தகன்ற உலகத்தைத் தம் முயற்சியால் கொண்டு, தம்புகழை உலகில் நிலைக்கச் செய்து தாமே ஆண்ட வலியோர் மரபில் வந்தவனே!

ஒன்றைப் பத்து மடங்குகளாக அடுக்கிய கோடியைக் கடையெண்ணாகக் கொண்டு உன் வாழ்நாள் அமையட்டும்.
நீரில் படியுமாறு தாழ்ந்த குறுகிய காஞ்சி மரத்தின் மலர்களைக் கவ்வும் வாளை இன மீன்களையும், நிறம் பொருந்திய கெடிற்று மீன்களையும் கொண்டது ஆழமான அகழி!

அதனுடன் வானம் அஞ்சுமாறு உயர்ந்த சீரிய நெடிய மதிலையும் கொண்ட வளமுடைய பழைய ஊரினைக் கொண்டு விளங்கும் வலிமையான அரசனே!

நீ செல்கின்ற உலகத்தில் நுகரத்தக்க செல்வத்தை வேண்டினாலும் உலகை ஆளும் அரசர் பலருடைய தோள் சிறந்த புகழை இவ்வுலகில் நிலை நிறுத்த விரும்பினாலும் அவ்விருப்பங்களுக்குத் தக்க செயல் ஒன்றனைக் கூறுவேன் இனி பெருமையுடையவனே கேட்பாயாக,

வெல்லும் போருடைய செழிய!

நீரின்றி அமையாத உடல்,
உணவால் அமைவது!

உணவைவே முதன்மையாகவும் உடையது!

உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவார்!

எனவே உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும்!

நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் கூட்டிப்படைத்தவராவர்.

விதைகளை விதைத்து மழையை நோக்கும் புல்லிய புன்செய் நிலமகன்ற இடமுடைய நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் உதவாது. அதனால் நான் கூறிய மொழிகளை இகழாது விரைவாகக் கடைபிடிப்பாய்!

நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலை பெருகச் செயதல் வேண்டும். இவ்வாறு நிலத்துடன் நீரைக் கட்டியோர் இவ்வுலகில் நிலைக்குமாறு தன் பெயரை உலகுள்ளவரை நிறுத்திய புகழை அடைவர். அவ்வாறு செய்யாதவர் இவ்வுலகினோடு தம்பெயரைச் சேர்த்த புகழை அடையார்.



பாடல் கிளறும் சிந்தனைகள்.


² நீரே நிலத்துக்கும், உடலுக்கும் மதிப்பளிக்கிறது. என்ற அவர்களின் சிந்தனை அவர்களுக்கு இருந்த அறிவியில், உடலியல், நிலவியல் அறிவை அறிவுறுத்துவதாக உள்ளது.

² புகழ் நிலைக்க வேண்டுமானால் நீர் நிலைகளை உருவாக்கு என்று மன்னனுக்கு அறிவுறுத்தும் புலவர் மண் மீதும் மக்கள் மீதும் கொண்ட பற்றுதல் புலனாகிறது.

² இன்றைய அரசு இயற்கை தந்த நீர்நிலைகளைக் கண்டு கொள்ளாததன் விளைவு 1 லிட்டர் குடிநீரின் விலை ரூபாய் 15. பூச்சிக்கொல்லி மருந்தின் ( வெளிநாட்டுக் குளிர்பானங்கள் ) விலை ரூபாய் 30.

² நீரின் தனித்துவத்தையும், அதன் தேவையையும் அறிவியல் அடிப்படையில் நிலவியல் அடிப்படையில் பாண்டியனுக்கு அறிவுறுத்த குடபுலவியனார் என்ற புலவர் இருந்தார்.

² இன்றைய கவிஞர்களுக்கோ இலக்கிய நயத்தோடு…………

டர்ர்ர்ங்குது, சுர்ர்ர்ர்ங்குது என்று பாட்டெழுதவே நேரம் போதவில்லை..

² அரசுக்கோ தம் நாற்காலியைத் தக்கவைத்துக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

புதன், 10 பிப்ரவரி, 2010

சங்ககால விலங்குகள் (படம்)



புவி வெப்பமயம் என்னும் பெரும் சிக்கல் தீர ஒரே வழி இயற்கை.
இயற்கையை நாம் அழித்ததாலேயே புவி வெப்பமயமாதல் என்னும் பேரழிவைச் சந்தித்திருக்கிறோம். ஒரு மரத்தை வெட்டும் போது ஒரு செடியை நடவேண்டும் என்று நமக்குத் தோன்றுவதில்லை.
இயற்கையென்றால், நிலம், நீர், தீ, காற்று, வான் மட்டுமல்ல.
இயற்கையின் ஒரு கூறாக விலங்கினங்களும், பறவைகளும் உள்ளன.

இயற்கையை அழிக்கும் மனிதன் இந்த உயிரினங்களையும் அழிக்கத் தவறியதில்லை.
அதன் விளைவு இயற்கை அரிய காட்சிப் பொருளாக மாறிவருகிறது. மற்றொருபுறம் கண்ணுக்குத் தெரியாமல் இயற்கை பெரும் சீற்றத்துக்குத் தயாராகிவருகிறது.

சங்ககாலத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

சங்கத் தமிழரும் விலங்கினங்களும்.


சங்கத்தமிழர் வாழ்வியலில் விலங்குகள் இயைபுறக் கலந்திருந்தன.

வளர்ப்பு விலங்குகள்.

நாய் வேட்டைக்குப் பயன்பட்டது. வீட்டுக்காவலுக்கு நாய் வளர்க்கும் வழக்கம் அன்றே இருந்தது.

யானை, குதிரை மன்னனின் போருக்குப் பெரிதும் பயன்பட்டன.

கழுதை சுமைகளைத் தூக்கப் பயன்பட்டது.

யானையும், புலியும் ஒன்றையொன்று சண்டையிட்டு வென்றமையைப் புலவர்கள் பல பாடல்களில் எடுத்துரைத்துள்ளனர்.

குரங்கு, மான், கரடி, ஆமா, போன்ற பல்வேறு விலங்குகளைப் பற்றியும் குறிப்புகளைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது..

சங்கத்தமிழரின்,

பண்பாட்டில்,
போரில்,
உணவில்,
போக்குவரத்தில்,
உவமையில்,


எனப் பலநிலைகளிலும் விலங்கினங்கள் தொடர்பான செய்திகளை அறியமுடிகிறது.

சான்றாக,

கீழ்க்காணும் இடுகைகள் பழந்தமிழர் வாழ்வில் விலங்குகள் பெற்ற இடத்தை அறிவுறுத்துவனவாக அமையும்.


1. சகுனம் பார்த்த பன்றி

2. சிறுபிள்ளையும் பெருங்களிறும்

3. விட்டகுதிரையார்

4. அணிலாடு முன்றிலார்

5. இரும்பிடர்த்தலையார்

6. கூவன் மைந்தன்

7. இம்மென் கீரனார்

8. கொட்டம்பலவனார்.

9. துன்பத்தில் இன்பம் காண.
10. விழிக்கட்பேதைப் பெருங்கண்ணனார்.
11. சங்ககால ஒலி கேளுங்கள்
12. வாழ்வியல் இலக்கணங்கள் (அகத்திணைகள்)