கடல்
மணல்,
அலைகள்
ஊருக்கு கிழக்கே உள்ள
பெருங்கடல் ஓர மெல்லாம்,
கீரியின் உடல் வண் ணம்போல்
மணல் மெத்தை; அம்மெத் தைமேல்
நேரிடும் அலையோ, கல்வி
நிலையத்தின் இளைஞர் போலப்
பூரிப்பால் ஏறும்; வீழும்;
புரண்டிடும்; பாராய் தம்பி.
கீரியின் உடல் வண்ணத்தையும் கடற்கரையின் மணல் மெத்தையையும் ஒப்பிட்டு உரைக்கிறார். கடல் அலை வந்து செல்வது கல்விநிலையத்துக்கு
வரும் இளைஞர் போல என்றுரைக்கிறார். இவ்வாறு இயற்கையிடமிருந்து நாம் பெற்றதும் பெவேண்டியதும்
நிறையவுள்ளன.
மணற்கரையில் நண்டுகள்
வெள்ளிய அன்னக் கூட்டம்
விளையாடி வீழ்வ தைப்போல்
துள்ளியே அலைகள் மேன்மேல்
கரையினிற் சுழன்று வீழும்
வெள்ளலை, கரையைத் தொட்டு
மீண்டபின் சிறுகால் நண்டு
பிள்ளைகள் ஓடி ஆடிப்
பெரியதோர் வியப்பைச் செய்யும்.
துள்ளி வரும் அலைகள் வெண்மையான அன்னக்கூட்டத்தைப் போன்றன என்றும் கடற்கரையில்
ஓடி ஆடும் நண்டுகள் வியப்பைத் ஏற்படுத்தும் என்றுரைக்கிறார்.
இயற்கையையின் ஒவ்வொரு அசைவுகளும் வியப்பல்லவா!
புரட்சிக்கப்பால் அமைதி
புரட்சிக்கப் பால்அ மைதி
பொலியுமாம், அதுபோல், ஓரக்
கரையினில் அலைகள் மோதிக்
கலகங்கள் விளைக்கும்; ஆனால்
அருகுள்ள அலைகட் கப்பால்
கடலிடை அமைதி அன்றோ!
பெருநீரை வான்மு கக்கும்;
வான்நிறம் பெருநீர் வாங்கும்!
ஆரவாரமும்
அமைதியும் கலந்த இயற்கையின் அழகல்லவா கடல் அதனைப் பாவேந்தர் கரையினில் ஆரவாரம் செய்யும்
அலைகள் உள்ளே அமைதி காப்பதைக் காட்சிப்படுத்துகிறார். கடல் நீரை வான் முகப்பதும் வானின்
நிறத்தைக் கடல் பெறுவதையும் எடுத்தியம்புகிறார்..
கொண்டும் கொடுத்தும் வாழ்வதல்லவா வாழ்க்கை!
கடலின் கண்கொள்ளாக் காட்சி
பெரும்புனல் நிலையும், வானிற்
பிணைந்தஅக் கரையும், இப்பால்
ஒருங்காக வடக்கும் தெற்கும்
ஓடு நீர்ப் பரப்பும் காண
இருவிழிச் சிறகால் நெஞ்சம்
எழுந்திடும்; முழுதும் காண
ஒருகோடிச் சிறகு வேண்டும்
ஓகோகோ எனப்பின் வாங்கும்.
கடலின் முழுப்பரப்பையும்
காண கண்கள் இரண்டு போதுமா? ஒரு கோடிச் சிறகுகள் இருந்தாலும் காணமுடியுமா? என்று வினவும்
பாவேந்தர் கடல் முழுமையும் காணமுடியாத பேரழகு
என்றுரைக்கிறார்.
கடலுங் இளங் கதிரும்
எழுந்தது செங்க திர்தான்
கடல்மிசை! அடடா எங்கும்
விழுந்தது தங்கத் தூற்றல்!
வெளியெலாம் ஒளியின் வீச்சு!
முழங்கிய நீர்ப்ப ரப்பின்
முழுதும்பொன் னொளி பறக்கும்
பழங்கால இயற்கை செய்யும்
புதுக்காட்சி பருகு தம்பி!
சூரியன் உதயமாவதையும்
மறைவதையும் யாவரும் நாள்தோறும் காண்கிறோமே..அந்தக் காட்சியை அந்த மணித்துளி இரசித்துவிட்டு
அல்லது நிழற்படம் எடுத்துக் கடந்து சென்றுவிடுவோம். ஆனால் பாவேந்தரோ அதனை எழுத்தோவியாமாக்கித்
தந்துள்ளார். காலையில் சூரியன் உதிப்பது தங்கத் தூறல் போலவும் நீர்ப்பரப்பின் ஒளிவீச்சு
பொன் ஒளியாகக் காட்சி அளிப்பது பழங்கால இயற்கையின் புதுக்காட்சி அதைப் பருகு என்கிறார்.
கடலும் வானும்
அக்கரை, சோலை
போலத்
தோன்றிடும்! அந்தச் சோலை,
திக்கெல்லாம் தெரியக் காட்டும்
இளங்கதிர்ச் செம்ப ழத்தைக்
கைக்கொள்ள அம்மு கில்கள்
போராடும்! கருவா னத்தை
மொய்த்துமே செவ்வா னாக்கி
முடித்திடும்! பாராய் தம்பி!
கடலும் வானும் சேர்ந்த காட்சி அழகிலும் அழகு!
சூரியனை மேகங்கள் மறைப்பது இயற்கை. அதை சூரியன் என்னும் சிவந்த பழத்தைப் பெற மேகங்கள்
போராடும்! என்றுரைக்கிறார். கருவானம் செவ்வானமாக மாறும் நிலையை அழகுபட மொழிகிறார்.
எழுந்த கதிர்
இளங்கதிர் எழுந்தான்; ஆங்கே
இருளின்மேல் சினத்தை வைத்தான்;
களித்தன கடலின் புட்கள்;
எழுந்தன கைகள் கொட்டி!
ஒளித்தது காரி ருள்போய்!
உள்ளத்தில் உவகை பூக்க
இளங்கதிர், பொன்னி றத்தை
எங்கணும் இறைக்க லானான்.
இளங்
கதிர் பொன்னிறத்தை எங்கும் இறைத்தமையால் இருள் மறைந்து, பறவைகளும் மகிழ்ந்து சத்தமிட்டன.
எங்கும் வெளிச்சமும் மக்கள் மனதில் கமகிழ்ச்சியும் பரவியது என்கிறார்.
கடல் முழக்கம்
கடல்நீரும், நீல
வானும்
கைகோக்கும்! அதற் கிதற்கும்
இடையினிலே கிடக்கும் வெள்ளம்
எழில்வீணை; அவ்வீ ணைமேல்
அடிக்கின்ற காற்றோ வீணை
நரம்பினை அசைத் தின்பத்தை
வடிக்கின்ற புலவன்! தம்பி
வண்கடல் பண்பா டல் கேள்!
கடலுக்கும் நீல
வானத்திற்கும இடையில் உள்ள தண்ணீர் அழகான வீணை,
காற்றோ அந்த வீணை நரம்பை அசைத்து இன்பம் ஏற்படுத்தும். என கடலின் முழக்கத்தைக் கவினுரை
உரைக்கிறார்
நடுப்பகலிற் கடலின் காட்சி
செழுங்கதிர் உச்சி ஏறிச்
செந்தணல் வீசு தல்பார்!
புழுங்கிய மக்கள்தம்மைக்
குளிர்காற்றால் புதுமை செய்து
முழங்கிற்றுக் கடல்! இவ்வைய
முழுவதும் வாழ்விற் செம்மை
வழங்கிற்றுக் கடல்! நற் செல்வம்
வளர்க்கின்ற கடல்பார் தம்பி!
கடலை
காலை மாலை மட்டுமா எந்த நேரத்தில் பார்த்தாலும் அழகல்லவா! நடுப்பகலிலும் கடலின் காற்றும்
முழக்கமும் இரசிக்கத்தக்கது. இயற்கையின் செல்வங்களுள் கடல் நற்செல்வம் என்றுரைக்கிறார்.
நிலவிற் கடல்
பொன்னுடை களைந்து, வேறே
புதிதான முத்துச் சேலை
தன்இடை அணிந்தாள் அந்தத்
தடங்கடற் பெண்ணாள், தம்பி
என்னென்று கேள்;அதோபார்
எழில் நிலா ஒளிகொட் டிற்று!
மன்னியே வாழி என்று
கடலினை வாழ்த்தாய் தம்பி!
கடலை ஆண்கடல் என்றும் பெண்கடல் என்றும் அழைப்பதுண்டு.
கடல், ஒவ்வொரு நேரத்திலும் புதிது புதிதாகக் காட்சியளிக்கும். அதனைப் பாவேந்தர். பொன்போன்ற
உடை கநளைந்த கடற்பெண் முத்துச்சேலையைத் தன் இடையில் அணிந்தாள். ஆம் எழில் நிலா வந்தமையால்
இரவில் கடல் தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டது என்றார்.
இயற்கையின் கொடையான கடலை பாவேந்தர் சொல்வது போல
வாழ்த்துவோம். இயற்கையின் ஒவ்வொரு அழகியலையும் போற்றுவோம்