வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 19 அக்டோபர், 2021

தேடுபொறிகளும் செயற்கை நுண்ணறிவுத் தமிழும்


மனிதர்களின் அறிவை இயற்கையான அறிவு, செயற்கையான அறிவு என வகைப்படுத்த இயலும். குலவித்தை கற்றுப் பாதி, கல்லாமற் பாதி என் பழமொழி கூட இக்கருத்தையே எடுத்துரைக்கிறது. இதையே வழக்கில் தன்னறிவு, சொல்லறிவு எனவும் கூறுவதுண்டு. மனிதர்களுக்கு எப்படி கல்வி என்ற முறை செயற்கையாக தம் அறிவை வளர்த்துக்கொள்ள உதவுகிறதோ அதுபோல,  கணினி  அல்லது  இயந்திரங்கள்  ஆகியவற்றை வைத்துக்கொண்டு அவற்றுக்குக் கற்பித்தல் வழியாக நுண்ணறிவை உருவாக்குகின்ற முறையே செயற்கை நுண்ணறிவுத்திறன் (Artificial Intelligence) என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு துறைகளிலும் இன்று செயற்கை நுண்ணறிவுத் திறன் வளர்ந்து வருகிறது. தேடுபொறிகளுக்குத் தேவையான தமிழ் செயற்கை நுண்ணறிவுக் கூறுகளை எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.