வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 24. புகழ்

 


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு.-231

ஈதலால் வரும் புகழே உயிர்க்கு சிறந்த ஊதியமாகும்

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ். -232

கொடுக்கும் பண்புடையாரையே இவ்வுலகம் புகழ்ந்து பேசும்

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்.-233

உயா்ந்த புகழே இவ்வுலகில் நிலையானது, அழியாதது    

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு.-234

அறிவுடையவரைவிட, வள்ளல்களையே உலகம் போற்றும்    

நந்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.-235

கேட்டிலும், இறப்பிலும் புகழ் பெறுபவர்களே வித்தகர்கள்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.-236

எத்துறையில் தோன்றினாலும் புகழுடன் தோன்றுக

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்.-237

புகழுக்கும் ஏனை இகழுக்கும் காரணம் நாமே! 

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்.-238

புகழ் பெற வாழாதவா் தம் வாழ்வில் பழியையே சுமப்பா்

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.-239

புகழின்றி மறைந்தவரைத் தாங்கும் நிலம்கூட வளம் குன்றும்

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய

வாழ்வாரே வாழா தவர்.-240

புகழுடன் வாழ்பவரே உயிருள்ளவா்,

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 23. ஈகை

 


 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

குறியெதிர்ப்பை நீர துடைத்து. - 221

வறியவருக்கு வழங்குவதே ஈகை

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று. - 222

பெறுதல் தீது. ஈதல் நன்று

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே யுள.-223

ஒருவன் நிலையறிந்து அவன் கேட்கும் முன்பே கொடு   

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகங் காணும் அளவு. -224

இல்லாமையில் வாடியவர் இன்முகம் காணக் கொடுப்பதே ஈதல்

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின். -225

கொடுக்கும் பண்புடையவா் துறவிகளைவிட மேலானவா்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி.- 226

பசித்தவருக்கு உணவளிப்பது ஒருவரின் மிகச்சிறந்த சேமிப்பு

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது.-227

வள்ளல் பசியால் என்றும் வாடும் நிலை வராது

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை

வைத்திழக்கும் வன்க ணவர்.-228

கொடுத்தலின் இன்பம் அறியாதவரே சேமித்துவைத்து இழப்பா்

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்.-229

தனித்து உண்பது பிச்சையெடுத்தலைவிட இழிவானது    

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை.-230

ஈகைப் பண்பில்லாத நிலை சாவினும் கொடியது

சனி, 29 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 22. ஒப்புரவறிதல்




 

 கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு

என் ஆற்றுங் கொல்லோ உலகு.-211

கைம்மாறு கருதாதவா்கள் மழையைப் போன்றவா்கள்    

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தற் பொருட்டு. -212

முயன்று ஈட்டிய பொருள் யாவும் தகுந்தவா்க்கு உதவுவதற்கே

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.-213

உதவும் மனநிலையைவிட உயா்ந்தது எவ்வுலகிலும் இல்லை

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும். -214

உதவி வாழ்பவனே உயிர்வாழ்பவனாகக் கருதப்படுவான்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.-215

பேரறிவாளனின் செல்வமானது ஊருணி நீர் நிறைந்தது போன்றது

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.-216

பயன்தரும் பழமரம் பழுத்தது போன்றது நல்லவனின் செல்வம்

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.-217

பெருந்தன்மையாளனின் செல்வம் மருந்துமரம் போன்றது

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்.-218

அறிவுடையவர்கள் இல்லாத காலத்தும் உதவவே எண்ணுவா்

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.-219

உதவ இயலாத நிலையே உதவக்கூடியவனின் வறுமை ஆகும்

ஒப்புரவினால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்க துடைத்து.- 220

உதவி செய்தலால் வரும் துன்பமும் வரவேற்கத்தக்கதே

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 21. தீவினையச்சம்


தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவார்

தீவினை என்னும் செருக்கு. -201

தீவினைகளை செய்ய ஒழுக்கமுடையோர் அஞ்சுவா்

தீயவை தீய பயத்தலான் தீயவை

தீயினும் அஞ்சப் படும். -202

தீமை விளைவிப்பதால் தீயைவிடக் கொடியது தீவினை

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல். -203

தீங்கிழைத்தவருக்கும் தீமை செய்யாமையே சிறந்த அறிவு

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. -204

மறந்தும் பிறருக்குத் தீமைசெய்யாதே, அறம் உன்னை வருத்தும்

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்

இலனாகும் மற்றும் பெயர்த்து. -205

வறுமைக்கு அஞ்சி தீமை செய்தால் மீண்டும் வறுமையடைவாய்

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால

தன்னை அடல்வேண்டா தான். -206

தீவினைகள் வராமலிருக்க தீமை செய்யாமலிக்கவேண்டும்

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும்.-207

எதிரியிடமிருந்தும் தப்பலாம், நாம் செய்த தீவினைகள் விடாது

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை

வீயாது அடியுறைந் தற்று.-208

தீவினை செய்வாருடன், தீமை நிழல்போலத் தொடரும்   

தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும்

துன்னற்க தீவினைப் பால்.-209

உன்னை விரும்பி நீ வாழவிரும்பினால் தீமை செய்யாதே

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்

தீவினை செய்யான் எனின். -210

தீவினை செய்யாதவனே கேடில்லாதவன்

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 20. பயனில சொல்லாமை

 


பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும். - 191

பயனில்லாத சொற்களைக் கூறுபவனை யாவரும் இகழ்வா்

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலிற் றீது.-192

தீய செயலைவிடவும் தீமையானது பயனில்லாத சொல்

நயனிலன் என்பது சொல்லும் பயனில

பாரித் துரைக்கும் உரை.- 193

பயனில்லாத பேச்சே ஒருவன் நயனில்லாதவன் என்றுரைக்கும்

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரப்

பண்பில்சொல் பல்லா ரகத்து. - 194

பயனும், பண்புமில்லாத சொற்கள் நன்மையைக் கெடுக்கும்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.-195

பயனில்லாத சொற்கள் ஒருவரின் மேன்மையை நீக்கும்

பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி யெனல்.-196

பயனில்லாத சொற்களைப் பேசுவோர் மனிதருள் பதா் போன்றவா்

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்

பயனில சொல்லாமை நன்று. - 197

நயமிலாத சொல் பேசினாலும், பயனிலாத சொல் பேசாதே

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.- 198

அறிவுடையவா்கள் பயனில்லாத சொற்களைக் கூறார்    

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர். -199

மாசற்றவா்கள் பயனில்லாதவற்றைப் பேசமாட்டார்கள்   

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல். - 200

பயனுள்ள சொற்களைப் பேசி, பயனிலாச் சொற்களை தவிர்க்க


புதன், 26 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம்- 19. புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.- 181

ஒருவன் தீமை செய்தாலும், புறங்கூறாமை சிறந்தது 

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறனழீஇப் பொய்த்து நகை. - 182

பொய்யான முகமலர்ச்சி, தீமைகளுள் தீமையானது

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்

அறங்கூறும் ஆக்கத் தரும். - 183

புறங்கூறி பொய்யாக வாழ்வதைவிட சாதலே நன்று

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்னின்று பின்நோக்காச் சொல் - 184

நேரில் கடுஞ்சொல் கூறினும், மறைவில் புறஞ்சொல் கூறாதே

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும். - 185

புறங்கூறுவான் சொல் அவன் தீயவன் என்பதைக் காட்டும்

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்

திறன்தெரிந்து கூறப் படும்.- 186

நீ ஒருவரைப் புறம்பேசினால் உன்னை ஒருவர் புறம்பேசுவார்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.- 187

நட்பின் அறியாதவா்கள் புறங்கூறி நட்பைப் பிரித்துவிடுவா்

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்

என்னைகொல் ஏதிலார் மாட்கு. - 188

நண்பனையே தூற்றுபவன் எதிரியை தூற்றாமல் விடுவானா  

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்

புன்சொல் உரைப்பான் பொறை.- 189

புறம்கூறுவோனையும் அறம் கருதியே நிலம் தாங்குகிறது

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்   

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. -190

பிறா்குற்றத்தைக் காண்பதுபோல் உன் குற்றத்தைக் காண்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் -18. வெஃகாமை


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும். - 171

பிறா் பொருளை விரும்பியவனின் குடியும்கெட்டு குற்றமும் சேரும்

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவன்மை நாணு பவர்.- 172

நடுநிலையாளர் பிறா் பொருளை விரும்பாதவராவா்

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர். - 173

அற இன்பம் பெரிதென உணா்ந்தவா்  சிற்றின்பங்களை விரும்பார்

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர். - 174

புலன்களை வென்றவா் வறுமையால் பிறா் பொருளை விரும்பார்

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின். - 175

பிறா் பொருளை விரும்பாமையல்லவா அறிவு  

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும். - 176

அருள்வழியென்பதே நல்வழி, பொருள் வழியே தீயவழி

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற் கரிதாம் பயன்.- 177

தவறாக சேர்த்த செல்வம் தேவையான நேரத்தில் பயன்படாது

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள். - 178

செல்வம் குறையாமலிருக்க வழி பிறர்பொருளை விரும்பாமை

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன்அறிந் தாங்கே திரு. - 179

பிறா்பொருளை விரும்பாதவரிடமே செல்வம் தங்கும்

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னுஞ் செருக்கு. - 180

ஆசை அழிவின் வழி, ஆசையின்மையே வெற்றியின் வழி 

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

திருக்குறள் - அதிகாரம் - 17 - அழுக்காறாமை


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு.- 161

பொறாமையின்றி வாழ்வதே ஒழுக்கத்தின் நெறி

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.- 162

பொறாமையின்மையே பேறுகளுள் பெரும் பேறு

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்.- 163

அறமும், ஆக்கமும் வேண்டாதவரே பொறாமைப்படுவா்

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து.-164

பொறாமையால் தீயவை செய்யாதவரே அறிவுடையார்

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்காயும் கேடீன் பது.- 165

பொறாமைப்படுபவருக்கு வேறு பகை தேவையில்லை

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்.- 166

பொறாமைப்படுபவன் அடிப்படை வசதிகளின்றிக் கெடுவான்

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.- 167

பொறாமைப்படுபவனிடம் திருமகள் நீங்கி மூதேவி தங்குவாள்

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.- 168

பொறாமையே ஒருவனின் செல்வத்தை அழித்துக் கெடுக்கும்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.- 169

நல்லவனின் உயா்வும், தீயவனின் தாழ்வும் நோக்கத்தக்கது

அழுக்கற்று அகன்றாரும் இல்லைஅஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.-170

பொறாமையின்மையே  ஒருவனின் உயா்வுக்கு அடிப்படை