வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 12 ஜனவரி, 2023

திரிகடுகம் - நல்லாதனார்

 


பதினெண் கீழ்க்கணக்கு கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 101 வெண்பாக்களால் பாடப்பட்டது. சுக்கு, மிளகு, திப்பிலி எனும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தருவதுபோல ஒவ்வொரு பாடலிலும் மூன்று நற்கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

 

விழுமியம் - சான்றாண்மை

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்

திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்

கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்கு.   6

 

பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும்,

தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும்,

பிறர்க்கு கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.

 

செவ்வாய், 10 ஜனவரி, 2023

இனியவை நாற்பது


இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் இயற்றியது. 40 வெண்பாக்களைக் கொண்டது. இனியது என்பது இனிமையானது. வாழ்க்கையில் செய்யத்தக்க நற்பண்புகளை இனியது என ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். இவர் கூறும் நற்பண்புகளை வாழ்க்கையில் கடைபிடித்தல் இனிது.

 

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே

நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே

முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே

தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. - 1

 

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது.

அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது.

முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது.

அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

செவ்வாய், 3 ஜனவரி, 2023

பரிவு

 


பரிவு (sympathy) என்பது அடுத்தவர் படும் துன்பத்தைக் கண்டு வருந்துவதும், அவர்களுக்கு இயன்ற உதவி செய்வதையும் குறிக்கும். மனிதர்களுக்குச் செய்யும் உதவி மனிதாபிமானம் என்றும் உயிர்களுக்குச் செய்யும் உதவி சீவகாருண்யம் உயிரிரக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. தலைவியின் மனநிலைகளை நன்கறிந்தவள் தோழி. அதனால் தலைவி மனத்துயரடையும் நேரங்களில் தோழி தன்னால் இயன்ற ஆறுதல் தெரிவிப்பாள். அவள் துயரை மாற்றுவதற்கான வழிகளைத்தேடுவாள். அவ்வாறு தலைவியின் துன்பத்தை நீக்கிய தோழியின் கூற்றாக இப்பாடல் அமைகிறது.