தம் ஒவ்வொரு அசைவுகளாலும் நம்மை அவர்களின் உலகத்துக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல்வாய்ந்தவர்கள் குழந்தைகள் ஆவர்.
தமிழ் இலக்கியங்களுள் “பிள்ளைத் தமிழ்” என்றொரு இலக்கியம் குழந்தைகளின் ஒவ்வொரு பருவங்களையும் அழகுபட மொழிவதாகும்.
குழந்தைகளின் வளர்ச்சியில் நடைபயிலும் பருவம் குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தக் காலத்தில் குழந்தைகள் நடைவண்டியைப் பயன்படுத்தினர். இதனை..
- சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் பட்டினப்பாலையில் சங்க கால மகளிர் புள்ளோப்புதல் பற்றிய செய்தியைச் சொல்லவந்த புலவர்,
சங்க காலமகளிர் தானியங்களைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் போது தங்கள் காவலையும் மீறி அங்கு தங்கிவிடும் புள்ளினங்களை தம் காதில் அணிந்திருந்த பொன்னாலான அணிகலன்களைக் கொண்டு விரட்டினர்.
என்று குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு புள்ளினங்களை விரட்டுவதற்காக எறிந்த பொன்னாலான அணிகலன்கள் வீதிகளெங்கும் சிதறிக்கிடந்தன. அவ்வாறு சிதறிக் கிடந்தமையால் சிறுவர்கள் உருட்டும் சிறுதோ்கள் (முக்கற்சிறுதேர்- சிறு வண்டி) செல்வதற்குத் தடை ஏற்பட்டது. என்று சங்ககால செல்வநிலையும் பழக்கவழக்கத்தையும் குறிப்பிட்டுச் செல்கிறார். இச்செய்தியை,
'நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,
பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும் '
(பட்டினப் பாலை 20-25)
என்னும் பாடலடிகள் விளக்கும்.
- மேலும் தச்சர்களின் கலைத் திறனை..
தச்சச் சிறார் நச்சப் புனைந்த
ஊரா நல்தேர் உருட்டிய புதல்வர்
என்ற பாடலடிகள் எடுத்தியம்புகின்றன. தச்சர்களின் பிள்ளைகளும் விரும்பும்படியாக செய்யப்பட்ட நல்ல சிறுதேர்களை உருட்டித் திரிந்தனர் பிள்ளைகள் என்ற அக்கால வழக்கம் சுட்டப்படுகிறது இவ்வடிகளால் நுவலப்படுகிது.
இவ்விரு பாடல் குறிப்புகளின் வழி அறியலாகும் கருத்துக்கள்
- மரத்தால் செய்யப்பட்ட நடைவண்டியை சங்ககாலத்தில் குழந்தைகள் நடைபயில பயன்படுத்தினர்.
- குழந்தைகளின் நடைவண்டியை உருட்ட மகளிர் தூக்கி எறிந்த தங்கத்தாலான அணிகலன்களே தடையாக இருந்தன என்ற கருத்து அக்கால செல்வநிலையை உணர்த்துகிறது.
- தனக்குக் கிடைக்காத அரிய பொருளின் மீதுதான் ஒரு குழந்தைக்கு இயல்பாக ஈடுபாடு எழும். தச்சர்களின் குழந்தைகளுக்கு தச்சுப்பொருள்களின் மீது அந்த அளவுக்கு ஈடுபாடு இருக்காது. ஆனால் தச்சர்களின் குழந்தைகளே விரும்பும் அளவுக்கு சிறுநடைவண்டிகளை அக்காலத் தச்சர்கள் செய்தார்கள் என்ற குறிப்பின் வழி அக்கால தச்சுக்கலையின் சிறப்பு உணர்த்தப்படுகிறது.
புறப்பாடல் ஒன்று...
படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே
|
(புறம் : 188)
|
குழந்தையின் நடையை அழகாக “குறுகுறு” என்னும் சொல்லாட்சிகளால் விளக்கிச் செல்கிறது.
இன்றைய தலைமுறையினரின் குழந்தை வளர்ப்பு முறைக்கு சிறு எடுத்துக்காட்டு இடதுபக்கமுள்ள படம்..
(மாறிப்போன நம் மரபுகளை எடுத்துக்காட்டவே இவ்விடுகை.)


