வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 31 டிசம்பர், 2022

நெய்தல் கார்க்கியார்

 



சங்க இலக்கியத்தில் தலைவனின் பிரிவு தாங்காமல் வருந்தும் தலைவியின் மனநிலையைப் பாடுவன நெய்தல் பாடல்கள் ஆகும்.இவ்வுணர்வை இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என உரைப்பர்.

நெய்தலின் முதல், கரு, உரி ஆகிய முப்பொருளும் சிறப்பாகப் பாடப்பட்டமையால் இப்புலவர் நெய்தல் கார்க்கியார் என்ற பெயர் பெற்றார்.

இன்று பிரிவு என்ற சொல் பெரிதும் பொருளற்றதாகிவிட்டது. 

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் பிரிவின் இடைவெளிகளைக் குறைத்துவிட்டன.

செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க்கு உரை (குறள் – 1151) என்ற வள்ளுவரின் குறள் இங்கு நோக்கத்தக்கது.

குறுந்தொகையில் களவுக்காலத்தை நீட்டிக்கும் தலைவனிடம் அவன் தலைவியை விரைந்து திருமணம்செய்து கொள்ளாவிட்டால் இவள் இறந்துவிடுவாள் என்று அவள் தோழி நாகரிகமாக உரைக்கிறாள்.

வெள்ளி, 30 டிசம்பர், 2022

அம்பல் ஊர்


நாலுபேர் நாலுவிதமா பேசுவாங்க...

ஊர் என்ன பேசும்..

அடுத்தவங்க என்ன நினைப்பாங்க...

உலை வாய மூடலாம் ஊர்வாய மூடமுடியுமா..

கிசுகிசு பேசுதல்

என்றெல்லாம் காலந்தோறும் அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவது குறித்து அறிவோம்..

அன்று கிணற்றடி, குளத்தங்கரை, ஆற்றங்கரைகளில் பேசப்பட்ட ஊர்க்கதைகள் இன்று சமூகத்தளங்களில் பேசப்படுகின்றன.

அடுத்தவர்களைப் பற்றி அதிகம் பேசுவது ஆண்களா? பெண்களா? என்றால் இருவரும்தான்..

இருந்தாலும் ஆண்களைவிடப் பெண்களே அதிகமாக அடுத்தவர்களைப் பற்றிப் பேசுவார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

வியாழன், 27 அக்டோபர், 2022

ரோமியோ ஜூலியட் - புரட்சிக்கவி - கொடிமுல்லை ஒப்பீடு

 

ரோமியோ ஜூலியட் - புரட்சிக்கவி - கொடிமுல்லை ஒப்பீடு

சேக்சுபியர், பாரதிதாசன், வாணிதாசன் ஆகியோர் படைப்புகளை ஆராய்ந்து காதலில் வீரமும், வீரத்தில் காதலும் இருப்பதாக இக்கட்டுரை சான்றுகளுடன் இயம்புகிறது.

காதலும் வீரமும் தமிழரின் இருகண்கள். காதலில் வீரமும், வீரத்தில் காதலும் நுட்பமான உள்ளீடுகளாக உள்ளன, மொழி எல்லைகளைக் கடந்து இவ்வுணர்வுகள் இலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. வில்லியம் சேக்சுபியரின், ரோமியோ ஜூலியட், பாவேந்தர் பாரதிதாசனின் புரட்சிக்கவி, வாணிதாசனின் கொடிமுல்லை ஆகிய படைப்புகளில் காதல் அடிக்கருத்தியலாக இருந்தாலும் காதலில் வீரத்தையும், வீரத்தில் காதலையும் படைப்பாளர்கள் நயம்பட பதிவுசெய்துள்ளனர். ஒப்பீட்டு நிலையில் இக்கதைக்களங்களின் சிறப்பியல்புகளை இக்கட்டுரை ஆராய்கிறது.

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

கிளி பேசுகிறது! - விந்தன் (சிறுகதை)

 

கிளி பேசுகிறது! - விந்தன் (சிறுகதை)

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். தமிழ்நாடு அரசு 2008 - 2009 இல் இவரது நூல்களை நாட்டுடமை ஆக்கியது. தமிழரசு" மாத இதழில் அச்சுக் கோப்பவராகச் சேர்ந்தார். தமிழரசுக்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சுக் கூடத்தில் வேலை கிடைத்தது. கையெழுத்துப் பிரதிகளிலிருந்து அச்சுக்கோக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார்.  தாமும் எழுத வேண்டும் என்ற அவா அவருக்கு ஏற்பட்டது. கல்கி கிருஷ்ணமூர்த்தியால் 1941ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்கி இதழ், விந்தன் வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை ஏற்படுத்தியது.

 

கதைக் கரு

சமூக நீதி, தன்மானம், விடுதலை, நன்றி, சுயநலம் என வாசிப்பாளர் அறிவுக்கேற்ப பல சிந்தனைகளைப் பெறமுடியும்.

கதாபாத்திரங்கள்

தாய் கிளி, கிளிக்குஞ்சு, சிட்டுக் குருவி, இரு சிறுமிகள்

கதைச் சுருக்கம்

 

ஒரு பெரிய பங்களாவைச் சுற்றிலும் பெரிய தோட்டம் இருந்தது.  அந்தத் தோட்டத்திலிருந்த ஒரு மாமரப் பொந்தில் தாய்க்கிளியும், கிளிக்குஞ்சும் வாழ்ந்து வந்தன. கிளிக்குஞ்சுக்கு வானத்தையும் பிற பறவைகளையும் பார்த்துத் தானும் பறக்கவேண்டும் என ஆசை. அவசரப்படாதே காலம் வரும்வரை காத்திரு எனத் தாய்க்கிளி

சொல்லியும் கேட்காமல் சிட்டுக் குருவி பறப்பதைப் பார்த்துத் தானும் பறந்து கீழே விழுந்தது கிளிக்குஞ்சு. கிளிக்குஞ்சின் ஓசை கேட்டு அந்த பங்களாவில் வாழும் ஒரு சிறுமி தூக்கி தன் அக்காவுடன் சேர்ந்து அதை வளர்த்தாள். அந்த சிறுமிகள் காட்டிய அன்பும் அவர்கள் தன்னால் பெற்ற ஆனந்தத்தையும் எண்ணி தனக்குள் பேசிக்கொண்ட கிளி எப்படியாவது இவர்களிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் எனக் காத்திருந்தது. அப்படியொரு வாய்ப்பும் கிடைத்தது. சிறுகு வளர்ந்துவிட்ட இந்தக் கிளி தன் அன்புக்குக் கட்டுப்பட்டது என அக்காவும், இல்லை சிறகுகளை வெட்டாவிட்டால் பறந்துவிடும் எனத் தங்கையும் சொல்ல. இருவருக்கும் இடையில் நடந்த உரையாடலில் கிளி என் அன்புக்குக் கட்டுப்பட்டது அது என்னை விட்டுப் போகாது என கூண்டைத் திறந்தாள் அக்கா.

இப்படியொரு வாய்ப்புக்காகத்தானே காத்திருந்தேன் என சுதந்திரமாகப் பறந்தது அந்தக் கிளி..

 

கிளிக்குஞ்சின் மனதில் தோன்றிய எண்ணங்களாக

ஆசிரியர் கூறுவன

அம்மா சொன்னதைக் கேட்காமல் அவசரப்பட்டுவிட்டோமே..

இந்தச் சிறுமிகளிடம் அடிமைப்பட்டுவிட்டோமே

இவர்கள்  காட்டும் அன்பும், உணவும் எனக்குத் தேவையில்லை

எனக்குத் தேவை சுதந்திரம்

நாய் நன்றியுள்ளது என்று சொன்னாலும் தன்மானமின்றி வாழ்வதும் வாழ்வா?

என கிளியின் எண்ணங்களாக ஆசிரியர் பல செய்திகளைப் பதிவுசெய்துள்ளார்.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்று நாம் சொன்னாலும். பறவைகளின் மொழியை மனிதர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை என்ற கருத்தை விந்தன் நுட்பமாக எடுத்துரைக்கிறார்.

ஆசிரியரின் புலப்பாட்டுநெறி..

எல்லோருக்கும் பொதுவாக இயற்கை அளிக்கும் அந்தச் செல்வத்தை பங்களாவில் குடியிருந்த ஒரு சிலர்மட்டும் ஏகபோகமாக அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், தங்களைப் போன்ற மனிதர்களைத்தான் அவற்றை அனுபவிக்க முடியாதபடி அவர்களால் தடுக்க முடிந்ததே தவிர, எங்களைப் போன்ற புள்ளினங்களை அவ்வாறு தடுக்க முடியவில்லை.

என பறவையினங்களின் சுதந்திரத்தையும் மனிதர்களின் சுயநலத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.

 

எங்களுடைய தயவு அவர்களுக்கு இல்லை யென்றால், அந்த இயற்கைச் செல்வத்தில் கொஞ்சமாவது அவர்கள் அனுபவிக்க முடியுமா?

என்ற கிளியின் கேள்வி வழியாக இயற்கையைப் பாதுகாப்பதில் பறவைகளின் பங்கை நினைவுபடுத்துகிறார்.

நாங்கள் அடிமைகளாயிருக்கவுமில்லை; விடுதலை கோரவும் இல்லை. நாடு எங்களுடையது; காடு எங்களுடையது; கடல் எங்களுடையது, வானம் எங்களுடையது; மலைகள் நதிகளெல்லாம் எங்களுடையவை; மரம், செடி, கொடி எல்லாமே எங்களுடையவைதான்.

என மனிதர்களுக்கும் பறவைகளுக்குமான வேறுபாட்டை இயம்புகிறார்.

ஆனால் எனக்கோ பழமும் வேண்டியிருக்கவில்லை; பாலும் வேண்டியிருக்கவில்லை. யாருக்குவேண்டும், இந்தப் பழமும் பாலும்? என கிளியின் விருப்பத்தைப் பதிவுசெய்துள்ளார்.

நிறைவாக..

கிளி பேசுகிறது..

உண்மையைப் பேசுகிறது.

மனிதர்களின் அறியாமையைப் பேசுகிறது.

மரங்களை வளர்ப்பதில் பறவைகளின் பங்கைப் பேசுகிறது.

அறிவுரைகளைப் புறக்கணிக்கக் கூடாது என்று பேசுகிறது..

நாயின் நன்றியைக் கொண்டாடினாலும் அதன் தன்மானமில்லா வாழ்வை இழிவாகப் பேசுகிறது.

கிளிக்குத் தேவை பாலும் பழமும் இல்லை! விடுதலை விடுதலை விடுதலை என சத்தமாகப் பேசுகிறது..

சிட்டுக்குருவியைப் பார்த்துப் பறக்க ஆசைப்பட்ட கிளிக்குஞ்சு, நாயைப் பார்த்து இப்படி வாழக்கூடாது என முடிவுசெய்தது.

நாயைப் போல நன்றியுள்ள விலங்கு என பெயரெடுப்பதைவிட கிளிக்குஞ்சைப் போல சுதந்திரமாக வாழ்வதே நல்வாழ்வு என்று இக்கதை வழியாக விந்தன் எடுத்துரைத்துள்ளார்.

 

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

கோவிந்தசாமியுடன் உரையாடல் - மகாகவி பாரதியார்


ர்வ மத சமரசம் -

கோவிந்தசாமியுடன் உரையாடல் - மகாகவி பாரதியார்

பாரதியார், இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் கவிதைகள் வாயிலாக மக்கள் மனதில் சுதந்திர உணர்வை ஊட்டியவர். இவர் கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர், சமூக சீர்திருத்தவாதி, மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் தன்மைகொண்டவர். . 

'எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தார் அப்பா யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்' என்று தன்னைச் சித்தனாகவும் அறிமுகம் செய்துகொண்டவர். சி.எஸ்.முருகேசனின் ‘பாரதி கண்ட சித்தர்கள்’ என்ற நூலில் பாரதி கண்ட சித்தர்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளார். பாடப்பகுதியில் இடம்பெற்ற கோவிந்த சுவாமியுடன் உரையாடல், பாரதி-அறுபத்தாறில் இடம்பெற்றுள்ளது. 

கோவிந்தசாமி என்னும் ஞானியை முன்பே அறிந்திருந்த பாரதி அவர் மறைந்த தம் பெற்றோரின் உருவத்தைக் காட்டியதாலும், அவரின் அன்பாலும் ஞானத்தாலும் அவரைக் குருவென்று சரணடைந்தார். கோவிந்தசாமியால் மரணபயம் நீங்கி வலிமை பெற்றதாகக் குறிப்பிட்ட பாரதிஅந்த கோவிந்த சாமியை மீண்டும் சந்தித்தபோது நடந்த உரையாடலாக இப்பாடப்பகுதி அமைகிறது. 

இவ்வுரையாடலின் வழியாக பாரதியார் ஒற்றுமையை எடுத்துரைத்துள்ளார். 


கோவிந்த சுவாமியுடன் உரையாடல்


''மீளவுமங் கொருபகலில் வந்தான் என்றன்

மனையிடத்தே கோவிந்த வீர ஞானி,

ஆளவந்தான் பூமியினை,அவனி வேந்தர்

வியாழன், 10 மார்ச், 2022

நீ நல்கிய வளனே

 

தனக்கு இருக்கும் பகை இன்னது இன்னது என்று 

அடுக்கிக் காட்டிப் புலவர் தன் வறுமை நிலையை விளக்குகிறார்.

யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப

இழை வலந்த பல் துன்னத்து

இடைப் புரை பற்றி, பிணி விடாஅ

ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த

பேஎன் பகை என ஒன்று என்கோ?          

உண்ணாமையின் ஊன் வாடி,

புதன், 9 மார்ச், 2022

பெருவிறல் நாடே!


      பாரியின் பறம்பு நாட்டில், புன்செய் நிலத்தில் வரகு, தினை, எள் போன்ற பொருள்கள் நிறைய விளைந்தன. அந்நாட்டு மக்கள் மிகுந்த அளவில் கள்ளும் ஊனும் உண்டார்கள். இது போன்ற புது வருவாயுடைய வளமான நாடு இனி அழிந்துவிடுமோ என்று எண்ணிக் கபிலர் புலம்புவதாக இப்பாடல் அமைகிறது.

செவ்வாய், 8 மார்ச், 2022

நன்றி மறக்கலாமா..


பசுவின் முலையை அறுத்தல், தாலி அணிந்த பெண்ணின் கருவைச் 

சிதைத்தல் சான்றோரை அடித்தல், இவை பாவச் செயல்கள்.

இப் பாவங்களைக் கழுவாய் செய்து போக்கிக்கொள்ளலாம். ஆனால், 

நிலநடுக்கத்தால் நிலமே மேடு பள்ளமாக, பள்ளம் மேடாக 

பெயர்வதானாலும் ஒருவன் செய்த உதவியை மறந்து கொன்றோர்க்கு 

அவற்றின்  விளைவுகளிலிருந்து பிழைக்கும் வழி இல்லை என்றும் அறம் 

பாடுகிறது.

(எந்நன்றி கொன்றாற்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு - திருக்குறள்)

செவ்வாய், 1 மார்ச், 2022

எண்ணி விளையாடுதல்


சங்க இலக்கியத்தில் 36 வகையான விளையாட்டுகள் குறித்த குறிப்புகள் உள்ளன. அவற்றுள் எண்ணி விளையாடுதல் என்பதும் ஒரு வகை விளையாட்டு ஆகும்.  மரத்தையோ,நாவாயையே,விலங்குகளையோ பறவையையோ இருபாலர் ஒன்று,இரண்டு என்று எண்ணிப் பொழுது போக்காக ஆடுதல். இவ்விளையாட்டின் இயல்பாகும். இந்த விளையாட்டு பற்றிய குறிப்புள்ள ஒரு நற்றிணைப் பாடலைக் காண்போம்..

தோழி தலைவனிடம், யாம் பகலில் இங்கிருந்து மாலையில் பாக்கம் சென்றால் தலைவி அங்கு வருந்துவாள்.

அவளை அங்கு வருக என அழைக்கும் வலிமையும் எமக்கில்லை. எனவே எம் பாக்கத்தினர் 

மகிழ்ந்து கொண்டாடுமாறு நீ உன் தேரில் வருக என திருமணத்திற்குத் தூண்டினாள்.

இளையோன் உள்ளம்


    தலைவனும், தலைவியும் சுரத்தின் வழியே செல்வதைக் கண்டவர்கள், இக்கொடிய சுரத்தில் மென்மை பண்புடைய தலைவியை அழைத்துச் செல்லும் இந்த இளைஞன் மனம் இடியைவிடக் கொடியது எனக் கவலைப்பட்டுக் கூறினர்.


தலைவனும், தலைவியும் இரவில் காட்டு வழியில் செல்கின்றனர். 

அவர்களைப் பார்த்தவர்கள் பேசிக்கொள்கின்றனர்.

அவள் மென்மையானவள்.

அவள் முன்னே செல்ல அவன் பின்னே செல்கிறான்.

புயலும் மழையுமாக இருக்கும்போது இடிக்கும் இடியைக் காட்டிலும் 

கொடியது தலைவன் இந்த இளைஞன் உள்ளம்.

ஏனென்றால்,

மாலையில் நேரத்தில், குண்டும் குழியுமாக இருக்கும் குன்றத்து வழியே 

அழைத்துச் செல்கின்றனான்.

அக்குன்றம் பெரிய குளிர்ச்சியையுடையது.

உலவை என்னும் பேய்க்காற்று வீசுகிறது. ஈந்து தழைத்திருக்கிறது.

இண்டங்கொடி முள்ளுடன் படர்ந்திருக்கிறது.

வழியில் செல்வோர் தலைமேல் புலிக்குட்டிகள் பாய்கின்றன.

அவை இரை தின்ற குருதியோடு கூடிய வாயை உடையவை.

இப்படிப்பட்ட வழியில் செல்லத் துணிந்திருக்கிறானே! இவன் உள்ளம் 

கொடிது.

அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,

ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,

ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த

செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,

வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,

மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;

வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று

எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,

காலொடு பட்ட மாரி

மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!


- பெரும்பதுமனார்.

உடன்போகா நின்றாரை இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது


சொற் பொருள்


ஒலிதல்-தழைத்தல். உலவை-காற்று. நெய்த்தோர்-இரத்தம். வல்லியம் - புலி. 

இவர்தல் - படர்ந்தேறுதல். வை-கூர்மை. எல் - இராத்திரி. மிளிர்க்குதல்-புரட்டுதல். ஐயள் - மெல்லியள்

திங்கள், 28 பிப்ரவரி, 2022

பெற்ற மனம் பித்து



பெற்றோர் எவ்வளவுதான் பிள்ளைகள் மேல் ஆசை வைத்து, அன்பாக வளர்த்தாலும் சில நேரங்களில் பிள்ளைகள் நன்றியில்லாமல் தனக்குப்பிடித்தவர்களுடன் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். இதைத்தான் பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு என்று நம் முன்னோர் பழமொழியல் சொன்னார்கள் போலும். இந்த அகநானூற்றுப்பாடல் ஒன்றில் அப்படித்தான்,

ஒரு தலைவி தனைக்குப் பிடித்த தலைவனுடன் சென்றுவிட்டாள். பெற்ற மனம் அந்தப்பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கிறது. இருந்தாலும் தன் மகள் சென்ற இடம் அவளுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். அங்கு வாழ்வோர் அவளுக்கு அன்பு செலுத்தவேண்டும் என எண்ணிக்கொள்கிறாள்..


என் ஆசை நிறைவேறுவதாயின். என் மகள் சென்ற ஊர்...
துளு நாடு போல் வெறுங்கையுடன் சென்ற புதியவர்களைப் பேணும் அறிந்த மக்களை உடையதாக அமையட்டும்.

சோசர் உடம்பெல்லாம் அணிகலன்கள் பூண்டிருப்பர். செம்மைப் பண்பு கொண்டவர்கள். 
துளுநாட்டுக் கோசர் அந்நாட்டுக்குச் சொல்லும் புதியவர்களை அறிந்த மக்கள் போலப் பேணுவர்.
அவர்களுடைய நாட்டில் மயில்கள் மிகுதி. அவை அங்கு விளையும் பாகற்காயை விரும்பி உண்ணும்.

என் வீடு நன்னனின் பாழி நகரம் போலக் கட்டுக்காவல் மிக்கது. அதனை மீறி என் மகள் தன் காதலனுடன் சென்றுவிட்டாள்.
நானும் அவளது தோழியும் புலம்புகிறோம்.
மூங்கில் போல் திரண்ட தோளினை உடைய என் மயில் சென்றுவிட்டாள்.
கரடிகள் பரந்து நடமாடும் குன்றின் வழியே அவள் சென்றுவிட்டாள்.
வழியில்  இலுப்பைப் பூக்கள் கொட்டிக் கிடக்கும்.
(இனிப்புச் சுவை கொண்ட) அந்தப் பூவைக் கரடிகள் விரும்பி உண்ணும்.
மற்றும் கொன்றைப் பழங்களையும் உண்ணும்.
அவை வலிமையான கைகளை உடையவை. கூட்டமாக மேயும்.
அந்த வழியில் அவள் தன் துணைவனொடு செல்லும் கொள்கை உடையவளாகச் சென்றுவிட்டாள்.
அவள் சென்ற புதிய ஊரில் அவளை அறிந்த மக்கள் இருக்கவேண்டும்.
இதுதான் என் ஆசை என்கிறாள் நற்றாய்.

எம் வெங் காமம் இயைவது ஆயின்,
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன,
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
தோழிமாரும் யானும் புலம்ப,
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி,
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
குன்ற வேயின் திரண்ட என்
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!

அகநானூறு - மாமூலனார்  - பாடல் 15 
துறை - மகள் போக்கிய தாய்  சொல்லியது.
களவொழுக்கத்தில் (களவு - காதல்) சிக்கல் மிகுந்ததால் தம் உறவினர் அறியாமல் தலைவனுடன் சேர்ந்து தலைவி
இரவில் சென்றுவிட்டாள். அதை அறிந்த நற்றாய் வருந்தி உரைக்கிறாள்.