வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 7 டிசம்பர், 2023

தமிழ்ப் பேழை

 


தமிழ்ப்பேழை என்பது தமிழ் மொழியை இணையத்தில் வலுப்படுத்த, வளப்படுத்த, செழுமையாக்க ஒரு திட்டமாகும். ஆங்கில விக்சனரியில் 62 இலட்சத்திற்கும் மேற்பட்ட சொற்பதிவுகள் உள்ளன. ஆனால் தமிழ் விக்சனரியில் 3.57 இலட்சத்திற்கான தமிழ் சொற்பதிவுகளே உள்ளன. ஆங்கிலத்தின் அளவிற்கு சொற்பதிவுகளை தமிழில் உருவாக்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் இலக்குகளில் ஒன்று.

சனி, 25 நவம்பர், 2023

செயற்கை நுண்ணறிவு உரையாடிகளில் தமிழ்

(Tamil in Artificial Intelligence Chatbots)

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்

பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர்


               மனிதர்களை விலங்குகளுடன் வேறுபடுத்திக்காட்டுவது அறிவு. விலங்குகளைவிட மனிதர்கள் அறிவுடையவர்களாகத் திகழ்வதற்கு கல்வியே அடித்தளமாக அமைகிறது. அதனால் தான் வள்ளுவர் கற்றவர்களுக்கும் கல்லாதவர்களுக்குமான வேறுபாடு, விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான வேறுபாடு என்பார். மனிதர்களின் அறிவால் உருவாக்கப்பட்ட கணினி, இயந்திர வழி கற்றல் வழியாக செயற்கை நுண்ணறிவுள்ள கருவியாக உருமாறி வருகின்றது. கணினியின் நுட்பங்களுள் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) குறிப்பிடத்தக்கது. செயற்கை நுண்ணறிவு உரையாடிகளில் (chatbots) தமிழின் தற்கால நிலையை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

 

புதன், 18 அக்டோபர், 2023

தமிழ் மின் உள்ளடக்கங்களும் உருவாக்க நுட்பங்களும்

 Tamil Electrical Content and Developing Technologies

முனைவா் இரா.குணசீலன்/ Dr.R.GUNASEELAN[1]

Valluvar said that counting and writing are like eyes for the life we ​​live. Since we understand the connection between numbers 0,1 and the Tamil text, and providing the electrical content to understand the computer, Tamil has grown to many levels on the Internet today. This article deals with the e-content of Tamils ​​and the technologies that create them to adapt to the ever-changing technological changes such as websites, blogs, android apps, dictionaries, translator techniques, Optical Character Recognition, e-books, videos, audio books.

Keywords – Dr.R.Gunaseelan, Tamil E - Content, Tamil Electrical Content,

E-book, web, blog, apps, ocr, dictionaries, முனைவா் இரா.குணசீலன், தமிழ் மின் உள்ளடக்கங்கள், மின்னூல்கள், அகராதிகள், விக்கிப்பீடியா,

             எண்ணும், எழுத்தும் நாம் வாழும் வாழ்க்கைக்குக் கண்களைப் போன்றன என்றார் வள்ளுவர். 0,1 என்ற எண்களுக்கும், தமிழ் எழுத்துகளுக்குமான தொடர்பைப் புரிந்துகொண்டு, கணினிக்குப் புரியுமாறு மின் உள்ளடக்கங்களை வழங்கியதால் இன்று இணையப் பரப்பில் பல்வேறு நிலைகளில் தமிழ் வளர்சியடைந்துள்ளது. இணையதளங்கள், வலைப்பதிவுகள், குறுஞ்செயலிகள், அகராதிகள், மொழிமாற்றி நுட்பங்கள், எழுத்துணரி நுட்பங்கள், மின்னூல்கள், காணொளிகள், ஒலிநூல்கள் என நாள்தோறும் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப தமிழில் உள்ள மின் உள்ளடக்கங்களையும், அவற்றை உருவாக்கும் நுட்பங்களையும் இக்கட்டுரை இயம்புகிறது.

இணையதளங்களில் தமிழ் மின் உள்ளடக்கங்கள்

        தமிழ் மொழிசார்ந்த பல்வேறு செய்திகள் இணையதளங்களில் எழுத்து வடிவிலும், ஒலி, ஒளி வடிவிலும் மின் உள்ளடக்கங்களாகக் கிடைக்கின்றன. கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி தனி மனிதர்களும்  இணையதளங்களை உருவாக்கி தமிழ் சார்ந்த செய்திகளை உள்ளீடு செய்ய முடியும் என்ற நிலை இன்று உருவாகியுள்ளது. தமிழ் எழுத்துக்களைக் கற்பித்தல் தொடங்கி தமிழ் ஆராய்ச்சி வரை இன்று பல இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக தமிழம் நெட், தமிழ் அநிதம்[2] அடிப்படைத் தமிழ் கற்க இத்தளங்கள் உதவுகின்றன. தமிழ் இலக்கியத் தொடரடைவு[3] தமிழாய்வு மாணவர்களுக்கு உதவியாக உள்ளது. மேலும் பல்வேறு துறைசார்ந்த பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்கள் பல ஆய்வுதொடர்பான பல்வேறு சிந்தனைகளை மின் உள்ளடக்கங்களாகக் வழங்குகின்றன. தமிழ் கற்றல் கற்பித்தல் முதல் கணினித் தமிழ் ஆய்வுகள் வரை தமிழ் இணையக் கல்விக்கழகம் [4]இணையதளம் உதவியாக(3)  உள்ளது. பல்வேறு துறை கற்றலுக்கும் இன்று என்.பி.டெல், சுவயம், யுடிமி[5]  போன்ற இணையதளங்கள் பயன்படுகின்றன. என்றாலும் இந்த இணையதளங்களில் தமிழ் சார்ந்த படிப்புகளை மின் உள்ளடக்கங்களாக உருவாக்கவேண்டிய நிலையில்தான் நாம் உள்ளோம். ஆசிரியர்கள் தமிழ் சார்ந்த பாடங்களை உருவாக்குவதும், மாணவர்களை அதற்கு நெறிப்படுத்துவதும் இன்றைய தேவையாகவுள்ளது.

புதன், 11 அக்டோபர், 2023

தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமைகள்

 


தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமைள்

Copyrights for Tamil e-Content

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்

பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

முன்னுரை

திறன்பேசி, மடிகணினி, பலகைக் கணினி ஆகிய கருவிகளிலும் மென்பொருள், குறுஞ்செயலிகள் என பல நிலைகளிலும் தமிழ் மொழியைப் பயன்படுத்தி வருகிறோம். அவற்றுள் மின் உள்ளடக்கங்கள் குறிப்பிடத்தக்கன. Electronic content என்ற சொல்லைத் தமிழில் மின்னணு உள்ளடக்கம் என்று மொழிபெயர்க்கலாம். e-book என்ற சொல்லைத் தமிழில் மின் புத்தகம் அல்லது மின்னூல் என்று அழைப்பதுபோல, மின்னணு உள்ளடக்கம் என்ற சொல்லை மின் உள்ளடக்கம் என்று அழைக்கிறோம். தமிழ் மின் உள்ளடக்கங்களுக்கான காப்புரிமை வகைப்பாடுகளையும், காப்புரிமைபெறும் வழிமுறைகளையும் இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

காப்புரிமை (Copyrights)

காப்புரிமை என்பது பலவகைப்படும், பதிப்புரிமை (copyright), வணிகச் சின்னம் (Trademark),படைப்புரிமம் (Patent), புவிசார் குறியீடு (Geographical Indication), வணிக இரகசியம் (Trade Secret) என இதை வகைப்படுத்தலாம். பொருளுக்கு மட்டுமின்றி வடிவமைப்புக்கும்  காப்புரிமை பெறலாம்.

 

புதன், 12 ஜூலை, 2023

மாவலிபுரச் செலவு - பாதிதாசன்




பாரதிதாசன் பாண்டிச்சேரியில் பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், "புரட்சிக் கவிஞர்" என்றும் "பாவேந்தர்" என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக்கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர் என பல துறைகளில் தமிழ்மொழியின் இனிமையை உலகெலாம் பரப்பியவர். இவரது பிசிராந்தையார்

நாடகத்துக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் மாலை 4 மணிக்குச் சென் னை, பக்கிங்காம் கால்வாயில் தோணி ஏறி, மறுநாள் காலை 9 மணிக்கு மாவலிபுரம் சேர்ந்தோம், நானும் என் தோழர் பலரும். வழிப்போக்கின் இடைநேரம் இனிமையாய்க் கழிந்தது. எனினும் அப்பெருந்தோணியைக் கரையோரமாக ஒரு கயிறு பற்றி ஒருவன் இழுத்துச் சென்றமையும், மற்றோர் ஆள் பின்புறமாக ஒரு நீளக் கழியால் தள்ளிச் சென்றமையும் இரங்கத் தக்க காட்சி, அதையும், ஆங்குக் கண்ணைக் கவர்ந்த மற்றும் சில காட்சிகளையும் விளக்கி அப்போது எழுதியதாகும் இப்பாட்டு


சென்னையிலே ஒருவாய்க்கால் - புதுச்

சேரிநகர் வரை நீளும்.

சனி, 25 மார்ச், 2023

நன்னூல் -36-46 நூற்பாக்கள் விளக்கம்

 


 

கற்பித்தல் வரலாறு என்பது ஆசிரியர் மாணவர்க்கு பாடம் கற்பித்தலின் இயல்பையும் முறையையும் விவரிக்கின்றது. இது பாடம் சொல்லுதலின் வரலாறு நுவலும் திறன் ஈதல் இயல்பு என பல சொற்றொடர்களால் குறிப்பிடப் பெற்றுள்ளது. இதனை பவணந்தி முனிவர்,

 

 1. நூல் நுவல் திறன்

ஈதல் இயல்பே இயம்பும் காலை

காலமும் இடனும் வாலிதின் நோக்கி

சிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி

உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து

விரையான் வெகுளான் விரும்பி முகம் மலர்ந்து

கொள்வோன் கொள் வகை அறிந்து அவன் உளம் கொளக்

கோட்டம் இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப                                                 36

 

 கற்பிக்கும் ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டியன,

1. காலத்தையும் இடத்தையும் நன்கு ஆராய்தல்,

2. நல்ல இடத்திலிருந்து வழிபடு தெய்வத்தை வணங்குதல்,

3. கற்பிக்கும் பாடத்தை மனதில் பதியவைத்து நினைகொள்ளுதல்,

4.  விரைந்து சொல்லாமல், சினமில்லாமல் முகமலர்ச்சியுடன் இருத்தல்

5. மாணவனின் தன்மையறிந்து நடத்துதல்

6.  மாணவன் தெளிவடையுமாறு மாறுபடற்ற மனத்துடன் கற்பித்தல்,

 

செவ்வாய், 21 மார்ச், 2023

அன்னச்சேவலைத் தூதுவிட்டவர்

 

 

கோப்பெருஞ்சோழன்(அரசர்), பிசிராந்தையார்(புலவர்)இருவரும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்களாவர். ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்புகொண்டனர். பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுடன் சேர்ந்து வடக்கிருந்து உயிர் துறந்தார். இப்பாடலில் பிசிராந்தையார் தன் நட்பின் அடையாளமாக அன்னப்பறவையைத் தூதுவிடுகிறார்.

 

இரத்தல் அரிது! பாடல் எளிது!



அரிய செயல்களைச் செய்பவர்களைப் பெரியவர்கள் என்றும் அவ்வாறு செய்யாதவர்களைச் சிறியவர்கள் என்றும் உரைப்பார் வள்ளுவர்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.26

சொல்லுவது யாவர்க்கும் எளியது ஆனால் சொன்னவாறு செய்வது அரிது என்றும் கூறுவார் வள்ளுவர்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல் -664

செயற்கரிய செய்த பெரியவரான கொண்கானங் கிழானை மோசிகீரனார் பாடியதாக இப்புறப்பாடல் அமைகிறது. இப்பாடலில் மன்னா  “நீ பரிசில் ஈவாயாக” என்று இரப்பது கடினமான செயல். ஆனால் உனது பெருமையைப் பாடுவது எளிது எனப் பாடுகிறார் மோசிகீரனார்.

வியாழன், 12 ஜனவரி, 2023

திரிகடுகம் - நல்லாதனார்

 


பதினெண் கீழ்க்கணக்கு கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 101 வெண்பாக்களால் பாடப்பட்டது. சுக்கு, மிளகு, திப்பிலி எனும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தருவதுபோல ஒவ்வொரு பாடலிலும் மூன்று நற்கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

 

விழுமியம் - சான்றாண்மை

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்

திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்

கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்கு.   6

 

பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும்,

தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும்,

பிறர்க்கு கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.

 

செவ்வாய், 10 ஜனவரி, 2023

இனியவை நாற்பது


இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் இயற்றியது. 40 வெண்பாக்களைக் கொண்டது. இனியது என்பது இனிமையானது. வாழ்க்கையில் செய்யத்தக்க நற்பண்புகளை இனியது என ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். இவர் கூறும் நற்பண்புகளை வாழ்க்கையில் கடைபிடித்தல் இனிது.

 

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே

நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே

முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே

தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. - 1

 

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது.

அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது.

முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது.

அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

செவ்வாய், 3 ஜனவரி, 2023

பரிவு

 


பரிவு (sympathy) என்பது அடுத்தவர் படும் துன்பத்தைக் கண்டு வருந்துவதும், அவர்களுக்கு இயன்ற உதவி செய்வதையும் குறிக்கும். மனிதர்களுக்குச் செய்யும் உதவி மனிதாபிமானம் என்றும் உயிர்களுக்குச் செய்யும் உதவி சீவகாருண்யம் உயிரிரக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. தலைவியின் மனநிலைகளை நன்கறிந்தவள் தோழி. அதனால் தலைவி மனத்துயரடையும் நேரங்களில் தோழி தன்னால் இயன்ற ஆறுதல் தெரிவிப்பாள். அவள் துயரை மாற்றுவதற்கான வழிகளைத்தேடுவாள். அவ்வாறு தலைவியின் துன்பத்தை நீக்கிய தோழியின் கூற்றாக இப்பாடல் அமைகிறது.