வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூலை, 2018

இயற்கையுடன் இயைந்து வாழ்வோம்!


இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை!

மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள்,

செயற்கை நுண்ணறிவுத்திறன் (AI),

மெய்நிகர் தொழில்நுட்பம்(VR)

பொருள்களின் இணையம் (IOT),

போன்றவை எதிர்காலத்தில் இந்த வேலைக்கு மனிதர்கள் எதற்கு?

என்ற கேள்வியை முன்வைத்து வளர்ந்து வருகின்றன. இயற்கையை மறந்து செயற்கையை பெரிதும் சார்ந்து வாழும் இவ்வாழ்க்கை முறையே பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை.

புதன், 8 மார்ச், 2017

இயற்கையும்! பெண்களும்!


பெண்களும் இயற்கையும் ஒன்று!
இரண்டும் புதிரானது! புரியாதது!
நிலம், நீர், தீ, காற்று, வான்
என இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் பெண்களைப் பிரதிபலிக்கின்றன!

நிலம் பொறுமைக்குப் பெயர்பெற்றது
நிலத்தை பூமாதேவி என்றுகூட அழைப்பதுண்டு!
என்ன சிலநேரம் இந்த பூமாதேவிகூட பூகம்பமாய் வெளிப்படுவதுண்டு!

நீர் எங்கும் நிறைந்தது.
பெரும்பாலும் ஆறுகளுக்குப் பெண்களின் பெயர்கள்தான் இட்டுள்ளோம்.
கடலாகவும் அதில்தோன்றும் சிறு அலையாகவும் தோன்றும் நீர்
சில நேரங்களில் பேரலையாக சுனாமியாக மிரட்டிச் செல்வதுண்டு!

வழிபாட்டில் விளக்காக ஒளிவிடும்போது தீ வணங்கப்படுகிறது!
காட்டுத்தீயாகப் பரவும்போது அச்சமூட்டுகிறது!

காற்று தென்றலாக வருடும்போது கொண்டாடப்படுகிறது!
புயலாக வீசும்போது நடுங்கச்செய்கிறது!

வான் மழையாகப் பொழியும்போது வாழ்த்தப்படுகிறது
இடியாக ஒலிக்கும்போது வருந்தச்செய்கிறது.

இப்படி  நிலம், நீர், தீ, காற்று, வான் என இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் உணர்த்தும் நீதி என்ன தெரியுமா?

பலம் தான் பலவீனமாகிறது!
பலவீனம் தான் பலமாகிறது!
                         
சான்றாக ஒரு கதை…
சாவியிடம் சுத்தியல் கேட்டதாம்..
நான் பூட்டைத்திறக்க மிகவும் வருந்துகிறேன்..
நீ மட்டும் எப்படி மிக எளிதாகத் திறந்துவிடுகிறாய்? என்று
அதற்கு சாவி சொன்னதாம்..
நீ பூட்டின் தலையில் பலமாக அடித்து திறந்துவிடு என்று மிரட்டுகிறாய்…
நானோ பூட்டின் இதயத்தைத் தொட்டு திறந்துவிடு என மென்மையாகச் சொல்லுகிறேன் என்று..

இங்கு பூட்டுதான் நாம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள்!
சுத்தியல்தான் ஆண்கள்!
சாவிதான் பெண்கள்!

இங்கு பலம் சாதிக்க முடியாததை பலவீனம் சாதித்துவிடுகிறது!
ஏன் நம் நாட்டுக்கு சுதந்திரத்தைக்கூட பலத்தால் பெற்றுத்தரமுடியவில்லையே! பலவீனம் தானே பெற்றுத்தந்தது!

ஆம் பலம் என்பது உடல் வலிமை மட்டுமல்ல!
மனவலிமை தான் உண்மையான பலம்!

மனிதனின் படைப்பில் எதுவும் நிறைவானதோ, முழுமையானதோ கிடையாது!
இயற்கையின் படைப்பில் எதுவும் குறைவானதே கிடையாது!
பெண் ஏன் ஆண்போல இருக்கவேண்டும்?
இதைப் புரிந்துகொள்ளாதது நம் அறியாமை!

இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் இயற்கையின் கோட்பாட்டை நாம் சரியாகப் புரிந்துகொண்டவராகிறோம்.

புதன், 23 ஜூலை, 2014

நன்றி சொல்ல வார்த்தைகள் தேவையா?


நன்றி நவில்தல் தமிழரின் சிறப்புடைய பண்பாடுகளுள் ஒன்றாகும். இப்போதெல்லாம் தேங்ஸ் என்று ஒரே வார்த்தையில் தன் நன்றி உணர்வை யாவரும் தெரிவித்துவிடுகின்றனர். நன்றியை வார்த்தைகளால் பலவழிகளில் நாம் வெளிப்படுத்தமுடியும். சிலர் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும், சொல்வதுண்டு. 


வேர்களை அறுத்தோடும் 

நதியின் மீதும் 

கலகலவென்று பூச்சொரியும் 

கரையோரத்துக் கிளைகள்... 

அறுத்ததற்குக் கோபமில்லையாம் 

நனைத்ததற்கு நன்றியாம் 

மரம் சொன்னது : 

''இன்னா செய்தார்க்கும் 
இனியவை செய்'' 

என்பார் கவிஞர் வைரமுத்து.




லித்தொகையில் ஒருபாடல் நன்றியைச் சொல்ல வார்த்தைகள் தேவையா? என்று கேட்கிறது.


அகன்ற ஆறுகள், பரந்த உலகிடத்து, உயிர்களெல்லாம் வாழும்படி எங்கும் நீரைப் பரந்து ஊட்டிப் பாதுகாத்தன. அந்நீர் வற்றியபின் சிலவாகிய நீரோடு, வாய்கால்களில் அறல் உண்டாகும்படி அழகுபெற்றுச் சென்றன.

முன்னர் தனக்கு உதவி செய்து முயன்றவர்  பின்னொரு நாள் வாடி வருந்தும்போது, உதவியை மீண்டும் செய்வார்கள் பெருமையுடையவர்கள். அவர்களைப்போல, ஆற்றில் வெள்ளம் பெருகியபோது நீரை உண்ட மரங்கள் நீர் வற்றிய இளவேனிற் காலத்தில் சுரும்புகள் ஒலிக்க வண்டுகள் ஆராவரிக்க, கொம்புகளினின்றும் பல மலர்கள் ஆற்றிலே உகும்படி இனிமை பொருந்தின இளனேில் வந்துவிட்டது


மன் உயிர் ஏமுறமலர் ஞாலம் புரவு ஈன்று
பல் நீரால் பாய்புனல் பரந்து ஊட்டிஇறந்த பின்,
சில் நீரால் அறல்வாரஅகல் யாறு கவின்பெற
முன்ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளா் போல்
பல்மலர் சினை உகசுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப
இன்அமா் இளவேனில் இறுத்தந்த பொழுதினான்

கலித்தொகை -34 -1-7

இந்தக் கலித்தொகைப் பாடல் நமக்கு உணர்த்தும் நீதி..


நன்றி சொல்ல வார்தைகள் தேவையில்லை!
நன்றியை நம் நன்றியுடைய செயல்களில் காட்டவேண்டும்!

புதன், 16 ஜூலை, 2014

நான் மனிதன்



கண்களால் காண வேண்டியது?
செவிகளால் கேட்கவேண்டியது?
வாயால் பேச வேண்டியது?

இந்த மூன்றும் அறியாமல்தான் நாம் வாழ்ந்துவருகிறோம். கவிஞர் மீரா அவர்களின் “ நான் மனிதன் ” என்ற கவிதை இந்த உண்மையை அழகுபட மொழிகிறது. இந்தக் கவிதையைப் படித்தவுடன் நானும் கண், செவி, வாய் என்னும் புலன்களின் இன்பம் பெற ஆவலாக உள்ளேன். அதற்குத் தக்க வாய்ப்பாக ஈரோடு புத்தகத் திருவிழா 2014 அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ளது.

நல்ல புத்தகங்களைக் கண்களால் பார்த்து
நல்ல சொற்பொழிவுகளைச் செவிகளால் கேட்டு
நல்ல அறிஞர்களுடன் நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து

புலன்களின் பயன்களை முழுமையாக அடைய ஆவலாக உள்ளேன்.


நான் மனிதன்!

வான்திரியும் தண்ணிலவைப் பார்த்த துண்டா?
வசந்தத்தைக் கண்டதுண்டா? துள்ளி ஓடும்
மான்கூட்டம் மயில்ஆட்டம் மலரின் தோட்டம்
மங்கைமுகம் இவையனைத்தும் கண்ட துண்டா?
தேன்கவிதைத் தமிழ்மொழியின் எழுத்தைக் கண்ணால்
தின்றதுண்டா? சுவைத்ததுண்டா? இல்லை! அந்தோ!
நான்குருடன் நான் குருடன்! உலகை நோக்கும்
நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை?

கான்ஓடும் ஆறுகளின் சத்தம் என்றன்
காதுகளைத் தொட்டதுண்டா? குயிலின் பாட்டைத்
தான்கொஞ்சம் கேட்டதுண்டா? குழலும் யாழும்
தரும்மதுரத் தனிச்சுவையில் பித்துக் கொண்டே
நான்மயங்கிக் கிடந்ததுண்டா? அறிஞர் பேச்சில்
நனைந்ததுண்டா என்நெஞ்சம்? இல்லை! அந்தோ
நான்செவிடன்! நான்செவிடன்! குரலைக் கேட்கும்
நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை?
ஊண்வேண்டும் நீர்வேண்டும் என்றே வாயால்
உரைத்ததுண்டா ஓயாமல்? துன்பத் தூண்டில்
மீன்போலத் துடிக்கின்ற கொடுமைக் காக
மிகவருந்தி ஒப்பாரி வைத்த துண்டா?
மேன்மையுள்ள மனக்கருத்தை யாருக் கேனும்
மெதுவாகச் சொன்னதுண்டா? இல்லை! அந்தோ
நான் ஊமை! நான் ஊமை! வார்த்தை யாடும்
நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை?

நான் உலகைப் பார்த்ததில்லை! ஓசை யாவும்
நான்கேட்ட தேயில்லை! இனிதாய்ப் பேசத்
தான்என்றும் முடியவில்லை! ஆமாம்! உண்மை!
தணல்சூழ்ந்த குடிசைக்குள் கிடப்ப தேபோல்
ஏன் இன்னும் இருக்கின்றேன் என்றே நாளும்
எண்ணுகிறேன்; விம்முகிறேன்; என்ன செய்வேன்?
நான்மனிதன்! நான்மனிதன்! அதனால் சாக
நடுங்குகிறேன்! நடத்துகிறேன் ஆசை வாழ்க்கை!

                                          -கவிஞர் மீரா

இந்தக் கவிதை நான் இதுவரை சராசரி மனிதனாகத்தான் இருந்திருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தியது. உங்களுக்கும் உணர்த்தியிருக்கும் என நம்புகிறேன்.