வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 31 டிசம்பர், 2009

வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்),

சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப்பெறாமல் தலைவன், தலைவி செவிலி, நற்றாய் என்று சுட்டப்பெற்ற சங்ககால அகவாழ்வியலின் பதிவுகள் பழந்தமிழரின் வாழ்வியல் இலக்கணங்களாக இன்று நமக்குக் கிடைத்துள்ளன.

அகவாழ்க்கையை அகத்திணைகள் உணர்த்துகின்றன.
அகவாழ்க்கை களவு(காதல்) கற்பு (திருமணத்துக்கு பின்)
என இரு கூறுகளைக் கொண்டது.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன அன்பின் ஐந்திணைகளாகவும் கைக்கிளை பெருந்திணை என்னும் திணைகளும் அகத்திணைகளாகவே கொள்ளப்படும். கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் நிலங்கள் கிடையாது.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய திணைகளுக்கு மட்டுமே நிலம் உண்டு பாலைத் திணை முல்லையும் குறிஞ்சியும் தன்னிலையில் திரிந்த் நிலையாகும்.

பண்டைக் காலத்தில் கிடைத்த சங்கப்பாடல்கள் எந்த விதமான வகைபாடும் இன்றியே கிடைத்தன.

சங்கப்பாடல்கள் பாடபட்ட காலம் வேறு தொகுக்கப்பட்ட காலம் வேறு.
தொகுக்கப்பட்ட போது முழுமையான நெடும்பாடல்களைத் தொகுத்து பத்துப்பாட்டாக்கினர். எஞ்சிய பாடல்களை அகம், புறம் என்னும் பெரும்பாகுபாட்டுக்குள் எட்டுத்தொகையாக வகுத்தனர். அகப்பாடல்களில் ” முதல் - கரு - உரி என்னும் இலக்கண மரபுகளைக்கொண்டு திணைப்பாகுபாடு செய்தனர்.

முதல் என்பது நிலம் - பொழுது என்பதன் இயல்பு கூறுவதாகும்

கரு
என்பது அந்ததந்த நிலத்துக்கான தெய்வம், உணவு, பறை, யாழ், விலங்கு, பறவை போன்ற கூறுகளைக் கூறுவது

உரிப்பொருள் என்பது அந்த நிலத்துக்கு உரிய மாந்தர்களின் மனதில் தோன்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு
கூடல்
ஊடல்
பிரிதல்
இருத்தல்
இரங்கல் என்ற வகைப்பாடு பெறுவதாகும்.இதனை,






இந்த அட்டவணைகள் விளக்கும்.



குறிஞ்சியின் கருப்பொருட்கள்:


கடவுள்: முருகக்கடவுள்
மக்கள்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி, வெற்பன், வேம்பன், பொருப்பன்,கானவர்
புள்: கிளி, மயில்
விலங்கு: புலி, கரடி, யானை
ஊர்: சிறுகுடி
நீர்: அருவி நீர், சுனை நீர்
பூ: வேங்கை, குறிஞ்சி, காந்தள், குவளை
மரம்: ஆரம் (சந்தனம்), தேக்கு, அகில்ம் அசோகம், நாகம், மூங்கில்
உணவு: மலைநெல், மூங்கில் அரிசி, தினை
பறை: தொண்டகப்பறை
யாழ்: குறிஞ்சி யாழ்
பண்: குறிஞ்சிப்பண்
தொழில்: வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைப்புனம் காத்தல் தேன் அழித்தல், நெல் குற்றுதல், கிழங்கு எடுத்தல், அருவி மற்றும் சுனை நீர் ஆடல்
குறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது"




-oOo-



முல்லையின் கருப்பொருட்கள்:


கடவுள்: மாயோன் (திருமால்)
மக்கள்: குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர்
புள்: காட்டுக்கோழி
விலங்கு: மான், முயல்
ஊர்: பாடி, சேரி, பள்ளி
நீர்: குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு)
பூ: குல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ
மரம்: கொன்றை, காயா, குருந்தம்
உணவு: வரகு, சாமை, முதிரை
பறை: ஏறுகோட்பறை
யாழ்: முல்லை யாழ்
பண்: முல்லைப்பண்
தொழில்: சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யற்று நீராடல்.




-oOo-

மருதத்தின் கருப்பொருட்கள்:

கடவுள்: வேந்தன் (இந்திரன்)
மக்கள்: ஊரன், மகிழ்நன்,கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
புள்: வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.
விலங்கு: எருமை, நீர்நாய்
ஊர்: பேரூர், மூதூர்
நீர்:ஆற்று நீர், கிணற்று நீர்
பூ: தாமரை, கழுனீர்
மரம்: காஞ்சி, வஞ்சி, மருதம்
உணவு: செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி
பறை: நெல்லரிகிணை, மணமுழவு
யாழ்: மருத யாழ்
பண்: மருதப்பண்
தொழில்: விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்




-oOo-


நெய்தலின் கருப்பொருட்கள்:


கடவுள்: வருணன்
மக்கள்: சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கண், துறைவன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்
புள்: கடற்காகம், அன்னம், அன்றில்
விலங்கு: சுறா, உமண் பகடு
ஊர்: பாக்கம், பட்டினம்
நீர்:உவர்நீர் கேணி, மணற்கேணி
பூ: நெய்தல், தாழை, முண்டகம், அடம்பம்
மரம்: கண்டல், புன்னை, ஞாழல்
உணவு: மீனும் உப்பும் விற்று பெற்றவை
பறை: மீன்கோட்பறை, நாவாய் பம்பை
யாழ்: விளரி யாழ்
பண்: செவ்வ்வழிப்பண்
தொழில்: மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், மீன் உணக்கல், பறவை ஓட்டுதல், கடலாடுதல்




-oOo-


பாலையின் கருப்பொருட்கள்:


கடவுள்: கொற்றவை (துர்க்கை)
மக்கள்: விடலை, காளை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
புள்: புறா, பருந்து, எருவை, கழுகு
விலங்கு: செந்நாயும் வலிமை அழிந்த யானை, புலி
ஊர்: குறும்பு
நீர்: நீரில்லாகுழி, நீரில்லாகிணறு
பூ: குரா, மரா, பாதிரி
மரம்: உழிஞை, பாலை, ஓமை, இருப்பை
உணவு: வழிப்பறி பொருள், பதியில் கவர்ந்த பொருள்
பறை: துடி
யாழ்: பாலை யாழ்
பண்: பாலைப்பண்
தொழில்: போர் செய்தல், வழிப்பறி




இவ்வாறு அகவாழ்வியலில் திணைப்பாகுபாடு செய்து வாழ்ந்து வந்தனர்.
இந்த அடையாளங்கள் வாயிலாக ஒவ்வொரு தமிழனும் இந்த நிலம் சார்ந்தவன் என்று அடையாளம் காணப்பட்டான். இவையெல்லாம் தமிழனின் வாழ்வியல் அடையாளங்கள்..

இன்றைய தமிழனுக்கு தமிழன் என்பதற்கான அடையாளங்கள் இப்படி ஏதாவது காணமுடிகிறதா..?

(படங்கள் யாவும் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுமலரிலிருந்து எடுக்கப்பட்டவை.நன்றி!)
-oOo- -oOo-

-oOo-

புதன், 30 டிசம்பர், 2009

வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்)

எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் கூறும் மொழிகள் உலகில் பல இருக்கின்றன. வாழ்க்கைக்கு இலக்கணம் கூறிய பெருமை கொண்ட மொழி நம் தமிழ் மொழியாகும்.

சங்கப்பாடல்கள் அகம், புறம் என்னும் பாகுபாடுடையன. அகத்தில் காதலும், புறத்தில் வீரமும் சொல்லப்பட்டுள்ளது.

அகம் என்பது… (களவு, கற்பு)


சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப்பெறாத மக்களின் அகவாழ்வியலைப்பற்றியது.
கைக்கிளை, குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல், பாலை,பெருந்திணை என்ற ஏழும் அகத்திணைகளாகும்..

இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கர்கூட்டம், பாங்கியர்கூட்டம், அறத்தொடுநிற்றல், வரைவுகடாவுதல், நொதுமல்வரைவு போன்ற பலவும அகத்துறைகளாகும்..

அகத்திணைகள் ஏழுக்குமான புறத்திணைகள் ஏழை வகுத்தனர் நம்முன்னோர்.பின் புறத்திணைகள் ஏழு என்பது பன்னிரண்டாக வளர்ந்தது.

புறம் என்பது வீரம் கொடை சார்ந்தது.

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி. தும்பை, வாகை, பாடாண், பொதுவியல்,கைக்கிளை,பெருந்திணை ஆகியன புறத்திணைகளாகும்.
இயன்மொழி,பாணாற்றுப்படை,செவியறிவுறுஉ போன்றன புறத்துறைகளாகும்.


புறத்துறைகள்.
1.வெட்சி. (குறிஞ்சி என்னும் அகத்துறைக்கு புறனானது)

இரு மன்னர்கள் போர் புரியும் முன்னர் பறை அடித்து அறிவிப்பு செய்தனர்.
நாங்கள் இவ்விடத்தில் போர் தொடங்கவுள்ளோம் அதனால் ஆவும், ஆவைப்போன்ற பார்ப்பனர்களும், பெண்களும், நோய்வாய்ப்பட்டவர்களும், முதியவர்களும்,குழந்தைகளும், இவ்விடம் விட்டு நீங்கிச்செல்லுங்கள் என்று அவ்வறிவிப்பு இருக்கும்.இந்த அறிவிப்பை ஆநிரைகள் அறியாது ஆதலாலும், ஆநிரைகள் செல்வமாகக் கருதப்பட்டதாலும் வீரர்கள் பகைநாட்டு ஆநிரைகளைக் கவர்ந்துவருவர். அப்போது அவர்கள் வெட்சி பூ அணிந்திருப்பர் அதனால் இத்திணை வெட்சியானது.




2.கரந்தை.


நிரை கவர்ந்து சென்ற வெட்சி வீரர்களிடமிருந்து தம் நிரைகளை மீட்பது கரந்தையாகும். ஆநிரை மீட்கப் போர்புரியும் வீரர்கள் கரந்தைப் பூ அணிந்திருப்பர் அதனால் இத்திணை கரந்தையானது.



3.வஞ்சி.(முல்லை என்னும் அகத்திணைக்குப் புறனானது)


பகை நாட்டை விரும்பிப் போர் தொடுத்தல் வஞ்சியாகும். இப்போரின் முதன்மை நோக்கம் பகைநாட்டு மன்னனின் மண்ணைக் கவர்தலாகும்.


4.உழிஞை. (மருதம் என்னும் அகத்திணைக்குப் புறனானது)


பகைவருடைய மதிலை வளைத்தல் உழிஞையாகும். இவ்வீரர்கள் உழிஞைப் பூச்சூடுவர்.



5.நொச்சி.

உழிஞை வீரர்கள் மதிலைக் கைப்பற்றாதவகையில் மதிலைக் காத்தல் நொச்சியாகும். இவ்வீரர்கள் நொச்சிப்பூச்சூடியிருப்பர்.





6.தும்பை (நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனானது)

இரு மன்னர்களும் போர்க்களத்தில் எதிர் எதிரே நின்று போர்செய்தல் தும்பையாகும். இருநாட்டு வீரர்களும் தும்பைப் பூச்சூடியிருப்பர்.



7.வாகை (பாலை என்னும் அகத்திணைக்குப் புறனானது)

வெற்றிபெற்ற மன்னன் தன் வெற்றியைக் கொண்டாடுதல் வாகையாகும். இங்கு வாகைப்பூச் சூடப்படும்.



செவ்வாய், 29 டிசம்பர், 2009

மூங்கில் இலைமேலே........



கம்பர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் செவி மரபுக்கதை,

ஒரு முறை கம்பர் வயல்வெளிப்பக்கம் சென்றாறாம். அப்போது உழவர்கள் உழவுத்தொழில் செய்துவந்தார்களாம். அப்போது ஒரு உழவர் மாலைவேளையில் ஏற்றப்பாட்டு பாடினாராம்..

மூங்கில் இலைமேலே........
தூங்கும் பனிநீரே....

என்று இவ்வாறு பாடிய உழவர் அன்றைய பணியை நிறைவு செய்து பாடலை முழுதும் பாடமலேயே வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.

பாடலைக் கேட்டு வியந்த கம்பர் பாடலை முழுவதும் கேட்க இயலவில்லையே என்று வருந்தினாராம்...

அந்தப்பாடலின் அடுத்த அடிகளைக் கேட்டு மகிழவேண்டும் என்று எண்ணிய கம்பர் அடுத்த நாளும் அங்கு வந்து உழவனின் பாடலுக்காகக் காத்திருந்தாராம்..

மறுநாள் வந்த உழவன் பாடினானாம்..

தூங்கும் பனிநீரை
வாங்கும் கதிரோனே
!

என்று வியந்து போனாராம் கம்பர்..

இந்தக் கதையில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று சிந்திப்பதை விட “கவிச்சக்கரவர்த்தி கம்பரே வியக்கும் வகையில் இந்த வாய்மொழிப்பாடல்களின் சுவை இருக்கிறது என்ற கருத்தை உணர்ந்து கொள்ளுதல் நயம் பயப்பதாக அமையும்..

ஏட்டில் எழுதப்பட்ட இலக்கியங்கள் யாவும் இதுபோன்ற ஏட்டிலில்லா இலக்கியங்களின் வழிவந்தவையே..

செவ்வாய், 22 டிசம்பர், 2009

தும்பிசேர்கீரனார்.




“தும்பிசேர்கீரனார்“ என்ற புலவரின் பெயருக்கான காரணத்தைக் குறுந்தொகைப்பாடல் வழி காண்பது இவ்விடுகையின் நோக்கமாகும்.

392. குறிஞ்சி
அம்ம வாழியோ-மணிச் சிறைத் தும்பி!-
நல் மொழிக்கு அச்சம் இல்லை; அவர் நாட்டு
அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின்,
கடவை மிடைந்த துடவைஅம் சிறு தினைத்
துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை
தமரின் தீராள் என்மோ-அரசர்
நிரை செலல் நுண் தோல் போலப்
பிரசம் து¡ங்கு மலைகிழ்வோற்கே!

392 - குறுந்தொகை-
தும்பிசேர் கீரனார்.

(வரைவிடைக் கிழத்தியது நிலைமை தும்பிக்குச் சொல்லுவாளாய்ச் சிறைப்புறமாகச்சொல்லியது.)

தலைமக்களின் காதலை தலைவியின் பெற்றோர் அறிந்ததால் தலைவி வீட்டில் வைத்துக் காவல் காக்கப்பட்டாள்.(இற்செறித்தல்)வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டாள்.
தலைவனோ அதைப்பற்றிக் கவலைப்படுபவனாகத் தெரியவில்லை. தலைவியைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமின்றி இருக்கிறான் ( வரைவு நீட்டிக்கிறான் )
இந்நிலையில் தலைவியைக் காண எண்ணிவந்த தலைவன் அருகில் இருக்க, தோழியோ தும்பியிடம் பேசுவது போல தலைவனுக்கு இவ்வாறு சொல்கிறாள்..

நீலமணிபோன்ற அகத்தே சிறகுகளைக் கொண்ட தும்பியே!
கேட்பாயாக…

நல்ல கருத்துக்களை ஒருவரிடம் சொல்வதற்கு அச்சம் கொள்ளத்தேவையில்லை.!

தலைவருடைய நெடிய மலைப்பகுதிக்கு நீ சென்றால் தேனடைகள் தொங்குகின்ற மலைகளை உரிமையாகக் கொண்ட அவரிடம் நீ சொல்….

“தலைவி இற்செறிக்கப்பட்டாள் என்று…!
தினைகளுக்கிடையே வளர்ந்த களைகளை புழுதி எழுமாறு நீக்கும் தன்மைகொண்ட தலைவியின் உடன்பிறந்தோர் (தமையன்மார்கள்) அவளைக் காத்தனர்.

(தினைகளுக்கிடையே தோன்றும் களைகளைக் நீக்கும் தமையன்மார்கள் தலைவியின் வாழ்வில் வந்த களையாக காதலையும் நீக்கிவிடுவர் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது)


காவல் மறவர்கள் கிடுகுப்படை என்னும் பாதுகாப்பு வளைத்துக்குள் வைத்து அரசனைக் காத்துச்செல்வர் அதுபோல தலைவியும் தமையன்மார்களின் பாதுகாப்பில் இருக்கிறாள் என்று கூறுவாயாக.

(அரசரைக் காக்கும் கிடுகுப்படை - தலைவியைக் காக்கும் தமையன்மார்களுக்கு உவமையானது)


அவள் நினைத்தாலும் அங்கிருந்து வெளியே வரமுடியாது என்று கூறுவாயா?


என்று தும்பியிடம் பேசுகிறாள் தலைவி.

அருகிலிருந்து கேட்கும் தலைவன் தலைவியின் நிலையை உணர்ந்து விரைவில் உடன்போக்கிலோ அல்லது தலைவியின் வீட்டில் கேட்டோ அவளைத் திருமணம் செய்து கொள்ள முயல்வான்.


இந்தப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் கிடைக்காத சூழலில் தும்பியோடு பேசிய இந்த உரையாடலே இப்புலவர் தும்பிசேர்கீரனார் என்று பெயர் பெறக்காரணமானது.

இப்பாடல் வழியாக இப்புலவரின் பெயருக்கான காரணம் விளக்கம் பெற்றதோடு, இற்செறித்தல்,
வரைவு நீட்டித்தல் என்னும் இரு அகத்துறைகளும் விளக்கம் பெறுகின்றன...

திங்கள், 21 டிசம்பர், 2009

ஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு நினைவுத்துளிகள்.




ஈரோட்டில் வலைப்பதிவர் சந்திப்பு 20.12.09 அன்று மாலை 3 மணி அளவில் தொடங்கி 7 மணிவரை சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட வலைபப்பதிவர்கள் கூடினர்.இந்த சந்திப்பில் நானும் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

○ தமிழ்மணம் காசி ஐயா, பழமைபேசி, வானம்பாடிகள்,புலவர்.காசி, பரிசல்காரன், கேபிள் சங்கர், சுமஜ்லா, ரம்யா,வசந்தகுமார், செந்தில், நாகா, வெயிலான், சிவா(நிகழ்காலத்தில்) கார்த்திகைப்பாண்டியன் (பொன்னியின் செல்வன்), ஸ்ரீ உள்ளிட்ட வலைப்பதிவர்களும் கலந்துகொண்டனர்.
○ ஈரோடு வலைப்பதிவர்களான,
கதிர், ஆருரன், பாலாசி, நந்தா, வால்பையன்,அகல்விளக்கு, எஸ்ரா, உள்ளிட்டவர்கள் இவ்விழா சிறப்பாக நடைபெற துணைபுரிந்தனர்.

சந்திப்பில் விவாதிக்கப்பட்ட செய்திகளின் சாரம்….
○ தமிழ்த்தாய் வாழ்த்தோடு 3.30 மணியளவில் கூட்டம் தொடங்கியது. கதிர் அனைவரையும் வரவேற்றமர்ந்தார்.

○ ஆரூரன் அவர்கள் பதிவின் அவசியத்தை எடுத்தியம்பினார். “கலிங்கராயன் என்ற சொல் காலிங்கராயன், காளிங்கராயன், காளிங்கரையான் என மாறி வழக்கத்தை எடுத்தியம்பி பதிவிடுவது அவசியம் என்று கூறினார்.

○ வலைச்சரம் சீனா அவர்கள் வலைப்பதிவர்களின் நிலையையும், வலைப்பதிவின் நிலையையும் அழகாக எடுத்தியம்பினார்.

○ தமிழ்மணம் காசி அவர்கள் பேசியபோது வலைப்பதிவின் தற்கால நிலையைக் கூறி அரசு நிறுவனங்கள் கூட தற்போது வலைப்பதிவிடுதலைத் தொடங்கியுள்ளன என்றார். மேலும் கணினிப் பயிற்சிப்பட்டறைகளின் தேவையையும் சொன்னார்.


○ பழமைபேசி அவர்கள் தமிழர்களை இணைக்கும் கட்டமைப்பு வலைப்பதிவால் உருவாகியுள்ளது. வலைப்பதிவர்களுக்கு சமூக அவலங்களை எடுத்துச்சொல்லவேண்டிய கடமை இருக்கிறது என்றார். கடமையோடு சிந்தித்துசெயல்பட வேண்டிய சூழலில் அச்சப்படத் தேவையில்லை என்றியம்பினார்.

○ அமீரகத்திலிருந்து வருகை தந்திருந்த செந்தில் வேலவன் கணினிப் பயிற்சிப்பட்டறைகள் பற்றிப் பேசினார். “ பின்லாந்து என்னும் நாட்டில் ஐம்பது லட்சம்பேர் தான் உள்ளார்கள் இந்த எண்ணிக்கை நம் சென்னை வாழ்மக்களின் எண்ணிக்கையைவிடக் குறைவு அவர்கள் பேசும் பின்னிசு மொழிக்கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் ஏழு லட்சம் கட்டுரைகள் உள்ளன. ஆனால் ஏழுகோடிபேர்களைக் கொண்ட நம் தமிழ்மொழியில் இருபதாயிரம் கட்டுரைகளையே இப்போது தான் தொட்டுள்ளோம் என்று நிகழ்கால நிலையை இயம்பினார்.

○ பட்டர்பிளை சூர்யா அவர்கள் உலக சினிமாவைப் பற்றிப்பேசினார், வசந்த் அவர்கள் சிறுகதை உருவாக்கம் குறித்துப் பேசினார், சுமஜ்லா அவர்கள் கணினித் தொழில்நுட்பம் குறித்து உரையாற்றினார்.ரம்யா அவர்களும் கலந்து கொண்டு தம் அனுபவங்களை உரைத்தார்.முனைவர்.புலவர். இராசு ஐயா அவர்கள் ஈரோட்டின் மரபுகளையும், தமிழ்மரபுகளையும், கணினியின் முக்கியத்துவத்தையும் கூறியதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

○ வானம்பாடிகள், பரிசல்காரன் உள்ளிட்ட வலைப்பதிவர்களும் இணைந்து ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தை அறிமுகம் செய்துவைத்தனர்.

○ பின் விவாதம் தொடங்கியது…..

சுயவிவரமில்லா கருத்துரையாளர்கள்

சுயவிவரமின்றி கருத்துரையிடுவது சரியா? தவறா?
எந்த சூழலில் இவர்கள் இவ்வாறு கருத்துரையிடுகிறார்கள்.
இவர்களின் கருத்துரையை வெளியிடுவது சரியா? தவறா?
என பலவாறு சென்ற விவாதத்தில்.

“படைப்பைப் பொதுவில் வைத்த பிறகு விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்கலாமா? அனானி என்று பார்க்காமல் விமர்சனம் என்று பார்ப்பதே சரி என்றார் இளையகவி, லதானந்த் உள்ளிட்டோர் தன்பெயரைக் கூடச் சொல்ல முடியாத அந்த கருத்துரையாளரைப் புறக்கணிப்பதே முறை என்றும் உரையாடினார்கள்.“


நீண்ட நேரம் சென்ற இந்த விவாதத்தில் வலைப்பதிவில் இடம்பெறும் கருத்துக்களுக்கு அந்த வலைப்பதிவரே பொறுப்பு அதனால் கட்டுப்பாடோடு கருத்துரையிடுவதும், இடப்பட்ட கருத்துரைகளை தெரிவு செய்து வெளியிடுவதும் வலைப்பதிவர்களின் கடமை என்று முடிவுக்கு வந்தனர்.மேலும் வலைப்பதிவர்கள் சட்ட விதிகளை அறிந்து கொள்வதன் அவசியத்தையும் பற்றிப் பேசினார்கள்.

○ தமிழ்மணத்தில் இடப்படும் ஓட்டுக்களைப் பற்றியும், சிறிது நேரம் விவாதம் நடந்தது.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் வலைப்பதிவர்களின் இருத்தல் உணர்த்தப்பட வேண்டும் என்றும் உரையாடினார்கள்.

○ வலைப்பதிவு வாயிலாக வருவாய்பெறுவது பற்றி பேசும் போது தமிழ்மணம் காசி ஐயா அகர்வால் அவர்களைக் குறிப்பிட்டு அவர் வலைப்பதில் வரும் வருவாயிலேயே தம் வாழ்நாளை நகர்த்துகிறார் என்றார். கேபிள் சங்கர் தமிழ்வலைப்பதிவுகளில் வருவாய் ஈட்டுபவர்களில் முன்னோடி ஆதலால் அவரும் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

○ புலவர் இராசு ஐயா விவாதங்கள் நடைபெற்றபோது இணையத்தில் உள்ள வரலாற்றுப்பிழைகளை எவ்வாறு நீக்குவது என்ற வினவினார். விக்கிப்பீடியா உள்ளிட்ட தளங்களில் இடம்பெறும் இதுபோன்ற தவறுகளைத் தெரிந்த யாவரும் ஆதாரங்களுடன் திருத்திக்கொள்ள முடியும் என்று பதிலளித்தனர்.

○ எதிர்காலத்தில் இந்த வலைப்பதிவர் குழுமம் கணினிப் பயிற்சிப்பட்டறைகளை நடத்தலாம் என்ற எண்ணத்தை வெளியிட்டனர்.

○ நன்றி சொல்லிப்பேசிய கதிர் அவரகள் இந்த கூட்டத்துக்கு இருபது பேர் வருவார்கள் என எண்ணியிருந்தோர் நூற்றுக்கு மேலானவர்கள் வந்து இந்த விழாவைச் சிறப்பித்துள்ளனர் என்று மகிழ்ச்சி தெரிவித்தார். நா.கணேசன் (தமிழ்கொங்கு) ஐயா அவர்களின் ஊக்குவித்தலையும் தமிழ்மணம் திரட்டியின் ஒத்துழைப்பையும் எண்ணிப் பெருமிதம் கொண்டவராக அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

○ ஈரோடு வலைப்பதிவர் குழுமம், தமிழ்மணம், சங்கமம் இணைந்து நடத்திய இந்த வலைப்பதிவர் சந்திப்பு முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது.

○ வலைப்பதிவுகளில் நிழற்படத்தைமட்டுமே பார்த்து பழகிய சூழலில் ஒவ்வொரு வலைப்பதிவர்களையும் நேரில் கண்டு உரையாடியது புதிய அனுபவமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

○ இந்த கூட்டத்துக்குப் பின்னர் சந்தித்துக்கொண்ட வலைப்பதிவர்களிடையே நட்பு அதிகரிக்கும் என்பதும் வலைப்பதிவர்கள் தம் வலைப்பதிவை மேலும் செம்மைப்படுத்த இந்த சந்திப்பு துணைபுரியும் என எண்ணகிறேன்.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

தமிழ் வீரநிலைக்கவிதை







சங்க இலக்கியங்களை ஆய்வுசெய்வோரும், ஓப்பீட்டு முறை ஆய்வுசெய்வோரும் படிக்கவேண்டிய அரிய நூல் “தமிழ் வீரநிலைக்கவிதை“


பொருளடக்கம்

1.சான்றாதரங்களின் மதிப்பீடு


சங்கம் பற்றிய மரபுவழிக்கதை
பாண்பாட்டு
அகம், புறம் என்பவற்றின் ஒருமை
புறநானூறு
பதிற்றுப்பத்து
அகத்திணைப்பாடல்களின் தொகைகள்
பத்துப்பாட்டு
தொல்காப்பியம்
புறப்பொருள்வெண்பாமாலை

2.புலவரும் புரவலரும்
செய்யுளும் வருவதுரைத்தலும்
கிரேக்கச்சான்று
புலவர்களுக்குரிய செயல்கள்
நாணும் பழியும்

3.புலவர்களும் புலமை மரபுகளும்
பாணர்
பொருநர்
கூத்தர்
விறலியர்
கோடியர், வயிரியர், கண்ணுளர்
அகவுநர்
புலவர்
பாணர்களின் வகைமை
குடிவழிகள்

4.வாய்மொழிப் பாடலாக்க கலைநுட்பங்கள்
வாய்பாடுகள்
யாப்பு
வாய்பாடுகள்
ஆசுகவித்தன்மையும் பதிலுடு செய்தலும்

5.அடிக்கருத்துக்களும் சுழல் நிகழ்வுகளும்
தொடக்க காலக்கருத்துக்கள்
வெல்ஷ் மற்றும் ஐரிஸ் ஆதாரங்கள்
கிரேக்க ஆதாரம்
பாடுபொருளை உருப்படுத்தல்

6.வீரர் உலகம்
புகழ்விருப்பம்
போரில் துணிவு
வஞ்சினம்
குடிவழி
செல்வம்
வீரரும் வீரரல்லாதோரும்

நூலாசிரியர்

க.கைலாசபதி

மொழிபெயர்பாளர் - கு.வெ.பாலசுப்பிரமணியன்

வெளியீட்டாளர்- குமரன் புத்தக நிலையம்
கொழும்பு - சென்னை -2006

புதன், 16 டிசம்பர், 2009

இணையமும் தமிழும்.(பவர்பாய்ண்ட்)

இணையத்தில் தமிழ் கடந்துவந்த பாதையையும் நிகழ்கால் நிலையையும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு இயம்பும் திறன்சார் கோப்புகளின் அணிவகுப்பு..


Check out this SlideShare Presentation:

செவ்வாய், 15 டிசம்பர், 2009

வண்டைக் கடித்த நண்டு நண்டைக் கடிந்த நாரை.




நம் வாழ்வியலில் எல்லாமே செயற்கையாகப் போய்விட்டது.

உணவிலிருந்து உறவு வரை எல்லாமே செயற்கை…………

செயற்கையாகவே வாழப்பழகிவிட்ட நமக்கு……….

இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த சங்கத்தமிழர் வாழ்வியல் வியப்பளிப்பதாகவுள்ளது.

கடற்கரை ஓரம்!
நாவல் மரத்திலிருந்து நாவல் கனி வீழ்ந்து கிடக்கிறது,
கரிய கனியாயினும் இனிய கனி ஆதலால் அதனை வண்டு மொய்த்திருக்கிறது.
வண்டும் கருமை நிறம் கொண்டது ஆதலால், கனியைக் உண்ண வந்த நண்டு வண்டைப் பிடித்தது.
நண்டிடமிருந்து தப்பிக்க. வண்டு ஒலி எழுப்பியது. வண்டின் ஒலி இனிய யாழோசை போல இருக்கிறது.

அவ்வேளையில் இரைதேடி வந்தது நாரை.

நாரைக்கு அஞ்சிய நண்டு வண்டை விட்டு நீங்கிச் சென்றது.

இவ்வழகிய காட்சி அகவாழ்வியலை இயம்ப துணைநிற்கும் சங்கப்பாடலாக இதோ...


“பொங்கு திரை பொருத வார் மணல்அடைகரைப்
புன் கால் நாவல் பொதிப் புற இருங் கனி
கிளை செத்து மொய்த்த தும்பி, பழம் செத்துப்
பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து,
5 கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரை தேர் நாரை எய்தி விடுக்கும்
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம்
பண்டும் இற்றே; கண்டிசின்தெய்ய;
உழையின் போகாது அளிப்பினும், சிறிய
10 ஞெகிழ்ந்த கவின் நலம்கொல்லோ?-மகிழ்ந்தோர்
கள்களி செருக்கத்து அன்ன
காமம்கொல்?-இவள் கண் பசந்ததுவே!


நற்றிணை 35. (நெய்தல்)
அம்மூவனார்.

கூற்று - மண மனைப் பிற்றைஞான்று புக்க “தோழி நன்கு ஆற்றுவி்த்தாய்“ என்ற தலைமகற்கு சொல்லியது.

காதலுக்குத் துணைநின்ற தோழியிடம் தலைவன் பிரிவின்போது நீ தலைவியை நன்கு ஆற்வி்த்தாய் என்றான். அதற்கு தோழி தலைவியின் பொருட்டு நான் தாய்க்கு அஞ்சினேன். அவளின் பிரிவாற்றைமை நீங்க நீயே விரைந்து வந்து காத்தாய் என்றாள். மேலும் தலைவி உன் சிறு பிரிவையும் தாங்கமாட்டாள். அதனால் அவளை நீங்காது இருத்தல் வேண்டும் என்கிறாள்.

பாடலின் விளக்கம் உரையாடலாக…….

தலைவி
- வா தோழி! வா! உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்களானது..

தோழி
- ஆம் நீண்ட நாட்களானது.. எப்படியிருக்கிறாய்..?

தலைவி
- எனக்கென்ன நான் நன்றாக இருக்கிறேன்.

தலைவன்
- வா தோழி நன்றாக இருக்கிறாயா..?

தோழி
- நன்றாக இருக்கிறேன். தாங்கள் எப்படி இருக்கிறீர்கள்..?

தலைவன்
- நான் நன்றாக இருக்கிறேன்..

தோழி
- திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது..?

தலைவன்
- மிகவும் நன்றாக இருக்கிறது. மகிழ்வாக உள்ளோம். இந்த மகிழ்ச்சிக்குக் காரணம் நீயல்லவா..

தோழி
- நான் என்ன பெரிதாகச் செய்துவிட்டேன்.

தலைவன்
- நாங்கள் காதலித்த போது எனது பிரிவில் வாடியிருந்த தலைவியின் வருத்தத்தைப் போக்கி நன்கு ஆற்றுவித்தாய் இந்த உதவியை மறக்க முடியுமா..?

தோழி
- நீயே விரைந்து வந்து காத்தாய் அவளின் பிரிவின் வருத்தத்தைப் போக்கினாய். இதில் எனது பங்கு என்ன இருக்கிறது..

தலைவன்
- உனது பேச்சில் உனது பெருந்தன்மை வெளிப்படுகிறது.

தோழி
- பொங்கி எழும் கடல் அலை மோதிய மணல் அடுத்த கடற்கறை. அங்கு நாவல் மரத்திலிருந்து கனிகள் விழுந்திருக்கும். அக்கனிகளை மொய்தவாறு கரிய வண்டினங்கள் இருக்கும். கரிய வண்டுக்கும், கரிய நாவற்கனிக்கும் எவ்வித மாறுபாடும் இல்லாது இருக்கும். நாவற்கனியைக் கொள்ள வந்த நண்டு கரிய வண்டை பழம் என்று எண்ணிக் கைக்கொள்ளும். வண்டினங்களோ நண்டிடமிருந்து தப்பிக்க யாழ்போல ஒலி எழுப்பும். அப்போது இரைதேடி அங்கு வந்த நாரையைக் கண்டு நண்டு அவ்விடத்தைவிட்டு நீங்கியது. இத்தகு கடல்துறை விளங்கும் மாந்தை நகரம் போன்றது இவளின் நலம்.

நீ களவுக்காலத்தில் சிறிது நீ்ங்கினாலும் இவள் தாங்காது பசலை கொள்வாள்.

மது அருந்தி பழக்கப்பட்டோர் மது கிடைக்காதபோது மனம் வருந்தி வேறுபாடு கொள்வர். அதுபோல உனது பிரிவை சற்றும் தாங்கமாட்டாள் இவள் அதனால் இவளை நீங்காது வாழவேண்டும்..

தலைவன்
- நான் இவளை நீங்குவேனா…!!

தோழி
- மகிழ்ச்சி!


உள்ளுறைப் பொருள் -

நாவற்கனி - தலைவி.
வண்டு - தோழி.
நண்டு - பெற்றோர்.
நாரை - தலைவன்.


கனியை வண்டு மொய்த்தது போலத் தலைவியைத் தோழி சூழ்ந்திருந்தாள்.
நண்டாகப் பெற்றோர் காதலைத் தடுக்க முயல நாரையாகத் தலைவன் வந்து தலைவியின் இற்செறிப்புத் துயர் நீக்கித் வரைவு (திருமணம்) மேற்கொண்டான்.


சங்கப் புலவர்கள் சங்ககால வாழ்வியலை எடுத்தியம்ப இயற்கையைத் துணையாகக் கொண்டார்களா..?

இயற்கையை எடுத்தியம்ப சங்ககால வாழ்வியலைத் துணையாகக் கொண்டார்களா..?

என வியக்கும் வகையில் சங்கஇலக்கியங்களில் இயற்கை வாழ்விலோடு கலந்திருக்கிறது.

வெள்ளி, 11 டிசம்பர், 2009

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள்.



○ தமிழாய்வு, கல்விப்புலம் சார்ந்த நிலையிலும், கல்விப்புலம் சாராத நிலையிலும் செய்யப்பட்டுவருகிறது.
○ பல்கலைக்கழக மானியக்குழு, செம்மொழி ஆய்வு நிறுவனம் போன்ற புலங்களைச் சார்ந்தும் பல ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
○ எந்த தலைப்பில் ஆய்வு செய்யப்பட்டது என்பது அந்த கல்விநிலையத்துக்கும் ஆய்வாளருக்கும் மட்டுமே தெரியும் நிலை உள்ளது.
○ இதுவரை செய்யப்பட்ட ஆய்வுத்தலைப்புக்களையும், செய்யப்பட்டுவரும் ஆய்வுத்தலைப்புகளையும் இணையத்தில் பதிவுசெய்வதால் ஒரே தலைப்புகளில் மீண்டு்ம் மீண்டும் ஆய்வு செய்யும் நிலை மாறும். தமிழாய்வு செம்மைப்படும்.
○ நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்தொடர்பான செய்திகளை இணையத்தில் காண்பதே அரிதாக இருந்தது.
○ இன்று வலைப்பதிவுகள் வந்தபின்னர் கருத்துச்சுதந்திரம் அதிகமாகியுள்ளது. தமிழ் சார்ந்த வலைப்பதிவுகள் பலவும் தமிழ் இணையத்துக்கு இணையாக கருத்துக்களை வெளியிட்டுவருகின்றன.இணையத்தில் நம் கருத்துக்களைப் பதிவு செய்வது மிகவும் எளிதாகவுள்ளது.
○ இந்நிலையில் கல்விப்புலம் சார்ந்து செய்யப்படும் ஆய்வுகளின் தலைப்புக்களை இணையத்தில் பதிவு செய்வது தமிழாய்வின் வளர்ச்சிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய பணியாக அமையும்.
○ இணையம் என்பது தமிழுக்குத் தொடர்பில்லாதது என்ற நிலையிலேயே தமிழ்த்துறை சார்ந்தோர் தள்ளிநிற்கின்றனர். இந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். “இயல், இசை, நாடகத்தோடு தமிழ் முடிந்துபோகவில்லை, அறிவியல் தமிழ் என்ற இணையத்தமிழ் நான்காவது தமிழாக வளர்த்தெடுத்து அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
○ இணையத்தில் நாம் பதிவு செய்யும் சிறு செய்திகள் கூட எதிர்காலத் தலைமுறையினருக்கான அடிப்படை ஆதாரம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
○ நிதி நல்கை பெற்று தொகுக்கப்பட்ட ஆய்வுத்தலைப்புக்களை இணையத்தில் பதிவு செய்யவேண்டியது அந்த ஆய்வாளரின் அடிப்படைக்கடமையாகக் கொள்ளவேண்டும்.

ஆய்ந்தெடுத்த முத்துக்கள் ஆயிரம்….

முனைவர்.சே.செந்தமிழ்பாவை
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
அழகப்பா பல்கலைக்கழகம்
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு இந்தியா.

அவர்கள் எனது நெறியாளர் ஆவார். இவர் அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இதுவரை செய்யப்பட்ட ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்புக்களைத் தொகுத்து ஒரு வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இத்தலைப்புக்கள் …..

சங்க இலக்கியம்
நீதி இலக்கியம்
பக்தி இலக்கியம்
இக்கால இலக்கியம்

எனப் பல கூறுகளையும் உள்ளடக்கியதாகவும்,

ஆய்வுத்தலைப்பு
ஆய்வாளர்
ஆய்வின் உள்ளடக்கம் என்ற முறையிலும் வெளியிடப்பட்டுள்ளது.

எந்த நிதிநல்கை உதவியும் இன்றி தொகுக்கப்பட்ட இந்த ஆய்வுத்தலைப்புகள் தமிழாய்வுக்கும், ஆய்வுத்தலைப்பு தேர்வு செய்வோருக்கும் பேருதவியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தமிழ்த்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் இந்த சிந்தனை வந்தால் தமிழாய்வு எதிர்காலத்தில் இன்னும் உயர்ந்த நிலையை அடையும்.

ஆய்வுத்தலைப்பு அடங்கிய வலைப்பதிவின் முகவரி இதோ - “தமிழாய்வு“

புதன், 9 டிசம்பர், 2009

கூவன்மைந்தன்




சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்,

திருடனுக்குத் தேள்கொட்டியது போல

என்றெல்லாம் பேச்சுவழக்கில் நாம் வழங்கிவருகிறோம்.

திருடனுக்குத் தேள் கொட்டினால் அந்த வலியை அவன் வாய்விட்டு அழுது கூட வெளிப்படுத்த முடியாது.

யாரிடமும் சொல்லியும் ஆறுதலடைய முடியாது

வாழ்வில் சில நேரங்களில் இதுபோன்ற சூழல் நமக்கு ஏற்படுவதுண்டு அவ்வேளையி்ல் நம் மனதில் எண்ணுவதை யாரிடமும் சொல்ல இயலாது வருந்துவோம்.

தலைவனின் பிரிவால் வாடும் தலைவி!
தலைவியின் நிலை கண்டு வாடும் தோழி!
தோழியின் வருத்தம் கண்டு பெருந்துயர் கொள்ளும் தலைவி!

இவர்களின் இச்சூழலை அழகான உவமையால் எடுத்தியம்பும் சங்கப்பாடல் இதோ…


224. பாலை
கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே-கூவற்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.


புலவர் - கூவன் மைந்தன்

குறுந்தொகை.


(பிரிவிடை இறந்துபடும் எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது)

தலைவனின் பிரிவினை தாங்க இயலாது தலைவி இறந்துவிடுவாளோ என்ற வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது.

தனக்கு இனிய செந்நிறப் பசு ஒன்று இரவில் கிணற்றில் வீழ்ந்த துன்பத்தைப் பார்த்த உயர்குலத்து ஊமனைப் போலத் துயருரும் தோழியின் உள்ளத்தில் ஏற்பட்ட துன்பத்தினால் யான் உயிர் தாங்க இயலாதவளாயினேன். என்னை வெறுத்துச் சென்ற என் தலைவனால் என் மனதில் ஏற்பட்ட துன்பத்தைவிட எனக்காகத் தோழி படும் துன்பம் என்னை மேலும் வருத்துவதாக உள்ளது.


உயர்குலத்து ஊமன் ஆதலால் கிணற்றில் வீழ்ந்த பசுவை வெளியே எடுத்துக்காக்கும் வழி அறியான்.

அதுபோல தலைவியின் துன்பத்தை நீக்கும் வழி அறியாதவளாக தோழி உள்ளாள்.

கிணற்றி்ல் பசு வீழ்தமையை பிறர்க்கு உரைக்க இயலாதவானாக ஊமன் உள்ளான்.

அதுபோலத் தோழி தலைவிக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தீர்க்க இயலாதவளாகவும், பிறர்க்கு உரைக்க இயலாத தன்மையது தலைவியின் துயர் என்பதால் உயர்குலத்து ஊமனைப் போல வருந்துவதன்றி வேறு வழியறியாதவளாக இருக்கிறாள்.

தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி, தலைவனால் ஏற்பட்ட துயரைக் கூட ஒருவழியாகத் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் எனக்காக இந்த தோழி படும் துயர் தாங்க இயலாததாகவுள்ளது என்று வருந்துகிறாள்.

பசு கிணற்றில் வீழ்ந்தது இரவு ஆதலால் யாரும் அறியாத சூழல்
தலைவியின் துன்பம் அகம் சார்ந்தது ஆதலால் தன் தாய்க்குக் கூட தெரியாத சூழல்.


இப்பாடல் வழியாக,

• தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவியின் துயர் அழகாக இயம்பப்பட்டுள்ளது.

• தலைவிபடும் துன்பம் கண்டு வருந்தும் தோழியின் நட்பின் ஆழத்தைப் புலவர் உயர்திணை ஊமன் வாயிலாக சிறப்பாகப் புலப்படுத்தியுள்ளார்.

• தனக்காகத் தோழிபடும் துன்பத்தைக் கண்டு வருந்தும் தலைவியன் வாயிலாக தலைவி தன் தோழியின் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்துள்ளாள் என்பதையும் நன்கு எடுத்தியம்பியுள்ளார்

• கூவல் என்ற சொல் கிணற்றைக் குறிக்கும் கிணற்றில் வீழ்ந்த பசு , அதைக் காக்க இயலாத உயர்திணை ஊமன் வாயிலாக அழகாக இப்பாடல் விளக்கம் பெற்றதால் பெயர் தெரியாத இப்புலவர் கூவன் மைந்தன் என்ற பெயர் பெற்றார்.

திங்கள், 7 டிசம்பர், 2009

மூளை என்னும் கணினியைக்காக்கும் எதிர்ப்பு நச்சுநிரல் - UPSC EXAM TAMIL - புறநானூறு -194



ஒவ்வொரு முறை புதிய கணினிகள் கண்டுபிடிக்கப்படும் போதும், அதன் நினைவுத்திறன், செயல்திறன் ஆகியவற்றின் சிறப்பினையே யாவரும் வியந்து பார்ப்பது வழக்கம். ஆனால் எனக்கு அந்தக் கணினியைக் கண்டறிந்த மனிதமூளையை எண்ணியே வியப்புத் தோன்றும்.

ஆம் மனித மூளையை அடிப்படையாகக் கொண்டே கணினிகள் வடிவமைக்கப்படுகின்றன. கணினியைப் போலவே மனித மூளை செயல்படுகிறது. கணினியை நச்சுநிரல்(வைரஸ்) தாக்கி அழிப்பது போலவே மனிதமூளையைப் பல நச்சுநிரல்கள் ( இன்பம், துன்பம், ) தாக்கி அழிக்கின்றன. கணினியைப் பாதுகாக்க நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருள்கள் (ஆன்டிவைரஸ்) தேவைப்படுவது போலவே மனித மூளை என்னும் கணினியைக் காக்கவும் நச்சுநிரல் எதிர்ப்புமென்பொருள்கள் தேவைப்படுகின்றன.
 இன்பங்கள் தோன்றுவது நேர்மறை எண்ணங்களால்…
துன்பங்கள் தோன்றுவது எதிர்மறை எண்ணங்களால்…
அளவுக்கதிகமான இன்பமும் மூளையைச் செயலிழக்கவைக்கும்..
அளவுக்கதிகமான துன்பமும் மூளையைச் செயலிழக்கவைக்கும்..

சொர்க்கம்! நரகம்! இரண்டும் எங்கோ இல்லை …
நம் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களாலேயே இவ்விரண்டும் தீர்மானிக்கப்படுகின்றன.

இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை!
துன்பம் வரும் போது சிரி என்றார் வள்ளுவர்..

துன்பத்தை எதிர்கொள் - துன்பத்தை இன்பமாகக் காண்
இன்னாதது தான் உலகம் - அதில் இனியவை காண்பர் உலகின் இயல்பு உணர்ந்தோர் என்கிறார் பக்குடுக்கை நன்கணியார் என்னும் புலவர்.

எதிர்மறை எண்ணங்கள் என்னும் நச்சுநிரல் மூளையைத் தாக்கும் போது நேர்மறை எண்ணங்கள் என்னும் எதிர்ப்பு நச்சுநிரலைப் பயன்படுத்தி மூளையை சோதனை செய்து கொள்ளவேண்டும் என்று இயம்புகின்றது இவர்தம் பாடல், பாடல் இதோ,

முழவின் பாணி!
ஓரில் நெய்தல் கறங்க, ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்,
படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.

                                                                                    பாடியவர் - பக்குடுக்கை நன்கணியார்

புறநானூறு 194.
திணை - பொதுவியல்
பெருங்காஞ்சி

நிலையாமை உணர்த்துதல் பெருங்காஞ்சி எனப்படும். இன்னாதம்ம இவ்வுலகம், இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே எனக் கூறியதால் இப்பாடல் பெருங்காஞ்சித் துறையானது.





ஒரு வீட்டில் சாக்காட்டுப்பறை 
( சாவுக்கொட்டு மேளம்) ஒலிக்கிறது. 
ஒரு வீட்டில் திருமணத்துக்கு இசைக்கும் முழவோசை முழங்குகிறது. 
கணவரோடு கூடிய மகளிர் மலர் அணிந்து மகிழ்ச்சியோடு உள்ளனர். கணவரைப் பிரிந்த மகளிர் வருத்தத்துடன் கண்களில் கண்ணீர் வரக் கலங்குகின்றனர்.
இந்த உலகைப் படைத்தவன் என்று ஒருவன் இருந்தால் அவன் நல்ல பண்பில்லாதவனாகவே இருப்பான். 
ஏனென்றால் தாங்கிக்கொள்ள இயலாத துன்பங்களை இன்பங்களுக்கிடையே வைத்தானே !

என்பது இப்புலவரின் புலம்பலாகவுள்ளது.


இன்னாமை நிறைந்த இவ்வுலகில் இனிமை காணுவோர், உலகின் இயல்பை நன்குணர்தோராவர் என்னும் இப்பாடல்வழி,

உலகம் இன்னாதது தான் - அதன் இயல்பினை உணர்ந்துகொண்டால் அது இனிமையானதுதான் என்கிறார் இப்புலவர்.

இனியது என்பது இன்பமானது,
இன்னாதது என்பது துன்பமானது என நாம் வரையறைசெய்து வாழ்ந்து வருகிறோம்.

நம்மைச்சுற்றி நாம் வாழும் வாழ்க்கையில் கணக்கிலடங்கா இன்பமும், துன்பமும் நிறைந்திருக்கிறது. இன்பம் வந்தபோது மகிழும் மனது துன்பம் வந்தபோது துவண்டு போகிறது.

எதிர்மறை எண்ணங்கள் நம்மைத் துவளச் செய்யும்
நேர்மறை எண்ணங்கள் நம்மை எழச் செய்யும்


கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்,
தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன”

ஆனால் மனிதன் மட்டும் கடவுளையோ …
இன்னும் யார் யாரையோ நம்பியே வாழ்கிறான் … தன்னைத்தவிர!

“மேயச்செல்லும் மாடு தன் கொம்பில் வைக்கோலைக் கட்டிச்செல்வதில்லை”

ஆனால் மனிதன் மட்டும் எதிர்காலம் குறித்த அச்சத்திலேயே தன் வாழ்நாளில் பாதியைத் தொலைத்துவிடுகிறான்.

ஆசை அவனை ஆட்டிவைக்கிறது.

நாம் எதிர்பார்ப்பது போல் வாழ்க்கை எப்போதும் அமையாது..

எதிர்பாராத நிகழ்வுகளின் தொகுப்பே வாழ்க்கை!

வாழ்க்கையில் இன்பம் மட்டுமே இருந்தால் இன்பத்தின் மதிப்புத் தெரியாது,
வெயிலின் அருமை நிழலில் தெரிவது போல இன்பத்தின் அருமை துன்பத்தில் தான் தெரியும்.

இன்பம், துன்பம் என்பதற்கான அளவீடு அதனை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதிலேயே அமைகிறது.

துன்பம் நாம் வரவழைத்துக்கொள்வது !
இன்பம் எப்போதும் நம்மோடு இருப்பது !

என்பதை கூறுவதே இப்பாடல்.

யாரும் தொலைக்கவில்லை !

ஆனால் இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறார்கள் …..

நிம்மதியை..!

 நம் மூளையை அழிவிழிருந்து காக்கும் ” நச்சுநிரல் எதிர்ப்பு மென்பொருள்கள்” என்பவை நேர்மறை எண்ணங்களே!

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் இன்னாத உலகமும் இனியதாகும்..!

புதன், 2 டிசம்பர், 2009

இம்மென்கீரனார்.



இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததே மனித வாழ்வியல்,
இன்பத்தை அன்பானவர்களிடம் பங்கிட்டுக்கொண்டால் இரண்டுமடங்காகும்,
துன்பத்தைப் பங்கிட்டுக் கொண்டால் பாதியாகக் குறையும்.

இன்பம் வந்தபோது பங்கிட்டுக்கொள்ள நண்பர்களைத் தேடும் மனது, துன்பம் வந்த போது யாருக்காகவும் காத்திருப்பதில்லை “அழுகை, புலம்பல்“ இவ்விரண்டில் ஒன்றாக வெளிப்படுகிறது...

இவ்விரண்டும் ஒரு வகையில் துன்பம் என்னும் மன அழுத்தத்தை நீக்கும் வாயில்கள் தான்..
மன அழுத்தம் அதிகமானால், நீடித்தால் மனப்பிறழ்வாகிவிடும் என்பது உளவியல்.

இங்கு ஒரு தலைவியின் அழகான புலம்பல்...



களவொழுக்கம் (காதல்) காரணமாக அலர் எழுந்தது
. அதனால் தலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும் ஆற்றிடம் புலம்புவதாக இப்பாடல் அமைகிறது.


(காமம் மிக்க கழிபடர் கிளவியால் வரைவிடத்துக்கண், தலைமகள் தலைமகன் வரையினின்றும் போந்த ஆற்றொடு புலந்து சொல்லியது.)


அஃறிணை உயிர்களிடம் பேசுவது அறிவுடைமை ஆகாது. ஆயினும் துன்பத்தில் வாடிய மனது இதை அறியாது. தலைவன் மீது கொண்ட அன்பு மிகுந்த தலைவி அதனை எப்படி வெளிப்படுத்துவது என்பதை அறியாள். தலைவன் தன்னைக் காணவராததால் அவன் மீது மிகுந்த வருத்தம் கொண்டாள். தன் வருத்தத்தை அவன் நாட்டிலிருந்து வரும் ஆற்றிடம் இவ்வாறு வெளிப்படுத்துகிறாள்.


“பெரிய ஆண் புலியால் தாக்கப் பெற்று புண்பட்டு, பெண்யானையால் தழுவப் படும் வலிமை குன்றிய ஆண்யானை மூங்கிலால் செய்யப்பட்ட தூம்பு போல ஒலித்தற்கு இடனான எம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே….

எம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது!
மெல்லிய தோளும் மெலிந்து போயிற்று!
உடல் பாழ்பட பசலையும் படந்தது!
உடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது!
இந்நிலையில் என் நிலையை எண்ணிப் பார்காதவனாக நின் தலைவனும் எனக்குக் கொடுமை செய்தான்.

கலங்கும் குளிந்த கண்களிலிருந்து நீர்பெருகுமாறு அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் நின் தலைவனுக்குப் பொருந்துவதாகுமா..?

நான் இப்படியெல்லாம் உன்னைக் கேட்பேன் என்று எனக்கு அஞ்சி, அவர் மலையில் மலர்கின்ற மலர்களால் நீ உன் உடலை முழுதும் மறைத்துப் போர்த்துக்கொண்டு நாணத்தால் மிகவும் வெட்கிச் செல்கிறாய்!

உன்னை மட்டும் ஊர்வழியே அனுப்பிவிட்டு அன்பும் அருளும் இன்றி என்னைத் துறந்து செல்லும் வன்மையுடையோரை என் தலைவன் என்பேனா?
அவரை என் அயலார் என்று கூறுதல் எவ்விதத்தில் தவறாகும்?

நீயோ நெடுந்தொலைவு வந்துள்ளாய்!
நின் ஓட்டத்தைத் தடுத்து தீயினைப் போன்ற மலர்களைப் பூத்து நிழல்தரும் வேங்கை நிழலிலே தங்கிச் செல்வாயாக!

ஆரியரின் பொன்கொழிக்கும் இமயமலையைப் போன்ற பூக்கள் பூத்துக் குலுங்கும் எம் தந்தையது காடான இங்கு இன்றைய பொழுது நீ தங்கிச் செல்லலாமே..!
இன்று நீ இங்கு தங்கிச் செல்வதால் உனக்கு ஏதும் தீங்கு நேர்வதுண்டோ..?

என வினவுகிறாள்..

பாடல் இதோ…



'இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூர,
படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ,
மென் தோள் நெகிழச் சாஅய், கொன்றை
ஊழுறு மலரின் பாழ் பட முற்றிய
5 பசலை மேனி நோக்கி, நுதல் பசந்து,
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான்,
நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று,
அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க,
நன்று புறமாறி அகறல், யாழ நின்
10 குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ?
கரை பொரு நீத்தம்! உரை' எனக் கழறி,
நின்னொடு புலத்தல் அஞ்சி, அவர் மலைப்
பல் மலர் போர்த்து, நாணு மிக ஒடுங்கி,
மறைந்தனை கழியும் நிற் தந்து செலுத்தி,
15 நயன் அறத் துறத்தல் வல்லியோரே,
நொதுமலாளர்; அது கண்ணோடாது,
அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ,
படித்துப் பயன்பெறவும்.
மாரி புறந்தர நந்தி, ஆரியர்
பொன் படு நெடு வரை புரையும் எந்தை
20 பல் பூங் கானத்து அல்கி, இன்று, இவண்
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ?
குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து,
உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை
வாங்கு அமைக் கழையின் நரலும், அவர்
25 ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே!

இம்மென்கீரனார் (அகநானூறு-398)

இப்பாடல் வழி அறியலாகும் உண்மைகள்..


1.இப்பாடல் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில் இப்பாடலில் இடம்பெறும்…

“நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று“

என்னும் அடியில் இடம்பெற்ற “இம்“ என்னும் சொல் இம்மென் கீரனார் என்று இப்புலவர் பெயர் பெறக் காரணமானது.

2. தலைவன் மீது கொண்ட மிகுந்த அன்பு காரணமாக ஆற்றாது புலம்பும் தலைவியின் நிலை காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் அகத்துறையை விளக்குவதாக அமைகிறது.
3. தலைவனின் பிரிவை ஆற்றாத தலைவி தன் ஆற்றாமையை ஆற்றிடம் வெளிப்படுத்துகிறாள். இயல்பாக மலர் செறிந்து செல்லும் ஆற்றிடம் எனக்கு அஞ்சித் தான் நீ உன் உடலில் மலர் போர்த்திச் செல்கிறாய் என்கிறாள்.

4. தலைவனுடன் சேர்ந்திருக்க இயலாத வருத்தத்தில் இருக்கும் தலைவி, அவன் நாட்டிலிருந்து வரும் ஆற்றுடனாவது சில காலம் தங்கியிருக்கலாம் என்று கருதி ஆற்றிடம் தன் ஊரில் தங்கிச்செல்லவேண்டும் என வேண்டுதல் விடுக்கிறாள்.