வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 24 ஏப்ரல், 2010

பூ உதிரும் ஓசை




வானம், நிலா, நட்சத்திரம், தென்றல், என்று நான் எப்போதாவது இயற்கையைப் பார்த்து மகிழ்ந்து கவிதை சொல்ல முற்பட்டால் என் நண்பர்கள் சொல்வார்கள்,

இவன் காதல் வயப்பட்டுவிட்டான், கவிஞனாகிவிட்டான் என்று.

இயற்கை என்ன காதலர்களுக்காகவும் கவிஞர்களுக்காகவுமே தோன்றியதா?
சராசரி மனிதர்கள் இயற்கையோடு உறவாடக் கூடாதா?

என்னைக் கேட்டால் இயற்கையோடு உறவாடும் மனிதர்களே வாழத்தெரிந்தவர்கள் என்பேன்.

என் அனுபவத்தில் சொல்கிறேன் சராசரி வாழ்வில் இயற்கையோடு உறவாட நேரம் ஒதுக்கிப் பாருங்கள். உங்கள் இன்பம் இருமடங்காகும், துன்பம் பாதியாகக் குறையும்.

பூ பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை என்று பாடல் கேட்டிருப்போம், ஆனால்,

பூ பூக்கும் ஓசையையோ, பூ உதிரும் ஓசையையோ கேட்டது உண்டா?

இன்றைய ஒலி மாசுபாடுகள் நிறைந்த உலகில் பூ பூக்கும் ஓசையை எங்கு கேட்பது என்கிறீர்களா?

காசின் ஓசையின் முன்னே
பூவின் ஓசையை எல்லோராலும் கேட்கமுடியாது என்பது உண்மைதான்“

“அப்படி என்னதான் சொல்லிவிட்டது காற்று
இப்படிக் குலுங்க குலுங்கச் சிரிக்கிறதே மரம்“


என்னும் கவிதை இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் ஓராயிரம் கவித்துவம் மறைந்துள்ளதையே தெரிவிக்கிறது.

சங்ககாலக் காட்சி ஒன்று.

கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே
எம்இல் அயலது ஏழில் உம்பர்
மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே“


(குறுந்தொகை -138
புலவர் -கொல்லன் அழிசி
திணை – குறிஞ்சி
உரி – கூடல்
துறை – குறி பிழைத்த தலைவன் பின் இரவுக்குறி வந்தபோது தோழி சிறைப்புறமாகக் கூறியது. இரவுக்குறி நேர்ந்ததும்ஆம்.)


தலைவன் கேட்கத் தோழி உரைக்கிறாள்,

எம் மனைக்கு அயலாகவுள்ள ஏழுமனையின் அப்பால் மயில் அடியைப் போன்ற இலைகளையுடைய கரிய பூங்கொத்துக்களைக் கொண்ட நொச்சியின் அழகுமிக்க மெல்லிய கொம்புகள் உதிர்த்த நீலமணிபோன்ற நிறம் கொண்ட பூவின் ஓசையை மிகவும் கேட்டு, அலர் உரைக்கும் ஊர் தூங்கினாலும் நாங்கள் தூங்கவில்லை.

தலைமக்கள் இரவுக்காலத்தில் தலைவியின் வீட்டருகே சந்தித்து உறவாடி மகிழ்வது“இரவுக்குறி“ எனப்படும். இக்காலத்தில் தலைவன் தன் வருகையை ஏதாவது ஒலி செய்து தெரிவிப்பது மரபு. அதனால் தலைவன் செய்யும் ஒலிக்காக இரவு முழுவதும் உறங்காது காத்திருந்த தலைவிக்கு ஏழுவீடுகளுக்கு அப்பால் உதிரும் நொச்சிப் பூவின் ஓசைகேட்டது என்கிறாள் தோழி.

நொச்சிப் பூவின் மெல்லிய ஓசையைக்கூடக் கேட்கமுடிந்த நாங்கள் நீ சிறு ஒலி செய்திருந்தால் கூட அதைக் கேட்டிருப்போம். நீ வரவில்லை அதனால் ஏதும் ஒலி செய்யவில்லை. நீ வருவாய் எனக் காத்திருந்த தலைவி ஏமாற்றமடைந்தால் என்பதைத் தலைவனுக்கு உணர்த்தினாள் தோழி.

ஊர்தூங்கும் காலம் என்று தோழி குறிப்பது தலைவியை சந்திக்க ஏற்றகாலம் இரவு என்று “இரவுக்குறி“ தலைவனுக்கு அறிவுறுத்துவதாகவும் கொள்ளலாம்.

பாடல் உணர்த்தும் கருத்து.

 இரவுக்குறி, குறிபிழைத்தல் போன்ற அகத்துறைகள் விளக்கப்படுகின்றன.
 இயற்கையோடு ஒன்றிய பழந்தமிழரின் அகவாழ்வு புலப்படுத்தப்படுகிறது.
 நொச்சிப் பூ உதிரும் ஓசை கேட்கமுடிந்தது என்பதால் ஒலிமாசுபாடற்ற வாழ்வை சங்கத்தமிழர் வாழ்ந்தனர் என்பது உணரமுடிகிறது.
 மயில் அடியைப் போன்ற நொச்சி என்ற புலவரின் வருணனை மயில் அடியோடு நொச்சியிலையை நுட்பமாக ஒப்புநோக்கிய புலவரின் திறன் பாராட்டத்தக்கதாகவுள்ளது.

புதன், 21 ஏப்ரல், 2010

அறிஞர்.அண்ணா கட்டிய வீடு.



அறிஞர்.அண்ணா அவர்களின் மனைவி தன் பேத்தி வாயிலாக அண்ணாவிடம் நாம் வீடுகட்டவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தாராம். தன்பேத்தி கொண்டு வந்த கோரிக்கை எழுதிய தாளிலேயே வீட்டின் படத்தை வரைந்து கொடுத்தார் அண்ணா.

வரைபடத்தைப் பார்த்த அவரின் மனைவி, நம் வீட்டின் மாதிரிப்படமா? என்று கேட்க. அதற்கு அண்ணா அவர்கள்,


“நம் வீடே அதுதான்“ என்றாராம்.

-------------------------------------------------------------------------------------

அரசர் கண்பார்வையற்ற புலவர் ஒருவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தலாம் என்று எண்ணினார். ஆனால் அமைச்சரோ புலவர் கண்பார்வையற்றவர்தானே, என்று நினைத்து கிழிந்த பொன்னாடையைக் கொடுத்தார்.

பொன்னாடையைத் தடவிப்பார்த்தார் புலவர்.

புலவர் அதன் வடிவமைப்பைத் தான் தடவிப்பார்க்கிறார் என்று நினைத்த அரசர் புலவரிடம்,

புலவரே! அதில் அழகான வடிவமாக பூ இருக்கிறது, மாங்காய் இருக்கிறது என்றார்.

அரசருக்குப் பதிலளித்த புலவர்,

“ஆம் மன்னா பூவும் இருக்கிறது, காயும் இருக்கிறது அதில் பிஞ்சும் இருக்கிறது” என்றாராம்.

(பிஞ்சு என்று புலவர் மாம்பிஞ்சைக் குறிப்பது போல பொன்னாடையின் கிழிந்ததன்மையைச் சுட்டியதால் தன் தவறை உணர்ந்தார் அரசர்.)


-------------------------------------------------------------------------------------

 பெர்னாட்சா – இன்று நான் பெரிய நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். நீங்களும் வருகைதாருங்கள் உங்கள் நண்பர்களுடன், “ அப்படி யாராவது உங்களுக்கு இருந்தால்“

சர்ச்சில் – இன்று முக்கியமான நிகழ்ச்சி இருப்பதால் என்னால் கலந்துகொள்ளமுடியாது. அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன். “அப்படி ஏதாவதொன்று நடந்தால்“


-------------------------------------------------------------------------------------

நூறு ஆயிரமான கதை


வள்ளலிடம் சென்ற புலவர் நூறு ரூபாய் கேட்டார். இருங்கள் தருகிறேன் என்று தன் வீட்டினுள் சென்றுதிரும்பிய வள்ளல் புலவரிடம் நூறு ரூபாய் கொடுத்தார். அதனை வாங்க மறுத்த புலவர்..

புலவர் - என்ன ஐயா நீங்கள் இருநூறு ரூபாய் தருகிறேன் என்று சொல்லி நூறு ரூபாய் தானே தருகிறீர்கள்?
வள்ளல் – நான் எப்போது புலவரே இருநூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னேன்?
புலவர் – முன்னூறு ரூபாய் தருகிறேன் என்று தாங்கள் தானே சொன்னீர்கள்?
வள்ளல் – நான் எப்போது சொன்னேன். (மனதுக்குள் இவர் ஏமாற்றுக்காரராக இருப்பாரோ என்று எண்ணிக்கொண்டார்)

புலவர் – நானூறு ரூபாய் தருகிறேன் என்று தாங்கள் தானே சொன்னீர்கள்?
வள்ளல் – புலவரே ஏன் இப்படி பொய்பேசுகிறீர்கள். நான் எப்போது இப்படியெல்லாம் சொன்னேன்?

புலவர் – வள்ளளே நான் நூறு ரூபாய் தான் கேட்டேன்..

தாங்களும் இரு தருகிறேன் என்று சென்றீர்கள். “ இரு“ என்பதை சேர்த்துக்கொண்டு இருநூறு ரூபாய் தருவதாகச் சொன்னேன்.

முன்பு நூறு ரூபாய் தருகிறேன் என்றீர்கள் அல்லவா.. அந்த முன் என்பதையும் நூறு என்பதையும் சேர்த்து முந்நூறு ரூபாய் தருவதாகச் சொன்னேன்.

நான் நூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னீர்கள் அல்லவா.. அதனால் “நான்“ நூறு என்பதைச் சேர்த்து நானூறு ரூபாய் தருகிறேன் என்று சொன்னதாகச் சொன்னேன் என்ற விளக்கம் சொல்லவும் புலவரின் தமிழ் நயத்தைவியந்த வள்ளல் நூறு ரூபாய் கேட்டுவந்த புலவருக்கு மகிழ்வோடு ஆயிரம் ரூபாய் கொடுத்தனுப்பினார்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

சங்க இலக்கியத்தில் நகைச்சுவை.




“எள்ளல், இளமை, பேதைமை, மடன்“ என்னும் நான்கு கூறுகள் நகை என்னும் சிரிப்பு தோன்ற அடிப்படையாகும் என்பர் தொல்காப்பியர்.

பேதமை காரணமாகத் தோன்றிய நகையை சங்கப்பாடல்கள் வழி காண்பது இவ்விடுகையின் நோக்கமாகும்.

கெண்டை மீன் ஒன்று நீரில் துள்ளிக்குதித்து நீந்திவந்தபோது அதற்காகவே காத்திருந்த கொக்கு (நாரை) கெண்டைமீனைக் கவ்வியது. எதிர்பாராதவிதமாக கொக்கின் கவ்வுதலிலிருந்து தப்பியது மீன். உயிர்பிழைத்த மீன் அச்சவுணர்வுடனேயே நீருள் நீந்திவந்தது. நீருக்கு மேல் எட்டிப்பார்த்த மீன் தாமரைமலரைக் கண்டு அதுவும் கொக்குதானோ என்று அஞ்சிவருந்தியது.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்“ என்பது போல இங்கு கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனுக்கு தாமரை மலர்கூட கொக்காகவே தெரிகிறது! இது பேதமை காரணமாகத் தோன்றிய நகையாகும். மீனின் மனவுணர்வைப் பிரதிபலிக்கும் இவ்வகப்பாடல் உணர்த்துவதும் ஒரு அழகான அகவாழ்வியல்,

பரத்தையரிடமிருந்து மீண்ட தலைவன் ஊடல் கொண்டிருந்த தலைவியிடம் பாணனைத் தூதாக விடுத்துத் தான் பின்நின்றான். பாணனைக் கண்ட தோழி அவனைநோக்கி, “நின் பாணன் பொய்யனாக இருப்பதால் பாணர் யாவரும் பொய்யராகவே எமக்குத் தோன்றுகிறார்கள் என்று கூறி வாயில் மறுத்தாள்.

(வாயில் மறுத்தல் – என்பது அகத்துறைகளுள் ஒன்று தலைவன் பரத்தையரிடம் சென்றதால் மனம் வாடி அவன் தவறை அவனுக்கு உணர்த்துவதாக அவனை தம் வீட்டுக்கு வர அனுமதி மறுப்பர். இதற்கு வாயில் மறுத்தல் என்று பெயர்)


குருகுகொளக் குளித்த கெண்டை யயல
துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
ஒருநின் பாணன் பொய்ய னாக
5 உள்ள பாண ரெல்லாம்
கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே.

(குறுந்தொகை -127.ஓரம்போகியார். மருதம்)
தோழி கூற்று (மருதம் - ஊடல்)


குருகிற்கு அஞ்சிய கெண்டை அக்குருகைப் போன்ற தோற்றத்தை மட்டும் உடையதும் கொடுமை யில்லாததுமாகிய தாமரை முகையையும் கண்டு அஞ்சினாற்போல, நீ விடுத்த பாணனைப் பொய்யனாகக் கண்டு வெறுத்த மகளிர் பொய்யரல்லாத பிற பாணரையும் வெறுத்தனரென்பது குறிப்பு. இப்பாடலைப் போலவே நாரையிடம் தப்பிய இறாமீன் தாழையின் மலரைக் கண்டு நாரையோ என்று அஞ்சுவதாக நற்றிணை (211) பாடலும் சுட்டிச் செல்கிறது.

பாடல்வழி அறியலாகும் கருத்து,

• கொக்கிடமிருந்து தப்பிய கெண்டை மீனின் செயல் பேதமை நிமித்தம் சிரிப்பைத் (நகை) தோற்றுவிப்பதாகவுள்ளது.

• கொக்கிடம் மீண்ட மீன் தாமரையைக் கண்டு கொக்கோ என்று அஞ்சுவது – தலைவனுக்காகப் பொய்சொல்லும் பாணரைக் கண்ட மகளிர் எல்லாப் பாணர்களும் பொய்யர்கள் என்று எண்ணுதல் ஆகியன ஒப்பு நோக்கி இன்புறத்தக்கன.

• மனித உணர்வுகளைப் போல வாய் பேச இயலாத உயிரினங்களின் (மீன்) மனவுணர்வையும் நகைச்சுவையுணர்வோடு சிந்தித்த சங்கப்புலவர்களின் உளவியல் அறிவு வியக்கத்தக்கதாகவுள்ளது.

சனி, 17 ஏப்ரல், 2010

இயற்கையின் காவலர்கள்.




சிறுவயதில் எங்கெங்கோ தேடியலைந்து சிறு சிறு செடிகளைப் பறித்து வந்து வீட்டில் தோட்டம் வைக்க முயற்சித்திருக்கிறேன்.

நட்டுவைத்த செடிகள் பூ பூக்கும் போது மனதெல்லாம் பூப்பூத்த அனுபவம்!

நான் வளர்த்த தோட்டத்தில் பறவைகள் வந்தமரும் போது நண்பர்கள் வீட்டுக்கு வந்த உற்சாகம்!

இன்றும் நினைத்துப்பார்த்தால் நெஞ்சில் நிற்கிறது.

தினமும் செடிகளுக்குத் தண்ணீர்விட்டு, அரும்போடும், மலரோடும், காயோடும், கனியோடும் பேசி வளர்ந்த நாட்கள் எண்ணி இன்புறத்தக்கன.

அப்படித்தான் சிறுவயதில் வேப்ப மரம் வளர்க்க வேண்டும் என்ற ஆவலில் எங்கிருந்தோ பறித்து வந்த வேப்பஞ்செடியை வீட்டில் வைத்து வளர்த்தேன்.

என்னோடு செடியும் என் உயரத்துக்கு வளர்ந்தது.

இரண்டு ஆண்டுகள் வெளியூரில் தங்க வேண்டிய சூழல்.

திரும்பி வந்து பார்த்தால் என்னை விட உயரமாக கிளைபரப்பி வளர்ந்து என்னைப் பார்த்து சிரித்தது வேப்பமரம். அதற்கு நேரவிருக்கும் ஆபத்தை உணராமல்!


ஆம் அந்த மரத்தோடு ஒருகிளையில் ஒட்டாக இன்னொரு தாவரமும் செடியாக வளர ஆரம்பித்திருந்தது. முதலில் வியந்த நான் எல்லோரிடமும் பெருமையாகச் சொன்னேன். கேட்டவர்களும், பார்த்தவர்களும், உறவினர்களும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் ஆளுக்கொரு யோசனை சொன்னார்கள்!

வேம்போட இப்படி வேற செடி சேர்ந்து வளர்ந்தா குடும்பத்துக்கு ஆகாது என்றார் ஒருவர்.

(மரத்துக்கும் குடும்பத்துக்கும் என்னடா சம்பந்தம் என்று நான் கூறியது யார் காதிலும் விழவில்லை)

வீட்டுக்கு முன்னாடி வேம்பு வளர்ந்தா அதன் வேர் வீட்டை இடித்துவிடும் என்றனர் சிலர்.

கிணற்றுத் தண்ணீர் வற்றிப் போகும் என்றனர் சிலர்.

கம்பளிப் பூச்சி வரும் என்றும், எறும்பு கூடுகட்டும் என்றும் ஆளுக்கொரு யோசனை சொல்ல முடிவாக மரம் வெட்டப்பட்டது.

உணர்வுபூர்வமாக எதையே இழந்த உணர்வு இன்றும் என்னுள் இருக்கிறது.

மரத்தைக் காக்க நான் பட்ட பாடு! அதை வளர்க்கக்கூட பட்டிருக்கமாட்டேன்!

இப்படி என்னைப் போல ஒவ்வொருவருக்கும் மரத்தோடு நெருங்கிய உறவு இருக்கத்தான் செய்யும். தமிழர் மரபைப் பொருத்தவரை மரங்கள் என்பவை தாவரங்களாக மட்டுமல்ல,

நம்பிக்கையின் வடிவங்களாக,

தெய்வங்களாக,

நோய் நீக்கும் மருந்துகளாக,

உணவுப் பொருள்களாக,

இன்னும் ஆயிரம் ஆயிரம் உறவுநிலைகளைக் கொண்டிருக்கின்றன.


ஒரு செடியை வளர்ப்பதும் – குழந்தையை வளர்ப்பதும் ஒன்று.


இரண்டும் எளிதான பணியல்ல என்பது இரண்டையும் வளர்த்தவர்கள் நன்கு அறிவார்கள்.

செடி வளரத் தேவையான கூறுகள் இருந்தால் மட்டும் போதாது. சில காலத்துக்கு அச்செடிக்குப் பாதுகாப்பும் வேண்டும்.

மரத்தையும், மக்கள் நம்பிக்கையையும் காத்த இயற்கையின் காவலர் ஒருவரைப் பற்றி இன்றைய இடுகை அமைகிறது.



இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன்

என்னும் பாண்டிய வேந்தன்,ஒருகாலத்தில் பகைவர்மேற் போர்குறித்துச் சென்றான், அவனைக் காணப் போயிருந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், அவனுடைய போர்வன்மையை நன்குணர்ந்தவராதலால்,

வேந்தே, கல்வியறிவுடையவராயினும், அறிவு குறைவுடையவராயினும் நின்னைப் புகழவே எண்ணுவர் அத்தகைய சிறப்புடையவன் நீ!

உனக்கு ஒன்று கூறுவேன் கேட்பாயாக..

போரில் வெற்றிபெறத்தக்கவன் நீயே!

(வென்ற மன்னர் தோற்ற நாட்டின் பொருள்களைக் கொள்வதும், நாட்டுக்கு தீவைத்துக் கொளுத்துவதும், காவல் முரசு, காவல் மரத்தையும் அழிப்பதுமே மரபு!)

நின் வீரர் பகைவர் நாட்டு வயல்களைக் கொள்ளை கொள்ளின் கொள்க!

ஊர்களைத் தீக்கிரை யாக்கினும் ஆக்குக!

நின் வேல் அப் பகைவரை அழிப்பினும் அழிக்க!

அவர் கடிமரங்களை (காவல் மரங்களை) மட்டும் தடியாமல் விடுக!

அவை நின் யானைகட்குக் கட்டுத் தறியாகும் வன்மை யுடையவல்ல” என்று பாடுகின்றார்.



வல்லா ராயினும் வல்லுந ராயினும்

புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன

உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற

நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்

5.நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்

டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க

நனந்தலைப் பேரூ ரெரியு நக்க

மின்னுநிமிர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்

ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்

10.கடிமரந் தடித லோம்புநின்

நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே. (57)



திணை: வஞ்சி. துறை: துணைவஞ்சி. அவனைக் காவிரிப்பூம்

பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.

* வென்ற மன்னன் தோற்ற நாட்டின் பொருள்களைக் கொள்வதும், நாட்டுக்கு தீவைப்பதும், காவல் மரம், காவல் முரசு ஆகியவற்றை அழிக்கும் புறவாழ்வியல் மரபு உணர்த்தப்படுகிறது.
* மன்னா மரபின்படி யாவும் செய்க! மரத்தை மட்டும் வெட்டாதே!
என்ற புலவரின் வேண்டுகோள் இயற்கையின் மீதும் மக்கள் மரத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் மீதும் புலவர் கொண்ட பற்றுதலை உரைப்பதாகவுள்ளது.

*இந்தப் புலவர் இயற்கையின் காவலராக, ( காதலராக ) எனக்குத் தோன்றுகிறார்.
இப்படி எத்தனை எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத இயற்கைக் காவலர்களால் தான் நம்மைச்சுற்றி இன்னும் மரங்கள் இருக்கின்றன.

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பொய்யே முதலீடு


கையில பை!
கழுத்துல டை!
வாயில பொய்!
இதுவே விற்பனையாளனின் முதலீடு என்ற எண்ணம் கொண்டு வாழும் இன்றைய சூழலில் மனிதர்களுக்கு சுயநலவுணர்வு மேலோங்கியதால் மனிதநலம் பற்றிய கவலை இல்லாமல்ப் போனது.

“பொய், கலப்படம்“ இரண்டும் வணிகத்தின் இரு கண்கள் என்னும் எண்ணம் மேலோங்கியதால் பாதிக்கப்படுவது என்னவோ நுகர்வோர் தான்!

இந்தக்காலத்துல போய் பொய்யெல்லாம் சொல்லாம வியாபரம் செய்யமுடியுமா?
கலப்படம் செய்யமாப் பொழப்பு நடத்தமுடியுமா?

(என்ற வணிகர்களின் புலம்பல் கேட்கிறது.)

“நியாயவிலைக் கடைக்காரருக்குக்
குழந்தை பிறந்தது
எடை குறைவாக“

என்ற கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

நாமும் ஏமாற்றப்படுவோம் அதனால் நாமாவது யாரையும் ஏமாற்றக்கூடாது!
என்ற சிந்தனை வந்தால் மட்டுமே மனிதநலம் பற்றிய சிந்தனை ஒவ்வொரு மனிதர்களுக்கும் வரும்.

மனித நலம் பாதிக்கப்படும் அளவுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் அறியாதது போல கேட்கும் வியாபாரிகளே!

எதில் இல்லை கலப்படம்?
உண்ணும் உணவிலிருந்து,
நோய் நீக்கும் என்று நம்பி உண்ணும் மருந்துப் பொருள்களைக் கூட நீங்கள் விட்டுவைக்கவில்லையே!

o உண்மை பேசி, கலப்படமின்றி நேர்மையாக வணிகம் செய்யவே முடியாதா? அப்படி வணிகம் செய்வோர் உலகில் எங்குமே இல்லையா?

எனக்குத் தெரிந்தவரை நூற்றுக்குப் பத்துப்பேர் நேர்மையாவர்களாகவே இருக்கிறார்கள். நல்லார் அவர் பொருட்டே எல்லோருக்கும் மழை பொழிகிறது என்ற நம்புகிறேன்.

இச்சூழலில், சங்ககால வணிகமுறையில் தமிழர்தம் உயர்ந்த கொள்கை நாம் பெருமிதம் கொள்ளத்தக்தாகவுள்ளது. பத்துப்பாட்டில்,

“நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்“

(பட்டினப்பாலை – 207-211)

இவ்வடிகள் இடம்பெருகின்றன. வணிகர்கள், நடு நிலையுடையவர்களாக நல்ல உள்ளத்துடன் இருந்தனர். பொய் சொன்னால் தம் குடிக்கு பழி வரும் என்று அஞ்சி உண்மையே பேசக்கூடியவர்களாக இருந்தனர்.

இவர்கள் தம் பண்டங்களையும், பிறருடைய பண்டங்களையும் வேறுபடுத்திப்பார்க்காமல் ஒப்ப நோக்கி ஆராய்ந்து கண்டனர்.

தாம் கொள்ளும் பொருள்களைத் தாம் கொடுக்கும் பொருளுக்கு மிகுதியாகக் கொள்வதில்லை.
தாம் கொடுக்கும் பொருள்களையும் வாங்கும் பொருள்களுக்குக் குறைவாகக் கொடுப்பதில்லை.

தங்களுக்க வரும் இலாபத்தை நுகர்வோரிடம் வெளிப்படையகப் பேசியே வணிகம் செய்தனர். அதனால் அவர்கள் வணிகத்திலும் சிறந்து செல்வத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர் என்பதையே இவ்வடிகள் புலப்படுத்துகின்றன.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

இயற்கைக்கும் மனிதனுக்குமான 20/ 20



இயற்கைக்கும் மனிதனுக்கும் பன்னெடுங்காலமாகவே போராட்டம் நடைபெற்றுவருகிறது. இயற்கைச் சீற்றங்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள மனிதனும். மனிதனிடமிருந்து தம்மைக்காத்துக்கொள்ள இயற்கையும் பெரும் போராட்டமே நடத்தி வருகிறது.

இயற்கையின் மடியில் தவழ்ந்து வளர்ந்த மனிதன் நீர், நிலம், காற்று, தீ, வான் என இயற்கையின் ஐந்து கூறுகளையும் முதலில் கண்டு பயந்தான் அவற்றைக் கடவுளராக்கி வணங்கினான். காலம் செல்லச் செல்ல பக்குவமடைந்தவனாக இயற்கையின் ஆற்றல்களைக் கண்டு அவற்றைத் தம் ஆளுகைக்குட்படுத்த முயன்றான். இயற்கைக்கு இணையாக செயற்கையாக பலவற்றையும் உருவாக்கி இயற்கையைத் தாம் வென்றுவிட்டதாகப் பகல்கனவு கண்டான்.
ஒரு கதை,
'ஒரு மன்னன் தம் நாட்டுக்கு ஞானி ஒருவரை அழைத்துவந்து தம் நாட்டு எல்லைகளைக் காட்டிப் பெருமிதம் கொண்டான். அந்த ஞானியோ எல்லாவற்றையும் பார்த்தபின்னர் சொன்னார்,


வேந்தனே! சென்றமுறை நான் இங்கு வந்தபோது உன்னைப்போலவே உன் தந்தை இதே மன்னைக்காட்டி சொந்தம் கொண்டாடினான். அவன் தந்தையும் உன்னைப் போலவே எண்ணம் கொண்டிருந்தான். ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்,


இந்த மண்ணை நீ வாங்கவில்லை,

இந்த மண் தான் உன்னை வாங்குகிறது!“



என்றார்.

இயற்கையைத் தம் ஆளுமைக்குக் கொண்டுவர எண்ணிய மனிதன்,

காடுகளை அழித்தான்,

விளைநிலங்களை வாழிடங்களாக்கினான்,

நீர்நிலைகளை அழித்து விற்பனை இடங்களாக்கினான்,



நுனிக்கிளையிலிருந்து அடிக்கிளையை வெட்டுவது போன்ற மனிதனின் அறியாமைச் செயல் யாவற்றையும் தாங்கிய நிலம் தற்போது எதிர்வினைபுரிய ஆரம்பித்திருக்கிறது.


புவி வெப்பமயமாதல்,

பனி உருகி கடல் நீர்மட்டம் உயர்தல்,

குடிநீர் வறட்சி,


நோய் தொற்று,

என இயற்கைக்கும் மனிதனுக்கும் நடக்கும் போராட்டம் காலகாலமாகவே தொடர்ந்து வருகிறது. இச்சூழலில் மனிதன் புரிந்துகொள்ள வேண்டிய இயற்கையின் தத்துவத்தை உணர்த்துகிறது ஒரு புறப்பாடல்.


நீர் பெருக்கெடுத்து மிகுமானால் அதனைத் தடுத்து நிறுத்தும் வலிமையான அரணும் இல்லை!

தீ பெருகி எரிக்குமானால் உலகில் நிலைபெற்ற உயிர்களைக் காக்கின்ற நிழலும் இல்லை!

காற்றுப் பெருகி புயலாக வீசினால் அதனைத் தாங்கும் வலிமையும் உயிர்களுக்கு இல்லை!


நீர், தீ, காற்றுப் போலவே புகழ்மிகுதியும் உடையவனாய் சினம் மிகுந்து போர் புரிபவன் மாறன் வழுதி. அவன் குளிர்ச்சியான தமிழ்நாடு மூவேந்தர்களுக்கும் பொதுவானது என்பதை ஏற்கமாட்டான். தனக்குமட்டுமே உரியது என்ற கொள்கையுடையவன். அதனால் அவனைப் பணிந்து திறை செலுத்துபவர்கள் அச்சமின்றி வாழலாம், அவனைப் பணியாது திறை செலுத்தாதவர்கள்,


நுண்ணிய பல கறையான்கள் அரிது முயன்று எடுத்த செம்மையான நிறமுடைய புற்றிலிருந்து வெளிப்பட்ட ஈயல் போல ஒருநாள் வாழ்க்கைக்கும் அஞ்சித்திரிவர்.


பாடல் இதோ,

நீர்மிகின், சிறையும் இல்லை; தீமிகின்,

மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;

வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு

அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,

‘தண் தமிழ் பொது’ எனப் பொறாஅன், போர் எதிர்ந்து,

கொண்டி வேண்டுவன் ஆயின், ‘கொள்க’ எனக்

கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;

அளியரோ அளியர், அவன் அளிஇழந் தோரே;

நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த

செம்புற்று ஈயல் போல,

ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே!

புறநானூறு -51

பாடியவர்: ஐயூர் முடவனார்! ஐயூர் கிழார் எனவும் பாடம்.

பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.

திணை: வாகை. துறை; அரச வாகை.



பாடல் வழி அறியலாகும் செய்திகள்



1.இயற்கையின் முன் மனிதன் என்றுமே குழந்தைதான். இயற்கையின் சீற்றத்துக்கு முன் உயிர்களை முழுவதும் காத்துக்கொள்ளும் கண்டுபிடிப்புகள் இன்னும் மனிதர்களால் கண்டறியப்படவில்லை. அதனால் இயற்கையை அழித்தல் நாம் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமமானது என்னும் கருத்து உள்ளீடாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

2.இயற்கையின் வலிமையைத் தம்மகத்தே கொண்டவன் மனிதன். அவனால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்ற கருத்தை பாண்டியன் வாயிலாக ஆசிரியர் புலப்படுத்துகிறார்.

3.மன்னனின் வெற்றியையும், வீரத்தையும் பாடுவது வாகைத்திணையாகும். இதன் துறைகளுள் அரசவாகை என்பதும் ஒன்று. பாண்டியனின் புகழைப்பாடவந்த ஐயூர்முடவனார் “ இயற்கையை எதிர்க்கும் ஆற்றல் மனிதனுக்கு இல்லை என்று கூறி அதனால் இயற்கையைக் பாதுகாக்கவேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.“

திங்கள், 12 ஏப்ரல், 2010

நாட்டுப்புறவியல் கருத்தரங்க அறிவிப்பு.






எங்கள் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக சென்ற ஆண்டு நடைபெற்ற செம்மொழி தொடர்பான பன்னாட்டுக் கருத்தரங்கில் 141 பேராளர்கள் கட்டுரையளித்திருந்தனர். கட்டுரைகள் நூலாக்கம் பெற்று வெளியிடப்பெற்றதுடன் கல்லூரி வலைப்பதிவில் இபேப்பர் வடிவிலும் வெளியிடப்பெற்றது. தற்போது நாட்டுப்புறவியல் தொடர்பான தேசிய கருத்தரங்கம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். மேலும் விவரங்களுக்கு மேலே கொடுத்ததுள்ள அழைப்பிதழை சொடுக்கிப் பெரிதாக்கிப்பார்க்கவும். நாட்டுப்புறவியல் தொடர்பான தரமான கட்டுரைகள் தெரிவுசெய்யப்பட்டு நூலாக்கம் செய்யப்படுவதுடன் இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்படவுள்ளன என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

முதலில் தோன்றியது நீரா? நிலமா?


பூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது பூமியென்றும் காலகாலமாகப் பேசிவந்த பேச்சுக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய இன்றைய அறிவியலாளர்கள், பூமிக்கு அடியே ஆழத்தில் ஹீலியம் தூண்களை மோதவிட்டு உயிரினங்களின் தோற்றத்தையும், படிநிலை வளர்ச்சியையும் காணமுற்பட்டு அதில் பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.
“பிக் பேங்“ என்னும் மாவெடிப்புக் கொள்கையின்படி சுமார் 10மில்லியன் காலத்திற்கு முன்னர் அண்டம் முழுவதும் இருளால் நிறைந்திருந்தது. எங்கும் பரவியிருந்த ஹைட்ரஜன் நெருப்புக்கோளமானது, பல மில்லியன் நெருப்புக்குமிழ்களை உமிழ்ந்துகொண்டிருந்தது. இந்த நெருப்புப் பந்தின் வெப்பநிலை எல்லை மீறியபோது வெடித்துச்சிதறியது.
நெருப்புக்கோளத்திலிருந்து வெடித்துச்சிதறிய துண்டங்கள் அண்டம் முழுவதும் தூக்கியெறியப்பட்டு தொடர்ந்து எறிந்துகொண்டே இருந்தன. அப்படியெறியப்பட்ட துண்டங்களில் ஒன்று தான் நம் பூமியும் ஆகும். சில மில்லியன் ஆண்டுகாலம் எறிந்தபின்னர் குளிரத்தொடங்கி நீராவி நீராக மாற்றம் பெற்று குளிரடையத்தொடங்கியது. நீர்ப்பரப்பு கடலானது. எரிமழையும்,பெருங்காற்றும் தொடர்ந்து சீறிக்கொண்டே இருந்தன. கடலின் நீர்ப்பரப்பு ஆவியாகி மேகங்களாகப் படிந்து பின் மழையாகப் பொழிந்து பருவ இயந்திரம் செயல்பட ஆரம்பித்தது. நெருப்பிழம்பின் ஒரு பகுதி நிலமானது. நிலத்தின் உட்பகுதி நெருப்புப் பிழம்பாகவே உள்ளது. நீர்வாழ் உயிரி, இருநில உயிரி, நிலவுயிரி, விலங்கு, பறவை என உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரை படிநிலை வளர்ச்சி பெற்றன.

நிலம், நீர் இரண்டில் முதலில் தோன்றியது நீர் என்ற உண்மையை இதன் வழி அறியமுடிகிறது. இக்கருத்தை வழியுறுத்துமாறு பல நுட்பமான செய்திகளைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது. “முதுநீர்“ என்று கடலைக் குறிக்கும் சொல் பழந்தமிழரின் அறிவியல் அறிவை எண்ணி வியக்குமாறு உள்ளது.

நிலம் தோன்றும் முன்னர் தோன்றிய பழமையான நீரையுடைய கடலின் அலைகள் தழுவும், பறவைகள் ஒலிக்கும் கடற்கறைச் சோலையில்,
தலைவனைப் பார்த்தது முதல் நீங்கும் வரை கண்கள் அவனைப் பார்த்து மகிழ்ந்தன!
அவனுடன் இனிது பேசியபோது செவிகள் அவன் குரலைக் கேட்டு மகிழ்ந்தன!
தலைவனைச் சேர்ந்தவழி அழகுபெற்றும், பிரிந்தவழி வேறுபட்டும் காட்டும் உடலின் பண்புகளே எண்ணி வியப்புறத்தக்கன! என்று தலைவி தன் வியப்பைத் தோழியிடம் வினவுவதாக இவ்வகப்பாடல் அமைகிறது. பாடல் இதோ,

இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன் எம் கண்ணே; அவன் சொல்
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி
தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே?
குறுந்தொகை 299. நெய்தல் (வெண்மணிப் பூதி)

காட்சிக் கலப்பினால் கண்களும்,
கேள்வியனுபவத்தால் செவிகளும், நலம் பெற்றன ஆயினும் அவை எப்போதும் அடக்கமாக இருக்கின்றன.
காண்பது கேட்பது என்னும் இருநிலைகள் இன்றியும் தோள்கள் அவன் சேர்ந்தபோது அழகுற்றும் பிரிந்தபோது வேறுபட்டும் தன்னிலையைப் புறத்தாருக்குப் புலப்படுத்துகின்றனவே என வருத்தத்துடன் வியப்பும் எய்துகிறாள் தலைவி.


பாடல் வழி அறியாலகும் செய்திகள்.

1. ‘முதுநீர்’ என்று கடலைக் குறிக்கப் பயன்படும் இச்சொல் நிலத்துக்கு மூத்தது நீர் என்னும் அறிவியல் உண்மையை உணர்த்துவதாகவும், பழந்தமிழரின் அறிவியலறிவைப் பறைசாற்றுவதாகவும் விளங்குகிறது.

2. தலைவனைச் சேர்ந்போது நலம் பெற்ற கண்ணும் செவியும் அமைதியாக இருக்க உடல் மட்டும் ஏன் கூடலிலும், பிரிதலிலும் வேறுபடுகிறது? என்ற தலைவியின் கேள்வி காதலால் படும் துன்பத்தை மேலும் அழகுறச் சொல்வதாக அமைகிறது.

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

மிளகுக்கு இணையா தங்கம்?





தங்கத்துக்குக் கிடைக்கும் மதிப்பு இன்று சில மனிதர்களுக்குக் கூடக் கிடைப்பதில்லை.

சங்ககாலத்தில் வணிகம் செய்யவந்த யவணர்கள் பெரிய மரக்கலங்களில் தங்கத்தைக் கொண்டு வந்து அதனை விலையாகத்தந்து மிளகை அள்ளிச்சென்றுள்ளனர்.அற்றைக் காலந்தொட்டே தமிழர்கள் தங்கத்துக்கு அடிமையாக இருந்திருக்கின்றனர். ஆனால் யவணர்கள் மிளகின் மருத்வகுணம் அறிந்தே மிளகை அள்ளிச் சென்றுள்ளனர்.

பாடல் சான்று இதோ..

அகநானூறு 149. பாலை

[தலைமகன் தன்நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது]

சிறுபுன் சிதலை சேண்முயன் றெடுத்த
நெடுஞ்செம் புற்றத்து ஒடுங்கிரை முனையில்
புல்லரை இருப்பைத் தொள்ளை வான்பூப்
பெருங்கை எண்கின் இருங்கிளை கவரும்
5. அத்தம் நீளிடைப் போகி நன்றும்
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன் வாழியென் நெஞ்சே சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
10. பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ
1அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்
கொடிநுடங்கு மறுகில் கூடல் குடாஅது
15. பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து
வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே.
-2எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்


தலைவியைப் பிரிந்து பொருளீட்ட எண்ணும் தலைவன் தன் தலைவியின் மென்மையையும் சுரவழியின் கொடுமையையம் நீள நினைந்து தன் பயணத்தைத் தவிர்த்தான் இதற்கு செலவழுங்குதல் என்று பெயர். இவ்வகத்துறையை விளக்கும் பாடலில் சங்ககாலத்தமிழரின் வணிகமுறையைப் பற்றி தெளிவான விளக்கம் பெறமுடிகிறது.

சிறிய புன்மையான கறையான் நீண்ட நாள் முயன்று எடுத்த உயரமான சிவந்த புற்றிலிருக்கும் புற்றாம் பழஞ்சோற்றை பெரிய கையினையுடைய கரடிகளின் பெருங்கூட்டம் அகழ்ந்தெடுத்து உண்ணும். அதனைதத் தின்று வெறுக்குமானால் அருகிலிருக்கும் இருப்பையின் வெண்மையான மலர்களை உண்ணும்.

எனது நெஞ்சமே அத்தகைய சுரவழியைக் கடந்து போய் நாம் பொருளீட்டிவருதல் வேண்டும்.

சுள்ளி என்னும் பெயர் கொண்டு பேரியாறு சேர அரசர்க்கு உரியதாகும். அவ்வழகிய ஆற்றின் வெண்ணிற நுரை சிதறுமாறு, தொழில்சிறப்புடைய யவணர்கள் கொண்டு வந்த நல்ல மரக்கலம் பொன்னைக் கொண்டுவந்து விலையாகத் தந்து மிளகை அள்ளிச்செல்லும். அத்தகைய வளம் பொருந்திய முசிறி என்னும் பட்டினத்தை,

வலிமையான யானைகளையும் வீரமும் வாய்ந்த பாண்டியமன்னன் ஆரவாரம் தோன்ற வென்று அங்கிருந்த பொன்னாலான படிமத்தைக் கவர்ந்து சென்றான்.

அச்செழியனின் கொடிகள் அசைந்தாடும் வீதிகளைக் கொண்ட கூடல் நகரின் மேற்கே பல புள்ளிகளைக் கொண்ட மயில் கொடி தோன்றும் இடைவிடாத விழாக்கள் நடக்கும் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. அக்குன்றத்தில் வண்டுகள் மொய்க்கும் ஆழமான சுனையில் மலர்ந்த குவளை மலர்கள் இரண்டு ஒன்று சேர்ந்து இருந்தமைபோல நானும் தலைவியும் இருந்துவந்தோம். இப்போது தலைவியின் செவ்வரி படர்ந்த செருக்குடைய குளிர்ந்து கண்கள் நீர்க்கொள்ள அரிய சுரங்ளைக் கடந்து ஈட்டத்தக்க பொருளை எளிதாகப் பெற்றாலும் நான் இவளை நீங்கிப் பிரிந்து வரமாட்டேன் என்று தன் நெஞ்சுக்குச் சொல்கிறான் தலைவன்.

பாடல்வழி அறியலாகும் கருத்துக்கள்.

1. யவணர்க மிளகைப் பெறுவதற்காக தங்கத்தை விலையாகக் கொடுத்த சங்ககால வணிகமுறை புலனாகிறது.

2.மிளகின் மருத்வ குணம் அறிந்தே யவணர்கள் மிளகைப் பெற்றுச் சென்றிருக்கவேண்டும் என்று எண்ணமுடிகிறது.

3.செலவழுங்குதல் என்னும் அகத்துறை உணர்த்தப்படுகிறது.