வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 30 ஜனவரி, 2014

செந்தமிழும் நாப்பழக்கம்


நிறைய படித்தவராக இருந்தாலும் பெரிய பதவியில் இருப்பவராக இருந்தாலும் மேடையில் பேசுவது என்றால் சிலருக்கு தயக்கம் ஏற்படுவது இயல்பாகவே இருக்கிறது. கல்வியில்லாதவனும்ஒருவருடைய குறிப்பை அறியாதவனும்ஆறறிவுடைய மனிதராகப் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரங்களாகவே கருதப்படுவர் என்ற கருத்தை, கீழ்க்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது.

   கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
   
அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே
    
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
    
மாட்டா தவன்நல் மரம். (13)  
                                                                             மூதுரை -ஔவையார்
கிளைகளை உடையனவாகியும்கொம்புகளை உடையனவாகியும்,  காட்டினுள்ளே நிற்கின்ற,  அந்த மரங்கள்நல்ல மரங்கள் அல்ல  கற்றோர் சபையின் நடுவே ஒருவர் நீட்டிய ஓலையை படிக்கமாட்டாமல் நின்றவனும்,  பிறர் குறிப்பை அறியமாட்டாதவனுமே,  நல்ல மரங்களாம் என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் மேடையில் பேசுவது தன்னியல்பாக வந்துவிடும் என்பதை,

வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும் என்ற கருத்தை,

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்
என உரைப்பார் ஔவையார்.





திங்கள், 27 ஜனவரி, 2014

நிறையா வாழ்க்கை

பசிக்கு உணவு வாங்க காசின்றி ஒரு கூட்டம்!
பணத்தைப் பதுக்கிவைக்க இடமின்றி கூட்டம்!
பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று அறியாமல் ஒரு கூட்டம்!
பணத்தை செலவுசெய்வது எப்படி என்று தெரியாமல் ஒரு கூட்டம்!
என அறிவுடையோராலும், அறியாமையுடையோராலும் நிறைந்தது இவ்வுலகம்!

பறவைகள் எந்த மரங்களையும்
விலைக்கு வாங்கியதில்லை!
இருந்தாலும்..
மரங்கள் யாவும் பறவைகளுக்காகவே
வான் நோக்கி வளர்கின்றன!

நிலவு என்றும்
இரவைச் சேமித்துவைத்தில்லை!
இருந்தாலும்..
இரவு நிலவை மட்டுமே
எதிர்நோக்கியிருக்கிறது!

ஆடு, மாடுகள் யாவும்
தலையில் புல்லைக் கட்டிக்கொண்டு
மேயச்செல்வதில்லை!
இருந்தாலும்..
தாவரங்கள் இவற்றையே
பச்சைக் கொடிகாட்டி அழைக்கின்றன!

நதிகள் எங்கும்
முகவரி தேடி மயங்கியதில்லை!
இருந்தாலும் கடல்
நதிகளுக்காகவே காத்திருக்கிறது!

வேர்கள் எப்போதும்
தன்னை விளம்பரம் செய்துகொண்டதில்லை!
இருந்தாலும்..
மழை என்றும்
வேர்களை மறந்ததில்லை!

ஆனால் மனிதன் மட்டும்..
எதை எதையோ விலைக்கு வாங்குகிறான்!
சேமித்து வைக்கிறான்!
உணவுமூட்டையைத் தூக்கிக்கொண்டே திரிகிறான்!
முகவரியைத் தேடித்தேடி மயங்குகிறான்!
எதற்காகவோ காத்திருக்கிறான்!
விளம்பரப் பலகை ஏந்திக்கொண்டே நடக்கிறான்!

மனிதன் மட்டும் ஏன் இப்படி..??
என்று மக்களைக் காணும் போது தோன்றும்.
புறநானூற்றுப் பாடல் ஒன்று வறுமையில் வாடும் எளியோரின் வாழ்வை நிறையா வாழ்க்கை எனக் குறிப்பிடுகிறது. அவர்கள் வறுமையில் வாடினாலும் பகுத்துண்ணும் பண்புடையவர்களாக இருந்தனர் என்பதை எடுத்துரைக்கும் சிறந்த பாடலைக் காண்போம்.
களிறு நீறாடிய விடு நில மருங்கின்
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தெனக்
குழி கொள் சின்னீர் குராஅல் உண்டலின்
செறு கிளைத் திட்ட கலுழ் கண் ஊறல்
முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை
முளவுமாத் தொலைச்சிய முழுச் சொல் ஆடவர்
உடும்பிழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறு செய்திடுமார்
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து
அலந்தலை இரத்தி அலங்கு படு நீழல்
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும்
அரு மிளை இருக்கையதுவே வென் வேல்
வேந்துதலை வரினும் தாங்கும்
தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே.
புறநானூறு 325, 
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,
                                 திணை: வாகை, துறை: வல்லாண் முல்லை
யானைகள் புழுதியில் விளையாடிய பரந்த நிலப்பகுதியில் வேனிற்பருவத்தில் புதிதாகப் பெய்த மழையால்  குழிகளில் சிறிதளவு தேங்கிய நீரினை, குரால் என்னும் ஒருவகைப் பசு நீர் வேட்கையினால் உண்டது. நீர் அற்ற அக்குழியின் சேற்றைத் தோண்டிப் பெற்ற கலங்கிய ஊற்று நீரினைத் தங்களுக்குள் முறையாகப் பெற்று உண்கின்ற நிறைவு பெறாத வாழ்க்கையுடையோர் அங்கு வாழ்பவர் ஆவார்.
முள்ளம் பன்றியைக் கொன்ற பேரொலியை உடைய அவ்வினத்து ஆண்மக்கள் , ஒடு மரத்தின் கோல்களால் அமைக்கப்பட்ட கட்டுக் கதவினையுடைய தங்கள் சிறப்பில்லாத இல்லங்களின் முன்னர், உடும்பினது நிணத்தை அறுத்து யாவர்க்கும் பகுத்துத் தருவதற்காகத் தீயைமூட்டி, அதில் உடும்பினை வாட்டும்போது பிறக்கும் கொழுவிய நிணத்தின் நாற்றம், அச் சிற்றூர்களின் தெருக்கள் எங்கும் கமழ்வதாகும்.
இத்தகைய செயலையுடையோர் உறையும்போது இடத்திலுள்ள இத்தி மரத்தின் அசைகின்ற நிழலில் இருந்து, மெல்லிய தலையையுடைய சிறுவர்கள் அம்புகளை எறிந்து விளையாடுவார்கள்.
வெற்றியையுடைய வேலினையுடைய வேந்தர்கள் தன்னோடு பகைத்து வந்தவழி, தான் ஒருவனாக நின்று எதிர்த்துத் தாங்குவதற்கு உரிய வலிமையும், வரையறுக்க இயலாத கொடையினையும் உடைய பெரிய தகுதியையடைய வீரனின் ஊர், கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இருப்பிடத்தை உடையதாகும்.

திணைவாகை. ( வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரம் செய்தல்)
துறைவல்லாண் முல்லை ( ஒரு வீரனுடைய ஊரையும் அவனது இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல் வல்லாண்முல்லை ஆகும்.)

அன்றும் இன்றும்
·         அன்று வறுமையில் இருந்தாலும் பகுத்துண்ணும் மரபு பின்பற்றப்பட்டது இன்றோ யாரும் உணவைப் பகிர்ந்தளித்தாலும் மயக்கமருந்து கலந்திருக்குமோ என்ற அச்சம்தான் முதலில் வருகிறது.
·         அன்று குழியில் தேங்கிய நீரைக்கூட மக்கள் குடித்தனர் நலமாகவும் இருந்தனர் இன்றோ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் குடிநீரைக்கூட பணம் கொடுத்து வாங்குகிறோம்.

·         அன்றைய குழந்தைகள் தெருக்களில், மரங்களின் நிழலில், மண்ணில் விளையாடினர். இன்றைய குழந்தைகள் கணினி, தொலைக்காட்சி, திறன்பேசிகளில் உள்ள விளையாட்டுகளே போதும் என அறிவுறுத்தப்படுகின்றனர்
  
   பாடல் வழியாக...
   உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் எத்தனையோ பேர் இவ்வுலகில் உள்ளனர். பதுக்கி வைத்து பணக்காரர் தரவரிசையில் இடம்பெறுவது பெரிய சாதனையல்ல. பகுத்துண்டு நம்மால் முடிந்தவரை மனிதாபிமானத்தோடு வாழ்வதே பெரிய சாதனைதான் என்பதை இப்பாடல் நினைவுபடுத்திச் செல்கிறது.
  


ஞாயிறு, 19 ஜனவரி, 2014

காரைக்குடிக்குப் பெருமைசேர்த்தவர்கள்

எனது இளங்கலை, முதுகலை, மற்றும் ஆய்வுப்படிப்புகளுக்காக காரைக்குடியில்தான் பத்து ஆண்டுகள் செலவுசெய்தேன்.அதனால் காரைக்குடிக்குச் சென்றால் ஏதோ சொந்த ஊருக்குச் சென்ற உணர்வு ஏற்படும். கடந்த வாரம் காரைக்குடிக்குச் சென்றபோது கண்ணதாசன் மணிமண்டபத்தில், ஒரு நிகழ்வுக்காக வெளியே வைக்கப்பட்டிருந்த பதாகையில் காரைக்குடிக்குப் பெருமை சேர்த்தவர்களை நிழற்படமாக வெளியிட்டிருந்தார்கள். நான் அறியாத பல சாதனையாளர்களை அறிந்துகொண்டேன். இது ஒரு நல்ல முயற்சியாக எனக்குத் தோன்றியது. இந்த வழிமுறையை நாம் ஒவ்வொருவரும் நம் ஊரில் நடக்கும் நிகழ்வுகளில் கடைபிடிக்கலாமே.