வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


96 வகை சிற்றிலக்கியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
96 வகை சிற்றிலக்கியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

பிச்சைக்காரக் கடவுளர்கள்.


தமிழ்மொழியைப் பக்தியின் மொழி என்பர். தமிழில் இறைவனைத் தேடிய அளவுக்கு வேறு எந்த மொழிகளிலும் தேடியதில்லை.

நம்பிக்கை அதிகம் தோன்றியதும் நம்நாட்டில்தான்! – அதைவிட
மூடநம்பிக்கைகள் அதிகம் தோன்றியதும் நம்நாட்டில்தான்!!

உணவு, உடை, தகவல் தொடர்பு என எவ்வளவோ வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில் நம் கடவுளர் மட்டும் இன்னும்...

அதே பிச்சைப் பாத்திரம், புலித்தோல், காளை ஊர்தி, கருடஊர்தி...

கடவுளை நாம் நம்புவது உண்மையென்றால் இன்றைய சூழலில் நாமெல்லாம் ஞானிகளாக, துறவிகளாக மாறியிருப்போம்.

கடவுளை அடைய, உணர்ந்துகொள்ள முயற்சிப்பதால்தான் இந்த அளவுக்காவது நாம் மனிதர்களாக வாழ்கிறோம். இந்த நம்பிக்கையும் இல்லாதிருந்தால் இன்றைய சூழலில் காட்டு விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பெரிய வேறுபாடு இருந்திருக்காது.


இலக்கியத்தில் நகைச்சுவை.

முக்கூடற்பள்ளு சிற்றிலக்கியங்களுள் குறிப்பிடத்தக்கது. தமிழ் இலக்கியப் பரப்பில் இவ்விலக்கியத்துக்குத் தனித்துவமான இடம் உண்டு. மருதநிலம் சார்ந்த வாழ்வியலை படம்பிடித்துக்காட்டும் இவ்விலக்கியத்தின் நகைச்சுவைக் காட்சிகளை பதிவு செய்வதே இவ்விடுகையின் நோக்கமாகும்.

பள்ளன் ஒருவன். அவனுக்கு இரண்டு மனைவியர்கள். ஒருத்தி மூத்தபள்ளி, இன்னொருத்தி இளையபள்ளி. இவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் சண்டையில் கடவுளர் பட்ட பாடு நகைச்சுவை நயம் தோய சொல்லப்பட்டிருக்கும். சிரிக்க சிரிக்கப் பேசினாலும் கடவுளர் குறித்த புராணச் செய்திகளை அழகாக மனதில் பதியவைப்பதாக இப்பகுதி விளங்குகிறது.

ஆடையில்லாத கடவுளர்கள்..?

இடுப்பிலே சுற்றிக் கட்டிக் கொள்ள நாலுமுழத் துண்டு கூடக் கிடைக்காமல் புலித்தோலை எடுத்து உடுத்தவன் உங்கள் சோதிவடிவான சிவன் அல்லவா?

கற்றையாக சடையும் கட்டி, மரவுரியையும் இடுப்பிலே முன்காலத்திலேயே கட்டிக் கொண்டானே அவன் உங்கள் சங்குக் கையனான திருமால்அல்லவோடி..?

“சுற்றிக் கட்ட நாலு முழத் துண்டும் இல்லாமல் – புலித்
தோலை உடுத்தான் உங்கள் சோதி அல்லோடி!

கற்றைச் சடை கட்டி மரவுரியும் சேலைதான் – பண்டு
கட்டிக் கொண்டான் உங்கள் சங்ககுக் கையன் அல்லோடி“

(முக்கூடற்பள்ளு – 169)

(சிவன் தாருகாவனத்து முனிவர் ஏவிய புலியைக் கொன்று அதன் உரியை உடுத்ததையும், இராமன் மரவுரி தரித்துக் கானகம் சென்றதையும் இப்பாடலடிகள் சுட்டுகிறது)

உணவில்லாத கடவுளர்கள்..?

ஊருக்குள்ளே பிச்சையெடுத்துத் திரிந்தும் பசியாற்றமாட்டாதவனாகக் கடல் நஞ்சையெல்லாம் எடுத்து உண்டானே, அவன் உங்கள் நாதன் அல்லோடி..?

மாட்டு மந்தைக்குப் பின்னாகவே திரிந்தும்கூடச் சோற்றுக்கு வழியில்லாமல் வெறும் மண்ணைத் தின்றானே அவன் உங்கள் மேகவண்ணன் திருமால் அல்லவோடி?

“நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு ஆற்றமாட்டாமல் – வாரி
நஞ்சையெல்லாம் உண்டானுங்கள் நாதனல்லாடி?

மாட்டுப் பிறகே திரிந்தும் சோற்றுக்கில்லாமல் – வெறும்
மண்ணை உண்டான் உங்கள் முகில் வண்ணனல்லோடி?

(முக்கூடற்பள்ளு – 170)
(சிவன் இரந்துண்டது பிரமனின் தலையோடு தன் கையினின்றும் போவதற்காகக் கொண்ட பிட்சாடனக் கோலம், மற்றும் பார்கடலைக் கடைந்தபோது வந்த நஞ்சை உண்டமை.
கண்ணன் மண்ணை உண்ட கதை)

வாகனம் இல்லாத கடவுளர்கள்..?

ஏறிச் செல்ல ஒரு வாகனமும் இல்லாமல் மாட்டின் மீதே ஏறித்திரிந்தவன் தானே உங்கள் ஈசன்..?

அந்த மாடுகூட இல்லாமல்தானே பறவை மீதிலேறிக் கொண்டன் உங்கள் கீதன் திருமால்..? இது உண்மையல்லவோடி?

“ஏற ஒரு வாகனமுமம் இல்லாமையினால்-மாட்டில்
ஏறியே திரிந்தானுங்கள் ஈசன் அல்லோடி?

வீறு சொன்னதென்ன மாடு தானுமில்லாமல் – பட்சி
மீதிலேறிக் கொண்டானுங்கள் கீதன் அல்லோடி?

(முக்கூடற்பள்ளு – 171)

(காளை வாகனத்தைக் கொண்டவன் சிவன்
கருடனை வாகனமாகக் கொண்டவன் திருமால் என்ற புராணச் செய்தி)

இவ்விலக்கியத்தில் சிவனையும், திருமாலையும் திட்டுவது போல இருந்தாலும் இக்கடவுளர் குறித்த தொன்மச் செய்திகளை அழகாகப் பதிவு செய்வதாக இப்பாடல் அமைகிறது.


இக்காட்சியை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டாலும்..

உள்மனது ஏனோ..

திரும்பத் திரும்பக் கேட்கிறது..

“எத்திசை திரும்பினும் இரவலர் கூட்டம்
இத்தனை கடவுளர் இருந்த என்ன பயன்..???“
என்று...

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்

(உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.)

என்ற வள்ளுவரின் வாக்குதான் நினைவுக்கு வருகிறது.

வியாழன், 13 ஜனவரி, 2011

பிள்ளைத் தமிழ் (பருவங்கள் - படங்களுடன்)



தமிழில் சிற்றிலக்கியங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அதனை 96 என வகைப்படுத்தி உரைப்பது மரபாகும். அவற்றுள் பிள்ளைத்தமிழ் இலக்கியம் குறிப்பிடத்தகுந்தது. "பிள்ளைப்பாட்டு" எனவும் “பிள்ளைக்கவி” என்றும் இவ்விலக்கியத்தை அழைப்பர். இறைவனையோ மனிதர்களையோ குழந்தையாக எண்ணிப் பாடப்படுவதே பிள்ளைத்தமிழாகும். இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரண்டு பால்களிலும் பாடப்படுவதுண்டு. மூன்று மாதம் முதல் இருபத்தொரு மாதம் வரையான குழந்தையின் வாழ்க்கைக் காலத்தைப் பத்துப் பருவங்களாகப் பிரித்துக் காண்பர். ஒவ்வொரு பருவத்துக்கும் பத்துப் பாடல்கள் என அமைத்துப் பாடப்படுவது வழக்கமாகும்.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனும் பத்துப் பருவங்களையுடையது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, நீராடல், அம்மானை, ஊசல் எனும் பருவங்களைக் கொண்டது.

• மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்
• சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

ஆகியன சிறப்புடைய பிள்ளைத்தமிழ் நூல்களாகும்.



தொல்காப்பியத்தில் இடம்பெறும் “குழவி மருங்கினும் கிழவதாகும்” என்ற புறத்திணையியல் நூற்பாவே இவ்விலக்கியத்தின் தோற்றுவாய். பெரியாழ்வாரின் தாலாட்டுப்பாடல்கள் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடியாகக் கொள்ளலாம்.கண்ணனைத் தாலாட்டி, செங்கீரையாட்டி, சப்பாணி கொட்டி, தளர்நடை இடுதலை எழிலுறப் பாடியுள்ளார்.

ஒட்டக்கூத்தர் இயற்றிய “இரண்டாம் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ” முதல் பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.




பத்துப் பருவங்களுக்கான விளக்கம்


இரு பாலாருக்குமான பொதுவான பருவங்கள்


காப்பு - குழந்தையை இறைவன் காக்க வேண்டுமென வேண்டிப்பாடுவது.
செங்கீரை - கீரை காற்றில் அசைவது போன்ற மென்மையான பருவத்தைப் பாடுவது.
தால் - குழந்தையைத் தாலாட்டுவதாக அமைவது.
முத்தம் - குழந்தையிடம் - முத்தம் வேண்டுவதாகப் பாடுவது.
வருகை - குழந்தை எழுந்து நடந்து வருவதைப் பாடுவது.
அம்புலி - குழந்தைக்கு நிலவைக் காட்டுதல்.

ஆண்களுக்கான சிறப்புமிக்க மூன்று பருவங்கள்

சிற்றில் சிதைத்தல் - சிறுபெண்கள் கட்டிய மணல் வீட்டை ஆண்குழந்தை சிதைக்கும் நிலையைப் பாடுவது
சிறுதேர் உருட்டல் - ஆண்குழந்தை சிறிய தேரை உருட்டி விளையாடுவதைப் பாடுவது.
சிறுபறை கொட்டல் - ஆண்குழந்தை சிறிய தோலாலான பறையைக் கொட்டுவது.

பெண்களுக்கான மூன்று பருவங்கள்.


நீராடல் - நீர்நிலையில் விளையாடுதல்.
அம்மானை - காய்களைத் தூக்கிப்போட்டு விளையாடுதல்
ஊசல் - ஊஞ்சலாடுதலைப் பாடுவது.

திங்கள், 22 மார்ச், 2010

96 வகை சிற்றிலக்கியங்கள்.

தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் எனச் சொல்வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 
96 வகைப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந்த நூலிலும் நிறைவாக விளக்கப்படவில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப்படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக்கணம் கூறுமுற்படுபவை பாட்டியல் நூல்களாகும். 

தொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச்சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது. இலக்கிய வகை - பொருள் 
1. அகப்பொருள் கோவை - களவு, கற்பு முதல் கரு உரி அகம்.
2. அங்கமாலை - ஆண், பெண் அங்கங்கள். 
3. அட்டமங்கலம் - கடவுள் காக்கப் பாடுதல். 
4. அநுராகமாலை - தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல். 
5. அரசன் விருத்தம் - மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம். 6. அலங்கார பஞ்சகம் - - 
7. ஆற்றுப்படை - பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.
8. இணைமணி மாலை - - 
9. இயன்மொழி வாழ்த்து - குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல். 10. இரட்டை மணிமாலை - - 
11. இருபா இருபஃது - - 
12. உலா - தலைமகன் உலாவை எழுபருவ மகளிர் கண்டு களித்தல். 
13. உலாமடல் - கனவில் பெண் இன்பம். 
14. உழத்திப்பாட்டு - பள்ளர், பள்ளியர் - உழவு- சக்களத்தி சண்டை.
15. உழிஞைமா - மாற்றார் ஊர்ப்புறம் - உழிஞை சூடி முற்றுகை. 
16. உற்பவ மாலை - திருமாலின் பத்து பிறப்பு. 
17. ஊசல் - வாழ்த்துதல். 
18. ஊர் நேரிசை - பாட்டுடைத் தலைவன் ஊர். 
19. ஊர் வெண்பா - ஊர்ச்சிறப்பு. 
20. ஊரின்னிசை - பாட்டுடைத்தலைவன் ஊர். 
21. எண் செய்யுள் - தலைவன் ஊர்ப்பெயர். 
22. எழு கூற்றிருக்கை - சிறுவர் விளையாட்டு அடிப்படை. 
23. ஐந்திணைச் செய்யுள் - ஐந்திணை உரிப்பொருள். 
24. ஒருபா ஒருபஃது - அகவல் வெண்பா. 
25. ஒலியல் அந்தாதி - - 
26. கடிகை வெண்பா - தேவர் அரசரிடம் காரியம்.
27. கடைநிலை - 
28. கண்படை நிலை - 
29. கலம்பகம் - 18 உறுப்புகள். 
30. காஞ்சி மாலை - மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சி மாலை சூடுதல். 
31. காப்பியம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருளில் பாடுவது. 
32. காப்பு மாலை - தெய்வம் காத்தல். 
33. குழமகன் - பெண் கையிலிருக்கும் குழந்தையைப் புகழ்தல். 
34. குறத்திப்பாட்டு - தலைவி காதல், குறத்தி குறிசொல்லுதல். 
35. கேசாதி பாதம் - முடிமுதல் அடிவரை வருணனை. 
36. கைக்கிளை - ஒரு தலைக்காமம். 
37. கையறுநிலை - உற்றார் இறந்த பொழுது வருந்துவது. 
38. சதகம் - (அகம், புறம்) நூறு பாடல் பாடுவது. 
39. சாதகம் - நாள், மீன் நிலைபற்றிக் கூறுவது. 
40. சின்னப் பூ - அரசனின் சின்னங்கள் பத்து. 
41. செருக்கள வஞ்சி - போர்களத்தில் வெற்றி ஆரவாரம், பேய்கள் ஆடல் பாடல். 42. செவியறிவுறுஉ - பெரியோருக்குப் பணிவு, அடக்கம். 
43. தசாங்கத்தயல் - அரசனின் பத்து உறுப்பகள் 
44. தசாங்கப்பத்து -- அரசனின் பத்து உறுப்பகள் 
45. தண்டக மாலை -- 
46. தாண்டகம் - 27 எழுத்து முதல் கூடிய எழுத்துக்களைப் பெற்று வரும். 
47. தாரகை மாலை - கற்புடை மகளிரின் குணங்களைக் கூறுதல். 
48. தானை மாலை - கொடிப்படை. 
49. தும்பை மாலை - தும்பை மாலை சூடிப்பொருவது. 
50. துயிலெடைநிலை - பாசறையில் தூங்கும் மன்னனை எழுப்புதல். 
51. தூது - ஆண் - பெண் காதலால் அஃறிணையைத் தூதனுப்புதல். 
52. தொகைநிலைச் செய்யுள் - -
53. நயனப்பத்து - கண். 
54. நவமணி மாலை - - 
55. நாம மாலை - ஆண்மகனைப் புகழ்தல். 
 56. நாற்பது - காலம் இடம் பொருள் இவற்றுள் ஒன்று. 
57. நான்மணி மாலை -- 
58. நூற்றந்தாதி - - 
59. நொச்சிமாலை - மதில் காத்தல். 
60. பதிகம் -ஏதேனும் ஒருபொருள்.
61. பதிற்றந்தாதி - - 
62. பயோதரப்பத்து -மார்பைப் பாடுவது.
63. பரணி - 1000 யானைகளை வென்றவனைப் பாடுவது. 
64. பல்சந்த மாலை -- 
65. பவனிக்காதல் - உலாவல் காமம் மிக்குப் பிறரிடம் கூறுவது. 
66. பன்மணி மாலை - கலம்பக உறுப்புகள். 
67. பாதாதி கேசம் - அடிமுதல் முடிவரை.
68. பிள்ளைக்கவி (பிள்ளைத்தமிழ்) - குழந்தையின் பத்துப்பருவங்கள். 
69. புகழ்ச்சி மாலை - மாதர்கள் சிறப்பு. 
70. புறநிலை - நீ வணங்கும் தெய்வம் நின்னைக் காக்க. 
71. புறநிலை வாழ்த்து - வழிபடு தெய்வம் காக்க. 
72. பெயர் நேரிசை - பாட்டுடைத்தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல். 
73. பெயர் இன்னிசை - பாட்டுடைத்தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல். 
74. பெருங்காப்பியம் - கடவுள் வணக்கம், வருபொருள், நான்குபொருள் படபாடுதல். 
75. பெருமகிழ்ச்சிமாலை - தலைவியின் அழகு, குணம் , சிறப்பு. 
76. பெருமங்கலம் - பிறந்தநாள் வாழ்த்து. 
77. போர்க்கெழு வஞ்சி - மாற்றார் மீது போர்தொடுக்கும் எழுச்சி. 
78. மங்கல வள்ளை - உயர்குலத்துப்பெண். 
79. மணிமாலை - - 
80. முதுகாஞ்சி - இளமை கழிந்தோர் அறிவில் மாக்கட்கு உரைப்பது. 
81. மும்மணிக்கோவை -- 
82. மும்மணிமாலை - - 
83. மெய்கீர்த்தி மாலை - அரசனின் கீர்த்தியைச் சொல்லுவது. 
84. வசந்த மாலை - தென்றல் வருணனை. 
85. வரலாற்று வஞ்சி - குலமுறை வரலாறு. 
86. வருக்கக் கோவை -- 
87. வருக்க மாலை --
88. வளமடல் - மடலேறுதல். 
89. வாகை மாலை - வெற்றி வாகை சூடுதல். 
90. வாதோரண மஞ்சரி - யானையை அடக்கும் வீரம். 
91. வாயுறை வாழ்த்து - பயன்தரும் சொற்களை அறிவுரையாகக் கூறுவது. 
92. விருத்த இலக்கணம் - படைக்கருவிகளைப் பாடுவது.
93. விளக்கு நிலை - செங்கோல் சிறக்கப்பாடுவது. 
94. வீர வெட்சி மாலை - ஆநிரை கவர்தல்.
95. வெற்றிக் கரந்தை மஞ்சரி - ஆநிரை மீட்டல். 
96. வேனில் மாலை - இளவேனில், முது வேனில் வருணனை.