வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 30 ஜனவரி, 2010

மனையுறை குருவிகளின் காதல்.




சங்கப்பாடல்கள் அகப்புற வாழ்வியலை நேரிடையாகக் கூறவில்லை. இயற்கையைத் துணையாகக் கொண்டே எடுத்தியம்பியுள்ளன. மனையில் தங்கும் குருவிகளின் வாழ்வியலைக் கொண்டு இங்கு ஒரு அகவாழ்வியல் விளக்கம் பெறுகிறது.


தலைவன் தான் சென்ற செயல் முடிந்து தலைவியைக் காணவருகிறான். இத்தனை காலம் தலைவனை நீங்கியதால் தலைவி உடல் மெலிந்து, பசலையுற்று வாடியிருந்தாள். இனி அத்துயர் நீங்கியது எனத் தோழி மகிழ்ந்து உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.



“வீட்டின் கூரையில் தங்கியிருக்கும் கருமையான மோவயையுடைய குருவியின் சேவல், வேற்றுப் புலம் சென்றது
அங்கு தங்குமிடத்தில் ஓர் பெண்குருவியோடு கூடியது. பிறகு பொழுது சாயத் தம் கூட்டுக்கு வந்தது.
ஆண்குருவி வேறு பெண்குருவியோடு கூடியதற்கான அடையாளங்கள் உடலில் தெரிந்தன. அதனை அறிந்த உரிமையுடைய பெண்குருவி வருந்தியது. அதனால்த் தம் சிறிய பிள்ளைக் குருவிகளோடு சேர்ந்து ஆண்குருவியைத் தம் கூட்டுக்கு வரவிடால்த் தடுத்தது.

இதனால் ஆண்குருவி தம் கூட்டுக்குச் செல்ல இயலாது வெளியிலேயே நெடுநேரம் காத்திருந்தது. அவ்வேளையில் மழை வேறு வந்துவிட்டது. மழையிலேயே நனைந்தபடி நடுங்கிக்கொண்டு நின்றது. அதனைப் பார்த்த பெண்குருவி மனதில் நீண்ட நேரம் எண்ணி தம் ஈரநெஞ்சத்தால் ஆண்குருவியை உள்ளே வர அனுமதித்தது.

இத்தகைய நிகழ்வுக்குரிய மயக்கத்தைத் தரும் மாலைக் காலத்தில் மாலை அணிந்த குதிரைகள் மெல்லிய பயிர்களை மிதிக்க பெரிய வெற்றியையுடைய தலைவனின் தேர் வந்தது. இனி இவளது அழகிய நெற்றியில் உள்ள அழகானது பசலையால் உண்ணப்படாது.



ஒப்புமை.


குருவியின் சேவல் பிற பேடையொடு கூடியதால் சேவற்குரிய பேடை எதிர்த்துப் பின் இரக்கங்காட்டியது.




தலைவனும் முன்பு பரத்தையரோடு ( பொருட் பெண்டிர்) சேர்ந்து வந்தமையால் தலைவி ஊடினாள். (கோபம் கொண்டாள்) இப்போது வேறு பணிநிமித்தம் சென்று வருவதால் ஊடாது ஏற்றுக் கொள்வாள்.

உட்கருத்து.


வேறு பெடையை அணைந்து வரும் சேவலை, பெடையும் பிள்ளைகளும் கூட்டில் நுழையாதவாறு தடுத்தன என்பது முன்பு தலைவன் பரத்தையரிடம் சென்று மீண்டபோது தலைவி அவனை ஏற்காது ஊடல் கொண்டாள். பின் அவனின் வருத்தம் தாளாது ஏற்றனள். இக்கருத்தே இப்பாடலின் உட்பொருளாகவுள்ளது.

சங்க காலம் மக்கள் தொகை குறைவு ஆதலால் தலைவன் பரத்தையரிடம் செல்வதை சமூகம் ஏற்றது. சங்க காலத்துக்கு அடுத்துவந்த சங்க மருவிய காலத்தில் பரத்தையர் பிரிவு வன்மையக கடியப்பட்டது. ஆயினும் தன் தலைவன் தனக்கே உரியவன் என்னும் உரிமையைத் தலைவி தன் ஊடலாலும், வாயில் மறுத்தலிலும் புலப்படுத்துவது மரபாக இருந்தது.


பாடல் இதோ..



நற்றிணை 181. முல்லை

உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்
பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி,
வந்ததன் செவ்வி நோக்கி, பேடை
நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன
5 சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின்,
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி, நெடிது நினைந்து,
ஈர நெஞ்சின் தன் வயின் விளிப்ப,
கையற வந்த மையல் மாலை
10 இரீஇய ஆகலின், இன் ஒலி இழந்த
தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று, பெருவிறல் தேரே;
உய்ந்தன்றாகும், இவள் ஆய் நுதற் கவினே.


(வினை முற்றிப் புகுந்தது கண்ட தோழி மகிழ்ந்து உரைத்தது.)

இப்பாடல் வழியாக அகவாழ்வியல் ஒன்று அழகான இயற்கையோடு இயைபுபட விளக்கம் பெறுகிறது.

பாடல் படித்த பின்னரும் அகவாழ்வைக் காட்டிலும் மனதில் நிலைத்துவிடுவது குருவிகளின் வாழ்வியல்தான்.

தலைவனுடைய மனநிலை
தலைவியினுடைய மனநிலை

ஆகியவற்றைப் புரிந்து கொண்ட தோழியின் மனநிலை ஆகியவற்றைப் புலப்படுத்திய புலவர் பாராட்டுக்குரியவர்.

கவிதை சுட்டும் குருவிகளின் வாழ்க்கை உண்மையா? என்று சிந்திப்பதைவிட ஓர் அகவாழ்வியலை மனதில் நிற்குமாறு இயற்கையோடு இயைபுறப் பாடிய புலவரின் திறம் எண்ணிப் பெருமிதம் கொள்ளத்தக்கது.

காலத்தை வென்ற இக்கவிதை தாங்கி வருவது சங்ககால வாழ்வியலை மட்டுமல்ல இயற்கையோடு அக்காலமக்கள் கொண்ட உறவுநிலையையும் தான்!

வெள்ளி, 29 ஜனவரி, 2010

மணல் வீடும் மாறாத மனமும்.




கதை ஒன்று…

மாலை 6 மணியாகிறது.
வழக்கமாக வேலைக்குச் சென்ற தன் மகள் 5மணிக்கே வந்துவிடுவாள்.
7 மணி ஆனபின்னும் இன்னும் வந்து சேரவில்லையே என்று ஆளுக்கொரு பக்கமாகத் தேடுகிறார்கள். தன் மகளின் அலைபேசியைத் தொடர்புகொள்ள முடியததால்,அவள் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் அழைத்துக் கேட்கிறார்கள். அவர்களோ தங்கள் மகள் 4 மணிக்கே கிளம்பிவிட்டாளே என்கிறார்கள்.

ஒன்றும் புரியாத குடும்பத்தார், அவளின் தோழி வீட்டுக்கெல்லாம் அழைத்துப்பார்த்து ஏமாற்றத்தை மட்டுமே பதிலாகப் பெறுகிறார்கள்.

இந்த சூழலில் இந்தக் குடும்பத்தின் குழப்பத்தைப் பார்த்து அக்கம் பக்கத்திலுள்ளோர் கதை திரிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஒருவர் சொல்கிறார்..

அந்தப் பொன்னு இப்படி ஓடிப் போகும்னு எனக்கு முன்னாடியே தெரியும். அந்தப் பொன்னு ஒரு பையனோட வண்டில போனத நான் பல தடவ பார்த்திருக்கேன்..!

இன்னொருவர்…

அட! ஆமாங்க…
அந்தப் பொன்னு என்ன அடக்க ஒடுக்கமாவா இருந்துச்சு..
யாரப்பார்த்தாலும் சிரிச்சி சிரிச்சிப் பேசிட்டு…..
அதான் சொல்லாமக் கூட யாரையே கூட்டிட்டு ஓடிடுச்சி!

இவ்வாறு வாய்க்கு வந்தவாறு ஆளாளாளுக்குப் இந்தப் பெண்ணின் குடும்பத்தாரின் காதுபடவே பேசிக்கொண்டிருக்க…………….

ஒருவழியாக அந்தப் பெண்னே வீடு வந்து சேர்ந்தாள்!


அவ்வளவு தான் கதை…

என்ன கதையிது. கதையின் முடிவு என்ன?
அந்தப் பெண் எங்கு சென்றாள்?
ஏன் இவ்வளவு காலதாமதமாக வந்தாள்?
ஊர் மக்கள் பேசியதெல்லாம் உண்மையா? பொய்யா?
பெற்றோர் அவளிடம் என்ன கேள்வி கேட்டார்கள்?
அதற்கு அவள் என்ன பதில் சொன்னாள்?

இதெல்லாம் உணர்த்தவில்லை இந்தக் கதை.
இந்தக் கதை உணர்த்தும் நீதி…

ஒரு பெண் வீட்டிற்குக் காலதாமதமாக வந்தால் ஊரார் என்னவெல்லாம் பேசுவார்கள். இந்த சமூகம் இதனை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பது தான்.

இந்தக் கதையைப் படிக்கும் போது நம்மைச் சுற்றி இது போன்ற பல உண்மை நிகழ்வுகளை நம் மனது எண்ணிப்பார்க்கும்.

அந்தப் பெண்ணின் பெற்றோர் மனம் படும் பாடு! என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள முடியாது.

தமிழர் பண்பாட்டு கூறுகளுள் இவையெல்லாம் என்றும் மாறாத தன்மையுடைன. காலங்கள் பல மாறிய போதும் மாறாத மனித மனங்களுக்கான சில சான்றுகள்.

சங்கப்பாடல் ஒன்று..

(மகட் போக்கிய தாய் சொல்லியது.)

களவொழுக்கத்தில் இடையூறுகள் ஏற்பட்டன. ஆதலால் தலைவன் தலைவியை அழைத்துக்கொண்டு சென்றான். செய்தியறிந்த நற்றாய் அவளது பிரிவாற்றாமையைால் வருந்திப் புலம்பினாள்.

தலைவி ஒரு தலைவனைக் காதலிக்கிறாள் வீட்டில் தம் காதலை ஏற்கமாட்டார்கள் என்று அஞ்சிய தலைவி தலைவனுடன் உடன்போக்கில் ( தலைவன் உடன் பெற்றோர் அறியாது செல்லுதல்) சென்றுவிடலாம் என்று முடிவுக்கு வந்தாள். அதனால் அவளின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தோன்றின. அதனை நன்கு அறிந்தாள் நற்றாய்.


வயலைக் கொடி படர்ந்த பந்தரின் கீழ் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள் தலைவி.

அப்போது நற்றாய் தலைவியைப் பார்த்து…

நீ என்ன சிறுபிள்ளையா?
மணப்பருவம் அடைந்துவிட்டாய் என்பது நினைவில் இல்லையா?
வளம் பொருந்திய மனைக்கு உரிமையுடையவள் நீ!
இன்னும் சிறுபிள்ளைத்தனமாக பந்து எறிந்து விளையாடித்த திரிகின்றாயே!
என்றாள்.

அழகிய நெற்றியையுடைய தலைவி தன்மனதில்……

தாய் என்னுடைய காதலை அறிந்தனளோ!
அதனால் தான் சினம் கொண்டு பேசுகிறாளோ!
என்று அஞ்சியவாளாக,

விரைவில் தாயைப் பிரிந்துவிடுவோமே என்று எண்ணி தாய்மீது சினம் கொள்ளாது அன்புடன் இனிய மொழிகள் பேசினாள்.

ஒருநாள் தம் பெற்றோர் அறியாது தன் தலைவனுடன் உடன்போக்கில் சென்றுவிட்டாள்.

தன் மகள் தன்னை நீங்கி யாரோ ஒருவனோடு சென்றுவிட்டாள் என்பதை அறிந்த தாய் என்ன செய்வதென்று தெரியாமல்ப் பித்துப் பிடித்தவள் போல அழுதுபுலம்பினாள். தாம் பல முறை திட்டியபோதும் அன்பு மொழிபேசிய தலைவியின் ஒவ்வொரு செயல்களும் நற்றாயின் கண்முன் வந்து வந்து போயின. தினம் தினம் மகளின் மழலை மொழி கேட்டு மகிழ்ந்தவள் தாய். தன் மகள் வளர்ந்துவிட்டாளும் இன்னும் ஒரு குழந்தையாகவே எண்ணி வாழ்பவள் தாய். தன்னை நீங்கிச் சென்ற தலைவியை நினைந்து நினைந்து அழுது புலம்பினாள் தாய்.

அதற்குள் இதனை அறிந்த ஊரார் இச்செய்தியறிந்து தாயைத் தேற்றுவதற்காக வந்துவிட்டனர்.
ஊராறிடம் இவ்வாறு புலம்புகிறாள் தாய்…

அவள் இடையின் தழையாடைக்குச் சேர்க்கும் இலைகளைத் தரும் நொச்சி மரத்தைப் பாருங்கள்!

என் அன்புமகள் தன் சிவந்த சிறுவிரல்களால் செய்த சிறு மணல்வீட்டைப் பாருங்கள்!




கண்ணுடையவர்களே காண்கிறீர்களா?

நம் வீடு பலரையும் விருந்தினராக ஏற்று எந்நாளும் பெருஞ்சோறோடு விளங்கும் வீடன்றோ!

பெருவிருந்துகள் எந்நாளும் நடக்கும் இந்த வீட்டில் எம்மோடு மகிழ்வோடு இருந்திருக்கக் கூடாதா?

யாரோ ஒருவன்,
அயலான்,
அவன் மீது கொண்ட காதலால் நாங்கள் அவள் மீது கொண்ட அன்பைப் புரிந்துகொள்ளாமல்ச் சென்றுவிட்டாளே!!

அவள் சென்ற வழி என்ன இனிமையானதா?

கடத்தற்கரிய நெடிய வழியல்லவா அது!
திரண்ட அடிப்பகுதியையுடைய இருப்பை மரத்தின் வெண்ணிற மலர்களைக் கரடிக்குட்டிகள் கவர்ந்துண்ணும் வெம்மை பொருந்திய மலைகளைக் கொண்டது!

அவ்வழிகளில் செல்லும் உயிர்கள் வெம்மை தாளாது நெட்டுயிர்ப்புக்கொள்ளும் தன்மையது அந்நிலம்..

அந்தோ என்மகள் என்ன துன்புறுவாளோ!


என்று புலம்புகிறாள் நற்றாய். பாடல் இதோ,

275. பாலை
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
5 'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என,
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
மழலை இன் சொல், கழறல் இன்றி,
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,
10 ஏதிலாளன் காதல் நம்பி,
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
15 நெருநைப் போகிய பெரு மடத் தகுவி
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
செம் புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?

அகநானூறு -275.
கயமனார்

இப்பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.

L காதலித்த தலைமக்கள் (காதலர்கள்) பெற்றோர் அறியாது வேறு புலம் செல்லும் உடன்போக்கு என்னும் அகத்துறை விளக்கப்படுகிறது.
L பாலையின் கொடுமை புலப்படுத்தப்படுகிறது.
L தலைவி தாய் மீது கொண்ட அன்பும், தாய் மகள் மீது கொண்ட அன்பும் சுட்டப்படுகிறது.
L வண்டல் இழைத்தல் என்னும் மணல் வீடு கட்டி விளையாடுதல், பந்துவிளையாடுதல் என்னும் இரு சங்ககால விளையாட்டுகளை அறிந்துகொள்ள முடிகிறது.
L பெண்கள் தழையாடை அணிந்து கொள்ளும் மரபு உணர்த்தப்படுகிறது.
L தலைவியை எண்ணி நற்றாய் கொண்ட மனத்துயர் இன்றைய பெற்றோர் கொள்ளும் மனத்துயராகவே எண்ணமுடிகிறது.


ஒப்புமை.


இன்றைய காதலுக்கும் சங்ககாலக் காதலுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.

இன்றைய காதலர்கள் பெற்றோர் அறியாது செல்வதை ஓடிப்போதல் என்கின்றனர். சங்ககாலத்தில் “உடன்போக்கு“ என்று இது அழைக்கப்பட்டது.

சங்க காலக் காதலர்களின் காதலைப் பற்றி ஊரர் பேசுவது அம்பல் அலர் எனப்பட்டது. இன்று புறம் பேசுதல் என அழைக்கப்படுகிறது.

(அம்பல் என்பது காதலை பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் தமக்குள் பேசுவது.
அலர் என்பது அந்தப் பெண்ணின் பெற்றோர் மட்டுமன்றி ஊரறிய யாவரும் பேசுவது)

நடந்துமுடிந்த பின்னர் வருந்துவதைவிட,

நடக்கும் முன்னரே யோசித்தால் உறவுகள் துன்பமின்றி வாழமுடியும்.

J இத்தனை ஆண்டுகாலம் வளர்த்த பெற்றோர் தமக்கு சரியான துணை தேடித்தருவார்கள் என்ற மகளின் நம்பிக்கையும்,

J தன் மகளின் விருப்பம் தான் என்ன? அவன் அவளுக்கு ஏற்றவன் தானா? என அறிந்து, சாதி,மதம், பணம் ஆகியவற்றை நோக்காது, முடிந்தவரை அவளின் விருப்பத்துக்கு முன்னரிமை அளிக்கும் பெற்றோர்,

J பெண்ணின் பெற்றோர் அறியாது அவளை அழைத்துச் செல்வதைவிட அவளின் பெற்றோரிடமே சென்று பெண்கேட்டு மணம் செய்து கொள்ளும் காதலன்.

J இவ்வாறு ஒவ்வொருவம் சிந்தித்து நேர்வழியில் செயல்பட்டால் வாழ்வில் இது போன்ற துன்பங்கள் நேராது.

புதன், 27 ஜனவரி, 2010

தமிழாய்வும் அறிவியலும்.




தமிழ் என்றால் திருக்குறளும், சிலம்பும், இராமாயணம், மகாபாரதம் என்றே பலர் நினைத்துவருகின்றனர். தமிழ் மாணவர்களும், ஆய்வாளர்களும் இது போன்ற சிந்தனை கொண்டிருப்பது வருந்தத்தக்கதாகவுள்ளது. இயல், இசை, நாடகம் என்ற மூன்றிற்குள் பல துறைகள் அடங்கியுள்ளன. தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகம் 25 தமிழ்த்துறைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.

கீழே 37 துறைகள் குறிப்பிட்டிருக்கிறேன். இத்துறைகள் ஒவ்வொன்றும் தம்முள்ளே பல உட்கூறுகளைக் கொண்ட ஆய்வுக்களங்களாகத் திகழ்கின்றன.இத்துறைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியே விரித்தால் 200க்கும் மேற்பட்ட தமிழாய்வுத் துறைகளை இனம் காணமுடியும்.
ஆய்வாளர்கள் சிறுகதை, புதினம், சிற்றிலக்கியம் என்றே தம் ஆய்வுகளை முடித்துக்கொள்கின்றனர்.
• தமிழாய்வுத் துறைகள் எத்தனை இருக்கின்றன என்பதை அவர்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்.
• செய்த ஆய்வுத் தலைப்புகளையே மீண்டும் மீண்டும் செய்வதால் யாது பயன்?
ஆய்வு என்பது வாழ்வியலுக்குப் பயன்படவேண்டும். இலக்கியங்களை ஆய்வு செய்தாலும் அறிவியல் நோக்கோடு வாழ்வியலுக்குப் பயன்படுமாறு செய்தல் வேண்டும்.
• கவிஞர். வைரமுத்து இன்றைய நிலையை,

இன்னும் இரண்டு மூன்று கடற்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.
என்றுரைக்கிறார்.

• தமிழ் படித்தால் வாத்தியார் வேலைக்குப் போகலாம் என்பது மட்டும் தமிழர்களிடம் ஆழப்பதிந்திருக்கிறது.
“வழக்கில் சொல்வதுண்டு,

“வக்கத்தவன் வாத்தியார் வேலைக்குப் போவான்
போக்கத்தவன் போலீசு வேலைக்குப் போவான் என்று“

அதன் உண்மையான பொருள்,

“வாக்குக் கற்றவன் வாத்தியார் வேலைக்குப் போவான்
திருடனின் போக்குக் கற்றவன் போலீசு வேலைக்குப் போவான்“

என்பது தான். எல்லோரும் வாத்தியார் வேலைக்குப் போய்விடமுடியாது.
நன்கு ஆன்றோர் அனுபவங்களைக் கற்றவன் மட்டுமே வாத்தியாராகமுடியும்.

திருடனின் போக்குக் கற்றவனே போலீசு வேலைக்குப் போக முடியும்.

வேலையில் எந்தவிதத்திலும் உயர்வு தாழ்வில்லை. மொழியைக் காக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.
• தமிழ்த்துறை சார்ந்தோர் தமிழ்த்துறைகள் பலவற்றையும் அறிந்து தம் ஆய்வை மேலும் எதிர்கால நோக்கோடு, வாழ்க்கைக்குப் பயன்தரும் விதத்தில் செய்ய வேண்டும். இத்துறைகளிலெல்லாம் பணிவாய்ப்பு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

தமிழ் அறிவியல்

• பழந்தமிழர் நாம் வியக்கும் அளவுக்கு அறிவியல் நுட்பங்களை அறிந்திருந்தனர். அவர்கள் ஆங்கில மொழியில் அறிவியல் அறிவைப் பெறவில்லை.
• தம் தாய்மொழியாயே சிந்தித்து இவ்வறிவைப் பெற்றனர். எல்லா அறிவியல்த் துறைகளும் தமிழ் மொழி வழியே இருத்தல் நம் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.
• அறிவியலுக்கு மொழி தடையா?
• 500 ஆண்டுகளுக்கு முந்தைய மொழியால் அறிவியல் சொல்லும் போது 2500 ஆண்டு பழமையான தமிழால் ஏன் அறிவியல் சொல்ல முடியாது?
• ஆய்வுகள் வாழ்வியலுக்கும் அறிவியலுக்கும் முன்னுரிமை தருதல் வேண்டும்.
• ஆய்வுத்திட்டங்களுள் அறிவியலுக்கும், வாழ்வியலுக்கும் முன்னுரிமையளிக்கும் ஆய்வுத் திட்டங்களுக்கு அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.


தமிழ்த்துறைகள்
.


² இலக்கியம் (சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்திஇலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம், தனிப்பாடல் திரட்டு, இக்கால இலக்கியம்)
² இலக்கணம் ( எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல்)
² வரலாறு (இலக்கிய வரலாறு, இலக்கண வரலாறு, மொழி வரலாறு, தமிழக வரலாறு, இந்திய வரலாறு)
² கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்த் துறை.
² சுவடியியல். (அரிய கையெழுத்துச் சுவடித் துறை)
² மொழியியல்.
² மானிடவியல்.
² அகராதியியல்.
² சொற்பிறப்பியல்.
² நுண்கலைகள். ( கோயில் கலை.கட்டிடக்கலை, ஒவியக்கலை, சிற்பக்கலை, இசைக்கலை, நாடகக்கலை, நடனக்கலை)
² மொழிபெயர்ப்பியல்.
² ஒப்பியல்.
² தொன்மவியல்.
² சித்தரியல்
² சைவ சித்தாந்தக் கொள்கைகள்.
² காந்தியக் கொள்கைகள்.
² பெரியாரியக் கொள்கைகள்.
² நேரு கொள்கைகள்
² வள்ளுவக் கொள்கைகள்.
² கலைச் சொல்லாக்கம்.
² இதழியல்.
² தகவல் தொடர்பியல் ( வானொலி, தொலைக்காட்சி, இணையம்)
² அயலகத் தமிழ்த்துறை.
² சமூக அறிவியல்த் துறை.
² கல்வியியல்த் துறை ( மாணவர் உளவியல், கல்வி உளவியல்)
² தத்துவவியல்த் துறை.
² பழங்குடி மக்கள் வாழ்வியல்.
² நாட்டுப்புறவியல்த் துறை.( நாட்டார் வழக்காற்றியல்)
² தொல்லறிவியல்.
² தொழில் மற்றும் நிலஅறிவியல்.
² கணிப்பொறி அறிவியல்த் துறை.
² சுற்றுச் சூழல், மூலிகை அறிவியல்த் துறை.
² திறனாய்வியல்த் துறை.
² பதிப்பியல்த் துறை.
² சோதிடத் துறை.
உளவியல்த் துறை



தமிழில் இத்தனை துறைகள் இருக்கின்றன. இவையன்றி அறிவியலைத் தமிழ் மொழி வழி அணுகும் போது இன்னும் பல புதிய துறைகள் உருவாகும் வாய்ப்பிருக்கின்றனது. இதனை

அரசு,
தமிழ் வழி கற்கும் மாணவர்கள்,
தமிழ் மொழியைக் கற்கும் மாணவர்கள்,
பெற்றோர்,
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர்,


என யாவரும் உணரல் வேண்டும்.

தமிழ்த்தாத்தா என்றழைக்கப்படும் உவே. சாமிநாதையர் அன்று வடமொழியையோ வேறு துறையையே தேர்ந்தெடுத்திருந்தால் நாம் இன்று பெருமைபேசும் சங்க இலக்கியங்கள் கிடைத்திருக்காது.

அவர் தேர்ந்தெடுத்தது பதிப்பியல்த்துறை. அவரையும் அவரது பணியையும் யாரும் மறக்க முடியாது. அதுபோல,

தமிழுக்குத் தொண்டு செய்வோம்!
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்!

திங்கள், 25 ஜனவரி, 2010

பெண்களின் கூந்தல் மணம் இயற்கையானதா? - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 02


குறுந்தொகையில் அதிகம் எடுத்தாளப்பட்ட பாடல்களுள் ஒன்று,

“கொங்கு தேர் வாழ்க்கை“ என்னும் பாடலாகும். இப்பாடலில் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?
இல்லை செயற்கை வாசனைப் பொருள்களாலேயே கூந்தல் மணம் பெறுகிறதா? என்ற கருத்து விவாதிக்கப்பட்டுள்ளது.

திருவிளையாடல் புராணச் செய்தி.

சிவனின் திருவிளையாடல்களுள் “தருமிக்குப் பொற்கிழி அளித்தல்“ என்பதும் ஒன்றாகும்.
தருமி என்பவன் ஏழை அந்தணன் ஆவான். அவன் வறுமையால் வாடிய காலத்தில் சிவன் ஒரு திருவிளையாடல் புரிந்தார்.

பாண்டிய மன்னன் செண்பகராமன் தன் மனைவியோடு சேர்ந்திருக்கும் போது அவளின் கூந்தல் மனம் காற்றுக் குதிரையேறி மூக்கு என்னும் பெரும் பாதை தாண்டி மூளை என்னும் ஆய்வுத்தளம் சென்று சேர்ந்தது. அவ்வளவுதான் செண்பக ராமனின் மூளை சிந்திக்க ஆரம்பித்துவிட்டது.

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? இல்லை வாசனைப் பொருள்களைத் தம் கூந்தலில் சூடுவதால் தான் மணம் பெறுகிறார்களா?
என்ற கேள்வி அவனைத் துளைத்தெடுத்தது. பதிலறியாமல்த் தவித்த மன்னன், தன் சந்தேகத்தைத் தீர்க்கும் பாடல் இயற்றுபவருக்கு ஆயிரம் பொன் பரிசளிப்பதாக அறிவித்தான்.

இதனை அறிந்து கோயிலில் சிவன் திருவுருவத்தின் முன் புலம்பிய தருமிக்கு இறைவன் ஒரு பாடலை அளித்தான். செண்பகராமனின் ஐயம் தீர்க்கும் தன்மை வாய்ந்த அந்தப் பாடலை எடுத்துச்சென்ற தருமி தமிழ்ச்சங்க அவையோர் முன் மன்னனுக்கு பாடிக்காட்டினான்.

பெண்களின் கூந்தல் இயற்கையிலேயே மனம் வாய்ந்தது என்னும் பொருள்தோய்ந்த அந்தப்பாடலைக் கேட்டு தம் ஐயம் தீர்ந்து மகிழ்ந்த மன்னன் பரிசளிக்க முற்படும்போது, அந்த அவையிலிருந்த நக்கீரர் என்னும் புலவர் தடுத்தார். இப்பாடலில் பிழையுள்ளது என்று தம் கருத்தைத் தெரிவித்தார். நக்கீரரை எதிர்த்து வாதம் செய்ய இயலாத தருமியும் திரும்பிச் சென்றார்.

என்ன நேர்ந்தது என்று வினவிய பாண்டியனிடம் நக்கீரர்,
“எய்தவனிருக்க அம்பை நோகலாமா?

எய்தவன் ஒருவன், ஆம் பாடல் எழுதியவன் வேறொருவன் இவன் பாவம் அம்பு. என்றார்.

தவறான பாடலுக்குப் பரிசளிக்க இருந்தோமே எம்மைக் காத்தீர் என்று மகிழ்ந்தான் மன்னன்.

கோயிலில் தமக்கு நேர்ந்த இழிவை எண்ணி வருந்திய தருமி முன்னர் தோன்றிய சிவன், தருமியை அழைத்துக்கொண்டு பாண்டியனின் அவைக்கு வந்தார். அவையில் நடந்த விவாதம்,
(மூல புராணத்தையும், திருவிளையாடல் புராணம் என்னும் படத்தின் வசனங்களையும் தழுவி,)

சிவன் - எனது பாடலில் பிழை கண்டவன் எவன்?
நக்கீரர் - அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்.
சிவன் - ஓ நக்கீரனா? சங்கைக் கீறு கீறு என்று அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா எனது பாடலில் குற்றம் காணத்தக்கவன்.
நக்கீரர் - சங்கறுப்பது எங்கள் தொழில். சங்கரனாருக்கு என்ன தொழில்.
அரனே அறுந்துண்டு வாழ்வோம். உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை.
சிவன் - எமது பாடலில் என்ன குறை கண்டீர்? சொல்லிலா? பொருளிலா?
நக்கீரர் - சொல்லிலிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். பிழை பொருளில்.
சிவன் - பொருளில் என்ன பிழை கண்டீர்?
நக்கீரர் - பாடலை ஒரு முறை பாடுங்கள்.

சிவன் -

“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம்
செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.“

நக்கீரர் - இப்பாடலின் பொருள்.

சிவன் - புரியவில்லையா?
தலைவன் தலைவியின் கூந்தல் மணத்துக்கு இணையான மணம் வேறு மலர்களில் எங்கும் உண்டா? என்று தும்பிடம் வினவுவது போல இப்பாடலை அமைத்திருக்கிறேன்.
நக்கீரர் - பாடலின் உட்பொருள்?
சிவன் - பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்பது.
நக்கீரர் - ஒருபோதும் இல்லை பெண்களில் கூந்தலுக்கு எக்காலத்தும் இயற்கையில் மணம் இல்லை. வாசனைத் திரவியங்களையும், மலர்களையும் தம் கூந்தலில் சூடுவதாலேயே அவர்கள் மணம் பெறுகின்றனர். அன்றி கூந்தலுக்கு இயற்கையில் ஏது மணம்?

சிவன் - ஓ உயர்ந்த குலப் பெண்களுக்கு?
நக்கீரர் - அவர்களுக்கும் தான்.

சிவன் - தேவ குலப் பெண்களுக்கு?
நக்கீரர் - நான் தினமும் வணங்கும் சிவனுக்கு அருகே அமர்ந்து காட்சியளிக்கிறாளே. உமையம்மை அவளுக்கும் கூட கூந்தல் செயற்கை மணம் தான்.

சிவன் - சினமுற்ற சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தவராக, நக்கீரா நன்றாப் பார் என்கிறார்.
நக்கீரர் - சற்றும் தன் கொள்கையில் பின்வாங்காதவராக நக்கீரர் எதற்கும் அஞ்சாது. “ நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே“ என்றுரைக்கிறார்.

சிவன் - சினம் அடங்காத சிவன் நக்கீரரை சுட்டெரித்துவிடுகிறார். பின்னர் பாண்டியன் சிவனிடம் வேண்டியதற்கிணங்க நக்கீரரை உயிர்ப்பிக்கிறார்.

நக்கீரர் - நக்கீரரும் பொற்றாமரைக்குளத்திலிருந்து எழுந்து வருகிறார்.

சிவன் ஆடிய திருவிளையாடல்களுள் ஒன்றாக இது அமைகிறது.

குறுந்தொகையில் இரண்டாவது பாடல் இறையனார் இயற்றியதாக உள்ளது. இறையனார் என்ற பெயர் கொண்ட புலவரும் இருந்திருக்கலாம் ஆயினும் இறையனார் என்பவர் இறைவனே என்று நம்பி இப்பாடலையும் திருவிளையாடல் புராணத்தையும் பிற்காலத்தில் வந்தோர் தொடர்புபடுத்திவிட்டனர்.
கொங்கு தேர் வாழ்க்கை


குறுந்தொகைப் பாடல் இதோ,

2. குறிஞ்சி - தலைவன் கூற்று

கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீயறியும் பூவே.
குறுந்தொகை - 02
பாடியவர் - இறையனார்.

இயற்கைப் புணர்ச்சிக்குப் (தலைவியைத் தலைவன் இயல்பாகப் பார்த்துக் காதல் கொள்ளுதல்) பின்னர் தலைவியைச் சந்திக்கும் தலைவன் அவளின் நாணத்தை நீக்குதல் பொருட்டு, மெய்தொட்டுப் பயின்று (தலைவியின் உடல் தொட்டு உரையாடல்) நலம் பாராட்டுதல் ( தலைவியின் அழகு நலத்தைப் பாடுதல்)

தலைவி நாணத்தோடு இருப்பதை உணர்ந்த தலைவன் அவளின் நாணத்தை நீக்க தும்பியைப் பார்த்துப் பேசுகிறான்.
பூக்களில் உள்ள மணத்தை ஆராய்ந்து தேனை உண்ணுகின்ற வாழ்க்கை வாழ்கையினையும், அகத்தே சிறகுகளையும் கொண்ட வண்டே!

எனக்கு இன்பம் தருவதற்காகப் பொய் கூறாமல், நீ உண்மையென அறிந்த ஒன்றை என் கேள்விக்கு விடையாகத் தருவாயாக,

பழகுதற்கு இனிய, மயிலைப் போன்ற சாயலையும், செறிந்த பற்களையும் உடைய இவ்வரிவையின் கூந்தலைப் போன்ற மணம் நீ அறிந்த மலர்களுக்கு உண்டா..?

(பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,தெரிவை, பேரிளம்பெண் ஆகியன பெண்களின் ஏழு பருவங்களாகும்)


இப்பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்..


1. இயற்கைப் புணர்ச்சி ( தலைவன் தலைவியை இயல்பாகப் பார்த்துக் காதல் கொள்ளுதல்.
2. மெய்தொட்டுப் பயிறல் ( தலைவியைத் தொட்டுப் பேசுதல்)
3. நலம் பாராட்டல் (தலைவியின் அழகு நலத்தைப் பாராட்டுதல்) ஆகிய அகத்துறைகள் விளக்கப்படுகின்றன.
4. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டு என்று சொல்கிறது இப்பாடல்.
5. காமம் செப்பாது - என்ற தொடர் விரும்பியதைக் கூறாது என்றுரைக்கிறது. காமம் என்றசொல் விருப்பம் என்ற பொருளில் வந்தமை புலனாகிறது. (கமம்- நிறைவு)
6. இறையனார் எழுதிய இப்பாடலை திருவிளையாடல் புராணத்தோடு தொடர்பு படுத்தியமை அறியமுடிகிறது.

கொங்கு தேர் வாழ்க்கை ஆய்வு.


தமிழுலகம் இப்பாடலை நிறைய விவாதித்து விட்டது. ஆயினும் இவ்வாய்வுகளுள் காலத்தை விஞ்சி நிற்பது, மு.வரதராசன் அவர்களின் “கொங்குதேர் வாழ்க்கை“ என்னும் நூலாகும். இந்நூல் பற்றி இவர் கூறும் போது,
ஆராய்ச்சித் தூண்டு கோல்.

பாட்டின் அமைப்பே ஆராய்ச்சியைத் தூண்டுவதாக உள்ளது. கூந்தலின் மணம் பற்றிய வண்டின் ஆராய்ச்சியைக் கேட்கிறான் காதலன். துணைவியின் கூந்தல் மணம் இயற்கையா? செயற்கையா? என ஆராய்கிறான் பாண்டியன். இப்பாட்டு குற்றமற்றதா? குற்றமுடையதா? என்று ஆராய்கின்றனர் சங்கப்புலவர்களும் நக்கீரனாரும்.
இப்பாட்டு நம் உள்ளத்திலும் ஓர் ஆராய்ச்சியைத் தூண்டுகிறது. இலக்கிய ஆராய்ச்சிக்கு உரிய முறை யாது? எது உயர்ந்த ஆராய்ச்சி என்று ஆராயுமாறு நம்மைத் தூண்டுகிறயது இப்பாட்டு.

என்று உரைக்கிறார்.

அறிவியல் அடிப்படையில் கூந்தல் மணம்.

கூந்தலில் “பீரோமோன்ஸ்“(Pheromones) என்னும் வேதிப்பொருள் உள்ளது. இவை ஆண் பெண் அடையாளம் காட்டவும், பாலின மற்றும் நடத்தைகளைக் கட்டமைப்பு செய்யவும் உதவுகின்றன. இந்த சுரப்பிகளே கூந்தலில் மணம் தோன்றக் காரணமாகின்றன.

இயற்கையில் ஒவ்வொரு உயிர்களும் அழகான கட்டமைப்புப் பெற்றிருக்கின்றன. பெண் மீது ஆணுக்கும், ஆண் மீது பெண்ணுக்கும் கவர்ச்சி ஏற்பட இந்த வேதியியல் கூறுகள் பின்னின்று பணியாற்றுகின்றன. மேற்கண்ட கருத்துக்களின் வழியாகப் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்னும் கருத்துப் புலனாகிறது.


வியாழன், 21 ஜனவரி, 2010

சகுனம் பார்த்த பன்றி!




“ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி
கழுநீர் நீர்ப்பானையில் விழுமாம் துள்ளி“

என்பது நம் முன்னோரின் அனுபவ மொழி. சகுனம் பார்க்கும் வழக்கம் பன்னெடுங்காலமாகவே நம்மிடையே உள்ளது. சகுனம் என்பது நன்மை, தீமைக்கான குறியீடு என்று பொருள் வரையறுத்து வழங்கிவருகின்றனர்.

சகுனங்களுள் பல்லி கத்துவது பல்வேறு மக்களும் நம்பும் குறியீடாக உள்ளது. இன்று, நேற்றல்ல சங்க காலம் முதலாகவே இந்த நம்பிக்கை உள்ளது..

ஊருக்கே குறி சொல்கிறது பல்லி,
என்று நம்புகிறவார்கள் அந்தப் பல்லியே தன்னுடைய எதிர்காலம் தெரியாமல் தான் கழுவு நீர்ப் பானையில் தவறி வீழ்கிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள். அந்தப் பல்லி மனித உடலில் எந்த இடத்தில் விழுந்தாலும் அதற்கென்று பலன் சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.
தன் துணையை அழைக்கத்தான் பல்லி கத்துகிறது என்பது படித்தவருக்குக் கூடப் புரியவில்லை.

பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..

'ஒரு அரசன் காலையில் தன் மாளிகையிலிருந்து கீழே பார்த்தானாம்.
ஒரு ஏழை அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்தானாம். அரசனுக்கு அன்று முழுதும் நடந்த நிகழ்வுகள் சரியில்லையாம். தான் காலையில் முழித்த முகம் சரியில்லை என்ற எண்ணம் வந்ததாம். தன் வீரர்களை அழைத்து தான் காலையில் விழித்த அந்த ஏழை எங்கிருந்தாலும் அழைத்து வாருங்கள் என்ற கட்டளையிட்டானாம்.
ஏழையும் அழைத்துவரப்பட்டான். அரசன் அந்த ஏழைக்கு மரணதண்டனை விதி்த்தானாம். சிரித்தானாம் அந்த ஏழை!
சாவின் விளிம்பில் நிற்பவன் சிரிக்கிறானே என்று குழம்பிய அரசன்,

ஏன் சிரிக்கிறாய்?

என்று கேட்டானாம். அந்த ஏழை சொன்னானாம்.

“என்னைப் பார்த்த தங்களுக்காவது சிறு சிறு துன்பங்கள் தான் நேர்ந்தது.
நான் காலையில் தங்கள் முகத்தில் தான் விழித்தேன். எனக்கோ உயிரே போகப் போகிறது. யார் ராசியில்லாதவர் என்று எண்ணிப்பார்த்தேன் அது தான் சிரித்தேன் என்றானாம்.”


கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்ற. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல.

நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது.

மனிதன் தன்னைப் போலவே தன் நம்பிக்கைகளையும், கடவுள் குறியீடுகளையும் படைத்துக்கொண்டான்.

நற்றிணைப் பாடல் ஒன்று,


தினைக்கதிர்களை உண்ணச் சென்ற காட்டுப்பன்றி தவறான திசையிலிருந்து பல்லி கத்தியதால் தனக்கு துன்பம் நேரும் என்று அஞ்சி பின் திரும்பியாதாக ஒரு குறிப்பு உள்ளது.

பாடல் இதோ,


எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
5 பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
10 இரவின் வரூஉம் அதனினும் கொடிதே-
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!


புலவர் - உக்கிரப் பெருவழுதி

நற்றிணை - 98. (குறிஞ்சி)

பாடல் குறிப்பு.

இரவுக்குறி வந்தொழுகும் தலைவனத் தோழி வரைவு கடாயது ( திருமணத்துக்கு அறிவுறுத்தியது)

களவுக்காலத்தில் இரவுக்குறியில் (இரவுசந்திப்பு) பல தடைகளையும் மீறி வந்து தலைவியைச் சந்தித்து மகிழும் தலைவனிடம் தோழி,

நீ பல அச்சம் நிறைந்த வழிகளில் காவல்களை மீறி வருகிறாய். அதனால் உனக்கு ஏதும் தீங்கு நேருமோ என தலைவி அஞ்சுகிறாள். நீ இரவில் வரும் வழியினும் அதனால் வருந்தும் தலைவியின் இமை மூடாத கண்களும், உன்னைத் தேடிச்சென்று திரும்பி வராத நெஞ்சமும் கொடியன என்கிறாள்.

பாடலின் பொருள்.

முள்ளம் பன்றியின் முள்ளைப் போன்ற பருத்த மயிர்களையுடைய பிடரியும், சிறிய கண்களையும் கொண்டது காட்டுப்பன்றி. அது தினைப் பயிர்களை உண்பதை விரும்பிச் சென்றது. பெரிய இயந்திரம் பொருத்திய பகுதியில் அப்பன்றி செல்லும் போது பல்லியொன்று கத்தியது. பல்லியின் ஒலியைத் தனக்கு எதிர்வரும் துன்பத்தின் குறியீடாக எண்ணிய பன்றி தினை உண்ணாமல்த் திரும்பி மலைப் பகுதியில் தங்கியது.

எம் தந்தைபால் பாதுகாக்கப் படும் காவல் நிறைந்த மாளிகையில் தூங்காத காவலர் சிறிது அயர்ந்த நேரத்தில் வந்து நீ தலைவியைப் பார்த்து மகிழ்கிறாய். உன்னை எண்ணித் தலைவி வருந்துகிறாள். நீ வரும் துன்பம் நிறைந் வழிகளைக் காட்டிலும் தலைவியின் மூடாத இமைகளும், உன்னைத் தேடிச்சென்று திரும்பாத அவளின் நெஞ்சும் கொடியன. என்று தலைவனைப் பார்த்து வரைவு கடாவினாள் தோழி (தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள்)இதனால் தலைவியின் அன்புமனதும் எடுத்துரைக்கப்பட்டது.

இப்பாடலின் உட்பொருள்.

� காட்டுப் பன்றி கூட வழித்துன்பம் கண்டு தன் பயணத்தை தவிர்க்கும் நீயோ எதற்கும் அஞ்சாது வந்து தலைவியைப் பார்க்கிறாய். உனக்கு ஏதும் துன்பம் நேருமோ என்ற அச்சத்தால் தலைவிக்கு தூக்கம் வருவதில்லை. உன்னை எண்ணிச் சென்ற அவளின் மனது அவளிடம் மீண்டும் வராமல் மிகவும் வருந்துகிறாள்.

� பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்

1. பல்லி கத்துவது நன்மை, தீமைக்கான குறியீடு என்ற நம்பிக்கை சங்ககாலத்திலேயே இருந்தது என்பதை அறியமுடிகிறது.
2. இயல்பாகவே விலங்குகள் ஒலிகளை உள்வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் பன்றி, பல்லியின் ஒலியை துன்பத்திற்கான குறியீடாகக் கொண்டது என்ற புலவரின் கற்பனை, அவர்களின் எண்ணத்தின் வெளிப்பாடகக் கொள்ள முடிகிறது.
3. வரைவு கடாவுதல் (திருமணத்திற்குத் தூண்டுதல்) என்றும் அகத்துறை விளக்கப் படுகிறது
4. இரவுக்குறி ( தலைமக்களின் இரவு நேர சந்திப்பு) என்னும் அகத்துறை உணர்த்தப்படுகிறது.
5. வீங்கு பொறி என்பது பெரிய இயந்திரம் என்ற பொருளுடையது. பன்றிகளைப் பிடிக்க பெரிய இயந்திரங்களைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

புதன், 20 ஜனவரி, 2010

மொத்தம் தமிழ் மூன்றல்ல - வைரமுத்து



இயல், இசை, நாடகத்தோடு, அறிவியல்தமிழ் நான்காம் தமிழாக வளர்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. உலகில் பல மொழிகள் இருந்தாலும் அறிவியல் எல்லா மொழிகளையும் இணைக்கிறது. பழந்தமிழர் அறிவியலில் முன்னோடியாக இருந்தனர். இன்றைய தமிழர் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு தமிழில் பெயரிட்டுக்கொள்வதோடு தம் பங்கு முடிந்துவிட்டது என்று எண்ணுவது அவலத்திற்குரிய ஒன்றாகும்.

அறிவியலின் முன்னோடியாக இருந்த தமிழன்..
இன்று அறிவியலின் பின்னோடியாக மாறியதற்கு அடிப்படைக் காரணம் தாய்மொழியான தமிழைப் புறக்கணி்த்ததே ஆகும்.

நான்காம் தமிழான அறிவியல்த் தமிழின் தேவையைக் கவிஞர் வைரமுத்து இவ்வாறு கூறுகிறர்.



'தமிழை வளரவிடாமல் பார்த்துக்கொள்ளத் தமிழர்கள் இரண்டு கத்திகள் வைத்திருக்கிறார்கள்.
தொல்காப்பியத்தோடு தமிழ் முடிந்துவிட்டது அல்லது திருக்குறளோடு தீர்ந்துவிட்டது என்பவர்களின் கையில் துருப்பிடித்த கத்தி.
தமிழில் என்ன இருக்கிறது…. விஞ்ஞானம் மனிதனுக்கு இறக்கைகள் தயாரித்துக்கொண்டிருக்கும் போது இந்த தமிழ் என்னும் தள்ளுவண்டியால் யாது பயன் என்று சலித்துக்கொள்கிறவர்களின் கையில் சாணைபிடித்த் கத்தி.

இந்த இரண்டு கத்திகளுமே பயங்கரமானவை. பறிமுதல் செய்யப்பட வேண்டியவை.
துருப்பிடித்த கத்தியைத் தூக்கி நிற்பவர்களே! உங்களைக் கேட்கிறேன்- தமிழுக்கு ஏன் தாழ்பாள் போடுகிறீர்கள்?
வானத்துக்கு ஏன் வரப்பு கட்டப் பார்க்கிறீர்கள்?
வைர வைடூரியங்கள் வைத்திருக்கும் தமிழின் கருவூலத்தில் ஒரு கம்யூட்டர் வைக்க இடமில்லையா?
‘எல்லாப் பொருளும் இதன் பாலுள“ என்று நாம் திருக்குறளைச் சொல்லியதையே திருத்தியாகவேண்டும்.
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி“ என்ற மேற்கோளை வைத்து அணுவை அப்போதே துளைத்தாகிவிட்டது என்று ஆனந்தங்காணுகிறவர்களே!
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி… என்ற குறளை வைத்து, ஏகே 47 அப்போதே இருந்தது என்று இருமாந்து போகிறவர்களே!
“வலவன் ஏவா வான ஊர்தி“ என்பதை வைத்து ஏவுகளையுகத்தைத் தமிழன் எப்போதோ துவங்கிவிட்டான் என்று இன்பக்களி கொள்கிறவர்களே!
உங்களைக் கேட்கிறேன் -

தொப்பையே கர்ப்பமென்று எண்ணி மகிழ்ந்திருந்தால் நம் வீ்ட்டில் தூளியாட முடியுமா?
தமிழ் பக்தியாளர்களே!
நீங்கள் கோபுரங்களிலேயே குடியிருக்க முடியாது ; இறங்கி வாருங்கள்!
நம்மை விட்டுவிட்டு பூமி விரைவாய் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு விளங்கிவேயில்லை.
உலகத்தின் எல்லாக் கரைகளிலும் அறிவியல் சமுத்திரத்தின் அலைகள் அடிக்க ஆரம்பித்துவிட்டன.
நமது இனமும் அலையில் காலை நனைத்திருக்கிறது் என்று கூட சொல்லமாட்டேன்.
அடித்த அலையின் வேகத்தில் நமது இனமும் கொஞ்சம் நனைந்திருக்கிறது. என்று சொல்லுவேன்.
உலக விஞ்ஞானம் மண்ணைத் துழாவியும் வி்ண்ணை அளாவியும் காலத்தின் தேவைகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறது.
நாம் குறைந்தபட்சம் அந்தப் பொருள்களின் பெயர்களையாவது தமிழில் கண்டுபிடித்தோமைா?
தமிழைக் காவியமொழி என்று சொல்லியே கழித்துவிடாதீர்கள்
தமிழை நீதி மொழி என்று சொல்லியே நிறுத்திவிடாதீர்கள்.
தமிழ் நீட்சி கொண்டது நீங்கள் தான் நீட்டிக்கத் தயாராக இல்லை.
சற்றே தமிழுக்குச் சுதந்திரம் கொடுங்கள்.

தமிழன்னைக்குக் காதில் குண்டலகேசியும், கழுத்தில் சிந்தாமணியும், கையில் வளையாபதியும், இடுப்பில் மணிமேகலையும், பாதத்தில் சிலம்பும் மட்டும் போதாது.

அவள் சிரசில் கம்யூட்டர் மகுடம் ஒன்று கட்டாயம் சூட்டுங்கள்.
துருப்பிடித்த கத்தியைத் தூர வீசுங்கள்.

தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டு ஆங்கிலத்திற்கு வயிற்றை விற்றுவிட்ட அறிவுஜீவிகளே!

நீங்கள் தமிழை வாசிக்கவுமில்லை.தமிழில் யோசிக்கவுமில்லை.
முற்றிய மரத்தில் வைரம் பாய்ந்திருப்பது போல நமது மூத்த மொழியும் வைரம் பாய்ந்திருக்கிறது.

நமக்குத் தாய்மொழியாய்த் தமிழ் அமைந்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான்.
ஆனால், அப்படியொரு வாய்ப்புக் கிட்டியதற்காகவே நாம் வாழ்நாள் முழுவதும் கர்வப்படலாம்.


ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வங்காள மொழியில் காவியம் என்ற அங்கமே இல்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலம் அழுக்குத் தீரக் குளிக்கவே இல்லை.
பல மொழிகளுக்குச் சில நூற்றாண்டுகள் வரை சொந்தமாய் லிபிகள் இல்லை.
ஆனால் உலகத்தில் விரல்விட்டுச் சொல்லக்கூடிய மொழிகளில் குரல்விட்டுச் சொல்லக்கூடியது தமிழ்.
ஊர்ச்சொற்கள் அனைத்திற்கும் வேர்ச்சொற்கள் வைத்திருப்பது தமிழ்.

பக்தி இலக்கியத்திலும் கூட விஞ்ஞானத்திற்குப் பங்களிப்பு செய்யக்கூடியது தமிழ்.
ஆரவாரமில்லாத பழமைதான் நிகழ்காலத்திற்கும் அஸ்திவாரம்.
வளர்வதற்குத் தமிழ் தயாராக இருக்கிறது வளர்ப்பதற்குத் தான் தமிழன் தயாராகயில்லை. இடைக்காலத்தில் தமிழுக்கு நேர்ந்த சுளுக்கு இன்னும் எடுக்கப்படவேயில்லை.
அய்யகோ மாறாத மரபாளர்களே!

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் திருக்குறளையும், தேவாரத்தையும் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டே இருப்பீர்கள்?
இன்னும் எத்தனை நாளைக்குத் தான் “கொல்“ “அரோ“ என்னும் செத்துப்போன அசைச்சொற்களை பெய்த தகவல் பலகைகலாய் அகவல் எழுதுவீர்கள்?
சோதனைக் குழாய்க் குழந்தைக்குமா நீங்கள் பிள்ளைத்தமிழ் பாடுவீர்கள?
நமக்குக் கனவுகாணக் கூடத் தெரியவில்லை.
நம்பிக்கையின் மீது கூட நம்பிக்கையில்லை.

கம்பன் மறைந்தபோது சரஸ்வதி இன்றோடு மங்கல நூல் இழந்து போனாள் என்று ஒரு புலவன் புலம்பியதை நயமாகக் கொள்ளமுடியுமே தவிர நியாயமாகக் கொள்ளமுடியாது.

தமிழ் யாரோடும் முடிந்துவிடுவதில்லை.
மேதைகளும்,ஞானிகளும், யோகிகளும், அறிஞர்களும், கவிஞர்களும், சேமித்துவைத்த தமிழை நாம் செலவு செய்யவேண்டும்.
அந்தச் செலவிலிருந்து புதிய வரவு காணவேண்டும்.
இந்தச் சூளுரையோடு திரும்பிப்பார்க்கிறேன்.
மனசு சுருங்கிப் போகிறது.
அறிவியலுக்கென்று தமிழில் எல்லோரும் அறியும் ஏடுகள் இல்லை.
சில ஏடுகள் தவிர, அறிவியலுக்குப் பக்கங்கள் ஒதுக்கப் பத்திரிக்கைகள் இல்லை.

அழுத்துப் போன கருத்துக்களுக்கும், புழுத்துப்போன விருத்தங்களுக்குமே பரிசு கிடைக்கிறது.

நம்மவர்கள் ஒரு கருத்தை மொழிபெயர்த்து முடிப்பதற்குள் அதன் முடிவே மாறிவிடுகிறது.
பழைய தமிழில் நாரெடுத்து புதிய விஞ்ஞானத்தில் பூத்தொடுத்து இந்த இனத்தின் தோளுக்கு அணிவிக்கிற நாளுக்கு ஏங்குகிறேன்.
நம் வரலாறு வணக்கத்திற்குரியது
உலகப் பண்பாட்டுக்கு அள்ளிக்கொடுத்தோம். உலகுக்கு நாகரீகம் சொல்லிக்கொடுத்தோம்.
அவர்களுக்கு இல்லாததை நாம் கொடுத்தோமே.. நமக்கு இல்லாத நவீன உலகத்தை நாம் இறக்குமதி செய்தோமா?
முத்துக்களையும் மிளகையும் ஏற்றுமதி செய்த இனம் இன்று போதை மாத்திரைகளை இறக்குமதி செய்வதா?

ஒன்று சொல்கிறேன்
ஓடிக்கொண்டே இருக்கிற உலகம் நம்மைத் திரும்பிப்பார்க்காது.
திரும்பிப்பார்த்தாலும் அதற்குத் தெரிகிற தூரத்தில் இப்போது நாம் இல்லை.
இனி ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் விஞ்ஞான விளக்கை ஏற்றிவையுங்கள்.
துருப்பிடித்துப்போன படைப்பிலக்கியங்கள் விஞ்ஞானத்தில் தம்மைத் துலக்கிக்கொள்ளட்டும்.
புலன்களை நீவிவிடுகிற பொழுதுபோக்கிலிருந்து விஞ்ஞான சாதனங்கள் சற்றே விடுபடட்டும்.

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்,

இன்னும் இரண்டு மூன்று கடற்கோள்களுக்குத் தேவையான குப்பைகள் தமிழில் கொட்டிக்கிடக்கின்றன.
ஆனால் இந்த நூற்றாண்டின் தேவைக்குக்கூட அறிவும் உணர்வும் இன்னும் ஆக்கப்படவில்லை.

நம்வாழ்க்கை வாக்கியம் இனி இதுவாகத்தான் இருக்கவேண்டும்

“ஓ விஞ்ஞானமே!
அறிவு கொடு!
ஏ தமிழா!
உணர்வு கொடு!

(இதனால் சகலமானவர்களுக்கும்-வைரமுத்து பக்கம் 29-34)

செவ்வாய், 19 ஜனவரி, 2010

கொற்றவள்ளை





இன்றைய சமூகம் கல்விக்கு முதன்மையளிப்பது போல, சங்க காலத்தமிழர்கள் வீரத்துக்கு முதன்மையளித்தனர். “காதலும், வீரமும்” அவர்களின் இரு கண்களாகத் திகழ்ந்தன. காதல் “களவு, கற்பு“ என்னும் இரு கூறுகளைக் கொண்டது. புறம் “போர், கொடை“ என்னும் இரு கூறுகளைக் கொண்டது. இன்று கல்வி கற்றவர் பெறும் மதிப்பும் புகழும் அன்று போரில் வெற்றி பெற்றவர் பெற்றார். போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வெட்டி வீழ்த்துபவனுக்குப் “பரணி“ பாடினர் “ஈதல் இசைபட வாழ்தலே“ சிறந்த வாழ்க்கை என்று வாழ்ந்தனர் நம் முன்னோர்.

வாழ்வியலுக்கான இலக்கணங்களாக அகமும், புறமும் திகழ்ந்தன. அகத்தை அகத்திணையென்றும், அகத்துறையென்றும் பாகுபாடு செய்தனர். திணையென்பது வாழ்வியல் ஒழுக்கமாகும். துறையென்பது திணையின் உட்கூறு ஆகும்.

புறவாழ்வை இயம்ப புறத்திணைகளும், புறத்துறைகளும் பயன்பட்டன.

“வஞ்சி“ என்னும் புறத்திணையையும் “கொற்றவள்ளை“ என்னும் துறையையும் விளக்குவதாக இன்றைய இடுகை அமைகிறது.

பாடியவர்: பரணர்.
பாடப்பட்டோன் : சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி.


திணை: வஞ்சி. துறை: கொற்ற வள்ளை.

சிறப்பு : சோழரது படைப் பெருக்கமும், இச் சோழனது வெற்றி மேம்பாடும் கூறுதல்.


மன்னன் ஒருவன் மாற்றான் மேல் படையெடுத்துச் செல்லுதலைக் கூறுவது வஞ்சித்திணையாகும். இப்பாடல் இளஞ்சேட் சென்னியின் படையெழுச்சி கூறியதால் வஞ்சித்திணையாகும்.

துறை விளக்கம்.


மன்னனது புகழைக் கூறி பகைவர் நாட்டின் அழிவிற்கு இரங்குதல் கொற்றவள்ளை ஆகும்.
கொற்றம் என்பது வீரத்தையும், புகழையும் குறிக்கும். வள்ளை என்பது ஒருவகைப் பாடலாகும். மன்னனை வாழ்த்திப்பாடுவதால் கொற்றம்+வள்ளை கொற்றவள்ளை ஆனது..

பாடல் இதோ...

'
வாள்,வலந்தர, மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன!
தாள், களங்கொளக், கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன;
தோல்; துவைத்து அம்பின் துனைதோன்றுவ,
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன;
மாவே, எறிபதத்தான் இடங் காட்டக்,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;
களிறே, கதவு எறியாச், சிவந்து, உராஅய்,
நுதி மழுங்கிய வெண் கோட்டான்,
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;
நீயே, அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி,
மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ!
அனையை ஆகன் மாறே,
தாயில் தூவாக் குழவி போல,
ஓவாது கூஉம், நின் உடற்றியோர் நாடே.
'

இப்பாடலில் தாயில்லாத குழந்தை போல நின் பகைவர் நாடு ஓவாது கூவும் என்றதால் கொற்றவள்ளையானது.

பாடல் விளக்கம்.


வாள்கள் வெற்றியைத் தருமாறு குருதிக்கறை படிந்தன. ஆதலால் சிவந்த வானத்தின் வனப்பினைப் போன்றன.

வீரக்கழலை அணிந்த கால்கள் காவல் தொழிலை அறிவிப்பதால் கொல்லும் இயல்புடைய ஆனேற்றின் கொம்புகளைப் போன்றன.

கேடயங்கள் தைத்த அம்புகளால் துளைபெற்றன, அவை நிலையில் தப்பாத இலக்கினைப் போன்றன.

குதிரைகள் எதிரிகளை வீழ்த்தும் காலம் நேர்ந்த போது இடம் வலம் என்று காட்டுவதால் முகம் சேணத்துடன் உராய்ந்து சிவந்த வாயைப் பெற்றன. ஆதலால் அவை விலங்குகளின் கழுத்தைக் கவ்விய புலி போன்றன.

ஆண்யானைகள் மதிற்கதவுகளை முறித்துச் சினமுடன் திரிந்து கூர்முனை மழுங்கிய கொம்புகளை உடையனவாதலால் உயிரை உண்ணும் எமனைப் போன்றனவாயின.



நீ அசையும் தலையாட்டமுடைய விரைந்தியங்கும் குதிரைகளுடன் பொன்னாலான தேர்மீது பொலிவுடன் காட்சியளிக்கிறாய். அதனால் பெரிய கரிய கடலின் நடுவே உயர்ந்து சிவந்து காணப்படும் ஞாயிறு போலத் தோன்றுகிறாய்.

இவ்வாறு விளங்குவதால் உன்னைப் பகைத்தவர் நாடுகள் தாயில்லாததால் உணவுண்ணாமல் அழும் குழந்தை போல் ஓயாது அழுவனவாயின.
என்று சோழனைப் பாடுகிறார் பரணர்.

இப்பாடல் வழியாக…


² வஞ்சி என்னும் புறத்திணை விளக்கம் பெறுகிறது.
² கொற்றவள்ளை என்னம் புறத்துறை உணர்த்தப்படுகிறது.
² சோழனின் வீரமும் அதனால் பகைவர் நாடு படும் துயரும் உணர்த்தப்படுகிறது.
² சங்கத்தமிழர் வீரத்துக்கு எந்த அளவுக்கு வாழ்வில் பங்களித்தனர் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

தமிழ்மணம் விருது(09) நன்றி நவிலுதல்.





தமிழ்மணம் விருதுகள் 2009 தேர்வில், எனது “டமிலன் என்றொரு அடிமை“ என்ற இடுகை முதல்பரிசுக்குரிய இடுகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.



தமிழ் வலைப்பதிவர்களின் எண்ணங்களை உடனுக்குடன் உலகுக்கு எடுத்துச்சொல்லும் ஊடகங்களில் தனித்துவத்துடன் திகழும் இணையம் தமிழ்மணம். தமிழ்மணத்தில் இந்தவார நட்சத்திரம், ஓட்டளித்தல், கருவிப்பட்டை எனப் பல வசதிகள் இருந்தாலும், தமிழ்மணம் என்றவுடன் என் நினைவுக்கு வருவது மறுமொழிதிரட்டிதான்.


இந்தவார நட்சத்திரமாக உலகிற்கு என்னை அடையாளப்படுத்திய தமிழ்மணம் தற்போது 2009 ஆம் ஆண்டு பதிவுகளில் “தமிழ்மொழி, கலாச்சாரம்,வரலாறு, தொல்லியல்“ என்னும் பிரிவில் எனது பதிவை முதல் பரிசுக்குரிய இடுகையாக அடையாளப்படுத்தியுள்ளது. அதற்காக தமிழ்மணம் இணையதளத்தாருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். என்னைப் போல விருது பெற்ற வலைப்பதிவு நண்பர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பழந்தமிழ் இலக்கியத்துக்கு முதன்மைதந்து எழுதிவரும் எனது பதிவு முதல் பரிசு பெற அடிப்படைக் காரணமாக அமைந்தவர்கள் வலைப்பதிவு நண்பர்களாவர்.

இணையம் இந்த உலகத்தையே சிறு கிராமமாக்கியது என்றால் இந்த வலைப்பதிவுலகம் ஒரே வீடு போல ஆக்கிவிட்டது.

கூட்டுக்குடும்பத்தில் வாழ்வது போன்ற உணர்வு இந்த வலைப்பதிவுலகத்தால் எனக்குக் கிடைத்தது. வலைப்பதிவர் சந்திப்புகளில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும் போது இந்த உறவும், உணர்வும் மேலும் வளர்கிறது.

எனது எழுத்துக்களுக்கு ஒவ்வொருமுறை அடையாளம் கிடைக்கும் போதும் நான் நன்றியோடு எண்ணிப்பார்ப்பது வலைப்பதிவு நண்பர்களைத் தான்.

என்னை எழுதத் தூண்டி, கருத்துரையளித்து, ஓட்டளித்து பின்தொடர்ந்து வரும் வலைப்பதிவு நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


_/\_ நன்றி நன்றி நன்றி _/\_

புதன், 13 ஜனவரி, 2010

மண்திணிந்த நிலனும் (போரும் சோறும்!)



இயற்கை ஐந்து கூறுகளால் ஆனது.
அணுக்களால் செறிந்த நிலமும்,
நிலத்தின் கண் ஓங்கியிருக்கும் வானமும்,
வானளவு பொருந்தித் தடவி நிற்கும் காற்று,
காற்றினால் பெருகும் தீ,
தீயுடன் மாறுபட்ட நீர்,
என ஐந்து வகையான பெரிய ஆற்றல்களைக் கொண்டது இயற்கை!

அவ்வியற்கைக்கு ஒப்பான ஆற்றல்களைக் கொண்டவன் சேரன்.

அவன்.
தன்னைப் போற்றாத பகைவர் தம்பிழையை, நிலம் போலப் பொறுத்திருக்கிறான்!

அப்பகைவரை அழிக்க அவன் வானளவு சிந்திக்கிறான்!

பகைவரை அழிக்க அவன் கொண்ட நால்வகைப்படைகளும் காற்றுக்கு ஒப்பான வலிமையுடையன!

பகைவரை அழிக்கும் அவன் திறன் தீயிற்கு ஒப்பானது!

இவ்வாறு இயற்கையின் ஐம்பெரும் கூறுகளின் தன்மைகளையும் தம்மகத்தே கொண்டவனாக விளங்குகிறான் சேரன் என்று புகழ்கிறார் முரஞ்சியூர் முடிநாகராயர்.

மேலும்,

உன் கடலில் பிறந்த ஞாயிறு மீண்டும் நின் மேற்கு கடலில் மூழ்கும்!
புதுவருவாய் நிறைந்த பல நல்ல ஊர்களைக் கொண்ட நாட்டுக்கு அரசனே!
வானத்தை எல்லையாகக் கொண்டவனே!

அசையும் தலையாட்டத்தைக் கொண்ட பாண்டவர் ஐவர்,
அவருடன் பகைத்த கௌரவர் ஆகிய இரு பெரும் படையினரும் போரிட்ட போது அவ்விருபடையினருக்கும் உணவளித்து “பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்“ என்று பெயர்கொண்டவனே!!

பக்க மலையில் சிறிய தலையமைந்த குட்டிகளுடன் பெரிய கண்ணமைந்த மான்கள் தங்கும் மாலை வேளையில் அந்தணர் செய்வதற்கரிய வேள்வியில் ஆவுதியிடுவர். அந்த ஒளியில் மான்கூட்டங்கள் இனிது உறங்கும். இத்தீக்கு அஞ்சிப் புலிகள் வராது ஆகையால் மான்கள் இனிது உறங்கின. சேரனுக்கு அஞ்சிப் பகைவர் வாரார் ஆகையார் மக்கள் இனிது உறங்கினர் என்பது குறிப்பாகும்.

அவ்வாறு துயிலுதல் அமைந்த பொற்சிகரங்களையுடையன இமயமலையும், பொதியமலையும் ஆகும்.

பால் கெட்டுத் தன் இனிய சுவைகுன்றிப் புளிப்பினும்,
கதிரவன் ஒளிகுன்றி இருண்டாலும்,
நால்வேதங்கள் சொல்லிய ஒழுக்கங்கள் மாறுபடினம்,
நல்ல அமைச்சர்களின் சுற்றத்துடன்,
நடுக்கின்றி அமைந்த இமையமும், பொதியமும் போன்றே நீயும் வாழ்வாயாக என்று சேரனை வாழ்த்துகிறார் புலவர்.பாடல் இதோ,


பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
திணை: பாடாண்.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.

மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அணியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ,
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்,
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற், றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

சேரனின் வீரமும் கொடையும் ஆகிய பண்புகள் கூறப்பட்டதால் இது பாடாண் திணையாகியது..
மன்னன் மனம் கொள்ளும் விதமாக புலவர் அருகமைந்து சொல்லியதால் இப்புறத்துறை செவியறிவுறூஉ“ ஆனது.


இப்பாடல் வழி அறிவன…
.

○ ஐம்பெரும் இயற்கையின் ஆற்றல்களும் ஒன்றை ஒன்று சார்ந்தன! ஒன்றை நீங்கி ஒன்று இயங்கும் தன்மையற்றன.

○ ஐம்பெரும் இயற்கையின் ஆற்றல்களைக் கொண்டவனே மனிதன்! ஐம்பெரும் கூறுகளால் ஆனதே மனித உடல்! ஆகையால் ஐம்பெரும் ஆற்றல்களும் அவனுக்குள் உள்ளன. என்னும் பழந்தமிழரின் அறிவியல் அறிவை அறிந்து கொள்ள முடிகிறது.

○ பாண்டவருக்கும், கௌரவருக்கும் அளவற்ற உணவளித்ததால் சேரன் “பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்“ என்ற பெயர் பெற்றான் என்ற தொன்மச் செய்தியையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

செவ்வாய், 12 ஜனவரி, 2010

கணினியில் ஏற்பட்ட பிழைகள்.

எனக்கு மின்னஞ்சலில் வந்த நகைச்சுவைத் தொகுப்பு..



ஐயா,
சமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில்
சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக்
கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.



1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஜிமெயிலில் அக்கவுண்ட் உருவாக்க
முயற்சி செய்தோம். பார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக்
கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப்
செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல்
சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு
கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து
சரிசெய்யுங்கள்.

2. விண்டோஸில் "Start" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் "Stop" பட்டன்
இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.

3. "Run" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில்
அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை "sit" என மாற்றிவிடுங்கள்.
அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.

4. "Recycle Bin" என்பதை "Rescooter Bin" என மாற்றவேண்டும். ஏனென்றால்
என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.

5. "Find" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி
அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் "Find" மெனுவிற்குச் சென்று
தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர்
என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத்
தாருங்கள்.



6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன்
வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog
தரவும், பூனையை விரட்டுவதற்கு.

7. நான் தினமும் "Hearts" விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு
எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள்? சில நேரங்களில்
தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்?



8.என்னுடைய குழந்தை "Microsoft word" கற்று முடித்து விட்டான். நீங்கள்
எப்போது "Microsoft sentence" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள்? என்னுடைய
குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.

9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும்
விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் "My Computer"
ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே?

10. என்னுடைய கம்ப்யூட்டரில் "My pictures" என்று ஒரு போல்டர் உள்ளது.
அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே? எப்பொழுது அதைப்
போடப்போகிறீர்கள்?

11. "Microsoft Office" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி
"Microsoft Home" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்?

வெள்ளி, 8 ஜனவரி, 2010

கொட்டம்பலவனார்.



கண்ணுக்குத் தெரியாத மனம் மனிதனைப் படுத்தும் பாடு கொஞ்சமல்ல.
மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனான் ஆனால் சுயநலம் கொண்ட சில மனிதர்களைப் பார்க்கும் போது இவர்களுக்கெல்லாம் மனம் என்றவொன்று இருக்கிறதா?
என்ற எண்ணம் தோன்றுகிறது.
மனம் இல்லாத இவர்கள் எப்படி மனிதராவர்கள்?
என்றும் தோன்றுகிறது.

மனதைப் பறிகொடுத்துவிட்டேன்!!

என பல சூழல்களில் நாம் சொல்வதுண்டு.

மனது எப்போது பறிபோகக் கூடும் என்பது யாருக்குத் தெரியும்?

பறிபோன மனதைத் திரும்பப் பெறுவது எப்படி?


மழலையின் சிரிப்பிலோ!
மழையின் சாரலிலோ!
காற்றின் உரசலிலே!
மலரின் வாசத்திலோ!
மேகத்தின் வடிவத்திலோ!
காகத்தின் கரைதலிலோ!
மயிலின் ஆடலிலோ!
குயிலின் கூவலிலோ!

இன்னும் இயற்கையின் பற்பல விந்தைகளில் ஏதோ ஒன்றிலோ மனதைப் பறிகொடுத்தால் சில நிமிடங்களில் பறிகொடுத்த மனதைப் பறிமுதல் செய்து கொள்ளலாம். ஆனால் இங்கு ஒரு தலைவன் தன் மனதைப் பறிகொடுத்துவிட்டுத் திரும்பப் பெற இயலாது தவிக்கிறான்.பாடல் இதோ,


“கழைபாடு இரங்கப் பல்லியங் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று
அதவத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக்
5 1கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து
குறக்குறு மாக்கள் தாளங் கொட்டுமக்
குன்றகத் ததுவே 2 கொழுமிளைச் சீறூர்
சீறூ ரோளே நாறுமயிர்¢க் கொடிச்சி
கொடிச்சி கையத் ததுவேபிறர்
10 விடுத்தற் காகாது பிணித்தவென் நெஞ்சே.

நற்றிணை - 95.

கொட்டம்பலவனார்
திணை : குறிஞ்சி.
துறை : இது, தலைமகன் பாங்கற்கு இவ்விடத்து இத்தன்மைத்தென உரைத்தது.



நறுமணம் கமழும் கூந்தலைக் கொண்ட எம் தலைவியிடம் சிக்குண்டது என் மனது. அவளன்றி யாராலும் என் மனதை விடுவிக்க இயலாது என்று தலைவன் தன் நண்பனிடம் கூறுகிறான்.


பக்கத்திலே குழல் ஒலிக்க, பல இசைக்கருவிகள் முழங்க கயிற்றின் மீது கழைக்கூத்தி நடந்தாள். அந்தக் கயிற்றின் மேல் அத்திப்பழம் போல் சிவந்த முகத்தையும், பஞ்சு போன்ற தலையையும் கொண்ட குரங்கு ஆடியது. அதனைக் கண்டு குறவர்குல சிறுவர்கள் பெரிய பாறையின் மீது மூங்கிலின் மீது ஏறி நின்று தாளம் கொட்டுவர்.

அந்தக்குன்றகத்தில் வளம் நிறைந்த காவற்காடு ஒன்று உள்ளது. அங்கு நறுமணம் கமழும் கூந்தலைக் கொண்ட கொடிச்சி (குறிஞ்சி நிலப்பெண்) ஒருத்தி உள்ளாள். அவளிடம் சிக்குண்டது எனது நெஞ்சம். அவளிடம் சிக்கிய எனது நெஞ்சை அவளே மனம் வந்து விடுவித்தால் தான் உண்டு. அன்றி வேறு யாரும் விடுவிக்க இயலாதவாறு சிக்கிக்கொண்டது.

இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில்,

இப்பாடலில்
“தாளங்கொட்டுமென்ற சொல் சிறப்பினாலேயே இவ்வாசிரியர் கொட்டம்பலவனாரெனப் பெயர் பெற்றார்.

உட்பொருள்


ஆடுகள மகளான கூத்தி நடந்த கயிற்றின் மேல் மந்தியின் குட்டி ஏறி ஆடியது என்பது நேர்வழியில் வாழ்ந்துவரும் எனது நெஞ்சத்தில் கொடிச்சி (தலைவி) சென்று தங்குவதனை அறிந்த நீ கைகொட்டிச் சிரிக்கிறாய் (நகை) என்று பாங்கனை (நண்பனை) பார்த்து தலைவன் உரைப்பது உட்பொருளாகவுள்ளது.

மெய்ப்பாடு
- வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - பாங்கனிடத்துரைத்தல்.

இப்பாடலின் வழியாக,

கொட்டம்பலவனார்
என்னும் புலவரின் பெயருக்கான காரணத்தையும், வருத்தம் பற்றி வந்த இளிவரல் என்னும் மெய்பாட்டையும் அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் கயிற்றின் மேல் நின்றாடும் கழைக்கூத்தர்கள் இன்றும் தமிழகத்தின் பல ஊர்களில் இருக்கிறார்கள் என்பதை ஒப்பு நோக்கமுடிகிறது..

அவர்கள் பொழுதுபோக்காக கயிற்றில் ஆடவில்லை!
தம் வயிற்றுப்பாட்டுக்காகத் தான் கயிற்றில் ஆடுகிறார்கள்!

என்ற உண்மையையும் மறுக்கமுடியாது.

வியாழன், 7 ஜனவரி, 2010

காலெறி கடிகையார்




இல்வாழ்க்கைக்குப் பொருள் தேவையானது. பொருளின்றி இவ்வுலகில் வாழமுடியாது. அதே நேரம் இளமையும் நில்லாதது. விரைவில் கடந்து செல்லக்கூடியது.

தலைவனை பொருள் தேடவேண்டும் என்ற எண்ணம் ஒருபுறம் இழுக்கிறது.
இளமை நில்லாதது அதனால் தலைவியை விட்டு நீங்காதே..

என்று ஒரு மனம் சொல்கிறது.

தலைவனுக்கும் நெஞ்சுக்கும் இடையிலான உரையாடல் இதோ..


தலைவன்
- பொருள் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையானது.
அறவழியே வாழவும்.
ஈயென இரப்போருக்கு இல்லை என்று சொல்லாது ஈயவும்,
பொருள் தேவையாகவுள்ளது.


நெஞ்சம்
- பொருள் தேவைதான் நான் இ்ல்லையென்று சொல்லவில்லை. பொருள் மட்டுமே வாழ்க்கையாகிவிடாது. நீசென்றவுடன் அள்ளிவர பொருளெல்லாம் ஒரே இடத்திலேயேவா கிடைக்கப்போகிறது?

தலைவன்
- சரி அதற்காக இங்கேயே இருந்தால் பொருளுக்கு எங்கே செல்வது?

நெஞ்சம்
- இங்கே இல்லாத வளமா?
உன் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களை நீ இங்கேயே பெறமுடியும்.
மேலும் நீ சிந்திக்கவேண்டிய ஒன்றை நீ சிந்திக்கவே இல்லை.

தலைவன்
- என்ன சொல்கிறாய்…?

நெஞ்சம்
- இளமை நில்லாது சென்றுவிடும் என்பதை நீ அறியாயா?
நீ பல நிலங்களையும் கடந்து பொருள் தேடி வரும் போது உன் தலைவி தன் இளமையைத் தொலைத்திருப்பாள். பொருளைக் கூட எப்போது வேண்டுமானாலும் தேடிக் கொள்ளலாம் ஆனால் இளமையைக் காலத்தில் தான் பெறஇயலும்.
உனது இளமையையும் - தலைவியின் இளமையையும் ஒரு சேர நுகராது நீ பொருள் தேடி வந்து என்ன பயன்?

தலைவன்
- ஆம் நீ சொல்வது சிந்திக்கவேண்டிய ஒன்றுதான்.

நெஞ்சம்
- தலைவியின் பல்லிலும், இதழிலும் ஊரிய நீரை சுவைத்த நீ கரும்பின் துண்டங்களிலிருந்து வரும் இனியநீர் போன்றதென்று உணர்ந்திருக்கிறாய். அத்தகைய இனிமையான தலைவியையும் அவள் தம் இளமையையும் நீங்கிச் செல்வது சரிதானா? சிந்தித்துப்பார்! உன்னை நீங்கித் தலைவி உயிர் வாழ்வாள் என நினைக்கிறாயா?

தலைவன்
- நீ சொல்வது சரிதான்.
நான் சென்றால் தலைவி உயிர்தாங்கமாட்டாள். அதனால் நான் செல்லவிருந்த பயனத்தை நிறுத்திக்கொள்கிறேன்..

நெஞ்சம்
- ஆம் நல்ல முடிவு. நீ ஈட்ட எண்ணிய பொருளை நீ இங்கேயே பெற்று அறவழியே இன்பவாழ்வு நடத்தலாம்.

என்பது பாடலின் உட்பொருளாகும். இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில தலைவியின் வால்எயிறு ஊரிய நீரை கரும்பின் இனிய சுவையோடு ஒப்பிட்டு நோக்கி “ காலெறி கடிகை“ என்ற கூறியதால் இப்புலவர் காலெறி கடிகையார் என்று பெயர் பெற்றார்.

பாடல் இதோ..



இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும்
உறன்முறை மரபிற் கூற்றத்
தறனில் கோணற் கறிந்திசி னோரே.

குறுந்தொகை -267.
பாலை - தலைவன் கூற்று
காலெறி கடிகையார்.



(அகத்துறை -மேல் நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும்“ என்னும் நெஞ்சிற்கு நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி செலவு அழுங்கியது.)

செல்வத்தால் கிடைக்கும் அறமும், இன்பமும் தலைவியுடன் முறையாக இல்லறம் நிகழ்த்துதலால் பெறாலாம் எனத் தலைவன் கருதினான். அறனும் இன்பமும் பெறுவதற்குரிய பொருளைத் தேடப் புகுந்து அறமும் இன்பமும் இழப்பதற்கு நான் தயாராக இல்லை. அதனால் எனது பயனத்தை தவிர்கிறேன். என முடிவு செய்கிறான் தலைவன். பயனத்தைத் தவிர்த்தல் செலவழுங்குதல் என்னும் அகத்துறையாகும்.

இப்பாடலின் வழியாக “காலெறி கடிகையார்“ என்ற புலவரின் பெயருக்கான காரணத்தையும். செலவழுங்குதல் என்னும் அகத்துறைக்கான விளக்கத்தையும் அறியமுடிகிறது.

செவ்வாய், 5 ஜனவரி, 2010

வலவன் ஏவா வானஊர்தி. (2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆளில்லா வானூர்தி)



பறவையைக் கண்டான் விமானம் படைத்தான். அந்த விமானம் படைத்தவன் யார் என்றால் இன்றைய குழந்தைகள் கூட கண்ணை மூடிக் கொண்டு “ரைட் சகோதரர்கள்“ என்று கூறுவார்கள்.

தமிழ் நூல்களில் வானூர்தி பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன.

“அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிப்பறந்தான் !
இராவணன் சீதையைத் தூக்கிப் பறந்தான்!
கண்ணகியை கோவலன் வானூர்தியில் அழைத்துச் சென்றான்..“


இன்னும் இலக்கியங்களில் விமானம் குறித்த குறிப்புகள் நிறையவே உள்ளன..

சான்றாக..


வலவன் ஏவா வானஊர்தி“

என்ற தொடர் புறாநானூற்றில் இடம்பெறுகிறது.

இன்று விமானத்தை ஓட்டும் விமானியை அன்று “வலவன்“ என்று நம் தமிழர் அழைத்தனர்.

“வல்“ என்பது விரைவு என்பதைக் குறிக்கும் சொல்லாகும்..
விரைவாக ஓட்டுபவன் என்றபொருளில் வல்லவன் என்பதே வலவன் என்றானது..

வலவன் ஏவா வான ஊர்தி என்பது - ஆளில்லாத விமானத்தையே குறிப்பதாக உள்ளது.

வாழ்வில் நல்வினை மட்டும் செய்தால் சொர்க்கம் என்ற வீடுபேறு கிடைக்கும். அவ்வாறு கிடைத்தவர்கள் “ வலவன் இன்றித் தானே இயங்கும் வான ஊர்தியைப் பெறுவர்“ என்று சங்ககாலத்தமிழரிடம் நம்பிக்கை இருந்தது.


சொர்க்கம் இருப்பது உண்மையா? பொய்யா?

என்ற விவாதம் முடிவடையாதது..
என்றென்றும் தொடர்ந்து வருவது.

கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சொர்கம் உண்டு!
நரகம் உண்டு என்று நம்புவார்கள்..

கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள்..
சொர்க்கம் என்பதும் நரகம் என்பது உண்டு..
ஆனால் அது எங்கோ இல்லை!

நாம் வாழும் நிகழ்கால வாழ்க்கையிலேயே அது இருக்கிறது என்பதை நம்புவார்கள்..

ஆம் நாம் மகிழ்ச்சியாக வாழ்ந்தால், நம்மைச்சுற்றி வாழ்வோர் மகிழ்வுடனிருந்தால், நாம் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என்று பொருள்..

நாமும் நம்மைச் சுற்றி வாழ்வோரும் துன்பத்துடனிருந்தால் நாம் வாழ்வது நரகமே!!



பழந்தமிழரின் அறிவியல் சிந்தனை தோய்ந்த புறப்பாடல் இதோ…


சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,
நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன,
வேற்றுமை ‘இல்லா விழுத்திணைப் பிறந்து,
வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே:
‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
“வலவன் ஏவா வான ஊர்தி“
எய்துப என்ப, தம் செய்வினை முடித்து’ எனக்
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியா தோரையும், அறியக் காட்டித்,
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து,
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள வல்லை ஆகுமதி; அருளிலர்
கொடா அமை வல்லர் ஆகுக;
கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே.


புறநானூறு -27
27. புலவர் பாடும் புகழ்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. திணை: பொதுவியல்.
துறை: முதுமொழிக் காஞ்சி.



பொதுவியலின் ஒரு துறை முதுமொழிக்காஞ்சி. இது அறம் பொருள் இன்பம் என்பவற்றின் தன்மைக் குற்றமில்லாது அறிவுடையோர் அரசனுக்குக் கூறுதலாலும் “ புலவர்பாடும் புகழுடையார் வானவூர்தி எய்துவர் எனப் புகழ்ச்சி செல்வத்தின் பயன் கூறியதாலும் முதுமொழிக்காஞ்சியானது.


சேற்றில் வளரும் தாமரையின் பூத்த ஒளியுடைய நிறமும் நூற்றுக்கணக்கான இதழ்களுடைய தாமரை மலரின் குவியலைக் கண்டது போல சிறந்த குலத்தில் பிறந்து கவலையின்றி அரசர் வீற்றிருப்பர். அவர்களை மனதால் கருதும் போது அவர்களுள் புகழும், அதனால் பாடப்பொறும் பாட்டும் உடையராய் இருப்பவர் சிலரே.

தாமரையின் இலையைப் போல பயன்படாது மாயந்தோர் பலரே!

“புலவரால் பாடப் பெறும் புகழுடையோர், வானில் வலனால் செலுத்தப்படாது இயங்கும் விமானத்தினைத் தாம் செய்யும் நல்ல செயல்களை முடித்தபின் அடைவர் என்பர் அறிவுடையோர்.“ எனச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

என்னுடைய இறைவனே, சேட்சென்னியே நலங்கிள்ளியே,

வளர்கின்ற ஒன்று குன்றுவதையும்!
குன்றிப்போனது வளர்வதையும்!

பிறந்தது இறப்பதையும்!
இறந்தது பிறப்பதையும்!

உண்மை எனக் கல்லாதவரும் அறியுமாறு செய்யும் திங்களாகிய தெய்வம்.
அது இயங்கும் உலகத்தில் ஒன்றனைச் செய்ய வல்லவராயினும் செய்ய இயலாதவராயினும் வறுமையால் வருந்தி வந்தோரின் வயிற்றின் பக்கங்களைக் கருதி அவர்களுக்கு அருளுடன் வழங்க வல்லவனாகுக.
கெடாத வலிமையுடன் உனக்குப் பகைவரானவர்கள் அருளின்றிக் கொடாது இருத்தலில் வல்லவராகட்டும்.

தாமரை மலர் அரசர் கூட்டத்திற்கு உவமையானது. மக்களுள் மண் பயனுற வாழ்வோரே மக்களாகக் கருதப்படுவர்.
எஞ்சியோர் மாக்களாகவே(விலங்கு) கருதப்படுவர்.

உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் சோழன் நலங்கிள்ளியை இவ்வாறு பாடுகிறார்..



� இப்பாடலில் வலவன் ஏவா வான ஊர்த்தி என்ற பழந்தமிழரின் அறிவியல் சிந்தனை ஆளில்லாத விமான ஊர்தியைக் குறிப்பதாக உள்ளமை வியப்பளிப்பதாகவுள்ளது.


� வளர்கின்ற ஒன்று குன்றுவதையும்!
குன்றிப்போனது வளர்வதையும்!
பிறந்தது இறப்பதையும்!
இறந்தது பிறப்பதையும்!


என்ற சிந்தனை இன்றைய மருத்துவவியலோடு ஒப்பு நோக்கத்தக்கதாகவுள்ளது.

� பழந்தமிழரின் அறிவியல் சிந்தனையை உற்று நோக்கும் போது..
2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்ட அறிவியல்ச் சிந்தனைகள் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை?
என்ற வினா எழுவது இயற்கையே..

� அறிவியல் தமிழுக்குத் தொடர்பில்லாதது!
� அறிவியலை ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளின் வாயிலாகத் தான் படிக்கமுடியும் என்ற தமிழனின் சிந்தனையும் நம் அறிவியல்சிந்தனைகள் உலகறியப்படாமல், நடைமுறைப்படுத்தப்படாமல் போனதற்கு ஒருகாரணமாக
அமைகிறது.

� இன்றைய சூழலில் எல்லா அறிவியல்த் துறைகளையும் தமிழில் படிக்கிறார்கள். அதனால் அவர்களின் சிந்தனை மேலும் வலுப்படும். தம் கருத்தை முழுமையாக ஆழமாகச் சொல்லமுடியும்.

அறிவுக்கு மொழி தடையல்ல!
மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை!!

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்.




ங்க காலத்தமிழர் கடல் வணிகத்தில் புகழ்பெற்றவர்களாகத் திகழ்ந்தனர்.சங்க இலக்கியங்கள் இதற்கு முதல் சான்றாதரங்களாகின்றன. தாலமி, பிளினி போன்ற வெளிநாட்டு யாத்ரிகர்களின் குறிப்புகளும் இதனை மெய்ப்பிக்கின்றன.

மலேசியாவில் கிடைக்கும் தமிழ்க்கல்வெட்டு,
தாய்லாந்தில் கிடைக்கும் சங்ககால நாணயம்,
கம்போடியா கல்வெட்டில் கிடைக்கும் தமிழ்மன்னனின் பெயர்,
சங்க இலக்கியத்தில் கிடைக்கும் யவனர் பற்றிய குறிப்பு ஆகியனவும்

சங்ககாலத்தமிழர் கடல்வாணிகத்தில் புகழ்பெற்றிருந்தமைக்குத் தக்க சான்றுகளாகவுள்ளன..

பெரிய கப்பல் என்றதும் பலருக்கு டைட்டானிக் கப்பல் தான் நினைவுக்கு வரும். இன்று பெரிய பெரிய கப்பல்களை அதிநவீன வசதிகளுடன் பயன்படுத்தி வருகிறோம்.

சங்ககாலத்தமிழர் பயன்படுத்திய கப்பல்கள் பற்றிய குறிப்பை சங்கப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.

உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம்“ என்ற குறிப்பு சங்கப்பாடல் வழி கிடைக்கிறது.

உலகமே கூடிக் கிளர்ந்து சென்றது போன்ற பெரிய கப்பல் என்ற இந்தக்குறிப்பு..

சங்க காலமக்களின் கப்பல் கட்டும் அறிவு, கடல்வணிகத்தில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் ஆகியவற்றை உணர்த்துவதாகவுள்ளது.

உலகையே ஒரு கப்பலில் அழைத்துச் செல்ல இயலும் என்ற சிந்தனை அவர்களுக்கு இருந்தமை இதனால் புலனாகிறது.

பாடல் இதோ..

உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி,
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட,
5 கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான்
மாட ஔ்எரி மருங்கு அறிந்து ஒய்ய,
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே, அழி படர் அகல,
வருவர்மன்னால் தோழி! தண் பணைப்
10 பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்,
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெரு வளம் மலர அல்லி தீண்டி,
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க,
15 அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
கடி மனை மாடத்துக் கங்குல் வீச,
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய,
நிரை வளை ஊருந் தோள்' என,
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.


அகநானூறு -255. பாலை
மதுரை மருதன் இளநாகனார்


(பிரிவிடை வேறுபட்ட தலைமகள் ஆற்றாமை மீதூரத் தோழிக்குச் சொல்லியது.)

பொருள் ஈட்டும் நோக்கில் தலைவன் தலைவியைப் பிரிந்து கடல் கடந்து சென்றான். சென்றவன் தான் வருவதாகக் குறித்துச் சென்ற பருவம் வந்தும் தான் வரவில்லை. தலைவி அவன் பிரிவைத் தாங்க இயலாதவளாக, எனது நிலையைத் தலைவனிடம் சென்று கூறுவோரை நான் பெறவில்லையே என வருந்தி தோழியிடம் கூறினாள்..

பாடலின் பொருள்…

உலகமே கிளர்ந்து எழுந்தது போன்ற அச்சத்தை ஏற்படுத்தும் நாவாயானது, வேகமாக வீசும் இயல்புடைய காற்றானது அசைத்துச் செலுத்த, இரவு பகலாக ஓரிடத்தும் தங்காமல் புலால் நாற்றம் வீசும் அலைகளையுடைய பெரிய கடல்நீர்ப்பரப்பைக் கிழித்துச் சென்றது.

அந்த நாவாயை ஓட்டிச் சென்ற தலைவர், உயர்ந்த இடத்தில் எறியும் கலங்கரை விளக்குகளால் செல்லும் இடமறிந்து பொருளீட்டும் எண்ணத்தால் என்னை நீங்கிச் சென்றார்.

அறநினைவின்றி நம்மை வருத்தும் அன்பில்லாத வாடைக் காற்றோ,
நீர் வளமிக்க குளிர்ச்சி பொருந்திய மருதநிலத்தில் உள்ள நம் ஊரிடத்தில் கருவிளை மலரோடு மாறுகொண்டு எழுந்த பகன்றையின் வெண்ணிற மலர்களின் இதழ்களை அளைத்துச் சென்றது.

பலாக்காய் போன்ற புறப்பகுதியையுடைய முதிர்ந்த பழத்தைக் கொண்ட பாகற்கொடிகள், முற்றிய இலைகளையுடைய கூதாளியோடு கிடந்து அசையுமாறு செய்தது.

காவல் நிறைந்த வீட்டின் மாடத்தும் இரவெல்லாம் புகுந்து வீசியது.
திருத்தமாக அணியப்பெற்ற எனது அணிகலன்களும் நழுவி வீழ்ந்தன.
தோளும், வளையும் நெகிழ்ந்தன.

எனது இந்த நிலையைத் தலைவரிடம் தூதாகச் சென்று சொல்வோர் இருந்தால் தலைவர் விரைவில் வருவார்.

அப்படி தூது செல்வோர் யாரையும் நான் பெறவில்லையே..!
என்ன செய்வது?

என்று தலைவி தோழியிடம் புலம்புகிறாள்.


இப்பாடலின் நோக்கம் தலைவியின் அகவாழ்வியலை உணர்த்துவதே என்றாலும்..
அக்கால மக்கள் பயன்படுத்திய கப்பல் பற்றிய குறிப்பையும் அறிந்துகொள்ளமுடிகிறது.

உலகு கிளர்நதன்ன உருகெழு வங்கம் இருந்ததா?
என்று சிந்திப்பதை விட பெரிய நாவாய் வைத்திருந்தனர் என்பதையும்,
அந்த நாவாய் உலகம் கிளர்ந்தது போல பெரியதாக இருந்தது என்பதையும் இப்பாடல் வழி அறிமுடிகிறது.


இவர்கள் இவ்வளவு பெரிய கப்பல் செய்ய எங்கு சென்று படித்தார்கள்?

எல்லாம் அனுபவம் தான்..!

சனி, 2 ஜனவரி, 2010

சிறுபிள்ளையும் பெருங்களிறும்!

அதியமான் சங்ககாலத்தில் வாழ்ந்த அரசர்களுள் குறிப்பிடத்தக்கவன்.
அதியனுக்கும் ஔவைக்குமான நட்பை தமிழுலகம் நன்கறியும்.
அதியன் தனக்குக் கிடைத்த அரிய நெல்லியை தான் உண்ணாமல் ஔவைக்குக் கொடுத்தான்..
தான் உண்டால் நிலப்பரப்பு இன்னும் அதிகரிக்கும்..
அதனால் யாது பயன்?
ஔவை உண்டால் தமிழ் வளரும் என்பது அவனது எண்ணமாக இருந்தது.
அதியனின் வாழ்ந்திருந்தால் கூட அவனுக்கு இந்த அளவுக்குப் புகழ்கிடைத்திருக்குமா என்பது ஐயமே!
அதியனின் ஒவ்வொரு பண்பு நலனையும் ஔவையார் தம் பாட்டில் அழகாகப் பதிவு செய்து வைத்துள்ளார்.

இதோ ஒரு பாடல்..



ஊரில் உள்ள சிறுவர்கள் தன் வெண்மையான தந்தத்தைக் கழுவுவதால் நீர்த்துறையில் பெரிய களிறு(யானை) படிந்துகிடக்கும்.
பெருமானே!
அவ்வாறே எங்களுக்கும் எளிமையுடையவனாக நீ விளங்குகிறாய்!




மாறாக,

அந்தக் களிறு மதம் கொண்டால் மிகவும் அச்சமூட்டுவதாகவும், தம் அருகே யாரும் செல்ல இயலாததாகவும் விளங்கும்
அவ்வாறே நீ உன் பகைவருக்கு இன்னாதவனாக விளங்குகிறாய்!






யானையின் எளிமையும், வலிமையும் அதியனின் பண்புக்கு உவமையானது.

யானை எளிமையாய் இருத்தல் அதியனின் அருள் உள்ளத்தையும்.
மதம் கொள்ளுதல் எதிரிகளுக்கு அஞ்சத்தக்கவனாக அமையும் வீரத்துக்கும் சான்றாயிற்று.

இருவேறு தன்மைகளையும் ஒன்றாகப்பெற்றவன் அதியன்,

யாரிடம் அன்புகாட்டவேண்டும்?
யாரிடம் வலிமையைக் காட்டவேண்டும்?
என்பதை நன்கு அறிந்தவன் என்று அதியனின் புகழை உரைக்கிறார் ஒளவையார்.


பாடல் இதோ..


ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே.


புறநானூறு 94.
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : வாகை. துறை: அரச வாகை.


ஒவ்வொருவருக்குள்ளும் அன்பும் இருக்கும். வலிமையும் இருக்கும்.
அன்பை எங்கே வெளிப்படுத்த வேண்டும்?
வலிமையை எங்கே வெளிப்படுத்த வேண்டும்?

என்பதில் தான் இங்கு சிலருக்குக் குழப்பம் வருகிறது.


(படங்கள்- ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு மலர். நன்றி)