வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 29 பிப்ரவரி, 2012

ரூபாய் - 86400 (ஒருநாள் செலவு)

நான் பிறந்தநாள் முதல் இன்றுவரை ஒவ்வொரு நாளும் ரூபாய் 86400 ஐ செலவு செய்துவருகிறேன்.
என்னங்க நம்பமுடியலயா?
இருந்தாலும் இதுதாங்க உண்மை.
நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவ்வளவு பணம் தினமும் எனக்குக் கிடைத்துவிடுகிறது.
சிறுவயதிலெல்லாம் இவ்வளவு பணத்தை என்ன செய்வது எப்படிச் செலவு செய்வது என்றே தெரியாமல் பயனற்ற செலவுகளைச் செய்துவந்தேன்.
அப்போது இந்தத் தொகை பெரிதாகத்தான் தெரிந்தது.
இவ்வளவு பணத்தையும் எப்படிச் செலவு செய்வது என்றெல்லாம் திகைத்திருந்த காலங்கள் உண்டு.

இப்போதெல்லாம் இவ்வளவு பணமும் போதவில்லை என்றே தோன்றுகிறது.
பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டதா? 
இல்லை
என் தேவை அதிகரித்துவிட்டதா?

என்றே தெரியவில்லை..
உணவு, உடை, உறைவிடம் என அடிப்படைத்தேவைகளுக்காக முதலில் செலவு செய்தேன்.
உறவுகளுக்காக, நட்புக்காக, பொழுதுபோக்கிற்காக என என் பட்டியில் காலந்தோறும் என்னோடு சேர்ந்து வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது.
இப்போதெல்லாம் இந்தப் பணத்தை நான் செலவு செய்கிறேனா?
இல்லை
இந்தப் பணம் தான் என் வாழ்க்கையைச் செலவு செய்கிறதா? 

என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது.

இவ்வளவு நேரம் நான் சொன்ன பணம் என்பது...
                                                                   24 மணிநேரம் 
ஒருமணிநேரத்துக்கு 60 நிமிடங்கள் 
ஒரு நிமிடத்துக்கு 60 மணித்துளிகள் 
24 X 60 X 60 = 86400










என்னங்க..
இப்ப சொல்லுங்க ஒவ்வொரு நாளும் நீங்க எவ்வளவு செலவு செய்கிறீர்கள்..?

                                                                                                          தொடர்புடைய இடுகை

ஏழாம் அறிவு உள்ளவரா நீங்கள்?

திங்கள், 27 பிப்ரவரி, 2012

அதே சிரிப்பூ..?



இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி நாம் நம்மைவிட நம்மைச் சுற்றியிருப்பவர்களையே அதிகம் சிந்தித்துப்பார்ப்போம். ஆம். அவர்கள் நம்மைப் பார்ப்பார்களே என்றே நினைத்துப்பார்ப்போம்.

கீழே விழுந்த ஒருவன் தன் வலியைவிட 
தன்னை யாரும் 
பார்த்துவிட்டார்களோ?
சிரித்துவிட்டார்களோ? 
என்பதிலேயே விழிப்புடனிருப்பான். அதுபோல,

நம்மை யாரும் பார்க்காவிட்டாலும்
எல்லோரும் நம்மை மட்டுமே பார்க்கிறார்கள் என்பது போன்ற மனவுணர்வு சில நேரங்களில் நமக்கு வருவதுண்டு.

அந்த நேரத்தில் வெட்கம் வந்து நம்மைக் கவ்விக்கொள்ளும். 
தலை கவிழ்ந்து மண்ணைத் தவிர யாரையும் பார்க்கத் தோன்றாது.


இங்கே ஒரு பெண்ணுக்கு இப்படித்தான் நடந்துவிட்டது.


தலைவன் பிரியும் முன்னர் முல்லையின் அரும்புகளைக் காட்டி இதே போல அடுத்த கார்காலத்தில் முல்லை மலரும்போது நான் வந்துவிடுவேன் என்று கூறிச்சென்றான். கார்காலம் வந்தும் அவன் வரவில்லை. இவ்வேளையில் இயல்பாக மலர்ந்த முல்லையைக் காண்கிறாள் தலைவி. இவளுக்கு முல்லை தன் தலைவனின் உயர்வு அவ்வளவுதானா? என்று எள்ளி நகையாடுவதாகவே தோன்றுகிறது.

பாடல் இதோ.

-ஒக்கூர் மாசாத்தியார்


குறுந்தொகை -126. முல்லை - தலைவி கூற்று
பருவம் கண்டு அழிந்த தலைமகள் (தலைவி) தோழிக்குச் சொல்லியது.

இதே போன்ற இன்னொரு பாடல்..

மேற்கண்ட பாடலில் தலைவியைக் கண்டு சிரித்த முல்லை இங்கு தலைவனைக் கண்டு சிரிக்கிறது..

ஏன் என்று பாருங்கள்..

இயல்பாகவே மாலையில் மலர்ந்த முல்லை மலரைக் கண்ட தலைவனின் மனது முல்லை மலரோடு பேச ஆரம்பித்துவிடுகிறது..

தலைவன் - ஏ முல்லை மலரே தலைவியை நீங்கித் தனித்திருக்கும் என்னைக் கண்டு இரக்கம்  கொள்ளவேண்டிய நீ என்னைப் பார்த்து சிரிக்கிறாயே இது உனக்கே தகுமா?

முல்லை - இப்போது நீ தலைவியுடன்  சேர்ந்தல்லவா இருக்கவேண்டும்.
அவளைத் தனிமையில் தவிக்கவிட்டு இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்..

என்று கேட்டுவிட்டு கலகலவென முல்லை சிரிக்கும் ஒலி தலைவனின் காதில் கேட்கிறது.




கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்  
    
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை  
    
முல்லை வாழியோ முல்லை நீநின்  
    
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை  

நகுவை போலக் காட்டல்  
    
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.  
என்பது வினைமுற்றி மீளும் தலைமகன் முல்லைக்குரைப்பானாய் உரைத்தது.

குறுந்தொகை 162

கருவூர்ப் பவுத்திரன்.
(முல்லையே,  நீ வாழ் வாயாக!
மேகத்தாற் பாதுகாக்கப் பெற்ற, நீரையுடைய அகன்ற முல்லை நிலத்தின்கண்,
தாம் சென்ற பணி முடிந்து பலரும் தம் வீட்டிற்குச் செல்லும் ஒளியிழந்த மாலைக் காலத்தில்,
நீ உனது சிறிய வெள்ளிய அரும்புகளைக் காட்டிச் சிரித்தாய்!
தலைவியரைப் பிரிந்து என்போல்  தனித்திருப்போரை  
எள்ளி நகைப்பது போலவே உன் செயல் இருக்கிறது.
இது உனக்குத் தகுமோ?)

இலக்கிய நயம்

 முல்லை மலர்வது இயல்பான ஒன்றுதான் என்றாலும் இங்கு தலைவிக்கும், தலைவனுக்கும் அது தன்னைப் பார்த்துதான் சிரிக்கிறது என்றே தோன்றுகிறது. 
இருவரின் குற்றவுணர்வுமே இதற்கு அடிப்படையாக அமைகின்றன. 
தம் அகவாழ்வை இயற்கையோடு அழகாகப் இயைபுபடுத்திப் பார்க்கும் சங்கத்தமிழரின் வாழ்வு இன்றைய தலைமுறையினர் எண்ணிப்பார்க்க வேண்டிய இனிய நினைவுகளாகும்.

தொடர்புடைய இடுகைகள்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

காற்றுக்கு இத்தனை பெயர்களா?

தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று மென்காற்று
6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று இளந்தென்றல்
12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று தென்றல்
20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புழுதிக்காற்று
30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று ஆடிக்காற்று
100கி.மீ வேகத்தில் வீசும் காற்று கடுங்காற்று
101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புயற்காற்று
120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்றுசூறாவளிக் காற்று

தொடர்புடைய இடுகைகள்

திங்கள், 20 பிப்ரவரி, 2012

உன் மாட்டை கொஞ்சம் பார்த்துக்கடா..



வண்ணக்கிளி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பலருக் கேட்டிருப்பீர்கள்.
 இயற்றியவர்: கவிஞர் மருதகாசி அவர்கள் ஆவார்.இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வரும் இன்னொரு பாடலை அடையாளம் காட்டவே இவ்விடுகை.













 


காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க 
ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க 
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க 
ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
கோட்டைச் சுவர் போல வேலியிருக்கு 

குத்துங்கருவேல முள்ளுமிருக்கு 
கோட்டைச் சுவர் போல வேலியிருக்கு 
குத்துங்கருவேல முள்ளுமிருக்கு 
தோட்டக்காரன் கையில் கம்புமிருக்கு 
தோட்டக்காரன் கையில் கம்புமிருக்கு 
சுத்தி சுழற்றவே தெம்புமிருக்கு
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா

மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க ஆட்டம் போட்டி மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
போகாத பாதையிலே போகக்கூடாது - சும்மா

புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது போகாத பாதையிலே போகக்கூடாது - சும்மா புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது மாடாகவே.... மாடாகவே மனுஷன் மாறக்கூடாது மத்தவங்க பொருளு மேல ஆசை வைக்கக்கூடாது
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க 
ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
 மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 

ஒப்பீட்டு நோக்கவேண்டிய பாடல்... 


பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே
சுமாடுகளை வளர்ப்போர் அந்த மாடுகளை முறைப்படி பாதுகாக்கவேண்டும்.
அவ்வாறு பாதுகாக்காவிட்டால் என்னவாகும்?
அந்த  மாடுகளின் பால் அதன் உரிமையாளருக்குப் பயன்படாமல் போய்விடும்அந்தப் பசுக்களை முறையானபடி கட்டி மேய்த்து அவற்றின் வெறியையும் அடக்கினால் அந்தப் பசுக்களினால் கிடைக்கும் பயன் முழுவதையும் உரிமையாளர் பெறலாம்..

இங்கு இந்த ஐந்து பசுக்களைப் போலத்தான் நம் ஐந்து புலன்களும்.
                                                இதனை நாம் உணர்வதில்லை!
அதனால் இப்புலன்களின் பயனையும் 
நாம் முழுமையாக உணரவில்லை..
எதை எதையோ..
யார் யாரையோ..
எதற்காகவோ..
பார்த்துக்கொண்டிருக்கிறோம்..

இனி நம் புலன்களையும் கொஞ்சம் பார்த்துக்கொள்வோமா...

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

முறைமாமன் சீரு.


தமிழ் மரபுகளையெல்லாம் மறந்துவிட்ட இன்றைய தலைமுறையினரிடையேயும் மரபுகளை மறக்காத சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதோ தமிழ் மண்வாசனையோடு ஒருகவிதை..
இதை எழுதியவர் என் மாணவர் திரு.ச.கேசவன் என்பதைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்





முக்கனிகள் சேர்த்தெடுத்து
முறைமாமாமன் சீரெடுத்து
முச்சந்தியில் மக்களெல்லாம்
மூக்கின் மேல் விரலைவைக்க
மேளம் கொட்டி வாராண்டி!

பச்ச ஓலையில
உன்னைப் பூட்டப் போறாண்டி!

பித்தளையில் பாத்திரங்கள்
செப்புதனில் நீர்க்குடங்கள்
தங்கத்துல நகைசெஞ்சு
வாராண்டி!

உன்னத் தங்கத்துல செஞ்ச
வைரமுன்னு சொல்வாண்டி!

பலவனத்துப் பூவினங்கள்
ஊர்மயங்கும் பல நிறங்கள்
மாலையாகக் கோர்த்தெடுத்து
வாரண்டி!

அந்த மாலையில
உன்னக் கட்டப் போறாண்டி!

மொட்டு ஒன்னு மலர்ந்திருச்சி
நாணம் வந்து செவந்திடுச்சி
வண்டு போல மாமன் அவன் வாராண்டி!

உந்தன் நாணத்தை
வெல பேசப் போறாண்டி!

ஊரடக்கிப் பேசியவ
ஊரச்சுத்தித் திரிஞ்சபுள்ள
வாயடச்சி நிற்கிறத
பாருங்கடி!

இப்ப வட்டியும்
முதலுமா வாங்கிக்கடி!

மாமன் அவன் வாங்கிவந்த
பட்டுடுத்தி நடக்கயிலே
ஊருசனம் கண்ணுவெக்கும்
வாருங்கடி..
வந்து இவளுக்குக் கருநிலா
பொட்டெடுத்து வையுங்கடி!

தீட்டு வந்து சேருமின்னு
நல்லெண்ண தலைக்குவெச்சு
நட்டாத்தில் குளிச்சுப்புட்டு
வாராண்டி!

நல்லா கறிசமைச்சு
ஆக்கிப்போட வாருங்கடி..

பெண்ணாகப் பொறந்தவளே
கல்லாக இருந்த உன்ன
செலையாக செதுக்க மாமன்
வாராண்டி!

உன் சிரிப்பெடுத்து
தன்மனசுல கோர்க்கப் போறாண்டி!

ச.கேசவன்
இளம்கலை இயற்பியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு

சனி, 18 பிப்ரவரி, 2012

சிரிக்கலாம் வாங்க..

இணையத்தில உலவியபோது கண்ணில் பட்டு மனதைக் கவர்ந்த சில நிழற்படங்கள்..


வியாழன், 16 பிப்ரவரி, 2012

எல்லோருக்கும் பிடித்த ஒரே மொழி!

பொருளற்ற வாழ்க்கை வாழும்
பொருளற்றவரின் வாழ்க்கையைக்கூட
பொருளற்ற வார்த்தைகளால்
பொருள் பொதிந்த வாழ்க்கையாக்கிக் காட்டும்
பல்கலைக்கழமே குழந்தை!

ங்ங்ககா
அஅஆ
உஉஊ
த்த்த்ததா
ம்மா
ப்பாபு

என்ன மொழி இது!!
ஒவ்வொரும் அவரவர் அறிவுக்கு எட்டியவரை
 மொழிபெயர்த்துச் சொல்கிறார்கள்!

அம்மான்னு சொல்லுதுங்கறாங்க அம்மா
அப்பா சொல்லுதுன்றார் அப்பா
இல்லை தாத்தான்னுதான் சொல்லுதுங்கறார் தாத்தா
இல்லை மாமா சொல்லுதுங்கறார் மாமா.

இப்படி ஆளுக்கொரு ஆசைகளை
மொழிபெயர்த்துக்கொள்கிறார்கள்!

எத்தனையோ மொழிமாற்றி மென்பொருள்கள் 
வந்து என்ன பயன்?

இந்த மழலை மொழியை மொழிபெயர்பதல்லவா
மெய்யான தொழில்நுட்பம்!

நீ - நான் - நாம் 
உயர்திணை - அஃறிணை என
எந்த இலக்கண மரபுகளுமே கிடையாது மழலை உலகில்!

இயற்கையின் படைப்பில் உயர்வென்ன தாழ்வென்ன 
என்ற உண்மையைத் தான் 
தன்மொழியில் சொல்கிறதோ மழலை!

காற்றோடு
தீயோடு
பறவையோடு
விலங்கோடு
என எதோடு பேசினாலும் தன் மொழியிலேயே பேசுகிறது மழலை!

மழலை மொழி பொருளற்றது
என நம் கல்வியறிவு புறம்தள்ளினாலும்
இனிமையானது என உள்மனது சண்டைக்குவருகிறது!

கடவுள் இல்லையென்றே நீண்ட காலமாகச் சொல்லிவந்த
மனது இப்போதெல்லாம் சொல்கிறது

மழலையின் மொழியே கடவுளின் மொழி என்று..

ஒப்பீடு..
குழலினிது யாழினிது என்பார்தம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

(திருக்குறள் 66)

தொடர்புடைய இடுகை

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

உயிர்களைப் புதுப்பிக்கும் வேதியியல் மாற்றம்!

வாழ்க்கையை அகம், புறம் என வகுத்த மரபல்லவா நம் மரபு!
“களவும் கற்று மற”
என்று களவியலும் - கற்பியலும் வகுத்து
களவு என்னும் காதலுக்கும் ஒரு காலஅளவுண்டு
களவுக் காதல் சில நாட்களில் திருமணம் செய்துகொண்டு கற்புக்காதலாக மாறவேண்டும் என்று சொன்னவர்களல்லவா நம் முன்னோர்.

நான் காதலர் தினம் கொண்டாடுவதைவிட
காதலைத் தினம் கொண்டாடவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.
அதனால் தான் எனது இடுகைகளில் 60 விழுக்காடு காதலைச் சொல்லியிருக்கிறேன்..

காதல் குறித்த எனது சில புரிதல்கள்....



எத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் !
எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை - காதல்!

காதலர்கள் மாறலாம் 
காதல் மாறுவதில்லை!

மண்ணில் உயிர்களைப் புதுப்பிக்கும் 
வேதியியல் மாற்றமே காதல்!

உணர்வுக்கும் அறிவுக்கும் 
இடையே நடக்கும் 
போராட்டமே காதல்!

அறிவின் அனுமதியோடு 
வரும் காதலுக்கு வாழ்நாள் அதிகம்!
உணர்ச்சியின் வேகத்தில் குதிக்கும்
காதலுக்கு வாழ்நாள் குறைவுதான்!

பணம் - காதல் என்னும்
 இரண்டின் பின்னும் பலர் ஓடுகிறார்கள்!

இவ்விரண்டும் சிலர் பின்னால் மட்டுமே ஓடுகின்றன!

காதலிக்கும்போது....

ஐம்புலன்களும் காதலிப்பவர்களுக்கெதிராய் போர்க்கொடி உயர்த்தும்.

 நீ பார்த்ததால் தான் நான் மெலிகிறேன் 
என்று உடல் கண்ணிடம் முறையிடும்!

நீ மெலிவதால் நான் தூக்கம் தொலைந்தேன் 
என்று கண் உடலிடம் எதிர்வாதம் செய்யும்!

சும்மா பேசிக்கிட்டே இருக்காதீங்க 
நீங்க செய்த தவறுக்கு 
என்னை நானே அடித்துக்கொள்கிறேன் 
என தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்ளும் இதயம்!

கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதால் எனக்கு வலியில்லை 
என்று நினைத்துவிட்டீர்களா? 
என்று இந்த சண்டைக்கிடையே பாவமாகக் கேட்கும் மனம்!

என்னடா இது குடியிருக்கலாம்னு வந்தா இந்த வீடு சரியில்லையே நான் வீட்டைவிட்டுப் போறேன் என்று 
உடலிடம் உயிர் சொல்லும்!

நான் சொல்றதக் கேட்கப் போறீங்களா இல்லையா?
நான் வேலை நிறுத்தம் செய்தால் உங்க நிலைமை என்ன ஆகும்னு சிந்தித்துப் பாருங்க என்று மூளை வந்து மிரட்டும்.

இது வலியா? சுகமா?

காதலிக்காமலும் சாகக்கூடாது
காதலுக்காகவும் சாகக்கூடாது!

வாழ்ந்துகாட்டனும் அதுதான் காதல்!

தொடர்புடைய இடுகைகள்

திங்கள், 13 பிப்ரவரி, 2012

வெட்கப்பட்ட ஆறு!


தலைவன் சில காலம் தலைவியைக் காணவராமல் இருந்தான். அவனது பிரிவாற்றாமையால் வருந்திய தலைவி தலைவனின் மலையிலிருந்து ஓடிவரும் அருவியிடம் இவ்வாறு பேசுகிறாள்..

எம் தலைவரது மலைநாட்டிலிருந்து வரும் ஆறே….

எம் அணிகலன்கள் நெகிழுமாறு துன்பம் மிகுந்தது!
மெல்லிய தோளும் மெலிந்து போயிற்று!
உடல் பாழ்பட பசலையும் படர்ந்தது!
உடலைப் பார்த்து நெற்றியும் பசலை கொண்டது!

(புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டதுபோல என்றொரு பழமொழி சொல்வார்கள். அதுபோலவே தலையின் நிலை உள்ளது உடலைப் பார்க்கும் ஆற்றல் நெற்றிக்குக் கிடையாது என்றாலும் பார்த்தது அதனால் நெற்றியும் கெட்டது என்கிறாள். அறிவுக்கு இடம்கொடுக்காமல் கவிதையின் கற்பனை உலகத்துக்கு உள்ளே போனால் தலைவியன் நிலை சிரிக்கவைப்பதாக உள்ளது.)

இந்நிலையில் என் நிலையை எண்ணிப் பார்காதவனாக நின் தலைவனும் எனக்குக் கொடுமை செய்தான்.

கலங்கும் குளிந்த கண்களிலிருந்து நீர்பெருகுமாறு அறத்தினைக் கைவிட்டு நீங்குதல் நின் தலைவனுக்குப் பொருந்துவதாகுமா..?

நான் இப்படியெல்லாம் உன்னைக் கேட்பேன் என்று எனக்கு அஞ்சி, அவர் மலையில் மலர்கின்ற மலர்களால் நீ உன் உடலை முழுதும் மறைத்துப் போர்த்துக்கொண்டு நாணத்தால் மிகவும் வெட்கிச் செல்கிறாய்!
என்கிறாள்.

(கடன்கொடுத்தவரைப் பார்த்தவுடன் கடன் வாங்கியவர் எப்படியாவது தன்னை மறைத்துக்கொண்டு தப்பிஓட முயல்வாரே அதுபோல ஆறும்,
அவரை மடக்கிப் பிடிப்பாரே கடன் கொடுத்தவர் அதுபோல தலைவியும் இங்கே காட்சியளிப்பதும் ஒப்புநோக்கத்தக்கனவாக உள்ளன.)

ஆறு மலர்களைச் சுமந்து வருவதும்
உடல் மெலிதலும் இயல்பானவையே என்றாலும்..

தலைவி அருவியிடமும், உடலிடமும் இவ்வாறு பேசுவது இவளது ஆற்றாமையையே உணர்த்துவதாக இருந்தாலும் இவளது நிலையைக் காண்பவர்களால் சிரிக்காமல் இருக்கமுடியாது.

இலக்கியச்சுவையை முழுமையாக உணர “இம்மென் கீரனார்“ என்னும் இணைப்புக்கு வருக.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

இதெல்லாம் சட்டசபையில செய்யவேண்டியது..


இந்த காலத்துல பார்த்தீங்ன்னா..
எங்க பார்த்தலும் கொலைவெறிபிடிச்சவங்களா இருக்காங்க..

கொலை,கொள்ளை, வழிப்பறி, மோசடி இதெல்லாம் காலந்தோறும் இருப்பதுதான் என்றாலும்..
இப்போது இளம் தலைமுறையினரிடையே பரவி வரும் வன்முறைச் செயல்களுக்கு ஊடகங்களும் பெரும்பங்கு வகிப்பனவாக உள்ளன.

சென்னையில் ஆசிரியரைக் கொன்ற மாணவரின் வெறிச்செயலுக்குக் காரணம் யார்?
பெற்றோரா?
ஆசிரியர்களா?
கல்விமுறையா?
ஊடகங்களா?
சட்டங்களா?
என ஆயிரம் பேரைக் காரணம் சொல்லலாம் என்றாலும். போன உயிர் மீண்டு வருவதில்லை.
இப்போதெல்லாம் இணையம் உலகத்தையே சிறுகிராமமாக மாற்றிவிட்டது. இன்றைய தலைமுறையினர் இங்கு இருந்துகொண்டே உலகத்தில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் பார்க்கிறார்கள்.
அதனால் நலமான, வளமான, வலிமையான சமூகம் உருவாக நாம் யாரையும் குறைகூறாது நம்மால் முடிந்தவரை நேர்மறையான எண்ணங்களை இளம் தலைமுறையினரிடம் விதைப்பது நம் அடிப்படைக் கடமையாகும்.

இந்த பள்ளிமாணவனின் செயலுக்குப்பின் தமிழகத்தில் நிறைய பள்ளிகளில் கட்டண சலுகை அறிவித்திருக்கிறார்கள். மாணவர்களை திட்டக்கூடாது என ஆசிரியர்களுக்கு வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இது மாணவர்களுக்கு மேலும் கொம்பு சீவிவிட்டதுபோல உள்ளது.

என் நண்பர் ஒருவர் புலம்பினார்.

என்னங்கய்யா இப்பல்லாம் வகுப்புக்குப் போயிட்டுவருவது ஏதோ போர்க்களத்துக்குப் போயிட்டுவருவதுபோல இருக்குது என்று..

ஏன் என்று கேட்டேன்..

அவர் சொன்னார்...
ஐயா ஒரு பையன் என்னைப் பார்த்து கேட்கிறான்..

என்னங்க ஐயா...
உங்க முகத்துல ஒரு மரண பீதி தெரியுதே.. !
பயப்படாதீங்க..
நாங்க உங்கள எதுவும் செய்யமாட்டோம் என்றானாம்.
இவர் அவனைத் தனியாக அழைத்துச் சென்று அவனுக்கு அறிவுரை சொல்லி அனுப்பினாராம்..
திரும்பி வகுப்புக்கு வந்த மாணவனைப் பார்த்து அவன் நண்பர்கள் கேலி செய்தார்களாம் இப்படி
என்னடா..
இப்ப உன்னோட முகத்துல மரண பீதி தெரியுது?
என்று

மாணவர்களைத் திருத்த அடிப்பது சரியா? தவறா?
என்பதெல்லாம் இன்றைய காலத்தில் விவாதத்துக்குக் கூட எடுத்துக்கொள்ள முடியாது..
காலம் ரொம்ப மாறிப்போச்சு பாருங்க..

அன்று பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே பெற்றோர்கள் சொல்லிச் சேர்ப்பார்கள்.
கண்ணு, காது, மூக்க மட்டும் விட்டு எங்க வேண்டுமானலும் அடிங்க
எம்புள்ளய படிக்கவெச்சு அவனோட கண்ணைத் திறந்துவிடுங்கய்யா போதும் என்பார்கள்.
ஏன் என்று கேட்டால் அடியா மாடு படியாது என்பார்கள்.

இன்று நிலை வேறு!
அடிக்கக் கூட வேண்டாம் திட்டினாலே போதும்
இந்த மாணவர்கள் தவறான முடிவெடுத்துவிடுகிறார்கள்.

பேருந்தில் வரும்போது இரு மாணவர்கள் என்னருகே பேசிக்கொண்டு வருகிறார்கள்.

டேய் மச்சான் இவங்க டார்ச்சர் தாங்கமுடியலடா என்று
அதற்கு இவன் சொல்கிறான்.
டேய் மாப்பிள நான் சொல்றத நீ கேட்க மாட்டேங்கிற
பள்ளிக்கூடத்துல மாடில இருந்து குதிச்சிடுறா
அப்புறம் பாரு உனக்கு இராஜ மரியாதைதான் என்று

கேட்ட எனக்கு ஒரு மணித்துளி இதயத்துடிப்பே நின்றுவிட்டது.

யாரைக் குறை சொல்வது..
என்னைக் கேட்டால் மாணவர்களை அடிக்காமல் கூட அன்பால் திருத்திவிடமுடியும். அதற்கு 
ஆசிரியர் மட்டும் தன்னை மாற்றிக்கொண்டால் போதாது.
இதில் குறிப்பிடத்தக்க பங்கு
பெற்றோருக்கும்
ஊடகங்களுக்கும்
நாட்டை ஆள்வோருக்கும்
உண்டு என்பதை நாம் மறக்கக்கூடாது.


தொடர்புடைய இடுகை


கல்வி உளவியல்