வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 10 மார்ச், 2010

அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை.




மனதில் அன்பின்றி வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற கொடிய பாலை நிலைத்தில் பட்ட மரம் மீண்டும் தளிர்த்தது போன்றது என்பதை,


அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.


குறள் -78

என உரைப்பார் வள்ளுவர். அந்த மரத்தின் தளிர் யாருக்கும் பயன்படுவதில்லை அது போலவே இன்று மனிதர்களும் மாறி வருகிறார்கள்.


இயந்திரங்களுக்கு மனிதப் பண்பை உருவாக்க எண்ணும் மனிதன் இயந்திரமாக மாறிவருகிறான் என்பதும் உண்மைதான்.

மனிதன் புதைக்கப்படும பெட்டிகள் இரண்டு,

ஒன்று சவப்பெட்டி
இன்னொன்று தொலைக்காட்சிப்பெட்டி


என்பர் கவிஞர் காசியானந்தன். அறிவியல் தந்த கருவிகளில் சிக்கிக்கொண்ட மனிதர்களுக்கு அன்பு என்ற உணர்வு குறைந்து வருகிறது. தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குக் கொடுக்கப்படும் முதன்மை குழந்தைகளுக்குத் தரப்படுவதில்லை.

குழந்தைகள் காப்பகம்
முதியோர் இல்லம்
தனிக்குடும்பம்

ஆகியனவே இதற்கு நிகழ்கால சான்றுகளாகும்.

அஃறிணை உயிர்கள் கற்றுத் தரும் பாடம்


பாலை வழியே பொருள் தேடச் சென்ற தலைவன் அங்கு காணும் காட்சிகளால் என் நினைவு வந்து மீண்டு வருவான் என்ற தலைவிக்குத் தோழி சொல்வதாக இப்பாடல் அமைகிறது.

தோழி - தலைவன் உன்மீது மிகுந்த அன்புடையவனாக இருந்தாலும் பொருள் மீது கொண்ட பற்றினால் உன்னை நீங்கி கொடிய வெம்மைத் தன்மை வாய்ந்த பாலை வழியே சென்றுவிட்டான்.

தலைவி - ஆமாம். அவர் பிரிவை ஆற்றாது தவிக்கும் வேளையில் எனக்கொரு நம்பிக்கை பிறக்கிறது.

தோழி - என்ன?

தலைவி - தலைவன் சென்ற வழி அன்புறு காட்சிகள் நிறைந்த வழியாகும். அக்காட்சிகளைக் காணும் தலைவன் என் நினைவு வந்து விரைந்து திரும்புவான் என்பது தான்.

தோழி - உண்மைதான்.
பாலை நிலம் கொடிய வெம்மையுடையதாயினும் நீ சொல்லுவது போல அன்புறு காட்சிகளும் நிறையவுண்டு.

“ தன் கன்றின் மீது மிகுந்த அன்பு கொண்ட ஆண்மான் கவைத்த தன் கூர்மையான கொம்பால் மரத்தின் அடிப்பகுதியைக் குத்தித் தன் கன்றின் பசிநோயைத் தீர்க்கும்.

துள்ளி நடக்கும் இயல்புடைய தன் கன்று வெயிலில் வாடக்கூடாது என்று கருத்திய ஆண்மான் தன் உடலையே நிழலாகத் தரும்.


தலைவி - ஆம் இந்த அன்பான காட்சியைப் பார்க்கும் தலைவன் என் நினைவு வந்து விரைந்து திரும்புவான்.

தோழி - கன்றின் மீது ஆண்மான் கொண்ட அன்பைக் காணும் தலைவருக்குத் தன் கடமை தானே நினைவுக்கு வரும்.

தலைவருக்கு உன்மீது கொண்ட அன்பை விட பொருளின் மீது கொண்ட அன்பு அதிகமானது. அதனால் தன் சென்ற வினை(செயல்) முடியாது திரும்பமாட்டார்.

பாடல் இதோ,


நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉம்பெருந் ததரல்
ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற்
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
இன்றுயில் முனிநர் சென்ற வாறே.

குறுந்தொகை 213. பாலை - தோழி கூற்று

-கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்.

இப்பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.


◊ அன்பு வாழ்க்கையை இனிமையாக்கும்.
◊ மனிதர்களை மனிதர்களாக வைத்திருப்பது அன்பு.
◊ அஃறிணை உயிர்களின் அன்பு சில காலங்கள் மட்டுமே. மனிதர்கள் கொண்ட அன்பு பல்லாண்டுகாலம்.
◊ அன்பின்றி வாழும் வாழ்க்கை யாருக்கும் பயன்தருவதில்லை.
◊ பொருள் வாழ்க்கைக்குத் தேவை. பொருள் தேடுதல் கடமைகளுள் ஒன்று. பொருள் மட்டுமே வாழ்க்கையல்ல.


என பல அறிய வாழ்வியல் கருத்துக்களை எடுத்தியம்புவதாக இப்பாடல் அமைகிறது.

திங்கள், 8 மார்ச், 2010

பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். பகுதி-3




மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை உருவாக்கியவர் பாண்டித்துரைத்தேவர் ஆவார். தமிழ் ஆர்வலர். அவர் ஒருமுறை மதுரை வந்தபோது தனது கோடைக் கால வீட்டில் (தற்போதைய செந்தமிழ்க்கல்லூரி) தங்கியிருந்தார். அப்போது ஆங்கிலேயரின் ஆட்சி நடந்த காலம்.

ஒருநாள் சிகாட் என்னும் ஆங்கிலப் பாதிரியார் ஒருவர் பாண்டித்துரைத் தேவர் அவர்களைப் பார்க்க வந்தார். பாண்டித்துரைத் தேவரும் அந்தப் பாதிரியாரை வரவேற்று அமரச்செய்தார்.

பாதிரியார்
- நான் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில் திருக்குறளை அச்சிட்டு வழங்கவுள்ளேன். அதன் பிரதிகள் சிலவற்றைக் கொண்டுவந்திருக்கிறேன். தாங்கள் தமிழுக்குத் தொண்டு செய்து வாழ்பவர். அதனால் தாங்கள் இதனை வாங்கிச் சிறப்பு செய்தல் வேண்டும்.

பாண்டித்துரைத் தேவர்-
மிகவும் மகிழ்வாகவுள்ளது. தாங்கள் ஒரு அயல் நாட்டவராக இருந்தாலும் தமிழ்மொழி மீது தங்களுக்கு உள்ள பற்று மகிழ்வளிப்பதாகவுள்ளது.

(பாதிரியார் தந்த குறளின் முதல் பக்கத்தைத் திறந்து படித்தவுடனேயே பெருந்திகைப்படைகிறார் பாண்டித்துரைத்தேவர்.)

முதல் குறள் இப்படி இருந்ததாம்….

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
முகர முதற்றே உலகு.

பாண்டித்துரைத் தேவர்
- (பெரும் சினம் தோன்றினாலும் வெளிக்காட்டாமல்) குறட்பாவில் மாறுதல்கள் உள்ளனவே. ஏதும் அச்சுப்பிழையா?

பாதிரியார்
- இல்லை! இல்லை! காலகாலமாகத் தமிழ்மக்கள், அறிஞர்கள், புலவர்கள் கவனிக்காமல்விட்டதை நான் கவனித்து எதுகை, மோனைக்க ஏற்ப திருக்குறளை மாற்றியமைத்திருக்கிறேன். ( என்கிறார் பெருமிதத்துடன்)

பாண்டித்துரைத்தேவர் - (அடக்கமுடியாத சினத்தையும் அடக்கியவராக) சரி இப்படி எத்தனை குறள்களை மாற்றியிருக்கிறீர்கள்?

பாதிரியார்
- (பெருமகிழ்ச்சியோடு) என்னால் முடிந்தவரை பெரும்பாலான குறட்பாக்களை மாற்றிவிட்டேன். அதுமட்டமல்ல,

அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று இருந்ததை மாற்றி,

இயன்முறய்பால், இயய்முறய்பால், இறய்முறய்பால் என்றும் மாற்றியிருக்கிறேன்.

நோற்பியல், சால்பியல், நோக்கியல், பீடியல், காமியல், ஏமியல் என அதிகாரத்தலைப்புக்களையும் கொடுத்திருக்கிறேன்.


பாண்டித்துரைத்தேவர் - எத்தனை பிரதிகள் இவ்வாறு அச்சிட்டிருக்கிறீர்கள்?

பாதிரியார்
- நானூறு பிரதிகள் அச்சிட்டிருக்கிறேன்.

பாண்டித்துரைத்தேவர்
- தாங்கள் தயங்காது 400 பிரதிகளையும் எனக்கே தந்தருளவேண்டும்.

(பாதிரியார் பெரிதும் மகிழ்ந்து தன் பணியாளன் வாயிலாக எல்ல நூல்களையும் எடுத்துவரச்செய்து பாண்டித்துரைத் தேவரிடமே கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும வாங்கிச் சென்றுவிட்டார்)

பாதிரியார் சென்றவுடன் அந்த நூல்கள் யாவற்றையும் கண்டு பெரிதும் வருந்திய பாண்டித்துரைத் தேவர் தமிழுக்கு இப்படியெல்லாம் சோதனை வருகிதே என்று எண்ணி தம் வீட்டில் பெரிய குழிதோண்டி அதில் எல்லா நூல்களையும் இட்டு தீயிட்டாராம்..


(வெளியே தெரியாது இதுபோல தமிழுக்குத் தொண்டாற்றிய பெரியோர் பலராவர்)

பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்( உருது - தமிழ்)


1. அகர்பத்தி - அகில் மணத்தி.
2. அமிலம் - புளிக்காரம்.
3. அலாதி - தனிச்சிறப்புடையது.
4. ஆசாமி - ஆள்.
5. இனாம் - கொடை.
6. இஸ்திரி - தேய்ப்பு.
7. உஷார் - எச்சரிக்கை,அறிவுறுத்தல்.
8. ஊதா - கருநீலம்.
9. கச்சேரி - கூடம்
10. கசரத் - உடற்பயிற்சி.
11. கசாப்பு - இறைச்சி.
12. கடுதாசி - மடல்
13. கப்சா - பொய்.
14. சந்தா - தவணை, முறைக்கட்டணம்.
15. சபாஷ் - நன்று.
16. சர்க்கார் - அரசு, ஆள்வோர்.
17. சராசரி - சரிக்கு சரி. இணையாக.
18. சலாம் - வணக்கம்.
19. சல்லிசு - மலிவு
20. சலம் - நீர்.
21. சலனம் - அசைவு.
22. சவ்வாது - பூ மணத்தி.
23. சவடால் - அடாவடி.
24. சவரம் - மழிப்பு.
25. சவாரி - இவர்தல்.
26. சவால் - அறைகூவல், வெல்விளி.
27. சாதா - பொது.
28. சாப்ஸ் - துண்டுக்கறி
29. சாமான் - பண்டம் , பொருள்.
30. சால்ஜாப்பு - சாக்குப் போக்கு, ஏமாற்றும் வேலை.

சனி, 6 மார்ச், 2010

எத்திசைச் செலினும் சோறே!



அதியனுக்கும் ஔவையாருக்குமான நட்பை தமிழுலகம் நன்கறியும். இவர்கள் பற்றி வழங்கப்படும் செவிமரபுக் கதை ஒன்று,
ஒருமுறை ஔவையார் அதியனிடம் பாடல் பாடி பரிசில் பெறச்சென்றார். ஔவை மீது அதியன் கொண்ட அன்பாலும், தமிழ்ப்பற்றாலும் ஔவைக்கு உடனடியாகப் பரிசில் தராது காலம் தாழ்த்தினான். பரிசில் கொடுத்துவிட்டால் ஔவை தன்னை நீங்கி வேறிடம் சென்றுவிடுவார் என்ற அச்சமே அதியனின் காலம் தாழ்த்தலுக்கான காரணமாகும். ஔவையோ அதியனின் காலம் தாழ்த்தலைத் தாங்க இயலாதவறாக எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே என வேறிடம் செல்ல எண்ணியபோது, அதியன் ஔவையின் விருப்பப்படி நிறைய செல்வங்கைளத் தந்து அனுப்பி வைத்தானாம். ஔவை சென்றபோது தன் வீரர்களைக் கள்வர்கள் போல அனுப்பி ஔவையிடம் கொடுத்த செல்வத்தை கைப்பற்றச் செய்தானாம்.

அப்படியாவது ஔவை தன்னிடம் மீண்டும் வந்துவிடுவார் என்ற அதியனின் எண்ணமே இந்தச் செயலுக்குக் காரணமாகும். அதியனின் இந்தச் செயலுக்குள் மறைந்திருப்பது ஔவை மீது அதியன் கொண்ட அன்பும் தமிழ்ப்பற்றும் தான்.



அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தராது நீட்டித்த போது ஔவையார் பாடிய பாடல்…


“வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“

பாடல்- புறநானூறு-206.
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை: பாடாண்: துறை: பரிசில்.


இப்பாடலின் பொருள்.


வாயிற் காப்போனே! வாயிற் காப்போனே!
வள்ளன்மை மிக்கவர்களின் செவிகளில் நல்ல சொற்களை விதைத்து,
தமக்குத் தேவையான பரிசிலை விளைவிக்கும் ஆற்றல் மிக்க உள்ளத்தைக் கொண்ட பரிசிலர்கள் எப்போதும் செல்லும் அடைக்காத வாயிலை உடையவனே!

தலைவனாகிய அதியன் தான் தன் தரம் அறியமாட்டானா?
இல்லை என் தரத்தை அறியமாட்டானா?

அறிவும், புகழும் உடையவர்கள் மாய்ந்தால் உலகம் வறுமைப்படுவதில்லையே!

ஆதலால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம்.
எங்கள் இசைக்கலங்கள் கொண்ட பைகளைக் கட்டிக்கொண்டோம்.

மரத்தை வெட்டிக் கொள்ளும் தச்சர்கள் பெற்ற சிறுவர்கள் தம் மழுவோடு காட்டிற்குச் சென்றால் அங்குள்ள மரங்கள் எ்பபடி அவர்களுக்கு உடனே வேண்டுமாறு பயன்படுமோ அப்படி எத்திசை சென்றாலும் அத்திசையில் சோறு கிடைக்கும்.

என வாயிற் காப்போனிடம் ஔவையார் கூறுகிறார்.


பாடல் உணர்த்தும் உட்பொருள்.


காட்டில் மரங்களுக்குக் குறைவில்லை. அதுபோல உலகத்தில் புரவலர்களுக்கும் குறைவில்லை.
எத்திசை சென்றாலும் சோறுகிடைக்கும்!


பாடல் உணர்த்தும் வாழ்வியல் அறம்
.

¯ பசியை விட மானம் பெரிது.
¯ தச்சர் பெற்ற சிறுவர்களின் கலைத்திறனே அவர்கள் வாழ்வின் முதலீடு. அவர்கள் யாரையும் நம்பியிருக்கவேண்டியதில்லை! அதுபோல கல்வியென்னும் பெருஞ்செல்வத்தை முதலீடாகக் கொண்டவர்கள் யாரையும் நம்பியிருக்கவேண்டியதில்லை.

¯ நம் திறமைக்கு மதிப்பில்லாத இடத்தில் இருக்கக் கூடாது.

¯ யாரை நம்பியும் யாரும் இல்லை.

¯ கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு.

வாழ்வியல் நுட்பம்
வாழ்வில் வெற்றிபெற்றவர்களின் கடந்த காலத்தைத்திருப்பிப் பார்த்தால் அவர்களின் வெற்றிக்குப் பக்கத்தில் அவர்களின் சுதந்திர உணர்வு இருக்கும்.

யாருக்கோ கட்டுப்பட்டு நம் திறமைகளை வெளிபடுத்தாமல்,
நம் திறமையை உணராதவர்களின் கீழ் வாழும் வாழ்க்கை,

வயிற்றுக்காக வாழ்க்கையை விற்பது போன்றது.

வயிற்றுக்காக வாழ்க்கையை விற்பர்களால் வாழ்வில் சாதிக்கமுடியாது!

பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்.
பசி வந்தபோதும் மானத்தை இழக்காத மாண்புடையவர்களே சிறந்த சாதனையாளர்களாவர்.
என்னும் பல்வேறு வாழ்வியல் நுடபங்களையும் உணர்த்துவதாக இப்பாடல் அமைகிறது.

புதன், 3 மார்ச், 2010

விரைவாகத் தமிழில் தட்டச்சிட.


நேற்று இணையத்தில் உலவலாம் என்று கடைக்குச் சென்றேன். அங்கு அந்தக் கடைக்காரர் தமிழில் ஒரு கோப்பு உருவாக்க கணினியோடு போராடிக் கொண்டிருந்தார். ஐந்து நிமிடத்தில் தயாரிக்கவேண்டிய தமிழ்க்கோப்பை முப்பது நிமிடத்தில் தயாரித்தார். அழகி என்னும் தமிழ்த்தட்டச்சு மென்பொருளைப் பயன்படுத்தி மேல்உள்ள எழுத்து அட்டவணைகளில் சுட்டியைக் கொண்டு ஒவ்வொரு எழுத்தாகச் சுட்டி அவர் அந்தக்கோப்பைத் தயாரித்தார்.

அவர் நிலைகண்டு வருந்திய நான் பொங்குதமிழின் மென்பொருளைப் பதிவிறக்கிக் கொடுத்தேன். இணைய இணைப்பின்றியும் பயன்படுத்தத்தக்க அந்தக்கோப்பைப் பயன்படுத்தி தமிங்கில முறையில் எளிதில் அவரால் தட்டச்சிடமுடிந்ததை சில நொடிகளிலேயே பார்த்தேன். அவருக்கு ஒன்றைச் சொல்லிக்கொடுத்த நிறைவோடு வந்தேன்.

தொழில்முறையிலிருப்பவர்களுக்கே தமிழ்த்தட்டச்சு குறித்த விழிப்புணர்வு குறைவாகத்தானே இருக்கிறது..

கணினியில் தமிழ் தட்டச்சு செய்வோர்..


◊ அலுவலகக் கடிதம் உருவாக்குவோர்.
◊ தொழில் முறையில் தமிழ்க்கோப்புகளை தயாரிப்போர்.
◊ ஆய்வேடு, அழைப்பிதழ், சான்றிதழ் அச்சடிப்போர்.
◊ நாளிதழ், மாத, வார இதழ்களில் தமிழ் உள்ளீடு செய்வோர்.


இணையத்தில் தமிழ்த்தட்டச்சு செய்வோர்.


◊ வலைப்பதிவு எழுதுவோர்.
◊ கருத்துரை மட்டும் இடுவோர்.
◊ மின்னஞ்சல் அனுப்புவோர்.
◊ அரட்டையடிப்போர் (சேட்டிங்)
◊ இணையதளத்தில் எழுதுவோர்.
◊ பல்லூடகத்தில்(ட்வைட்டர், பேஸ்புக்,ஆர்குட்) தமி்ழ் எழுதுவோர்.


என தமிழ்த் தட்டச்சு செய்வோர் பலவகையினராக இருக்கின்றனர். கணினியிலும் இணையத்திலும் தமிழ்த் தட்டச்சிடுவோருக்கு ஒருங்குறி (யுனிகோடு) குறித்த அடிப்படை அறிவு இருத்தல் நலமாகும்.


◊ பலரும் சந்திக்கும் ஒரு சிக்கல் (யுனிகோடு) தமிழ் இணையபக்கங்கள் கட்டம் கட்டமாகத் தெரிகின்றன என்பது தான். விண்டோஸ் இயங்குதளங்கள் வைத்திருப்போர் இந்தச் சிக்களை லதா எழுத்துருவை (எனது வலைப்பதிவில் வலதுபுறம் லதா எழுத்துருவைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்)சேமிப்பதால் தீர்த்துக்கொள்ளலாம்.


◊ தமிழில் விரைவாகத் தட்டச்சிட.


◊ ஏதாவதொரு எழுத்துருவில் தட்டச்சிடத் தெரிந்துகொள்ளவேண்டும்.( பாமினி என்னும் எழுத்துரு இணைய இணைப்பிலும், இணைப்பில்லா நிலையிலும் பயன்படுத்த எளிதாகவுள்ளது.)
என்.எச்.எம், அழகி ஆகிய தமிழ் யுனிகோடு எழுது மென்பொருள்கள் பரவலான வழக்கில் உள்ளன. இவற்றை நம் கணினியில் நிறுவிக்கொண்டால், தமிழ்99,தமிங்கில முறை, பாமினி, பழைய தட்டச்சு முறை என பல தட்டச்சு முறைகள் கிடைக்கும். இவற்றில் ஏதாவது ஒரு முறையைப் பின்பற்றினால் தமிழ்தட்டச்சு எளிதாகும்.
◊ புலம்பெயர்ந்து வாழ்வோரும் ஆங்கில வழக்கைப் பின்பற்றுவோருக்கும் தமிங்கில முறை எளிதாக இருக்கும்.

இணைய இணைப்பில்லா எழுது மென்பொருள்.

பொங்குதமிழ் வழங்கும் எழுது மென்பொருள் இணைய இணைப்பிலும் இணைய இணைப்பில்லா சூழலிலும் பயன்படுத்த எளிதாகவுள்ளது. இதனை (சேவ் அஸ்) நம் கணினியில் சேமித்துக்கொண்டால் இணைய இணைப்பில்லா நிலையிலும் யுனிகோடு எழுத்துக்களை உருவாக்கிக்கொள்ளமுடியும்.

தட்டச்சு நுட்பங்கள்..

◊ தமிழ், ஆங்கிலம் இருமொழிகளில் தட்டச்சு செய்ய விரும்புவோர், ஆங்கில எழுத்துக்களுக்கான விசை எங்கு இருக்கிறது என்பதையும் அதற்கான தமிழ் எழுத்து என்ன என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.
◊ விசைப்பலகையில் உள்ள விசைகளில் FJ ஆகிய எழுத்துக்களின் கீழ் சிறு கோடு இருப்பதை அறியலாம். இவ்விரு விசைகளிலும் இருகைகளின்ஆட்காட்சி விரலை வைத்துக்கொள்ள வேண்டும்.

◊ (எனக்குத் ஆங்கிலத் தட்டச்சு தெரியாது. ஆனால் தமிழில் விரைவாகத் தட்டச்சு செய்வேன். FJ ஆகிய எழுத்துக்களின் கீழ் உள்ள சிறு கோடைத் தவிர விசைப்பலகையின் எழுத்துக்கள் என்ன? அவை எங்கு உள்ளன என்பது கூட எனக்குத் தெரியாது.) இந்த சிறு கோடுகளின் வலது, இடது, மேல், கீழ் உள்ள எழுத்துக்களை ஒருநாளைக்கு எட்டு விசைகள் என ஒரு மணி நேரம் தட்டச்சிட்டுப் பழகினால் ஒரே வாரத்தில் விரைவாகத் தட்டச்சிடலாம்.


◊ தட்டச்சிடப் பழகும் போதும் fJ ஆகிய விசைகளின் கீழுள்ள கோடுகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு கணினித்திரையை மட்டுமே பார்க்கவேண்டும். விசைப் பலகையைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். இவ்வாறு கணினித் திரையை மட்டும் பார்த்து அடிப்பதால் விசைப்பலகையைப் பார்க்கும் நேரம் குறையும்.

◊ விசைப் பலகையைப் பார்க்காமல் எல்லா விசைக்களுக்குமான தமிழ் எழுத்துக்கள் என்ன என்பதை அறிந்து கொள்வது முதல் படிநிலை.
◊ விசைப்பலகையைப் பார்க்காமல் சிறு சிறு சொற்களை அடிப்பது இரண்டாவது நிலை.(பிழை ஏற்பட்டாலும் fJ விசையின் கோட்டைப் பற்றி மேல், கீழ்,வலது, இடது என திருத்திக்கொள்ளலாம்.)
◊ பெரிய தொடர்களைத் தட்டச்சிட்டுப் பழகுவது தட்டச்சு வேகத்தை அதிகப்படுத்தும்.

◊ விரைவாகத் தட்டச்சிடுவதை விட பிழையின்றித் தட்டச்சிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


◊ ( வெளியூர்க்காரர்
- இந்த ஊருக்குச் செல்ல எவ்வளவு நேரம் ஆகும்?

உள்ளூர்க்காரர்
- வேகமாப் போன நேரமாகும்
மெதுவாப் போன வேகமாப் போகலாம் என்று..

வெளியூர்க்கார்
- புரியவில்லையே. புரியுமாறு சொல்லுங்களேன்?

உள்ளூர்காரர்
- எங்க ஊருக்குச் செல்லும் வழி கரடுமுரடானது. அதில் வேகமாப் போன விழுந்துருவீங்க. மெதுவாப்போன வேகமாப் போகலாம். அதான் அப்படிச் சொன்னேன் என்றாராம்)

மெதுவாகத் தட்டச்சிட்டாலும் பிழையின்றித் தட்டச்சிடுவது தமிழ்த்தட்டச்சினை விரைவாகப் பழகும் அடிப்படை நுட்பமாகும்.


◊ அடுத்து சில அடிப்படை கணினி நுட்பங்களை அறிந்து கொள்வது.

(Ctrl+A - எல்லாம் தேர்ந்தெடு.
Ctrl+s - சேமித்திடு.
Ctrl+x - வெட்டுக.
Ctrl+z - பழைய நிலைக்குத் திரும்பு.
Ctrl+E - வாக்கியத்தை நடுவில் கொண்டு வர.
Ctrl+l- வாக்கியத்தை இடதுபுறம் தள்ள.
Ctrl+R - வாக்கியத்தை வலதுபுறம் தள்ள
Ctrl+B எழுத்தைப் பெரிதாக்க.)


ஆகிய நுட்பங்கள் கணினியிலும், இணையத்திலும் தமிழை உள்ளீடு செய்யும் வழிமுறைகளாகும்.

“பசியோடு இருக்கும் ஒருவனுக்கு மீனை உணவாகத் தருவதைவிட
மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லித்தருவது சிறந்ததாகும்“
என்பது சீனப் பழமொழி..

ஒருவருக்குத் தமிழில் கோப்பு உருவாக்கிக் கொடுப்பதை விட அந்தக் கோப்பை அவரே உருவாக்கும் வழிமுறையைச் சொல்லிக்கொடுப்பது சிறந்தது.

நானறிந்ததைப் பகிர்ந்து கொண்டேன்..
தாங்களுக்குத் தெரிந்த நுட்பங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே..

செவ்வாய், 2 மார்ச், 2010

பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். பகுதி-2

தமிழ்மொழி தனித்து இயங்கவல்லது. பிறமொழிகளின் துணையின்றி தமிழில் பேசவும் எழுதவும் முடியும். “தனித்தமிழ்“ பேசுவோரையும் எழுதுவோரையும் காண்பதே அரிதாகவுள்ளது. அவ்வாறு பேசுவோரை இந்தச் சமூகம் தனிமைப்படுத்துவதையும் காணமுடிகிறது. “இவ்வாறு தனிமைப்படுத்துவோர் வேறுயாருமல்ல தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான். இவர்கள் “தன் தலையில் மண்ணைத் தூற்றிக் கொள்வதோடு தமிழின் தலையிலும் மண்ணைத் தூற்றுவது வருத்தத்துக்குரியவொன்றாகவே உள்ளது.

எத்தனையோ பண்பாட்டு, மொழித்தாக்கங்களிலிருந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு உயிரோடு திகழ்வது நம் தமிழ்மொழி. இந்த நிலையும் கடந்து போகும். தமிழ்மொழி நிலைத்துவாழும் என்ற நம்பிக்கையோடு…….


பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்-பகுதி-1 ல் வடமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அடையாளம் காட்டினேன். பலநண்பர்களும் ஆர்வத்தோடு வந்து கருத்துத் தெரிவித்தமை மகிழ்வளிப்பதாக இருந்தது. அதில் சிலர்…

◊ வடசொற்களில் சில தமிழுக்குரியது என்றும், தமிழ்ச்சொற்கள் சில வடசொற்கள் என்றும் கருத்துத் தெரிவித்தனர்.

கருத்துரையாளர்களின் மொழிப்பற்று பெருமிதம் கொள்வதாக இருந்தது.

◊ கால்டுவெல் அறிஞர் வந்து சொல்லும் வரை வடமொழிதான் இந்தியாவில் செம்மொழியாகக் கருதப்பட்டது. அவர் தான் “ திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்“ என்ற நூல் வாயிலாக “ திராவிட மொழிகளின் தாய்மொழி தமிழ்“ என்ற கருத்தை உலகறியத் தெரிவித்தார். அதன் பின்னர் தான் தமிழி்ன் தொன்மை, செழுமை, வளமை, இலக்கிய நயம் ஆகியவற்றை உலத்தார் அறிந்துகொண்டனர். தமிழில் தொல்காப்பியர் பெறுமிடத்தை வடமொழியில் பாணீனி பெறுகிறார்.
◊ தமிழ்மொழி பழமையானது என்று நாம்கருதும் அதே சூழலில் பிறமொழியின் தொன்மையையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
◊ நம்மில் பலர் தமிழ் மொழியைப் பேசத் தயங்குவதையும், பிறமொழிகளின் மீது ஈர்ப்புடையவர்ளாக உள்ளோம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.



◊ தமிழின் தொன்மையையும், வளமையையும் வேர்ச்சொல்லாய்வின் வாயிலாக உலகறியச் செய்தவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். இவர் தம் கட்டுரைகள், “ஞாலமுதல் மொழி தமிழ்“ என்பதை பெருங்குரலிட்டு மொழிவனவாகும்.
◊ எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று சொல்லும் தகுதிவாய்ந்த ஒரே மொழி நம் தமிழ்மொழி. அதனால் கருத்துச் சுதந்திரம் நிறைந்த இக்காலத்தில் தமிழின் தொன்மையும், வளமும், வேர்ச்சொல் குறித்த விழிப்புணர்வும் இன்றைய ஊடகத்துறைக்குத் தேவையெனக் கருதுகிறேன்.


தமிழில் கலந்த பிறமொழிச்சொற்களாக உணரச்சிப் பாவலர் காசியானந்தன் அவர்கள் கூறும் சான்று…



“வீட்டுக்கதவைக் கள்ளச் சாவியால் திறந்து பீரோவில் இருந்த துட்டையும் கோணிப்பையில் இருந்த பப்பாளிப்பழத்தையும் சப்போட்டாப் பழத்தையும் கொய்யாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோ ரிக் ஷாவில் தப்பி ஓடியபோது தகவல் அறிந்த போலீ்ஸ் ஏட்டு விரட்டி துப்பாக்கியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக்கட்டின“


செய்தி ஏட்டில் திருட்டு நிகழ்வைப் படித்து முடித்து அது செந்தமிழ் தான் என நினைக்கிறோம். ஆனால்… தமிழா இது..?

சாவி போர்ச்சுகீசியம் (திறவுகோல்)
பீரோ - பிரெஞ்சு (பேழை)
துட்டு - டச்சு (பணம்)
கோணி - இந்தி (சாக்கு, கந்தை)
பப்பாளி - மலாய் (பப்பாளி)
சப்போட்டா - இசுப்பானியம் (சப்போட்டா)
கொய்யா- பிரேசிலியன் (கொய்யா)
சுமார் - பெர்சியன் (ஏறத்தாழ)
வயது- சமஸ்கிருதம் (பருவம்)
கில்லாடி - மராத்தி (திறமைசாலி)
ஆட்டோ- கிரேக்கம் (தானியங்கி)
ரிக் ஷா - சப்பானியம் (இழுவை)
தகவல் - அரபி (செய்தி)
போலீஸ் - இலத்தீன் (காவலர்)
ஏட்டு - ஆங்கிலம் (தலைமைக்காவலர்)
துப்பாக்கி - துருக்கி (துமுக்கி)
தோட்டா - உருது(குண்டு)

அடைப்புக்குள் உள்ள சொற்கள் பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களாகும்.

எந்த மொழியையும் தமிழன் ஏற்றுக்கொள்வான் என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

சிரிப்பும் சிந்தனையும்.





v துன்பத்தில் வாழ்பவனிடம் சிரிப்பு இருக்காது!
சிரிப்பனிடம் துன்பம் இருக்காது! - ஆனால்,

துன்பத்திலும் சிரிப்பனிடம் தோல்வி இருக்காது!!

v நண்பா உன்னிடம் துன்பம் வந்தால் என்னிடம் சொல்லாதே!
அந்தத் துன்பத்திடம் சொல் என் நண்பன் இருக்கிறான் என்று!

v கிளைகளை நம்பி அமர்வதில்லை பறவைகள்! - அவை
தம் சிறகுகளை நம்பியே அமர்கின்றன.

v அறிவாளி ஒருவன் தான் அறிவாளி என்று எண்ணிக்கொள்ளும் போது முட்டாளாகிறான்!

முட்டாள் ஒருவன் தான் ஒரு முட்டாள் என்று உணர்ந்துகொள்ளும் போது அறிவாளிகிறான்!

v காது கேளாதோர் கவிதை.
எல்லோருக்கும் நான் செவிடாகத் தெரிகிறேன்!
எல்லோரும் எனக்கு ஊமையாகத் தெரிகிறார்கள்!

v பல வேலைகளைச் செய்ய ஒரே குறுக்கு வழி..
ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் செய்யுங்கள்!

v இயற்கை, காலம், பொறுமை ஆகியற்றைவிட சிறந்த மருந்துகள் உலகிலேயே இல்லை.

v எல்லோருமே தவறு செய்பவர்கள் தான் ஆனால்
முட்டாள்கள் மட்டுமே அந்தத் தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்!


பணம் பத்தும் செய்யும் அல்லது பத்தையும் விலைக்கு வாங்கும்.


v கேளிக்கைகளை, ஆனால் மகிழ்ச்சியை அல்ல.
v புத்தகங்களை, ஆனால் ஞானத்தை அல்ல.
v கூட்டாளிகளை, ஆனால் நண்பர்களை அல்ல.
v உணவை, ஆனால் பசியை அல்ல.
v மருந்தை, ஆனால் ஆரோக்கியத்தை அல்ல.
v படுக்கையை, ஆனால் தூக்கத்தை அல்ல.
v கடிகாரத்தை, ஆனால் அதிக நேரத்தை அல்ல.
v அகங்காரத்தை, ஆனால் அழகை அல்ல.
v வீட்டை, ஆனால் மகிழ்ச்சியா வீட்டையல்ல.
v மோதிரத்தை, ஆனால் திருமணத்தை அல்ல.