வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 14 ஏப்ரல், 2014

புகழ் - வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்..


உன்னைப் புகழும்போது செவிடனாக இரு!
உன்னை இகழும்பொது ஊமையாக இரு!
என்றொரு பொன்மொழி உண்டு..
புகழ் ஒரு போதை! இன்னும் இன்னும் என்று நம்மை மதிமயக்கி நம் வளர்ச்சியைத் தடுப்பது அதனால்தான் நம்மைப் புகழும்போது நாம் செவிடனாக இருக்கவேண்டும்!
நாம் இகழப்படும்போது நம்மை நாம் தன்மதிப்பீடு செய்துகொள்வது நம்மை வளர்த்துக்கொள்ள துணைநிற்கும் அதனால் தான் நாம் அப்போது ஊமையாக இருக்கவேண்டும்!

ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

பிறந்தநாள் பரிசு



வாழ்த்தும் மனங்கள்

எல்லையில்லா 
நுண்ணறிவால் 
வளர்ந்தவரே வணக்கம்!

ஏட்டு நூலோடு 
சுயசிந்தனையையும் வளரவிட்டு
உள்ளம் மகிழ்ந்தீர்

பலமொழிகளோடு
தமிழ்மொழியும் 
கற்கவேண்டியதுதான் 
என்பதை உணரவைத்தீர்….

காலம் காற்றடிக்கும் 
நேரத்தில் கடந்து
எல்லையற்ற அளவில் 
வளரப்போகிறது என்பதைப் புரியவைத்தீர்

ஒவ்வொரு பிறப்புக்கும்
அர்த்தமுண்டு
அதற்கும் 
சில கடமைகளுண்டு
என்பதை விளங்கவைத்தீர்

இரண்டடி குறளுக்கும்
இணையில்லாப் பொருளுண்டு
என்பதை 
நிகழ்கால விளக்கத்துடன் விளக்கினீர்...

இப்படி உங்களிடம் கற்கவேண்டியது
அதிகம்தான்
இருந்தபோதும் 
காலம்தான் எங்களைக் 
கடத்திச் செல்கிறதே

இருந்தாலென்ன?
உண்மை அன்பிற்கும் 
வாழ்த்தும் மனதிற்கும்தான்
வயது பொருட்டில்லையே… 

அதனால்தான் குழந்தை உள்ளத்துடன்
நேச நண்பரான உம்மை
கவிதையால் அர்ச்சித்து
வாழ்த்து தொழுகிறோம்
பல்லாண்டு வாழ்க..!!!!

இப்படிக்கு 
மாறாத நேசமுடன் உம் வணிகவியல் மாணவிகள்
கவிதை ஆக்கம் – இளம்கவிஞர் .பாரதி


தமிழறிஞர்கள் பிறந்தநாளை மட்டுமே நினைவு வைத்திருக்கும் நான் இன்று 

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பிறந்தநாள் என்று அதற்கான 

தரவுகளைத்தேடிக்கொண்டிருந்தேன் இன்று எனது பிறந்தநாள் என்பதை 

எனக்கு நினைவுபடுத்திய எனதருமை மாணவச் செல்வங்களுக்கு 

மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பிறந்தநாள்

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 6, 1815 - ஜனவரி 2, 1876; மதுரை, தமிழ்நாடு) அவர்களின் பிறந்தநாள் இன்று. சிறந்த தமிழறிஞரான இவர்,தமிழ்த்தாத்தா என அழைக்கப்பட்ட . வே. சாமிநாதையரின் ஆசிரியர் என்னும் பெருமைக்குரியர். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர்.
இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.
மகாவித்வான் என்று பாராட்டப் பெறும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்துப் புலவராக விளங்கியவர். சிவஞான முனிவரைப் போன்றே புலமைப் பரம்பரையை உருவாக்கியவர். நவீன கம்பர் என்றும் பிற்காலக் கம்பர் என்றும் போற்றப் பெறுபவர். நாளொன்றுக்கு நானூறு பாடல் பாடும் ஆற்றல் பெற்றவர். 4 வகைக் கவிகளும் பாடவல்லவர். இவர் இயற்றிய 22 புராணங்களுள் 16 தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ் 10, அந்தாதி 16, உலா 1, மாலை 4, கோவை 3, கலம்பகம் 2 தவிர சேக்கிழார் பிள்ளைத்தமிழ், தில்லையமக அந்தாதி, திருவானைக்கா இரட்டை மணிமாலை என 61 நூல்கள் இயற்றியுள்ளார். இவரிடம் கல்வி கற்ற 11 பேர் தலைசிறந்த நூல்களைப் படைத்துள்ளனர். பழந்தமிழ் இலக்கிய வர்ணனைகள், கற்பனைகள், சொல் அலங்காரங்கள் எல்லாம் நிறைந்து இருந்தன.
சேக்கிழார் பக்திச்சுவை ததும்பப் பெரியபுராணம் பாடினார். அவரை அழகானதொரு வரியில் பின்வருமாறு பிள்ளையவர்கள் கூறுகின்றார்:
பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ
மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களை விட தமிழ்த்தாத்தா புகழ்பெற்றுத் திகழ்ந்தார். உ.வே.சா பெற்ற புகழ் யாவும் குருவான மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களையே சேரும்.

நல்ல ஆசிரியரால் நல்ல மாணவரை உருவாக்கமுடியும்
நல்ல மாணவரால் நல்ல ஆசிரியராக உயரமுடியும் என்பதற்க இந்த குருவும் சீடரும் நல்ல சான்றுகளாவர்.
இவரது பிறந்தநாளன்று அவரது தமிழ்ப்பணியை எண்ணிப்பார்ப்பது நம் கடமை.


சனி, 5 ஏப்ரல், 2014

பணிவே உயர்வுதரும்!



பெருமைப் பண்புடையவர்கள் என்றும் பணிந்து நடப்பார்கள், ஆனால் சிறுமைப் பண்பு உள்ளவர்களே என்றும் தன்னைத்தானே வியந்து பாராட்டிக்கொண்டிருப்பார்கள் என்பதை வள்ளுவர்,

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

என உரைப்பார்.



பணிவுக்கும் அடிமைத்தனத்துக்கும் நூல் அளவுதான் வேறுபாடு அது பலருக்குத் தெரிவதில்லை.