கற்றலும் கடைப்பிடித்தலும், வாழ்வில் உயர்வதற்கான திறவுகோல்களாகும். கல்வியின் நோக்கம்,
தேர்வில் மதிப்பெண் பெறுவது, பட்டம் பெறுவதுமட்டும் அல்ல.
கற்ற கல்வியானது ஒரு மனிதனின் ஒழுக்கத்திலும்,
அவன் எடுக்கும் முடிவுகளிலும் பிரதிபலிக்க வேண்டும்.
திருவள்ளுவர்,
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (391) என்றார்.
எதையும் தெளிவாகக் கற்க வேண்டும். அதோடு நின்றுவிடக் கூடாது;
கற்ற அறநெறிகளின் வழியில், வாழ்க்கை அமைய வேண்டும். அறிவு என்பது வழிகாட்டும் ஒளி என்றால்,
அந்த ஒளியில் நடப்பதே உண்மையான அறம். எல்லா நேரமும் கற்ற கல்வியை வாழ்க்கையில் கடைபிடிக்க இயலுமா
என்று சிந்தித்த வள்ளுவர் நிற்க அதற்குத் தக என்றார். சூழல்களுக்குத் தக சரியாக நிற்பதே
அறிவின் வெளிப்பாடு.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (297)
உண்மை பேசுவது அறம் செய்வதைவிட உயர்ந்தது என்று சொன்ன வள்ளுவர்,
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292)
நன்மைக்காகப் பேசும் பொய்களும் வாய்மை எனக் கருதப்படும் என்றார். அதனால் நாம் வாழ்வில் எந்த சூழலில் உண்மை பேசவேண்டும், எந்த சூழலில் பொய்பேசவேண்டும் என்று சிந்தித்துப் பேசவேண்டும்.
