வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 6 ஜூலை, 2014

பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள்

பிறமொழி கலவாமல் தனித்தமிழில் பேசமுடியும் என எனக்கு உணர்த்தியவர். பிறமொழிப் பெயர்களையும் நாம் அழகிய தமிழில் மாற்றிக்கொள்ளலாம் என்ற சிந்தனையை எனக்கு ஏற்படுத்தியவர், தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் ஆவார். அவரது பிறந்தநாளான இன்று அவரது தமிழ்ப்பணியை நினைவுகொள்வதாக இவ்விடுகை அமைகிறது.

பரிதிமாற் கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார், ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும்,தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர்.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை அருகே விளாச்சேரி எனும் ஊரில் கோவிந்த சிவன் --லட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக இவர் பிறந்தார்.வடமொழியை தந்தையாரிடமும் ,தமிழை மதுரை சபாபதி முதலியாரிடமும் கற்றார் . இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும்,இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார்.கலாவதி (1898),ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி,ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார் . இராவ் பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார் .தனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சபாபதி முதலியாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் . அவர் 1898 ல் மறைந்தபோது
 மாமதுரைப் பெம்மான்மேல் மாலையெனப் பேர்புனைந்து 
 காமர் சிலேடை வெண்பாக் கட்டுரைத்த பாவலனே 
 பாமணார் கோவே நீ பாரினைவிட் டேகியது
 தாமதுரை சாமீ தமியேன்செய் தீவினையோ .   என்று பாடி வருந்தினார்
இது தவிர வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு காட்டினார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்:
என் புருவம் சுருக்கம் ஏறி, கண்களை மறைக்கும் முதுமையில் வாடுகின்றேன் நான்.
ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப்பரிதி அகன்றானே.

இவரது நூல்கள்

தமிழக அரசு இவரது மரபுரிமையாளர் 19 பேருக்கு ரூபாய் 15 லட்சம் பரிவுத் தொகையாக அளித்து இவரது பதின்மூன்று நூல்களும் 2006டிசம்பர் 2 அன்று தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டன.
பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:
·         ரூபவதி
·         கலாவதி
·         மான விஜயம்
·         தனிப்பாசுரத் தொகை
·         பாவலர் விருந்து
·         மதிவாணன்
·         நாடகவியல்
·         தமிழ் விசயங்கள்
·         தமிழ் மொழியின் வரலாறு.
·         சித்திரக்கவி விளக்கம்
பதிப்பித்த நூல்கள் :
1.சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
2. மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)
3.புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)
4.உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)
5.தனிப்பாசுரத்தொகை (1901)

தரவுகளுக்கு நன்றி - தமிழ் விக்கிப்பீடியா.

சனி, 5 ஜூலை, 2014

குறைந்து வரும் குருபக்தி


நல்ல ஆசிரியரால் நல்ல மாணவரை உருவாக்கமுடியும்
நல்ல மாணவரால் நல்ல ஆசிரியராக உயரமுடியும் என்பது பொன்மொழி.

வியாபாராமயமாகிவிட்ட கல்விச் சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு கேள்விக்குறியாகியிருக்கிறது.

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை என்ற பழமொழி கூறப்படுவதுண்டு. இதன் அர்த்தத்தை அறியாமல் சிலர், ஏளனமாகக் கூறுவதுண்டு. ஆனால், போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பதன் சுருக்கம்தான் அது என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான்.
சமுதாயத்தில் மாதா, பிதாவுக்கு அடுத்த நிலையில் குரு தெய்வமாக போற்றப்படுகின்றனர். மன்னர் காலம் தொட்டு, எத்தகைய உயர் நிலையில் இருப்பவரும் ஆசிரியருக்கு தலைவணங்குவர்.
வருவாய் குறைந்த நிலையிலும், தன்னிடம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, சிறந்த கல்வி போதிப்பதை கடமையாகச் செய்தனர். வீட்டில் வறுமை வாட்டி வதைத்தாலும், நேர்த்தியான உடையணிந்து மிடுக்காக கல்விச் சாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்கு கல்வியைப் போதித்தனர்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், பாடங்களைச் சரியாகப் படிக்காவிட்டாலும் கண்டிப்பதில் பாகுபாடு காட்டுவதில்லை. பெற்றோர்களும் தங்களுக்கு கிடைக்காத கல்வி அறிவை குழந்தைகள் பெற வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினர்.
பள்ளிக் கூடங்களுக்கு சென்று ஆசிரியர்களைச் சந்தித்து, தனது மகனை கடுமையாக தண்டித்தாவது படிக்க வையுங்கள் என மன்றாடிக் கேட்ட பெற்றோர்கள் ஏராளம்.
அந்தளவுக்கு கல்வியின் மீது பெற்றோர்களுக்கு மரியாதையும், ஆசிரியர்கள் மீது நம்பிக்கையும் இருந்தது. ஆசிரியர்களும் மாணவர்களை படிக்க வைப்பதற்கு முடிந்தளவு முயற்சி எடுப்பர்.
சரியாக படிக்காத மாணவர்களை கடுமையாக தண்டிக்கவும் செய்தனர். இதை பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டனர். வீட்டில் வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் தவித்த ஏராளமான ஏழை மாணவர்களை, தங்களது சொந்தச் செலவில் படிக்க வைத்த ஆசிரியர்களும் உண்டு.
எத்தகைய உயர் பதவிகளை அடைந்த போதிலும், ஆசிரியரை நேருக்கு நேர் சந்திப்பதற்குக்கூட மாணவர்கள் தயக்கம் காட்டினர். ÷
மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களுக்கு தனிமரியாதை கொடுப்பதும் வழக்கம். அந்தளவுக்கு சமுதாயத்தில் ஆசிரியர்கள் மரியாதையுடன் போற்றப்பட்ட பொற்காலம் அது.
காலப்போக்கில் கல்வி வியாபாரமாக்கப்பட்ட நிலையில், தற்போது ஆசிரியப் பணியின் மீதிருந்த மரியாதை மெச்சும் நிலையில் இல்லை.
கல்வி போதிப்பதை சேவையாக செய்யும் ஆசிரியர்கள் பல ஆயிரம் பேர் இருந்தாலும், சில ஆசிரியர்களின் தவறான செயல்களால் அந்த இனத்துக்கு இருந்த கௌரவத்துக்கே ஆபத்து வந்துள்ளது.
இன்றைக்கு அரசுகளும் ஆசிரியர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்து வருகின்றன. எந்தக் குழந்தையாக இருந்தாலும், தேவைப்படும்போது கண்டித்தால்தான், சொல்வதைக் கேட்கும். அந்தக் குழந்தை நல்வழியில் செல்லும்.
பெரும்பாலான ஆசிரியர்களும் சேவை மனப்பான்மையிலிருந்து விலகிச் செல்வதால், மாணவர்களின் மீது முழு ஈடுபாட்டைக் காட்ட முடியவில்லை என்பதை ஒப்புக் கொள்கின்றனர்.
கூட்டுக் குடும்பச் சிதைவு, வியாபாரமாக்கப்பட்டுவரும் கல்வி போன்ற பல்வேறு காரணிகளால், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையேயான சுமூக உறவிலும் இணக்கம் இல்லாமல் போய்விட்டது.
இதனால், கட்டுப்பாடு இழந்த காளையர்களாக மாணவர்களில் பலரும் தவறான வழிக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. தரமான கல்வி கேள்விக்குறியாகி வருகிறது.
இன்றைக்கு பொறியியல் படிப்பு மீதான நம்பிக்கை, மாணவர்களிடம் குறைந்து வருவதற்கும் இதுவே காரணியாக அமைந்துள்ளது.
இந்த நிலை மாற வேண்டும். அரசுகள் என்னதான் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுக்க பல ஆயிரம் கோடி திட்டங்களைத் தீட்டினாலும், ஆசிரியர்கள் மனது வைத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
ஆசிரியர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய உயர்நிலையிலிருந்து தடம் புரளாமல், தரமான கல்வியைப் போதிக்க வைராக்கியம் கொள்ள வேண்டும். மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
ஆசிரியர் - மாணவர் உறவு மேம்பட வேண்டும். எந்தக் கல்வியாக இருந்தாலும், அதனைத் தரமாகக் கற்க மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

கே.எஸ். பசும்பொன்முத்து

First Published : 03 July 2014 01:48 AM IST


நன்றி - தினமணி

செவ்வாய், 1 ஜூலை, 2014

தமிழ் இலக்கிய விளையாட்டு - 2

அன்பான தமிழ் உறவுகளே,

தமிழ் இலக்கிய விளையாட்டு -1 என்ற தொடருக்கு மறுமொழி வழியாகத் தாங்கள் தெரிவித்த பதில்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

இத்தொடரில் வாரந்தோறும் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு சுவையான பகுதிகளைக் காட்சிப்படுத்தவிருக்கிறேன். இந்த வாரத்துக்கான கேள்விகளை கீழே படங்களாகத் தந்துள்ளேன்.

இதற்கான சரியான பதில்களை நாளை மாலை வெளியிடுவேன். தங்கள் தமிழறிவைப் மதிப்பீடு சொல்வதாக இத்தொடர் அமையும் என நம்புகிறேன். நண்பர்களே தங்கள் மறுமொழிகள் வழியே கீழ்க்காணும் கேள்விகளுக்குப் பதிலளியுங்கள் பார்க்கலாம்..

07

---
08

---
 09
--- 
10

---
 11
---
 12
--- 
13

---
 14
---
 15

--- 
16


அன்பான தமிழ் உறவுகளே..
தங்கள் மதிப்புமிக்க மறுமொழிகளுக்கு முதலில் நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன். பலர் சரியான பதிலளித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
கீழே படங்களுக்கான சரியான பதில்களை அளித்துள்ளேன். தங்கள் பதில்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.

7. மனுநீதிச் சோழன்.

8. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
   உழந்தும் உழவே தலை – திருக்குறள் -1031

9. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
   அச்சாணி அன்னார் உடைத்து - திருக்குறள் -667

10. கான முயலெய்த அம்பினில் யானை
   பிழைத்தவேல் ஏந்தல் இனிது. - திருக்குறள் -772

11. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

12. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்
    நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
(ஒரு வீட்டுக்கு இரவு நேரத்தில் திருடச் சென்ற திருடன் அங்கு இருந்த நாய் சிலையைக் கண்டு உண்மையான நாய்தான் என அஞ்சி ஓடும்போது கம்பிவேலிகளில் சிக்கிக்கொண்டான் காலையில் அவனை அதிலிருந்து மீட்ட ஊரார் அவனை அந்த வீட்டில் அந்த நாய் சிலைக்குக் கீழே கட்டிப்போட்டார்கள். அப்போதுதான் அந்தத் திருடன் அது நாய் அல்ல நாயினது சிலை என்பதை உணர்ந்தான். அவன் இரவு நாயாகப் பார்க்கும்போது அங்கு சிலை இல்லை. கல்லாகப் பார்க்கும்போது அங்கு நாய் இல்லை. இதைத்தான் இந்தப் பழமொழி கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் என உணர்த்துகிறது.)

13. ஆயிரம் போய் சொல்லி கல்யாணம் செய்.
(ஆயிரம் பேருக்குப் போய் சொல்லிக் கல்யாணம் செய் என்பதில் போய் என்பதை பொய் என்று ஆக்கிவிட்டோம்)

14. விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு.

15. கட்டிக்கொடுத்த சோறும் சொல்லிக்கொடுத்த சொல்லும் காலமெல்லாம் கூட வராது.

16. அடி உதவுவதுபோல அண்ணன் தம்பி கூட உதவமாட்டார்கள்.

(அடி என்பது திருவடி என்றும் இரண்டடி(குறள்) நாலடி (நாலடியார்) என்றும் பொருள் கொள்வதுண்டு.)