வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 8 நவம்பர், 2013

இன்று வீரமாமுனிவர் பிறந்தநாள்





                              வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1747) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன்என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி என்பதாகும். (ஆங்கிலம் - Constantine Joesph Beschi - கான்ஸ்டன்டைன் சோசப்பு பெச்கி). இவர்இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.
இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

இவரது தமிழ்ப்பணிகள்


  • தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்
  •  தொன்னூல் விளக்கம் என்ற ஐந்திலக்கண நூலை எழுதினார்
  •  தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.
  •  சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.
  •  கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம்அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல்வேண்டும். திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட் பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர். திருக்காவலூர்கலம்பகம்,கித்தேரியம்மன் அம்மானை ஆகியன இவரது பிற நூல்களாகும்.
  • 1728-இல் புதுவையில் இவரின் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
வீரமாமுனிவர் எழுதிய கதைகளுள் ஒன்றைப் பார்க்கலாம்..

பரமார்த்த குரு கதை



"குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?" 
எனக் கேட்டான், முட்டாள். 

"அதனால் நமக்கு என்ன பயன்?" என்று பரமார்த்த குரு கேட்டார்.
"பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்" என்றான், மூடன்.
"அப்படியே செய்வோம்" என்றார் குரு.
"மனிதர்களுக்கு மட்டும்தானா?" என்று கேட்டான் மண்டு.
"மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!" என்றான் மட்டி.
பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி 
ஊர் முழுதும் பரவியது.

காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், "குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!" என்றான்.
"அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!" 
என்றார் பரமார்த்தர்.
"அதற்கு என்ன செய்வது?" எனக் கேட்டான் முட்டாள்.
"இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ணீரில் அழுத்தி வையுங்கள். 
ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்" என்றார் குரு.
உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள்.
நோயாளியோ "ஐயோ, அம்மா!" என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான்.

கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். "கண் வலிக்கிறது" என்றாள்.
"இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!" என்றான் முட்டாள்.
கிழவியோ, "ஐயையோ" என்று கத்திக் கொண்டு ஓடினாள்.
சிறிது நேரம் சென்றது. "உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது 
என்றபடி ஒருவன் வந்தான்.
"சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்" என்றார் பரமார்த்தர்.
முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர்.
கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, "குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!" என்றான்.
அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான்.
வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான்.

"பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?" என்று கேட்டபடி வேறொருவர் வந்தார்
"வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்" என்றார் பரமார்த்தர்.
சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்!
"இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!" என்றார் பரமார்த்தர்

சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான்.
"உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!" என்றார் பரமார்த்தர்
யானைக்கால் வியாதிக்காரனோ, "காலை விட்டால் போதும்" என்று தப்பினான்.

"ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறேன்" என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். "இவர் வாயை அடைத்து விடுங்கள்!" 
என்று கட்டளை இட்டார்.
குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி.

"என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது" என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, "தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்" என்றார்.
"வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்" என்றான் மடையன்.
கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள்.
அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன்.
பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.
குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப் 
பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர்.

பஞ்சாயத்தார் ஒன்று கூடி, குருவும் சீடர்களும் "இனிமேல் இந்த ஊருக்குள்ளேயே நுழையக் கூடாது" என்ற தண்டனையை வழங்கினர்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

தவறுகள்


நாம் செய்யும் தவறுகளைத் தப்பாகாமல் நாம் பார்த்துக்கொண்டால் தவறுகளைவிட சிறந்த ஆசிரியர் யாரும் இல்லை என்பதை நாமே உணர்வோம்.

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

இதை இப்படித்தான் அழைக்கவேண்டும்.


ஒலி மரபு
ஆடு – கத்தும்
எருது – எக்காளமிடும்
குருவி - கீச்சிடும்
குதிரை – கனைக்கும்
குரங்கு – அலம்பும்
நரி – ஊளையிடும்
நாய் - குரைக்கும்
பசு - கதறும்
பல்லி - சொல்லும்
புலி – உருமும்
பூனை – சீறும்
யானை – பிளிறும்
எலி – கீச்சிடும்
ஆந்தை – அலறும்
கழுதை -கத்தும்
காகம் – கரையும்
கிளி – பேசும்
கூகை – குழறும்
கோழி – கொக்கரிக்கும்
சேவல் – கூவும்
தவளை - கத்தும்
புறா – குனுகும்
மயில் – அகவும்
வண்டு - முரலும்
வானம்பாடி - பாடும்
வினை மரபு
அம்பு எய்தார்
ஆடை நெய்தார்
ஓவியம் புனைந்தான்
கூடை முடைந்தாள்
சுவர் எழுப்பினான்
செய்யுள் இயற்றினான்
சோறு உண்டான்
தண்ணீர் குடித்தான்
பால் பருகினாள்
பூப்பறித்தாள்
மரம் வெட்டினான்
மாத்திரை விழுங்கினான்
முறுக்கு தின்றான்

தொகுப்பு – இரா.சத்தியப்பிரியா
முதலாமாண்டு வணிகவியல்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

திருச்செங்கோடு.

வியாழன், 24 அக்டோபர், 2013

தமிழ்த் தென்றல் ஓவியம்

தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்பட்ட திரு.வி.க அவர்களின் ஓவியம்.
ப. பூங்கொடி
வணிகவியல் முதலாமாண்டு
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு

பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் -தென்கச்சியார்.

சிவகங்கைக்கு அருகில்ஒரு கிராமம். ஒரு நாள் விடியற்காலை நேரம். ஒரு குதிரையில் அவர் வந்துகொண்டிருக்கிறார். முதல்நாள் எதிரிகளுடன் போராடி அவர்கள் கையில் சிக்காமல் அவர் தப்பி வந்திருக்கிறார். யார் அவர்?  மருதுபாண்டியர்.
பரோபகாரச் சிந்தை – சிவபக்தி- புலவர்களை ஆதரிக்கும் இயல்பு – குடிமக்களைத் தாய்போல் காப்பாற்றும் தகைமை –இப்படியெல்லாம் இருந்தும்கூட கடைசிகாலத்தில் அவருக்கும் எதிரிகள்.
பலமுறை பகைவர்கள் அவரைப் பிடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. ஒருமுறை மருதுபாண்டியர், திருக்கோட்டியூர் பெருமாள் கோயிலுக்கு எதிரிலுள்ள ஒரு மண்டபத்தில் தங்கியிருந்தார். அது எதிரிகளுக்குத் தெரிந்துவிட்டது. ஊர் எல்லைக்குத் தன்னைப் பிடிப்பதற்குப் பகைவர்கள் வந்துவிட்டாரகள். என்ற செய்தி அவருக்கு எட்டியது.
உடனே மருதுபாண்டியர் ஒரு குதிரைக்காரனைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு அவசர அவசரமாகப் புறப்பட்டார். அப்போது அவரது வலது கையில் சிலந்தி உண்டாகி வேதனை கொடுத்தது. அதில் ஒரு கட்டுப்போட்டுக்கொண்டு அங்கிருந்து அவர் புறப்பட்டுவிட்டார். அவ்விதம் புறப்பட்டவர் தான் மறுநாள் காலையில் அந்தக் கிராமத்துக்கு வந்துசேர்ந்தார்.
ஒரு கூரை வீடு.. அதன் எதிரில் வயது முதிர்ந்து மூதாட்டி ஒருவர் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அங்கே போய்க் குதிரை நின்றது. அந்த மூதாட்டி நிமிர்ந்து பார்த்தார். மருதுபாண்டியரின் கம்பீரமான தோற்றம் அம்மூதாட்டியின் மனதில் அன்பை ஏற்படுத்தியது.
எனவே அவர், “யாரப்பா நீ… என்ன வேண்டும் உனக்கு?“ என்று கேட்டாள்.  “அம்மா எனக்குப் பசியாக இருக்கிறது…. தாகமாகவும் இருக்கிறது ஏதாவது இருந்தால் கொடுங்கள்!“ என்றார் மருதுபாண்டியர்.
“ராத்திரி தண்ணீரில் போட்டு வைத்த பழையசோறு உள்ளது… வா… போடுகிறேன்..“ என்று சொல்லிக்கொண்டே மூதாட்டி, மருதுபாண்டியரைத் தன் குடிசைக்குள் அழைத்துச் சென்றாள். சொன்னதுபோலவு அன்பாக உபசரித்தார்.
“அம்மா இரவுமுழுவதும் நான் தூங்கவில்லை… இங்கே மறைவாக ஓர் இடம் கிடைத்தால்… குதிரையைக் கட்டிப்போட்டுவிட்டு தூங்கலாம் என்று பார்க்கிறேன்“ என்றார்.
“வீட்டுக்குப் பின்னால் கொட்டகை உள்ளது. அங்கே குதிரையைக் கட்டிப்போட்டுவிட்டுப் படுத்துக்கொள்… யாரும் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள். குதிரைக்கம் தீனிபோடுகிறேன்..! என்றார் மூதாட்டி.
மருதுபாண்டியருக்கு ராஜபோஜனத்தைவிட அந்தப் பழையசோறும், பண்பாடும் மிகவும் உயர்ந்ததாகத் தெரிந்தது. அந்த மூதாட்டிகொடுத்த ஓலைப்பாயை வாங்கிக்கொண்டு பின்பக்கதில் குதிரையைக் கட்டினார். அயர்ந்து தூங்கினார். கண் விழித்தபோது சூரியன் உச்சத்தில் இருந்தான்.
அந்தக் கூரைவீட்டில் சாப்பிட்ட சாப்பாடும் ,தூங்கின தூக்கமும் மருதுபாண்டியருக்கு உடலிலும் மனதிலும் உற்சாகத்தைக் கொடுத்தது.  நன்றியுணர்வுடன் மூதாட்டியைப் பார்த்து “இவர்கள் காட்டிய அன்புக்கு உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாது“ என நினைத்துக்கொண்டார். “அம்மா.. உங்கள் வீட்டில் ஒரு எழுத்தாணி இருந்தால் கொண்டு வாருங்கள்“ என்று கேட்டார்.
“என் பிள்ளைகள் ஒரு விசேசத்துக்கு வெளியூர் சென்றுள்ளனர். அதெல்லாம் அவர்கள் எங்கு வைத்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது“ என்றார் மூதாட்டி.
“சரி.. பரவாயில்லை“ என்று கூறிய மருதுபாண்டியர், குதிரைக்காரனைக் கூப்பிட்டு  அந்த வீட்டுக் கூரையிலிருந்து ஒரு பனை ஓலையும், பக்கத்து வேலியிலிருந்து  ஒரு முள்ளையும் எடுத்துக்கொண்டு வா! என்றார்.
குதிரைக்காரன் அவர் சொன்னதுபோல செய்தான்.“இந்தக் கிராமத்தை இந்த மூதாட்டிக்கே கொடுக்கிறேன். இனி இந்தக் கிராமம் முழுவதும் மூதாட்டிக்கு சொந்தமானது.“ என்று எழுதிக் கையெழுத்திட்டார். முள்ளால் எழுதிய அந்த தர்ம சாசனத்தை மருதுபாண்டியர் மூதாட்டியிடம் கொடுத்தார்.
பிறகு, “அம்மா! சிவகங்கை சமஸ்தான அதிகாரிகளிடம் இதை நீங்கள் கொண்டுபோய்க் கொடுத்தால் உங்களுக்கு ஏதாவது அனுகூலம் கிடைக்கும்!“ என்று சொல்லிவிட்டுக் குதிரைமீது ஏறிச் சென்றுவிட்டார்.
“வெளியூர் சென்ற பிள்ளைகள் திரும்பிவந்ததும் இதை எடுத்துக்கொண்போய் சமஸ்தானத்தில் காட்டலாம்“ என்று மூதாட்டி நினைத்தார். ஆனால் அதற்குள், பகைவர்கள் பிடித்து சிறையில் அடைத்துவிட்டார்கள். நீண்டகாலம் கழித்து அவருடைய கடைசிக் காலத்தில் “உங்களுடைய கடைசிவிருப்பம் என்ன என்று சொல்லுங்கள்!“ என்று கேட்டார்கள்.
அப்போது மருதுபாண்டியர் என்னசொன்னார் தெரியுமா?
“நான் யார்யாருக்கு எந்தெந்த கிராமத்தை எழுதிக்கொடுத்திருக்கிறேனா, அதெல்லாம் அவர்களுக்குச் சொந்தமாக்கவேண்டும். இதுதான் என் பிரார்த்தனை. இதைத்தவிர வேறு விருப்பம் எதுவும் இல்லை“ என்று தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் அவரது விரோதிகளுக்கே ஒருமாதிரியாகிவிட்டது. அவரது நன்றியுணர்வுக்கு மரியாதையளித்து அவரது இறுதி விருப்பத்தை நிறைவேற்றினர்.
“மருதுபாண்டியர் கொடுத்த பொருட்களையெல்லாம் உரியவர்களுக்கு வழங்கப்படுகிறது!“ என்று கேள்விப்பட்ட அந்த மூதாட்டி தன்னிடமிருந்த ஓலையைக் கொடுத்தனுப்பிப்பார்த்தாள். அந்தக் கிராமம் அவளுக்குக் கிடைத்தது. அப்படிக் கிடைத்த கிராமம் தான் பிறகு ” பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல்“ என்ற பெயரைப் பெற்றது.
தன்வீட்டில் பழைய சோறு சாப்பிட்டது மருதுபாண்டியர் என்ற விசயமே அந்த மூதாட்டிக்கு அதன்பிறகுதான் தெரியவந்ததாம். கையில் கட்டுப்போட்டிருந்த நிலையிலும் கூரையிலிருந்து எடுத்த ஓலையில் முள்ளினாள் முகமலர்ச்சியோடு மருதுபாண்டியர் எழுதிய காட்சி  மூதாட்டியின் நினைவில் நிழலாடிது. 

அன்று இதே நாளில்....

புதன், 23 அக்டோபர், 2013

124 கிளைகளைக் கொண்ட பனைமரம்!


தர்மபுரி அருகே பண்ணந்தூரில் உள்ள 124 கிளைகளைக் கொண்ட பனை மரம்.

நிழற்படத்தை வழங்கியவா்- பெ.சிவசங்கரி. 
முதலாமாண்டு  வணிகவியல்துறை
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு.

சாதனை படைத்த பெண்கள்

எல்லாத் துறைகளிலும் பெண்கள் வளர்ந்துவரும் இன்றைய சூழலில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பெண்களின் வளர்ச்சி நிலை குறித்து பாடங்கள் அமைந்துள்ளன. என் கண்ணில் பட்ட சாதனை படைத்த பெண்களை கீழே நிழற்படமாக்க கொடுத்துள்ளேன். 








தொடர்புடைய இடுகைகள்


செவ்வாய், 22 அக்டோபர், 2013

இன்று அ.மாதவையா நினைவுதினம்.

. மாதவையா (ஆகஸ்ட் 161872 - அக்டோபர் 221925) தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர்பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர்ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.
. மாதவையாதிருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார்சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892 இல் முதல் மாணவராக முடித்து, பின்னர் அக்கல்லூரியிலேயே ஆசிரியராக பணிபுரிந்தார்.
அக்காலத்தில் இருந்த அவர் குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே (1887) மாதவையாவுக்கு திருமணம் செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தை நடத்துவதற்காக, உப்பு சுங்க இலாகா (Salt and Abkari department) நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspector ஆக தற்போது ஆந்திராவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் தெலுங்குமொழியினையும் கற்றறிந்தார்.
மாதவையா தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903ஆம் ஆண்டு முத்துமீனாக்ஷி என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.
1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும்1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது1925 ஆம் ஆண்டில் பஞ்சாம்ருதம் என்ற பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை 1924 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா மரணமடைந்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். அன்று, தன் ஐம்பத்தி மூன்றாம் வயதில், மாரடைப்பால் காலமானார்.

நாவல்
·         பத்மாவதி சரித்திரம் (1898)
·         முத்துமீனாட்சி (1903)
·         விஜயமார்த்தாண்டம் (1903)
·         Thillai Govindan (1903)
·         Satyananda (1909)
·         The story of Ramanyana (1914)
·         Clarinda (1915)
·         Lieutenant Panju (1915)
·         Markandeya (1922)
·         Nanda (1923)
·         Manimekalai (1923)
சிறுகதை
·         Kusika's short stories - இரண்டு பாகங்களாக 1916 இலும், 1923-24இலும் வெளிவந்தன.
·         குசிகர் குட்டி கதைகள் (ஆங்கிலத்திலிருந்து . மாதவையாவால் தமிழாக்கம் செய்யப்பட்டவை) (1924)
நாடகம்
·         உதயலன் (ஷேக்ஸ்பியர் எழுதிய ஒத்தெல்லோ நாடகத்தின் தமிழாக்கம்) (1903)
·         திருமலை சேதுபதி (1910)
·         மணிமேகலை துறவு (1918)
·         ராஜமார்த்தாண்டம் (1919)
·         பேரிஸ்டர் பஞ்சநாதன் (1924)
கவிதை
·         Poems (20 கவிதைகள்) (1903)
·         Dox vs Dox poems (1903)
·         பொது தர்ம சங்கீத மஞ்சரி (1914)
·         The Ballad of the penniless bride (1915)
·         புதுமாதிரி கல்யாணப் பாட்டு (1923)
·         இந்திய தேசிய கீதங்கள் (1925)
கட்டுரை
·         Thillai Govindan's Miscellany (1907)
·         ஆசார சீர்திருத்தம் (1916)
·         சித்தார்த்தன் (1918)
·         பால வினோத கதைகள் (1923)
·         பால ராமாயணம் (1924)
·         குறள் நானூறு (1924)
·         Dalavai Mudaliar (1924)
·         தளவாய் முதலியார் குடும்ப வரலாறு (1924)
·         தக்ஷிண சரித்திர வீரர்கள் (1925)
இதைத் தவிர தமிழில் சில கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவை பஞ்சாமிர்தம் என்ற இதழில் 1924 முதல் 1925 வரை வெளிவந்தன. 
அதைப் போலவே ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன.

 (தரவுகளுக்கு நன்றி - தமிழ்விக்கிப்பீடியா)