வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


செவ்வாய், 19 மார்ச், 2013

சின்னச் சின்னத் தீப்பொறிகள்.


ஈழத்தமிழர்களுக்காக இளைய தலைமுறையினர் செய்துவரும் போராட்டங்களை சில அரசியல்வாதிகள் அரசியலாக்கப்பார்க்கின்றனர்.
சில ஊடகங்கள் காசாக்கப்பார்க்கின்றன.
இன்று நேற்று ஏற்பட்டதல்ல இந்தக் கோபம்.

நெடுங்காலமாகவே  சிறிது சிறிதாய் சேர்த்துவைத்த தீப்பொறிகள் இவை.

அதற்கான சான்று..



நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்
ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு
ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள்
என் தாய்.

பள்ளிகளின்
வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்ட
ஆங்கிலச் சீமாட்டியிடம்
அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள்
என் தாய்.

ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும் என்னை
உள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள்
என் தாய்.

இசை மன்றங்களின்
குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்
சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள்
நுளையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள்
என் தாய்.

டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி

என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட என் தாய்

அடைக்கப்பட்ட சிறையின் பெயர்
டெல்லி!

தேசியக் கொடியாட்சி
என்ற பெயரில் – இந்தியத்
தேசங்களின் மீது
கொடிய ஆட்சி
 

ஆளும் கொடிகள்
வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை

சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
என் – சரித்திரச் சாலையை

அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

நான்

பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!

இன்று நான்

இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

நான்

சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!

ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்

அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்

அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை

தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி

செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……
 

என்பார் கவிஞர்.தணிகைச்செல்வன் . தற்போது தன் இனம், மொழி, நாடு குறித்த சிந்தனை இளைய தலைமுறையினரிடம் ஏற்பட்டிருப்பருப்பது வரவேற்கத்தக்கதாகவுள்ளது.



எல்லா ஆரம்பத்துக்கும் ஒரு முடிவு உண்டு!
எல்லா முடிவுக்கும் ஒரு ஆரம்பம் உண்டு!

என்பதை நடந்துமுடிந்த இனப்படுகொலையும்
நடந்துகொண்டிருக்கும் மாணவர் போராட்டமும் உணர்த்துகின்றன.
            
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
      ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே !

என்ற மகாகவி பாரதியின் வாக்கை மனதில் கொண்டு, நடக்கும்,இந்தப் போராட்டங்கள் எவ்விதமான உள்நோக்கங்களும் இன்றி, இனப்பற்று மற்றும் மொழிப்பற்றை மட்டுமே அடித்தளமாகக்கொண்டு நடந்துவருகின்றன என்பதை மாநில, மத்திய அரசுகள் உணர்ந்து மாணவர்களின் குரலைச் செவிமடுத்து அதை எதிரொலித்தால்தான் இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என்பதை அரசு மட்டுமின்றி நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

புதன், 13 மார்ச், 2013

முதல் ஆசிரியரும் & இரண்டாவது பெற்றோரும்.





Parents are first teacher
Teachers are second Parents என்றொரு பொன்மொழி உண்டு.

ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோரே முதல் ஆசிரியர்கள்; ஆசிரியர்களே இரண்டாவது பெற்றோர்கள். ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்த்தவுடன் தன் கடமை முடிந்துவிட்டது எனப் பெற்றோரோ, அல்லது பாடத்திட்டத்தை முடித்து மதிப்பெண் வாங்க வைத்துவிட்டால் போதும் என ஆசிரியரோ நினைத்தால், தகுதியான மாணவர்களை உருவாக்க முடியாது. மாணவர்கள் கற்க வேண்டிய அடிப்படைப் பண்புகள் பல உள்ளன. ஒரு காலத்தில் புத்தகங்களும் ஆசிரியர்களும் மட்டுமே அறிவின் வாயில்களாக இருந்த நிலை மாறி இன்று செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் விரல் நுனியில் அறிவு வளங்கள் கிடைக்கின்றன. என்றாலும் ஏன் கற்கவேண்டும்? எப்படிக் கற்கவேண்டும்? கற்றபின் என்ன செய்யவேண்டும்? கற்ற கல்வியை எவ்வாறு கடைபிடித்த நிற்கவேண்டும் என்ற கேள்விகளுக்கான பதில்களை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

 கற்க கசடற என்ற குறளில் எங்கும் துணைக்கால் இல்லை அதனால் வள்ளுவர் கற்பதற்கு யாரின் துணையும் தேவையில்லை எனக் கருதினார் என்று, சிலர் விளக்கம் சொல்வதுண்டு. ஆனால் அனுபவமுள்ள எந்த ஆசிரியரும்  மாணவனின் வெற்றிக்கு தான் தான் காரணம் என்று சொல்லமாட்டார்கள். அதுபோல நல்ல மாணவர்களும் இந்த வெற்றிக்கு பெற்றோரும் ஆசிரியரும் மட்டுமே காரணம் என்று சொல்லாமல் இருக்கமாட்டார்கள்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது (குறள்-68)

மாணவர்கள் தம்மைவிட அறிவுடையவர்களாக இருப்பது தமக்கு மட்டுமல்ல இந்த மாநிலத்துக்கே இனிது என்று கருதுவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் இயல்பு.

அதே நேரம் வகுப்பறைகளைக் கடந்தும் வாழ்க்கை உள்ளது என்பதைப் புரியவைக்கவேண்டும். மாணவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய, வளர்த்துக்கொள்ளவேண்டிய நற்பண்புகள் சிலவற்றைக் காண்போம்.

1. படைப்பாக்கத்திறன் (Creativity):

எல்லா மாணவர்களிடமும் படைப்பாக்கத்திறன் மறைந்துள்ளது. மதிப்பெண், வேலைவாய்ப்பைவிட படைப்புத்திறன் மேலானது என்பதை அவர்கள் உணரும்போது அவர்கள் வெற்றிபெறுவார்கள். சொன்ன வேலையை இயந்திரங்கள் கூட செய்துவிடும் படைப்புத்திறன் எல்லோரிடமும் இருந்தாலும் சிலர் மட்டுமே அதை வெளிப்படுத்துகிறார்கள்.

2. மொழிப்பற்று (Language Pride)

மனிதன் மற்ற உயிரினங்களை விட உயர்ந்து நிற்பது மொழியால் மட்டுமே. தாய்மொழி என்பது பண்பாட்டு அடையாளமாகும். "தாய்மொழி மீது பற்று வை, பிற மொழிகளைக் கற்று வை" என்பதே சரியான அணுகுமுறை. எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்கலாம், ஆனால் தாய்மொழியை நேசிப்பது மிக அவசியம்.

3. சுய தேடல் (Self-Discovery):

அறிவைத் தன்புத்தி, சொல்புத்தி என இரண்டாகப் பிரிக்கலாம். தன்புத்தி என்பது சுய தேடலுக்கு அடிப்படை. "நாம் யார்? நம் திறன் என்ன? எதிர்காலத்தில் என்னவாகப் போகிறோம்?" என்ற தேடலே ஒருவரை உலகிற்கு அடையாளப்படுத்தும்.

4. தன்னம்பிக்கை (Self-Confidence):

"தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" என்றார் வள்ளுவர். பயிற்சியும் முயற்சியும் தன்னம்பிக்கையைச் சார்ந்தே இருக்கின்றன. ஒரு மாணவன் வெற்றி பெற தன்னம்பிக்கை மிக அடிப்படைத் தேவையாகும்.

5. தனித்துவ ஆற்றல் (Unique Ability):

ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்துவமான ஆற்றல் இருக்கும். 'பசித்திரு, தனித்திரு, விழித்திரு' என்ற கோட்பாட்டின்படி, புதிதாக ஒன்றைக் கற்க ஆர்வத்தோடும் (பசித்திரு), மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்துத் தெரிவதிலும் (தனித்திரு), எப்போதும் விழிப்புணர்வோடு தேடலில் ஈடுபடுவதிலும் (விழித்திரு) மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

6. ஆக்கபூர்வமான சிந்தனை (Critical Thinking):

வாழ்க்கையின் நிகழ்வுகளை மற்றவர்கள் பார்க்காத ஒரு கோணத்தில் பார்ப்பது அவசியம். "இடுக்கண் வருங்கால் நகுக" என்ற வள்ளுவர் வாக்குப்படி, துன்பமான சூழலையும் எதிர்கொண்டு அதை மாற்றியமைக்கும் சிந்தனைத் திறன் மாணவர்களுக்குத் தேவை. வாய்ப்புகளில் உள்ள பிரச்சனைகளைக் காணாமல் பிரச்சனைகளுக்குள் உள்ள வாய்ப்புகளைக் காண்பவர்களாக மாணவர்கள் வளரவேண்டும்.

7. விரைவில் மீளும் திறன் (Resilience):

வாழ்க்கையில் கீழே விழுவது முக்கியமல்ல, விழுந்த பிறகு எவ்வளவு விரைவாக மீண்டு எழுகிறோம் என்பதே முக்கியம். காட்டில் வளரும் மரங்கள் தண்ணீருக்காகத் தேடித் தம் வேர்களைப் பரப்புவது போல, மாணவர்களும் சவால்களை எதிர்கொண்டு தங்களைத் தாங்களே மீட்டெடுத்துக் கொள்ளும் திறனை வளர்க்க வேண்டும்.

8. ஊக்குவிப்பு (Motivation):

மாணவர்களிடம் இருக்கும் சிறந்த பண்புகளைக் கண்டறிந்து அவர்களைப் பாராட்ட வேண்டும். அதே சமயம், அவர்களுக்குள்ளேயே ஒரு சுய ஊக்குவிப்பை (Self-motivation) வளர்க்க வேண்டும். மனச்சோர்வு, உடல்சோர்வு ஏற்படும்போதும், முடியாது என்று தோன்றும்போதும் தங்களைத் தாங்களே ஊக்குவித்துக்கொள்ளும் இயல்புகளை மாணவர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.

9. உறுதி (Persistence):

எந்தவொரு செயலிலும் உறுதி அவசியம். "பந்திக்கு முந்து, படைக்கு பிந்து" என்றொரு பழமொழிக்கு உண்டு. 'வரிசையில் முதல் ஆளாக நில், போர்க்களத்தில் வெற்றி பெற்று வீரனாகக் கடைசியில் திரும்பி வா' என்பதே உண்மையான பொருள். உடல் உறுதியை விட உள்ள உறுதி மேலானது.

10. ஆர்வம் (Curiosity):

மாணவர்கள் ஒவ்வொரு நாளும் புதியவற்றைக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்க வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகளைக் கேட்க வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்களிடம் கற்பிக்கும் ஆசிரியர் தான் திட்டமிடாத பல நற்கருத்துகளையும், அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வார்.

11. கேள்வி கேட்டல் (Questioning):

கேள்வி கேட்கத் தயங்கக் கூடாது. கேள்வி கேட்கும்போது நாம் முட்டாள்போல தெரியலாம், கேள்வி கேட்காவிட்டால் வாழ்நாள் முழுவதும் முட்டாளாக இருக்க நேரிடும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

12. நகைச்சுவை உணர்வு (Sense of Humor):

தொல்காப்பியர் மெய்ப்பாடுகளில் 'நகை'யை முதலாவதாகக் கூறுகிறார். இன்ப துன்பங்களைச் சமமாக எடுத்துக்கொண்டு, எதையும் நகைச்சுவையுடன் அணுகும் பண்பு வாழ்க்கையை எளிதாக்கும். "இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர்" என்பதே இதற்குச் சான்று.

13. சகிப்புத்தன்மை (Endurance):

வாழ்க்கையில் எல்லாச் சூழலையும் நம்மால் மாற்ற முடியாது. சில நேரங்களில் சகிப்புத்தன்மையுடன் வாழ்வதையும், சமூகத்தோடு இணைந்து போவதையும் மாணவர்கள் பழகிக் கொள்ள வேண்டும். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்பதை உணரவேண்டும். அடுத்தவர் செய்யும் தவறுகளுக்கு நீதிபதியாகவும் நாம் செய்யும் தவறுகளுக்கு வழக்கறிஞர்களாகவும் இருப்பது தவறு என்பதை உணர்ந்து சகிப்புத் தன்மையுடன் வாழப் பழகவேண்டும்.

14. நம்பகத்தன்மை (Reliability):

ஒருவர் மீது மற்றவர்கள் வைக்கும் நம்பிக்கையே அவரின் மிகப்பெரிய சொத்து. பொய் சொல்லாமல், சொன்ன சொல்லைக் காப்பாற்றும் நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்வது அவசியம். சொல்லுவது யாருக்கும் எளிது என்பது வள்ளுவர் வாக்கு. சொல்லுக்கும் செயலுக்கும் இரண்டிலும் நம்பகத்தன்மை பெற்றால் மட்டுமே இந்த சமூகம் ஒருவரை நம்பும் என்பதை உணரவேண்டும்.

15. உற்சாகம் (Enthusiasm):

எப்போதும் உற்சாகத்தோடு இருப்பது உடல் மற்றும் மன நலத்திற்கு நல்லது. அதிகாலையில் எழுதல், உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகள் அன்றைய நாளை உற்சாகமாக மாற்றும். நல்ல தூக்கம் நம் ஆற்றலுக்கான எரிபொருள். ஆனால் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழப்பான் என்பதை மறக்கக்கூடாது. நம் உற்சாகமே மகிழ்ச்சியாக வெளிப்படுகிறது.

16. பொது மனப்பான்மை (Civic Mindedness):

சுயநலமின்றிப் பொது நோக்கத்தோடு சிந்திக்கும் பண்பு ஒருவரை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். தலைமைப்பண்புள்ளவர்கள் பொது நோக்கோடு சிந்திப்பார்கள்.

17. சுய ஒழுக்கம் (Self-Discipline):

          "தன் நெஞ்சறிவது பொய்யற்க" என்றார் வள்ளுவர். வகுப்பறையில் மட்டுமல்லாமல் வாழ்வின் எல்லா நிலைகளிலும் சுய ஒழுக்கம் அவசியம். ஜப்பான் போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கு அந்நாட்டு மக்களின் சுய ஒழுக்கமே காரணமாகும்.

18. பச்சாதாபம் (Empathy):

எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்வதே மனிதாபிமானம். "எல்லார்க்கும் எல்லா உயிர்க்கும்" என்ற பொதுமைப் பண்பை மாணவர்கள் வளர்க்க வேண்டும். ஜீவகாருண்யத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் வேறுபாட்டை உணரவேண்டும். கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு என்று ஏன் திருவள்ளுவர் உரைத்தார் என்பதை உணரவேண்டும்.  

19. தலைமைத்துவம் (Leadership):

          தலைமை என்பது அதிகாரம் அல்ல. அது கடமை என்று உணரவேண்டும். காட்சிக் கெளியவராக கடுஞ்சொல்லன் இல்லாதவராக இருத்தல் அதன் அடிப்படையாகும்.

20. துணிவு (Courage):

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, எதற்கும் அஞ்சாமல் துணிவுடன் உண்மையை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்க்க வேண்டும். அதே நேரம் அவரவர் மனசாட்சிக்கு அஞ்சி நடக்கவேண்டும்.

21. அழகுணர்ச்சி (Sense of Beauty):

இயற்கையின் அழகையும் கலைகளையும் ரசிக்கக் கற்றுத் தர வேண்டும். ஒரு சிற்பிக்கு, கல்லுக்குள் இருக்கும் சிலை தெரிவது போல, மாணவர்களுக்குத் தங்களைச் சுற்றியுள்ள அழகை ரசிக்கும் பண்பு அவசியம்.

22. வியப்புணர்ச்சி (Sense of Wonder):

உலகில் வியப்படைய நிறைய விஷயங்கள் உள்ளன. கடந்த கால வரலாறு, நிகழ்காலக் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் வியப்புடன் நோக்கும்போது கற்றல் எளிதாகும்.

23. அறிவு வளம் (Resourcefulness):

கல்வி என்பது ஒரு பாடத்தோடு முடிந்து விடுவதல்ல. பல்வேறு துறைகள் சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதே உண்மையான வளம். நமக்கு எதுவும் தெரியாது என்று தெரிந்துகொள்ள நிறைய தெரிந்துகொள்ளவேண்டும். அதேநேரம் தெரியாததைத் தெரியாது என்று ஒப்புகொள்வதே பெருமை.

24. பணிவு (Humility):

"பணியுமாம் என்றும் பெருமை" என்பதற்கேற்ப, பணிவுடன் இருப்பதே தலைமைத்துவத்தின் முதல் பண்பு. உலகத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தித் தலைமைப் பண்பை வளர்க்கலாம். பணிவு ஒருவருக்குச் சிறந்த அணிகலன். எவ்வளவு உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும் பணிவுடன் இருப்பது ஒருவரைப் போற்றத்தக்கவராக மாற்றும்.

கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் மட்டுமல்ல. சமூகம், இயற்கை மற்றும் சுய ஒழுக்கம் சார்ந்த விழிப்புணர்வே உண்மையான கல்வி. லெபனான் நாட்டுத் தத்துவ ஞானி, கலீல் ஜிப்ரான் கூறியது போல, குழந்தைகளுக்கு உங்கள் அன்பைத் தரலாம், ஆனால் உங்கள் எண்ணங்களைத் திணிக்கக் கூடாது. அவர்கள் தமக்கான சுய சிந்தனையோடு வளர வழிவகை செய்ய வேண்டும். இந்த உலகமே ஒரு பெரிய பாடசாலை, அதில் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பதே சிறந்த வாழ்வாகும்.










Creativity – படைப்பாக்கத் திறன்.
Language debit – மொழிப் பற்று
Self-discovery – சுய தேடல்
Self-confidence - தன்னம்பிக்கை
Unique ability – தனித்துவ ஆற்றல்
Critical thinking – வித்தியாசமான சிந்தனை
Resilience – விரைவில் மீளும் திறன்
Motivation - ஊக்குவிப்பு
Persistence – உறுதி
Curiosity – ஆர்வம்
Question asking – கேள்வி கேட்டல்
Humor – நகைச்சுவை
Endurance – சகிப்புத்தன்மை
Reliability – நம்பகத்தன்மை
Enthusiasm – உற்சாகம்
Civic mindedness – பொது மனப்பான்மை
Self – discipline – சுய ஒழுக்கம்
Empathy – பச்சாதாபம்
Leadership – தலைமைத்துவம்
Compassion – ஈவிறக்கம்
Courage – துணிவு
Sense of beauty – அழகுணர்ச்சி்
Sense of wonder – வியப்புணர்ச்சி
Resourcefulness – வளம்
Spontaneity – தன்னிச்சையான இயல்பு
Humility – பணிவு
Humanity – மனிதாபிமானம்
Social awareness – சமூக விழிப்புணர்வு



வெள்ளி, 1 மார்ச், 2013

காதலின் எதிரிகள்





பெற்றோர், அண்ணன், தம்பி, மாமன், மச்சான், சாதி, சமயம் எனக் 
காலகாலமாகவே காதலுக்கு ஆயிரம் எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. இவையெல்லாம் 

உண்மையில் காதலுக்கு எதிரிகளே அல்ல காதலின் உண்மையான எதிரி காதலர்கள் தான்.

பெற்றோர்களெல்லாம் காதலை ஏன் எதிர்க்கிறார்கள்?
சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது..
என்பது பெற்றோரின் ஒட்டுமொத்தக் குரலாக இருக்கிறது.

குழந்தைப் பருவத்திலிருந்து எப்பொழுது என்ன வேண்டும் என்று பார்த்துப் பார்த்து 

அவர்கள் கேட்காமலேயே செய்துவைத்த தமக்குத் தெரியாதா இவர்களுக்கு ஏற்ற 

வாழ்க்கைத் துணையை எப்போது, எப்படித் தேடித்தருவது? என்று, என்பது பெற்றோரின் குரலாகவுள்ளது.

காதலுக்குக் கண்கள் இல்லை!

நாங்கள் சாதி, மதம், உயர்வு, தாழ்வு எதுவும் பார்க்கமாட்டோம் ஆனால் எங்கள் பெற்றோர் 

இவையெல்லாம் பார்க்கிறார்கள் என்பது பிள்ளைகளின் வாதமாகவுள்ளது.

எல்லாம் உங்கள் எதிர்கால நலன் கருத்தித்தானே பார்க்கிறோம் என்பது பெற்றோரின் எண்ணமாகவுள்ளது.

கொடிய விலங்குக்கோ, கள்வர்களுக்கோ கூட அஞ்சாத காதலன் பெற்றோரிடம் தம் 

காதலைச் சொல்வதற்கு அஞ்சுகிறான். அது பெற்றோர் மீது இருக்கும் அச்சமல்ல! 

அவர்கள் செய்த நன்றியை நாம் மறந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வே காரணமாகும்!

காதலுக்காகப் பெற்றோரைத் தூக்கியெறியும் பிள்ளைகளில்
எத்தனைபேர் பெற்றோருக்காகக் காதலைத் தூக்கிப்போடுகின்றனர்?

தம் பிள்ளை நமக்காக காதலையே தூக்கிப்போட முடிவு செய்துவிட்டது என்பதை அறிந்துமா பெற்றோர் அவர்களைப் பிரித்துவைப்பார்கள்.

காதலிப்பதோ அவர்களையே திருமணம் செய்வதோ ஒன்றும் பெரிய சாதனையல்ல!

பெற்றோரின் ஏற்போடு காதலரைக் கைபிடிப்பதே பெரிய சாதனையாகும்.


பெற்றோரிடம் முறைப்படி சொன்னால், காத்திருந்தால் பெற்றோர் காதலுக்கு மரியாதை செய்வார்கள்.

காதலுக்கு மரியாதை செய்த பெற்றோரைப் பற்றிய சங்கப்பாடல் ஒன்றைக் காண்போம்..

(தலைவன் சான்றோரைத் தலைவியின் பெற்றோரிடம் மணம் பேசி வர அனுப்பினான்

தன்பெற்றோர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, “தலைவன் வரைவை 

பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாகஎன்று தோழி கூறியது.)

அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
                                             குறுந்தொகை 146. 
                                             வெள்ளிவீதியார்.


தலைவி - தோழி நீ நீடு வாழ்க!
நம் ஊரில் பிரிந்தோரைச் சேர்ந்து வைப்போர் உண்டா?

தோழி - தலைவன் சான்றோரை உன் பெற்றோரிடம் மணம் பேசி வர அனுப்பினான், நம் 
பெற்றோர் மறுப்பாரோ என்று நீ அஞ்சவேண்டிய தேவையில்லை தலைவன் வரைவை பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக

தலைவன் மணம்பேச அனுப்பிய சான்றோர் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?
வயது முதிர்ந்தோர், அவர்களுக்குத் தலைமுடியெல்லாம் நரைத்திருந்தது, தலைப்பாகை அணிந்திருந்தனர், உடல்தளர்ச்சி நீங்க கம்பு ஊன்றியவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களோடு பேசிய நம் பெற்றோரும் மிக்க மகிழ்வோடு நன்று நன்று என்று ஏற்றுக்கொண்டனர். நம் ஊரில் பிரிந்தோரைச் சேர்ந்து வைப்போர் உண்டு என்று தோழி தலைவியிடம் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

  • இப்போதெல்லாம் காதலர் தினம் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் பெற்றோருக்குத் தெரியாமல் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ விடுப்பு எடுத்துவிட்டு பூங்காக்களில் சில ஆண்களும், பெண்களும் காதலைக் கொண்டாடுகிறோம் என்று கூடுகிறார்கள். சில காதல் எதிர்பாளர்கள் அவர்களை உங்கள் காதல் உண்மை என்றால் இதோ தாலி இப்போதே கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். அவர்களும் அப்போது தப்பி்க்க தாலிகட்டிக்கொண்டு போகும்போது அந்தத் தாலியை கீழே எறிந்துவிட்டுச் செல்கின்றனர். இதுதான் தற்காலக் காதலின் நிலை. இந்தக் காதலர்களா காதலை வாழவைக்கிறார்கள்?
         இந்தக் காதலர்கள் அல்லவா காதலின் முதல் எதிரிகள்??

தொடர்புடைய இடுகை..

மாமலையும் ஓர் கடுகாம்