வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தேடுபொறி

திருக்குறள் தேடுபொறி


ஆசிரியர்தினம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிரியர்தினம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

ஆசிரியர் தின சிறப்புக் கவிதை



ஆசிரியர்களைப் போற்றுவோம்..
  
கண்டிப்பான ஆசிரியர்கள் உன்னைக் கண்டிப்பது
நீ துன்பப்படவேண்டும் என்பதற்காக அல்ல!
நீ..... உன் வாழ்நாளில்
வேறு யாராலும் கண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான்!

வேடிக்கையாகப் பேசும் ஆசிரியர்கள்
உன்னை மகிழ்விப்பது
நீ சிரிக்கவேண்டும் என்பதற்காக மட்டுமல்ல
உன்னைப் பார்த்து யாரும் சிரித்துவிடக்கூடாது..
சிரிப்புக்கு இடையே நீ சிந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான்!

எளிமையான ஆசிரியர்கள் எளிய ஆடையணிவது
தன்னடக்கத்தைக் காட்டுவதற்காக அல்ல!
வாழ்நாளில் நீ
எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்
பகட்டை விரும்பக்கூடாது என்பதற்காகத்தான்.

சில ஆசிரியர்கள் சொன்னதையே
மீண்டும் மீண்டும் சொல்வது நீ
தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல!
நீ வாழ்வில் மதிப்புடையனாக உயரவேண்டும் என்பதற்காகத்தான்!

இந்த உண்மையை உணர்வோம் நம் வாழ்வின் நீங்காத நினைவுச் சின்னங்களான ஆசிரியப் பெருமக்களைப் போற்றுவோம்..

கவிதையை எழுதியவர்.


வ. கீர்த்தனா
முதலாமாண்டு கணிதவியல்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

திருச்செங்கோடு.


தொடர்புடைய இடுகை

ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்

வியாழன், 5 செப்டம்பர், 2013

தினங்களை இப்படியும் கொண்டாடலாம்

             

இன்று ஆசிரியர் தினம். வழக்கமாக இந்தநாளில் நான் ஆசிரியர் குறித்த சிறப்புப் பதிவு இடுவதுண்டு. ஆனால் இன்று அப்படி எதுவும் இடவில்லை. இன்று மாணவர்களுக்கு முன்மாதிரியாக ஏதாவது செய்யலாம் என்ற எண்ணத்தில் எங்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தேன். நான் இரத்ததானம் செய்வதைப் பார்த்து, பல மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர். எடைகுறைவான மாணவர்களும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்ய முன்வந்தனர். சிலர் என் நண்பர் இரத்தம் கொடுக்கிறார் நானும் கொடுக்கவேண்டும் என அடம்பிடித்தனர். அவர்களிடம் உங்க பெற்றோரிடம் இதற்கு அனுமதி வாங்கினீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எங்கள் பெற்றோர் உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டார்கள் என்று சொன்னார்கள். இருந்தாலும் இரத்ததானம் செய்பவருக்கு குறைந்தது, 45கிலோவாவது எடை இருக்கவேண்டும் என அறிவுறுத்தி எடைகுறைவான மாணவர்களை, நீங்கள் வரும் நாட்களில் தானம் செய்யுங்கள் என ஆற்றுப்படுத்தி்னேன். பிறகு அவர்கள் அடுத்து இந்த முகாம் நடக்கும்போது தவறாது என்னை அழையுங்கள் என ஆர்வத்துடன் சொல்லிச்சென்றனர். 

பெற்றோரிடமும், இளம் தலைமுறையினரிடமும் ஏற்பட்டுள்ள இந்த  விழிப்புணர்வு வரவேற்புக்குரியது பாராட்டுதலுக்குரியது.



ஒரு ஆசிரியர் வகுப்பில் கூறும் அறிவுரைகளைவிடவும் அவரது செயல்பாடுகள் மாணவர்களைப் பெரிதும் சிந்திக்கவைக்கும்  என்பதை இன்றைய நாள் எனக்கு உணர்த்தியது.

பலர் தம் திருமண நாளிலோ, பிறந்தநாளிலோ இரத்ததானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல ஆசிரியர்களான நாம் இதுபோன்ற சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளை மாணவர்களுக்கு முன்மாதிரியாக செய்து ஆசிரியர் தினத்தைக் கொண்டாடலாமே..

திங்கள், 11 பிப்ரவரி, 2013

மாணவர்கள் வரைந்த ஓவியங்கள்


கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவி 

சௌ.பிரியதர்சினி 

அவர்கள் டாக்டர் 
இராதாகிருட்டிணன் அவர்களின் ஓவியத்தை அழகாக வரைந்து வந்தார் உற்று நோக்கியபோது அதிகாரத்துக்கு ஒரு குறள் என 133 குறட்பாக்களால் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது பாராட்டத்தக்கதாக இருந்தது. 



23.01.2013 அன்று கோவையில் பிஎஸ்ஜி (PSG CAS) கலை அறிவியல் கல்லூரியில் 

“இயன்றவரை இனிய தமிழில்“ 

என்ற தலைப்பில் 

உரையாற்றினேன். அப்போது 

நினைவுப்பரிசாக இந்த ஓவியத்தை வழங்கினார்கள். இந்த 

ஓவியத்தை இயற்பியல் துறை 

மூன்றாமாண்டைச் சார்ந்த 

மாணவர் ஆனந்த் அவர்கள் 

வரைந்தளித்தார். அவரது படைப்பாக்கத் 

திறன் கண்டு வியந்துபோனேன்.



(நீங்கள் வரைந்த ஓவியத்தையோ, உங்களுக்குத் தெரிந்த இளம் படைப்பாளிகளின் ஓவியத்தையோ இந்த வலையில் வெளியிட வேண்டுமா ஓவியத்தை gunathamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புக)




ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!

ஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!

அ எழுதச் சொல்லித்தந்தவர் ஆசிரியாராயினும் – அதை
அடி மனதில் பதியவைத்த அம்மாவும் ஆசிரியர்தான்!

மதிப்பெண் எடுக்கக் கற்றுத்தருபவர் ஆசிரியராயினும்
மதிப்போடு வாழச் சொல்லித்தரும் தந்தையும் ஆசிரியர்தான்!

அன்பு ஆழமானது என்று எடுத்துரைப்பவர் ஆசிரியராயினும்
அன்பின் ஆழத்தை உணர்த்தும் காதலியும் ஆசிரியர்தான்!

இன்பதுன்பங்களை அடையாளப்படுத்துபவர் ஆசிரியராயினும்
இன்பதுன்பங்களில் துணைநிற்கும் மனைவியும் ஆசிரியர்தான்!

சிரித்துவாழ வேண்டும் என்று பாடம் புகட்டுபவர் ஆசிரியராயினும்

சிரித்துக் கொண்டே இருக்கும் குழந்தையும் ஆசிரியர்தான்!

நட்பின் இலக்கணத்தை எடுத்தியம்பியவர் ஆசிரியராயினும்
நட்பின் இலக்கணமாய் திகழும் நண்பர்களும் ஆசிரியர்கள்தான்!

போராட்டம் என்றால் என்ன என்றுரைப்பவர் ஆசிரியராயினும்
போராட்டத்தை ஏற்படுத்தும் எதிரியும் ஆசிரியர்தான்!

இதுதான் ஒழுக்கம் என்றுரைப்பவர் ஆசிரியராயினும்
இதுதான் வாழ்க்கை என உணர்த்தும் யாவரும் ஆசிரியர்தான்!

நிலம், நீர், தீ, காற்று, வான்..
பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என நாம்

திரும்பிப்பார்க்க,
போலச்செய்ய,
தன்னம்பிக்கைகொள்ள,
தவறுகளைத் திருத்திக்கொள்ளத் துணைநிற்கும்,
இயற்கையின் ஒவ்வொரு கூறுகளும் கூட நமக்கு ஆசிரியர்தான்!


அதனால் இதுவரை.....
ஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்!

இன்றுமுதல்...
காலைக் கதிரவனுக்கும்,
புல்லின் பனித்துளிக்கும்,
பூத்துச் சிரிக்கும் மலருக்கும்,
துயிலெழுப்பும் பறவைகளுக்கும் காலை வணக்கம் சொல்வோம்!

விலங்குகளின் விவாதத்தையும்,
மழையின் சொற்பொழிவையும்,
காற்றின் கவிதையையும்,
செவிமடுத்துக் கேட்டு அவற்றிடம் வினாத் தொடுப்போம்!

தாவரங்களின் அழிவையும்,
மனிதனின் இழிவையும்,
இயற்கையின் பெருந்தன்மையையும்,
ஆராய்ந்து தேர்வு எழுதுவோம்!

இவ்வாறு நம்மைச்சுற்றிய மனிதர்களிடமும், இயற்கையின் கூறுகளிடமும் பாடம் கற்ற நாம் நம்மையே மதிப்பீடு செய்து பார்ப்போம்...

பாடம் பயிற்றுவோர் நமக்கு முழு நேர ஆசிரியர்கள்!
உறவுகள் நமக்கு வாழ்நாள் ஆசிரியர்கள்!
சமூகம் நமக்குப் பகுதிநேர ஆசிரியர்கள்!
நூலகங்கள் வாய் பேசாத ஆசிரியர்கள்!
பறவைகள் நம்மைப் பறக்கச் செய்த ஆசிரியர்கள்!
விலங்குகள் நம்மை மனிதனாக்கிய ஆசிரியர்கள்!
இயற்கையின் கூறுகள் நமக்கு என்றென்றும் ஆசிரியர்கள்! என்பது புரியும்.

இப்போது நமக்குத் தோன்றும்..
ஆசிரியர் தினம் கொண்டாடியது போதும் – இனி
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுவோம்! 
என்று!!


வாழ்க்கை என்னும் பள்ளியில் ஒவ்வொரு நாளும் ஓராயிரம் பாடங்களை தினம் கற்று வருகிறேன்,

21ஆண்டுகாலம் நான் வகுப்பறைகளில் கற்றதைவிட நூலகங்களில் கற்றவை அதிகம் - அதனால்

நூல்களும் எனக்கு ஆசிரியர்கள் தான்!
இத்தனை ஆண்டுகாலம் எத்தனையோ தேர்வுகள் எழுதியிருக்கிறேன் இருந்தாலும், மாணவர்களைப் போன்ற கேள்வித்தாள்களை நான் எங்கும் பார்த்ததில்லை – அதனால்
மாணவர்களும் எனக்கு ஆசிரியர்கள் தான்!

என்வாழ்வில் எத்தனை எத்தனை ஆசிரியர்கள்..!!!
எல்லோரும் உயர்ந்தவர்களே!
என்னை உயர்த்தியவர்களே!!

இருந்தாலும் இவர்களுள் மிக உயர்ந்த ஓர் ஆசிரியர் இருக்கிறார்...
ஆம் அவர்தான் “அனுபவம்“

அனுபவத்தைவிடப் மிகப் பெரிய ஆசிரியரை இதுவரை நான் கண்டதில்லை!

இத்தனை ஆசிரியர்கள் இருந்தாலும், நான்
ஆசிரியர் தினம் கொண்டாடுவதில்லை....
ஆசிரியர்களைத் தினம் கொண்டாடுகிறேன்!

அப்ப நீங்க..??

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

குரு வணக்கம்.










“ஆசிரியர்களிடம் மாணவர்கள் படிக்கிறார்கள்
ஆசிரியர்கள் மாணவர்களைப் படிக்கிறார்கள்“

“பெற்றோர்கள் குழந்தைகளை மட்டுமே உலகத்துக்குத் தருகி்ன்றனர்.
ஆனால் குருவோ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகிறார்.“

Þ ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.


இவர்….

(செப்டம்பர் மாதம் 5,ஆம் தேதி 1888ஆண்டில் - பிறந்தார்) சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.
திருத்தணியில் பிறந்த ராதாகிருஷ்ணன், தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர். இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1954ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் 42 டாக்டர் பட்டங்களைப் பெற்றவராவார். ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.



Ø ஒரு ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாகத் தம்பணியை நேசித்து அர்பணிப்பு உணர்வுடன் வாழ்ந்துகாட்டிய டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களை இவ்வேளையில் ஒப்புநோக்கி தம் பணியை சீர்தூக்கிப்ப பார்ப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்.

Ø தமது வாழ்க்கையை வடிவமைத்த, வடிவமைக்கும் ஆசிரியர்களை நன்றியுடன் எண்ணிப்பார்ப்பது மாணாக்கர்களின் கடமையாகும்.


-------------/\--/\-------------------/\--/\--------------------/\--/\--