வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நட்சத்திர இடுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்சத்திர இடுகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஜூன், 2011

இலவசங்கள் வேண்டாம் !!



இலவசம் என்ற சொல்லைக் கேட்டாலே இப்போதெல்லாம் கோபம் தான் வருகிறது. பத்து ரூபாய் மதிப்புள்ள ஒருபொருளை ஒருவர் நமக்கு இலவசமாகத் தருகிறார் என்றால் அதில் அவருக்கு எவ்வளவு இலாபம் இருக்கிறது என்றே இப்பொதெல்லாம் மனம் கணக்குப்பார்க்கிறது.

அரிசி இலவசம்
குடிதண்ணீர் 30 ரூபாய்!

தொலைக்காட்சி இலவசம்
மின்சாரம் 3 மணிநேரம் வராது!

மடிகணினி இலவசம்
இணைய இணைப்பு 1000 ரூபாய்!

இப்படி இன்னும் இன்னும் பலநூறு நகைச்சுவைகள் நாளுக்கு நாள் நடைமுறைக்கு வருகின்றன.

உடல் ஊனமுற்றவர்களைக் கூட இப்போதெல்லாம் அப்படிக் கூறாமல் மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்துவரும் இக்காலத்தில் ஏன் அரசு இலவசம் என்ற பெயரில் மக்களை ஊனமாமுற்றவர்களாக்குகிறது என்று தான் தோன்றுகிறது.

ஒரு அரசு இலவசமாகக் கொடுக்கவேண்டியது கல்வியும், மருத்துவமும் தான்.

கல்வியை விலைக்கு வாங்கிய ஒருவன் அதனை சொந்தநாட்டில் மட்டும் தான் விற்பனை செய்யவேண்டும் என்று சொல்ல அந்த அரசுக்கு எப்படித் தகுதி இருக்கமுடியும்..?

இங்கு படித்தான் வெளிநாட்டுக்குப் போய் உழைத்துக்கொட்டுகிறான் என்று புலம்புவதில் ஏதாவது பொருளிருக்கிறதா?

மருத்துவக் கல்வியை பணம் கொட்டிப்படித்தவரால் எப்படி இலவசமருத்துவம் பார்க்க முடியும்.

சிந்தித்தால் கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுத்தால் போதும்.
கல்வியை இலவசமாகக் கொடுக்கமுடியுமா..?

அரிசியிலிருந்து...... ஏதேதோ இலவசமாக் கொடுக்கமுடிந்த அரசால் ஏன் கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுக்கமுடியாது..?

“பசியோடு இருப்பவனுக்கு மீனை உணவாகக் கொடுப்பதைவிட
மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக்கொடுப்பதே சிறந்தது“
என்பது சீனப்பழமொழி.

எங்களுக்கு இலவசங்கள் வேண்டாம் !!
கல்வியை மட்டும் இலவசமாகக் கொடுங்கள் எங்கள் தேவைகளை நாங்களே நிறைவு செய்துகொள்கிறோம் என்பதே மக்களின் நிலைப்பாடாக இருக்கிறது.

கல்வியையே விலைகொடுத்து வாங்கும் இன்றைய சூழலில்,
வேலையை எப்படி கல்வித்தகுதியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கொடுக்கமுடியும்?
இன்றைய நிலையென்ன..?
பணம் கொடுத்தால்தான் வேலை, அரசியல்வாதிகளின் பரிந்துரையிருந்தால் தான் வேலை!

“வேலை வாய்ப்பு அலுவலகங்கள்“ என்ற பெயர்ப்பலகையைப் பார்த்தால் என் கண்ணுக்கு “வேலை ஏய்ப்பு அலுவலகங்கள்“ என்றே தெரிகிறது.

இலவசங்கள் எல்லாவற்றையும் நிறுத்தினால் மக்கள் மீது சுமத்தப்படும் வரி பாதிக்குப் பாதி குறையும்.


இன்று நேற்றல்ல சங்ககாலம் முதலாகவே இந்தச் சிக்கல் இருந்துவந்திருக்கிறது.

சங்கப்புறப்பாடல் ஒன்று...


முதியவர்கள் இறந்தபின்னர் வழிவழியாக வந்த அரசபதவிஏற்ற மன்னன் அதிகமான வரியை மக்கள் மீது சுமத்துவது என்பது மக்களிடம் பிச்சையெடுப்பதற்கு இணையானது!
அத்தகைய சிறப்பில்லாத ஆட்சியைச் சிறுமையோன் பெறின் அதில் பெருமையில்லை.
துணிந்து போரிடும் வலிமையும் முயற்சியும் உடையவன் பெறுவானேயானால் தாழ்ந்த நீரையுடைய வற்றிய குளத்தில் சிறிய தண்டாகிய வெண்ணிற நெட்டி கோடையில் உலர்ந்து சுள்ளி போல் மிகவும் நொய்மையுடையதாம். குற்றமற்ற வானில் ஓங்கிய வெண்கொற்றக்குடையையும் முரசையும் உடைய அரசரது ஆட்சியைப் பொருந்திய செல்வம் அதுவே. என்கிறது இப்புறப்பாடல். பாடல் இதோ..

மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்
பாறர வந்த பழவிறற் றாயம்
எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக்
குடிபுர விரக்குங் கூரி லாண்மைச்
5 சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே
மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள்
விழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர்
அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
10 நொய்தா லம்ம தானே மையற்று
விசும்புற வோங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்த ரரசுகெழு திருவே. (75)
புறநானூறு
75. சோழன் நலங்கிள்ளி
திணை: அது. துறை: பொதுமொழிக்காஞ்சி. சோழன் நலங்கிள்ளி
பாட்டு.

பாடல் வழியே..

• மகிழச்சி நிறைந்த மக்களைக் கொண்டதாக ஒருநாடு இருக்கவேண்டுமென்றால் வரிச்சுமையிருக்கக்கூடாது என்ற கருத்து எடுத்துரைக்கப்படுகிறது.
• மக்களிடம் அதிகமாக வரியை வசூலிப்பது என்பது பிச்சையெடுப்பதற்கு இணையானது என்ற கருத்து சுட்டப்பட்டுள்ளது.
( சோழன் நலங்கிள்ளி, காரியாற்றுத் துஞ்சிய நெடுங் கிள்ளியிடமிருந்து
உறையூரைத் தான் பெற்றுத் தான் அங்கே இருந்து அரசு புரிந்து வந்தான்.
வருகையில், ஒரு நாள் சான்றோர் சூழ விருக்கையில், அரசு முறையின்
இயல்புபற்றிப் பேச்சுண்டாயிற்று. மலர்தலை யுலகம் மன்னனை உயிராகக்
கொண்டிருத்தலை யுணர்ந்து அதற் கூறுண்டாகா வண்ணம் காத்தற்கண்
வரும் இடுக்கண் பலவற்றையும் நோக்க, அரசு முறை யென்பது எளிதன்று
என்பவர் பலராயினர். அக்காலை நலங்கிள்ளி, “அரசு முறை மூத்தோர்க்குப்
பின் அவர் வழிவரும் இளையோர் பால் முறைப்படி வரும் தாயமுறையினை
யுடைத்து. அதனை யெய்தினோன் இவ்வுலகிற் பெருஞ் சிறப்பெய்தி
விட்டதாகக் கருதி அளவிறந்த இறையினை விதித்துக் குடிகளை யிரந்து
பொருளீட்டக் கருதினானாயின், அவற்கு அரசுமுறை பொறுத்தற் கரிய
சுமையாய்ச் சிறப்புடைத்தன்றாம்; வலியுடைய விழுமியோன் பெறுகுவனாயின்,
அவற்கு உலர்ந்த நெட்டித் தக்கை போல நொய்தாம்” என்றான். இங்ஙனம்
சீரிய கருத்தமைந்த சொல்லை அவன் இப் பாட்டு வடிவில் தந்துள்ளான்.)
சோழன் நலங்கிள்ளி என்னும் அரசனே அரசின் கடமை பற்றி இவ்வாறு கூறியிருப்பது இன்றைய நிலையிலும் நிகழ்காலச் சமூக நிலையை ஒப்பிட்டு சிந்திக்கத்தக்கதாக உள்ளது.

திங்கள், 7 செப்டம்பர், 2009

நட்சத்திர இடுகை.




தமிழ் மணம் திரட்டியில் இந்த வார நட்சத்திரமாகத் தேர்வு செய்யப்பட்டமைக்காக மிகவும் மகிழ்கிறேன்.
பெருமிதம் கொள்கிறேன்
உவகையடைகிறேன்.
• வலைப்பதிவில் எழுதத் தொடங்கிய காலங்களில் எனது பதிவை எந்தத் திரட்டியிலும் இணைக்கவில்லை. “தமிழ்மணம்“ என்னும் திரட்டி குறித்த அறிமுகமும், பயன்பாடுகளும் குறித்து தமிழ்க்கொங்கு ஐயா கணேசன் அவர்களின் வாயிலாகவே அறிந்தேன். அவர்களை இவ்வேளையில் நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன்.
• எனது பதிவை தமிழ்மணத்தில் இணைத்தபிறகு பல நாடுகளிலிருந்தும் பார்வையாளர்கள் வந்தனர். இதுவரை 77 நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்மணம் வாயிலாக இதுவரை 609 பார்வையாளர்கள் வந்துள்ளனர். ஒரே நாளில் 30 நாடுகளிலிருந்து பார்வையாளர்கள் எனது பதிவைப் பார்வையிட்டனர். அப்போது தான் நான் தமிழ்மணம் திரட்டியின் மதிப்பை அறிந்தேன். அன்றுமுதல் தமிழ்மணம் திரட்டியைப் பெருமதிப்புடன் பார்க்க ஆரம்பித்தேன். தமிழ்மணத்தில் எனது பதிவு இடம்பெறுவதையும், மறுமொழிப்பெட்டியில் எனது பதிவு வெளிவருவதையும் பார்த்து மகிழ்ந்தேன். இவ்வேளையில் என் பதிவை மதித்து என்னை இந்தவார நட்சத்திரமாக்கியுள்ளமை எனது எழுத்துக்களை ஊக்குவிப்பதாகவும், என்னை மேலும் எழுதத் தூண்டுவதாகவும் அமைகிறது.
• நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. திரும்பிப் பார்க்கிறேன். 120 இடுகைகள் 660 கருத்துரைகள் பல்வேறு இணையதளங்களில் 20 கட்டுரைகள் ஆகியன மட்டுமே எஞ்சி நிற்கின்றன. சங்க இலக்கியம் , இணையதளத் தொழில்நுட்பம் ஆகிய பொருள்களில் நான் எழுதிய கட்டுரைகளை உலகத்தமிழர்களுக்குக் கொண்டு சென்றதில் தமிழ்மணம் திரட்டிக்குப் பெரும்பங்கு உண்டு. இத்திரட்டி வாயிலாக வந்த பார்வையாளர்கள் எனக்களித்த கருத்துரைகள் எனது எழுத்துக்களை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ள அடிப்படையாக அமைந்தன.
• திரட்டியில் இணைத்தல், சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைத் தமிழ்மணம் குழுவினர் உடனுக்குடன் மின்னஞ்சல் வழியே தீர்த்துவைத்தனர். அதனால் இவ்விணையதளத்தின் மீது நான் கொண்ட மதிப் அதிகரித்தது.
• பிற திரட்டிகளுக்கு முன்னோடியாகவும், பல புதுமைகளைப் புகுத்திவரும் திரட்டியாகவும், குறிப்பாகத் தமிழுக்கு முதன்மை தரும் திரட்டியாகவும் திகழும் தமிழ்மணத்தில் என்னை இந்த வார நட்சத்திரமாக தேர்வு செய்தமைக்குக் குழுவினருக்கு மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 17 ஜூலை, 2009

நோக்கு ( நூறாவது இடுகை )

( வலைப்பதிவு குறித்த தன்மதிப்பீடு, பட்டாம்பூச்சி விருது வழங்குதல்)

வேர்களைத்தேடி..........

இதுவரை 71 நாடுகளிலிருந்து 11535 பார்வையாளர்கள் 500க்கு மேல் கருத்துரையளித்துள்ளனர். இவர்களுள் 62பேர் இப்பொழுது இவ்வலைப்பதிவைப் பின்தொடர்ந்து வருகின்றனர். அனைவருக்கும் இவ்வேளையில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்...

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை வலைப்பதிவு எழுதுவது எனது கனவாகவே இருந்தது.சோதனை முயற்சியாக இரு ஆண்டுகளுக்கு முன்பு கூகுளில் வலைப்பதிவை ஆரம்பித்தேன்...

கடந்து வந்த பாதை...........

எழுத்துருச்சிக்கல்....


o வலைப்பதிவில் எழுதுவது எனக்கு மிகப்பெரிய சிக்கலாகவே இருந்தது. முதலில் தமிங்கில முறையில் வலைப்பதிவுப்பக்கத்திலேயே எழுதினேன். அவ்வாறு எழுதுவதில் ஒரு சிக்கல் இருந்தது. இணையதளத் தொடர்பு இருந்தால் மட்டுமே எழுத முடியும் என்ற நிலையில் தொடர்ந்து அதிகசெய்திகளை எழுத முடியாத நிலை ஏற்பட்டது...

o பொங்கு தமிழ் என்னும் எழுத்துரு மாற்றியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டேன். பாமினி எழுத்துருவில் வேர்டு கோப்புகளை உருவாக்கி, அதனை பொங்குதமிழ் வழியாக யுனிகோடாக மாற்றி பயன்படுத்தி வந்தேன்..

o எழுத்துருச்சிக்கலுக்கு மிகப்பெரிய தீர்வாக என்.எச்.எம் எழுதியை இணையவழியே அறிந்து கொண்டு பயன்படுத்த ஆரம்பித்தேன்.இயல்பாகவே பாமினி எழுத்துருக்களை தட்டச்சு செய்யத்தெரிந்த எனக்கு என்.எச்.எம் எழுதியைப் பயன்படுத்துவது மிகவும் எளிமையாகவும் உதவியாகவும் இருந்தது.

o எனது கருத்துக்களை எழுதுவதில் ஒரு வழியாக சிக்கல் தீர்ந்தது.

வேர்களைத்தேடி...............

வலைப்பதிவுப் பயன்பாடு அதிலுள்ள தொழில்நுட்பங்கள்
ஆகியவற்றை ஓரளவுக்கு அறிந்து கொண்ட பிறகு....
என்ன எழுதுவது என்று சிந்தித்தேன்...
வலைப்பதிவுகள் பலவற்றையும் பார்த்த போது...
அவற்றுள் இலக்கியப் பதிவுகள் குறைவுபட இருப்பதை உணர்ந்தேன்.

நகைச்சுவை,சமூகம்,தொழில்நுட்பம், அரசியல் பொழுது போக்கு, விளையாட்டு ஆகியவையே பெரும்பாலும் விவாதிக்கப்படுகின்றன...

இலக்கியம் குறித்த தேடல் சார்ந்த வலைப்பதிவுகள் பற்றாக்குறையுடனேயே உள்ளன....

நான் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டபோது பல தமிழாய்வுத் தரவுகளையும் இணையத்தில் தேடி கிடைக்காமல்த் தவித்தேன். அதனால் இலக்கியப் பதிவுகள் எழுதுவது என்று தீர்மானித்துக்கொண்டேன்.

சங்க இலக்கியம் சார்ந்த செய்திகளை முதன்மையாகவும், இணையதள தொழில் நுட்பம் சார்ந்த செய்திகளை துணையாகவும் கொண்டு பதிவிட்டு வருகிறேன்....

இன்றைய தமிழர்கள் தம் மொழி, மரபு, பண்பாடு உள்ளிட்ட பல கூறுகளையும் தொலைத்து தமிங்கிலர்களாக வாழும் அவலம் கண்டு மனம் வருந்தினேன்..
அதனால் தமிழரின் மொழி, மரபு, பண்பாட்டுக்கூறுகளின் வேர்களைத்தேடவேண்டும் என்னும் ஆசை மேலிட்டது....
அதன் காரணத்தால் எனது பதிவுக்கு வேர்களைத்தேடி.......
என்று பெயரிட்டு மகிழ்ந்தேன்..


திரட்டிகள் ஏற்படுத்திய திருப்பம்.





ஆரம்பத்தில் எனது வலைப்பதிவை எந்த திரட்டியிலும் இணைக்கவில்லை. பின் தமிழ்மண உறுப்பினர் ந.கணேசன் ஐயா அவர்களின் அறிமுகத்துக்குப் பின்னர் தமிழ்மணத்தில் எனது பதிவை இணைத்தேன்..

தமிழ்மணம் வாயிலாக பல இலக்கிய ஆர்வலர்களின் அறிமுகம் கிடைத்தது..

அடுத்து தமிழிஷில் இணைத்தேன்....
ஒரே நாளில் 600 பார்வையாளர்கள் வந்தனர். எனக்கு பெரும் வியப்பு ஏற்பட்டது..

தமிழிஷில் பிரபல இடுகையாக
இணையதளத் தொழில்நுட்பம், சங்க இலக்கியம் உள்ளிட்ட பல இடுகைகளையும் ஓட்டளித்துப் பிரபல இடுகையாக்கிய நண்பர்கள் யாவருக்கும் மிகுந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

முதல் திருப்பம்...

திரட்டி இணையதளத்தில் நட்சத்திர வலைப்பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எனது வலையுலக வாழ்வில் மறக்கமுடியாததாக அமைந்தது.


பிற இணையதளங்களில்

படிக்கும் காலத்தில் இணையதளங்களில் எனது கட்டுரைகளை வெளியிடுவதற்கு பல முறை முயன்றும் இயலாது போனது...
அந்த நிறைவேறாத ஆசைகள் கடந்த இரு ஆண்டுகளில் நிறைவானபோது மிகுந்த மகிழ்வெய்தினேன்..

திண்ணை , முத்துக்கமலம் , தினகரன்
பதிவுகள்

தமிழ் ஆதர்ஸ் ( 6 கட்டுரைகள்)

1.தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு

2. காதலின் அகலம்- உயரம் – ஆழம்

3.பழந்தமிழர் விளையாட்டுக்கள்


4. ஈமத்தாழி

5.பெண்களும் மலரணிதலும்

6. சகோதரியான புன்னைமரம்


இளமை விகடன் குட்பிளாக்ஸில்

ஐந்திணைப்பெயர் மூலம்

ஓரிற்பிச்சையார்

கவைமகனார்

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு

பழந்தமிழரின் விளையாட்டுகள்

ஈமத்தாழி

உள்ளிட்ட 6 இடுகைகள் வெளிவந்துள்ளது.


கருத்துரைகள்.............

வேர்களைத்தேடி.........

வந்து கருத்துரையிட்ட அன்பு நெஞ்சங்களுக்கு என்றும் என் நன்றிகள் உண்டு..
எனது எழுத்துக்கு உயிரூட்டி மேலும் மேலும் எழுதத்தூண்டியவர்கள் கருத்துரையாளர்களே....

கருத்துரையாளர்கள் பல வகை....
பாராட்டிச் செல்பவர்கள்.....
வாழ்த்திச் செல்பவர்கள்.....
குறை கூறிச் செல்பவர்கள்....
அறிவுரை கூறிச் செல்பவர்கள்...
சந்தேகம் கேட்கக் கூடியவர்கள்....

என இவர்கள் பலவகைப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களின் கருத்துரைகளை அவர்களின் நோக்கிலிருந்து பார்த்து எனது வலைப்பதிவை பயனுள்ளதாக்க முயற்சி செய்து வந்திருக்கிறேன்.


இந்த கருத்துரைகள் எனது எழுத்துக்களை மேலும் முதிர்ச்சி பெறச் செய்தன...

ஆரம்பத்தில் இலக்கிய நயத்தோடு எழுத ஆரம்பித்த எனக்கு உலகு பரவி வாழும் தமிழர்களின் நிலைகண்டு இன்னும் எளிமைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்று சிந்தனை வந்தது. அதனை கருத்துரை வாயிலாக தெரிவித்த அன்பு நெஞ்சங்களின் சொல்லுக்கு மதிப்பளித்து மேலும் எனது எழுத்துக்களை எளிமைப்படுத்தி்க்கொண்டேன்....

மறக்க முடியாதவர்கள்.....


தமிழரசி ............
எனது வலைப்பதிவின் மீது தீராத பற்றுடையவர்...
இவரது கருத்துரைகளில் தமிழின் மீது அவர் கொண்ட தீராத காதல் புலனாகும்..
எழுத்தோசை என்னும் வலைப்பதிவு வாயிலாக நாளும் கவியோசை எழுப்பி வருகிறார்
இவர் தம் வலைப்பதிவில் வேர்களைத்தேடி..........
என்ற எனது வலைப்பதிவை அறிமுகம் செய்து வைத்ததோடு
பட்டாம்பூச்சி விருது வழங்கியும் பாராட்டினார். அதோடு நில்லாமல், அவர் வலைச்சர ஆசிரியராகப் பணியாற்றியபோதும் மற்றொரு முறை எனது பதிவினை அறிமுகம் செய்துவைத்து மகிழ்ந்தார்....
தமிழுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


தேவன் மாயன்...
தமிழ்த்துளி என்னும் தம் வலைப்பதிவு வாயிலாக மருத்துவம், பொழுதுபோக்கு, நகைச்சுவை, பொது அறிவு என பல செய்திகளையும் அளித்து வருகிறார்.....
அவரைப் பார்த்து பல நேரங்களில் வியந்ததுண்டு.......
ஏனென்றால் எப்போது ஜிமெயிலைத் திறந்தாலும் அவர் இணையதள தொடர்பில் இருப்பார்...

கருத்துரை வழியே நண்பரான இவர் வாழ்வது காரைக்குடி என்பது அறிந்து பெரிதும் மகிழ்ந்து போனேன்..........

நான் பத்துவருடங்களாக எனது பல்கலைக்கழகக் கல்வி பயின்றது காரைக்குடி....

அதனால் இவர் பதிவினைப் படிக்கும் போது ஒரே ஊர்காரர் என்னும் மனநிலை ஏற்படுவதுண்டு...




தமிழ் நெஞ்சம்....

நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்த நாட்களில் இவரைப் பார்த்து மலைத்ததுண்டு....
தொழில்நுட்பக் கடல் என்றே இவரை அழைக்கலாம். அந்த அளவுக்குத் தொழில்நுட்பத்தகவல்களை இவர்தம் வலைப்பதிவில் தந்துள்ளார்..
எனது வலைப்பதிவுக்கு ஆரம்ப காலங்களில் இருந்தே கருத்துரையிட்டும்.. தமிழிஷில் ஓட்டளித்தும் என்னை ஊக்கப்படுத்தி வரும் இவரின் அன்பை என்றும் மறவேன்..


இன்னும் வலைப்பதிவு வாயிலாக எனக்குக் கிடைத்த நண்பர்களைப் பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம்...
ஆயினும் பக்க நீட்சி கருதி....
இத்துடன் நிறைவு செய்கிறேன்..
அதற்கு முன்னர்......




ஐவருக்குப் பட்டாம்பூச்சி விருதளிக்க விரும்புகிறேன்....
எனது நண்பர்கள் பலர் பிரபல பதிவர்களாக உள்ளனர். அவர்கள் பல முறை இவ்விருதைப் பெற்றுள்ளனர். அதனால் இவ்விருதினைப் பெறாதவர்களுக்கு இதனை அளித்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்...

முதலாவதாக....

முனைவர்.சே.கல்பனா (தமிழ்விரிவுரையாளர்)

இளங்கலை வேறு துறை பயி்ன்றவராக இருந்தாலும் தமிழின் மீது மிகுந்த பற்றுடையவராகத் திகழ்பவர்...
அவரது வலைப்பக்கத்தில்
இலக்கியம், இலக்கணம், வரலாறு, அகராதி என பல்துறைத் தகவல்களையும் காணமுடியும். ஒவ்வொரு இடுகையின் போதும் கருத்துரையிட்டு எனது பக்கத்தை வளமாக்கியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். அவருக்கு எனது முதலாவது விருதினை அளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

இரண்டாவதாக......


எம்.ஏ.சுசீலா
சிறுகதைப்படைப்பு, பெண்ணிய ஆய்வு ஆகிய துறைகளில் சிறப்புப் பெற்றவர். அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்,கல்கி,கலைமகள்,ஆனந்த விகடன்,தினமணிகதிர்,மங்கையர் மலர்,அவள்விகடன்,புதிய பார்வை,வடக்கு வாசல் ஆகிய பல இதழ்களிலும் வெளி வந்துள்ளன.தமிழ்இலக்கியத்தில்,முனைவர்(Ph.d)பட்டம்பெற்று,மதுரை, பாத்திமாக்கல்லூரியில், தமிழ்த்துறைப்பேராசிரியர் பணி.(1970-2006);அதிலிருந்து ஓய்வு பெற்றவர்.


மூன்றாவதாக....
குமரன்..

இவரைக் கருத்துரைகள் வாயிலாகவே அறிந்தேன்.
இவர் தொழில்நுட்பத்துறையாக இருந்தாலும் தமிழின் மீது அவருக்கு இருந்த புலமை கண்டு வியந்தேன்.
எனது இடுகைகளில் பல சிக்கலான் ஐயங்களை எழுப்பி என்னை மேலும் பட்டை தீட்டியவர் இவராவார்...
இவர் உண்மையிலேயே தொழில் நுட்பத்துறை தானா?
தமிழ்த்துறை சார்ந்த ஆய்வாளரா? என்று கூட எனக்கு ஐயம் வந்ததுண்டு.....
அவர் பல வலைப்பதிவுகள் வழியே தமிழ் மணம் பரப்பி வருகிறார்...
அவரின் பணி எதிர்காலத் தலைமுறையினருக்குப் பெரிதும் பயனுடையதாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
அவருக்கு எனது இரண்டாவது விருதினை அளித்து மகிழ்கிறேன்..


நான்காவதாக.........
சுமஜ்லா

கடந்த சில நாட்களாகவே இவரை அறிவேன்....
தொழில்நுட்பம் சார்ந்த பல செய்திகளையும் அயராது கண்டறிந்து கூறுபவர். இவரின் வலைப்பதிவுக்குச் சென்றாலே அவரது கடின உழைப்புத் தெரியும். வலைப்பதிவுகளைப் பகலில் ஒரு வடிவிலும், இரவில் வேறொரு வடிவிலும் காண்பது போன்ற தொழில்நுட்பம் உள்ளிட்ட பல அரிய செய்திகளை இவரது பக்கத்தில் காணலாம். அவருக்கு எனது மூன்றாவது விருதினை அளித்து பெருமிதம் கொள்கிறேன்.

ஐந்தாவதாக........

சந்ரு..
தமிழ் இலக்கியங்களின் மீது மிகுந்த காதல் கொண்டவர். அதனால் எனது வலைப்பதிவைத் தன் பதிவில் இலக்கியம் கற்க ஒரு வலைப்பதிவு என்று அறிமுகம் செய்து மகிழ்ந்தார். அவரது வலைப்பதிவைக் காணும் போது சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்பினைக் காணமுடிந்தது. கவிதை, கட்டுரை, நகைச்சுவை, நிழற்படங்கள் என தினம் பல இடுகைகள் இட்டு வரும் நண்பர் சந்ரு அவர்களுக்கு ஐந்தாவதாக விருதளித்து மகிழ்கிறேன்.


வலைப்பதிவு அறிமுகத்துக்குப் பின்னர் இவ்வையகமே சிறு கிராமம் போல ஆகிவிட்டது. உலகு பரவி வாழும் தமிழர்கள் யாவரும் ஒரே கிராமத்தில் வாழ்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது..

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கான பொருள் எனக்கு இப்போது தான் முழுமையாகப் புரிந்தது....

ஊக்கமளித்துவரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...