வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 24 மார்ச், 2009

ஊட்டியார்



(இப்பாடலின் வழி ஊட்டியார் என்னும் புலவரின் பெயருக்கான காரணம் புலப்படுதப்படுகிறது)

தலைவன் இரவுக்குறிக்கண் வந்தமையை அறிந்த தோழி தலைவிக்குச் சொல்லியது என, தோழி பேசுவது போல இப்பாடல் அமைந்துள்ளது.
தலைவன் இரவு நேரத்தில் தலைவியைக் காண வந்து நின்றான்.இதனைத் தோழி அறி்ந்தாள்.அதனைத் தலைவியிடம் உணர்த்த விரும்பினாள்.அதற்குத் தடையாகத் தலைவியின் அன்னை தலைவியின் அருகிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள்.
அன்னை துயில்கிறாளா?என்பதை ஆய்ந்தறிந்த தோழி பின் செய்தியைத் தலைவிக்கு உரைக்கிறாள்.
இதுவே பாடலின் களம்.
முதலில் அன்னையிடம், அன்னையே வாழ்வாயாக.... நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக!
நம் தோட்டத்தில் உள்ள கூதாளம் செடியின் தழைகளிடத்தே அவற்றின் செவ்வி குறையுமாறு இனிய ஓசையோடு வீழும் அருவியின் ஓசையைச் சிறிதேனும் கேட்டனையோ.... என வினவினாள்.அதற்கு அன்னை பதிலளிக்கவில்லை.
அன்னையே நீ வாழ்வாயாக! நான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக!
“நம் தோட்டத்தில் உள்ள சாதிலிங்கம் ஊட்டப்பட்டது “ போன்ற ஒளி பொருந்திய தளிர்களையுடைய அசோக மரத்தினது ஓங்கி உயர்ந்த கிளையில் கட்டப்பட்டிருந்த ஊசல்க் கயிற்றினை பாம்பு எனக் கருதி அம்மரத்தின் பெரிய அடிப்பகுதி துணிபடுமாறு இடிவிழுந்தது... அதனையும் நீ கேட்டனையோ! என வினாவினாள்.
அன்னையின் துயில் நிலையை அறிதற் பொருட்டே முதலில் மெல்லிய அருவியோசையை கேட்டனையோ? என்றும் பின்னர் அதனினும் அதிர்ச்சியான இடியோசையைக் கேட்டனையோ? என்றும் வினவினாள்.எதற்கும் அன்னை பதிலளிக்காமை கண்டு “அன்னை கடுந்துயில்“ மடிந்தனள் என்று தோழி உறுதிப்படுத்திக் கொண்டாள்.அந்நேரம் ஏனைய உயிர்களும் துயில் கொண்டன என்பதை அறிந்து பின் தலைவியிடம் தான் கூறவந்த தலைவனின் வரவை உரைத்தாள்.
இதனை,
அகநானூறு 68. குறிஞ்சி

'அன்னாய்! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பைத்
தண் அயத்து அமன்ற கூதளம் குழைய,
இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம்
கேட்டியோ! வாழி, வேண்டு அன்னை! நம் படப்பை
ஊட்டியன்ன ஒண் தளிர்ச் செயலை 5
ஓங்கு சினைத் தொடுத்த ஊசல், பாம்பு என,
முழு முதல் துமிய உரும் எறிந்தன்றே;
பின்னும் கேட்டியோ?' எனவும் அஃது அறியாள்,
அன்னையும் கனை துயில் மடிந்தனள். அதன்தலை
மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் 10
வருவர்ஆயின், 'பருவம் இது' எனச்
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்வயின்
படர்ந்த உள்ளம் பழுது அன்றாக,
வந்தனர் வாழி, தோழி! அந்தரத்து
இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூத் 15
தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலை சிறப்ப,
கன்று கால் ஒய்யும் கடுஞ் சுழி நீத்தம்
புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன்
வெண் கோட்டு யானை விளி படத் துழவும்
அகல் வாய்ப் பாந்தட் படாஅர்ப் 20
பகலும் அஞ்சும் பனிக் கடுஞ் சுரனே.
-ஊட்டியார்
இப்பாடலடிகள் உணர்த்துகின்றன.
இப்பாடலில் சாதிலிங்கம் “ஊட்டப்பட்டது“ போன்ற ஒளி பொருந்திய தளிர்களையுடைய அசோக மரத்தின் ஓங்கி உயர்ந்த கிளையில் கட்டப்பட்ட ஊசல்க் கயிற்றைப் பாம்பு எனக் கருதி அம்மரத்தின் பெரிய அடிப்பகுதி துணிபடுமாறு இடி விழுந்தது எனத் தோழி கூறுகிறாள்.இதில் ஊட்டப்பட்டது என்ற சொல்லே இவ்வாசிரியரின் பெயராகிறது. குற்றமற்ற உள்ளத்தோடு தலைவியைக் காணவந்த தலைவனின் வருகை குறித்து உள்ளுறையாக ஒரு செய்தியைக் குறிப்பிடுகிறாள் தோழி.
வானிடத்தே மேகக் கூட்டங்கள் இடிஇடித்து மழையாகப் பொழிந்தன.வெள்ளம் பெருகி ஓடியது.கடும் சுழியினையுடைய அவ்வெள்ளம் , யானைக் கன்றுகளின் கால்களை இழுத்து அக்கன்றுகளை அடித்துச் சென்றது.அதனைக் கண்ட பெண் யானைகளும், ஆண்யானைகளும் ஆரவாரம் செய்தன.தம் கன்றுகளைக் காப்பாற்றும் எண்ணத்தோடு இழுக்கும் வெள்ளத்தில் தம் தும்பிக் கைகளை விட்டு துழாவின.இத்தகைய கொடிய வழியில் தலைவன் வந்துள்ளான். இவ்வழியில் பகலில் கூட யாரும் வருவதற்கு அஞ்சுவர்.என்றாலும் தலைவன் உன்னைக் காணும் ஆவலில் அவ்வழியே வந்துள்ளான் என உரைத்தாள் தோழி.
உள்ளுறை
களிற்று யானைகளும் கன்று காரணமாகப் பிடிகள் வருந்தித் துன்புற்ற பிறகே குரல் கொடுக்க முயன்றன.அது போலத் தலைவனும் அலரானும் வழியது அருமையானும் யாமும் எம் நலனும் அழிந்த பிறகே மறைக்க முயல்வாறல்லது முன்பே முயலவி்ல்லை. என்பதே உள்ளுறையாக உள்ளது.

இப்பாடலை உற்று நோக்கும் போது சங்க கால மக்களின் அக வாழ்வியல் நன்கு விளங்குகிறது.தாயின் உறக்கத்தை அறிந்து கொள்ள தோழி கையாளும் உத்தி ,உள்ளுறை வாயிலாக தலைவனின் செயலைத் தோழி கூறும் பாங்கு ஆகியன அக்கால வாழ்வியலை இயம்புவனவாக உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக